இந்த சம்பவம் நேற்று (01) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குளவி தாக்கியதில் 15 மாணவிகளும் 27 மாணவர்களும் காயமடைந்ததாகவும், அவர்களை பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து 1990 அம்புலன்ஸ் மூலம் கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீபே பல்கலைக்கழக மாணவர்கள் 276 பேரும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேரும் ஹந்தானை மலையில் ஏற வந்துள்ளதாகவும் ஏனைய மாணவர்கள் பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கச்சேரி அமைந்துள்ள லெமனன் வீதி பகுதியில் 25 அடி உயர மண்மேடு சரிந்து விழுந்த நிலையில் மண்ணுக்குள் புதையுண்டு இருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (16.06.2023) மாலை 04 மணியளவில் இடம் பெற்றுள்ள இந்த அனர்த்தத்தில் மரான்கொட மஸ்தெக எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பி.எம்.சி.ருக்ஷானா (வயது 21) மற்றும் கே.நிலந்த (வயது 42) ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா வெடமன் வீதி இலக்கம் 7/2 என்ற முகவரியில் வசிக்கும் ரஞ்சித் பிரியந்த வீரசிங்க என்பவர் தனது விட்டுக்கு பின் பகுதியில் மண்மேடு ஒன்றை அகற்றி அங்கு விடுதி ஒன்றை அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளார்.
இதன்போது விடுதி அமைக்கும் பகுதியில் 25 அடி உயரமான பாதுகாப்பு மதில் ஒன்றை அமைக்க
மண்மேடை அகற்றும் பணியில் ஒன்பது பேர் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில் அகற்றப்பட்ட மண்மேடு சம்பவத்தில் உயிரிழந்த இருவர் மீது சரிந்து விழுந்து குறித்த இருவரும் மண்ணில் புதையுண்டுள்ளனர்.
இருவரின் உடல்களும் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆ.ரமேஸ்.
புத்தகங்களை சேகரிக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தலைமையிலான ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, நுவரெலியா மாவட்டத்திலும் தனித்து போட்டியிடவுள்ளது.
இதற்கான கட்டுப்பணம் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரி குணரத்ன தலைமையிலான குழுவினரால், நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (12.01.2023) செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரண மைத்திரி குணரத்ன,
" நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்கும் எமது கட்சி வாழைப்பழச்சீப்பு சின்னத்தில் போட்டியிடும். எமது கட்சியில் இனவாதம், மதவாதம் கிடையாது. இது மக்களுக்கான கட்சி. அதனால்தான் அனைத்து இன மக்களும் எம்மிடம் இணைந்து போட்டியிடுகின்றனர்.
மக்கள் மாற்றத்தைக்கோருகின்றனர். எனவே, ஊழல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை மக்கள் விரட்ட வேண்டும். நல்லவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
அதேவேளை, தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்று தெரிவித்தனர். நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின்மூலம் தேர்தலை பிற்போடலாமேதவிர, வேறு வழிகளில் அதனை செய்ய முடியாது. " - என்றார்.
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று 21.12.2022 காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில் Bromin புரோமின் என்ற இரசாயன குவளை உடைந்ததன் காரணமாக இரசாயனம் ஆய்வுக்கூடம் முழுவதும் பரவியுள்ளது.
இதனால் அங்கிருந்த ஐந்து மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மூச்சுத் தினறல் காரணமாக புஸ்ஸல்லாவ வகுக்கப்பட்டிய வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலமையினை கட்டுப்பாட்டு கொண்டு வரும் நோக்கில் கண்டி தீயணைக்கும் பிரிவினர் பாடசாலைக்கு விரைந்துள்ள அதே நேரம் இரசாயனத்தை அப்புறப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏனைய மாணவர்களை பாடசாலை நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தியுள்ள அதே நேரம் அவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விரைந்து செயல்பட்ட பாடசாலை அதிபர் கம்பளை கல்வி வவலையத்திற்கும், மாகாண கல்வி பணிமனுக்கும் புஸ்ஸலாவ பொலிஸாருக்கும் அறிவித்ததன் பயனாக மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ பொலிஸார் கம்பளை பொலிஸ் அத்தியட்சகருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகைதந்து எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுடன் இரு நூறு வருடங்களாகும் நிலையில், அதனை முன்னிட்டு 'மலையகம் 200' எனும் தொனிப்பொருளின்கீழ் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது - என்று காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
அட்டனில் இன்று (07.12.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். நிகழ்வு ஏற்பாடுகள் சம்பந்தமாக அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் ஆகப்போகின்றன. இதனையொட்டி பிரதேச, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல நிகழ்வுகளை நடத்துவதற்கு காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய தோட்ட மட்டத்தில் கலாச்சார, விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளும் , தோட்ட வாரியாக நடத்தப்படும். பாடசாலை மட்டத்திலும் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். எமது வரலாறு தொடர்பான தேடலுக்காக கட்டுரை, கவிதை, நாடகம் ஆகிய போட்டிகள் நடத்தப்படும் .
