லொறி விபத்து


(க.கிஷாந்தன்)

நுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்று இறக்கிவிட்டு மீண்டும் நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் டெவன் பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

13.12.2019 அன்று இரவு 11 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக திம்புள்ள – பத்தளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.