இதற்கான ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னின்று நடத்தினாலும் அனைத்து தரப்பினரும் இதில் இணைந்து கொண்டு தமது ஒத்துழைப்புகளை வழங்கலாம்.
எமது தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் 'மலையகம் 200' எனும் தொனிப்பொருளின்கீழ் எல்லா நிகழ்வுகளும் வெகு விமர்சையாக நடைபெறும். விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் நடவடிக்கைகளும் இடம்பெறும்.
இந்தியா உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகளை நிகழ்வுகளுக்கு அழைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். இலக்குகளை அடைவது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்." - என்றார்.
கனேடிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் சிலோன் யூத் மூவ்மெண்ட் மற்றும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டம் ஆகியன இணைந்து மலையகத்தில் முதன்முறையாக சமூக சமையலறை கம்யூனிட்டி கிச்சன் என்ற செயல்திட்டம் இன்று (29.11.2022) அங்குராணப்பணம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேனியல் பூட் மற்றும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமாகிய பாரத் அருள்சாமி ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல அரச அதிகாரிகளும், மாணவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்
இக் கம்யூனிட்டி கிச்சனின் மூலமாக 100 சிறுவர்களுக்கு தினமும் போஷாக்கான உணவு வழங்குவதற்கும் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, திறன் அபிவிருத்தி செய்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கண்டி பன்வில மருத்துவ அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட 40 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான போஷாக்காக பானம், மருந்து வகைகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுகள் உட்பட உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இதன் போது கருத்து தெரிவித்த உப தலைவர் பாரத் அருள்சாமி,
நாடு எதிர்நோக்கியுள்ள அசாதாரண பொருளாதார நிலை காரணமாக உணவுக்கான பணவீக்கம் 86 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேவேளையில் உணவுக்கான கேள்விகள் அதிகரித்துள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது இடத்திலும் உள்ளது. அதுமட்டுமில்லாது அத்தியாவசிய தேவைக்கான 152 மருந்து வகைகள் தட்டுப்பாடாக உள்ளது. மேலும் மலையகத்தில் விசேடமாக பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர்களுக்கான புரோட்டின் பற்றாக்குறை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான போஷாக்கான உணவு வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் கனேடிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் சிலோன் யூத் மூவ்மென்ட்யின் வழிகாட்டலின் ஊடாக மத்திய மாகாணத்தில் முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பிரஜாசக்தி நிலையங்களின் ஊடாக இந்த சமூக சமையலறை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கண்டி கேலாபொக்க, மஸ்கலியா பிரவுன்ஸ்வீக், மாத்தளை எல்கடுவ பிரஜாசக்தி நிலையங்களில் ஆரம்பித்துள்ளோம். இதனை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வதே எமது நோக்கமாகும்.
இவ்வாறான சிக்கல் நிறைந்த சூழ்நிலையில் தேவை அறிந்து எமது வேண்டுகோளுக்கு இணங்க இத்திட்டத்தினை முன்னெடுக்க உதவிக்கரம் நீட்டிய கனேடிய தூதரகத்திற்கும், நேரடியாக விஜயம் செய்த உயரஸ்தானிகருக்கும், எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் இங்குள்ள இளைஞர், யுவதிகளின் திறன்சார் அபிவிருத்திக்கும் பெண்களின் தொழில் முனைவுக்கும் கனேடிய அரசாங்கம் தங்களது பூரண ஆதரவை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக பாரத் அருள்சாமி இதன் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கனேடிய உயர்ஸ்தானிகர் டேனியல் பூட்,
கனேடிய அரசாங்கம் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கலில் இருந்து மீள தங்களது அரசினால் வழங்கக்கூடிய பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும், இந்த சமூக சமையலறை வேலை திட்டம் தங்களது நாட்டின் உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்கு அமைவாக இலங்கைக்கு கை கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கண்டி கேலாபொக்க பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இங்குள்ள மக்களின் திறன் அபிவிருத்தி மற்றும் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பிற்கு தமது அரசும் இலங்கைக்கான கனேடிய தூதரகமும் முன் நின்று செயல்படும் எனவும் தெரிவித்தார்.
நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நானுஓயா பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 17 பேருக்கு சுயதொழில் செய்யவென நுவரெலியா பிரதேச சபையால் அமைக்கப்பட்ட கடைகள் நேற்று திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.
மத்திய மாகாண சபை மற்றும் நுவரெலியா பிரதேச சபை ஆகியன இணைந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட எட்டு மில்லியன் ரூபாவில் இக்கடைகள் நிர்மாணிக்கப்பட்டன.
நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.பி.ரத்நாயக்கா, மாகாண உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் யூ.பி.ஹேரத், டப்ளியூ.பி.விஜயவர்தன உட்பட சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின் ரதல்ல குறுக்கு வீதி சந்திக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த 17 கடைகளுக்கு மத்திய மாகாண உள்ளூராட்சி சபை 04 மில்லியன் ரூபாவையும், நுவரெலியா பிரதேச சபை 04 மில்லியன் ரூபாவையும் வழங்கியுள்ளது. இக்கடைகளுக்கு மொத்தமாக 08 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. .
இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ள கடைகள் மூலம் தமது வியாபாரத்தை முன்னெடுக்கும் சுயதொழிலாளர்கள் ஊடாக நுவரெலியா பிரதேச சபைக்கும் வரிவருமானம் கிடைக்குமென நுவரெலியா பிரதேச சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரியின் மாணவர்கள் 17 பேர் 28.11.2022 அன்று மதியம் 2.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் இருந்த வேளையில் அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் ஆரம்ப பிரிவைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொட்டகலை பகுதியில் இலவச மருத்துவ முகாம் இன்று (13.11.2022) (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. குறித்த மருத்துவ முகாம் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நடமாடும் சேவையில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சைகளையும், மருத்துவ ஆலோசனையையும் பெற்றனர்.
இதன்போது, உயர்குருதி அமுக்கம், நீரிழிவு உள்ளிட்ட சகலவிதமான நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோயாளிகளுக்கு, சிகிச்சையளிக்கப்பட்டது.
குறித்த நடமாடும் சேவைக்கான அனுசரணையை கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அட்டன் குடாகம பகுதியில் வீடொன்றின் மீது இன்று (21) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த வீடு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் வீட்டின் பின்புறமுள்ள மண்மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், குறித்த மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், வீட்டில் வசிப்பவர்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன், மரம் முறிந்து விழுந்து பலியான பெருந்துயர் சம்பவமொன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு (18) சுமார் 10.45 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கம்பளை - அட்டபாகை தோட்டத்தை சேர்ந்த இராமகிருஷ்னன் (வயது - 76) என்பவர் இயற்கை மரணம் எய்திய நிலையில் அவருக்கான இறுதிக்கிரியைகள் இன்று (19.10.2022) இடம்பெறிவருந்தன. சடலம் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே மரண வீட்டு வளாகத்தில் இருந்த மரம் மருமகன் மீது முறிந்து விழுந்ததில் அவர் (ரட்னசாமி) உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, அட்டபாகை தோட்ட பகுதியில் பாடசாலை உட்பட மக்கள் நடமாடும் பகுதிகளில் முறிந்து விழக்கூடிய அபாயத்தில் பல மரங்கள் உள்ளன. எனவே, அவற்றை அகற்றி, தமது உயிரை பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அட்டன் நகரில், அட்டன் - டிக்கோயா நகரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இடங்களில் தற்காலிக கடைகள் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏலத்தின் மூலம் நகர சபைக்கு 46 இலட்சம் ரூபா வரை வருமானம் கிட்டியுள்ளதாக அட்டன் - டிக்கோயா நகரசபையின் தவிசாளர் பாலசந்திரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அட்டன் நட்சத்திர சதுக்கம், அட்டன் பஸ் தரிப்பிடம் மற்றும் அட்டன் பொதுச்சந்தை பகுதிகளில் உள்ள 155 இடங்களில் தற்காலிக கடைகளை அமைப்பதற்கான ஏலம் அட்டன் - டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நேற்று (11) இடம்பெற்றது.
இதன்போதே வியாபாரிகளால் மேற்படி இடங்கள், ஏலம் மூலம் வாங்கப்பட்டுள்ளது.
மேற்படி இடங்களில் தற்காலிகளாக அமைக்கப்படும் கடைகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பொறுப்பும் ஏலத்தின் மூலமே வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் 4 லட்சம் ரூபாவாகும்.
அத்துடன், தீபாவளி பண்டிகைக்கான வியாபாரத்தை முன்னெடுப்பதற்கு அட்டன் - டிக்கோயா நகரசபையின் மண்டபமும் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
அட்டன் - டிக்கோயா நகரசபையால் வழங்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றியே வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இதனை கண்காணிப்பதற்கு அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்று பணியில் ஈடுபடுத்தப்படும் எனவும் தவிசாளர் தெரிவித்தார்.
அதேவேளை, வியாபாரிகள் மற்றும் நகருக்கு வரும் நுகர்வோரின் பாதுகாப்பு கருதி பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. பண்டிகை முடியும்வரை தற்காலிக காவல் அரணொன்றும் அமைக்கப்படவுள்ளது.