(க.கிஷாந்தன்)
தெருக்கூத்து ஆடுவதனால் சமூகத்தை மாற்ற முடியாது நிலையான திடமான தலைமைத்துவத்தின் மூலம் தான் சமூகத்திலும் தோட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்த முடியும். அண்மைகாலத்தில் பல உறுதியான தலைவர்கள் இன்மையால் நாம் பல பின்னடைவுகளை சந்திக்திருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
பொகவந்தலாவ பகுதியில் பொகவந்தலாவ தோட்டத்திற்கு செல்லும் புனரமைக்கப்பட்ட பாதை ,டின்சின், கெம்பியன் ஆகிய ஆலயங்களுக்கு சிலைகள், விளையாட்டு உபகரணங்கள், அறநெறி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் போன்றன வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அதில் கெம்பியன் பகுதியில் 23.07.2017 நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை தமிழ் கல்வி, விவசாயம், சிறு கைதொழில், மீனபிடி, இந்து கலாசார அமைச்சர் எம்.ரமேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ், சத்திவேல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ராஜதுரை, ஜெகதீஸ்வர்ன், முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அன்று இந்திய பிரதமர் வந்த நேரம் நாங்கள் தனியாக சந்தித்து எங்கள் மக்களுக்கு இரண்டு லட்சம் வீடுகளை அமைத்து கிராமங்களாக மாற்றி தருமாறு கேட்ட போது அதற்கு அவர் ஏன் வீடு வழங்க வேண்டும் என்றார். அதற்கு ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் உங்கள் அரசாங்கம் தான் எங்களை இங்கு அனுப்பியுள்ளது இந்திய அரசாங்கத்தினால் நாங்கள் எதனையும் பெறவில்லை. டெல்லி எமது மக்களை இங்கு அனுப்பியதனால் தான் எம் மக்கள் அடிப்படை வசதி இன்றி திண்டாடுகிறார்கள்.
ஆகவே எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் எமது மக்கள் ஏதாவது செய்து பிழைத்து கொள்வார்கள். அத்தோடு மலையக மாணவர்களுக்கு உயர் கல்விக்கு விசேட புலமை பரிசில் திட்டம் ஒன்றினையும் அமுல்படுத்த வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. 10000 வீடுகள் கட்டிக்கொடுக்க சம்மதித்ததுடன் சகல வசதிகளையும் கொண்ட பல்கலைகழகம் ஆசிரியர்களுக்கு பயிற்சி போன்றன செய்து கொடுக்க சம்மத்தித்தார். அன்று சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்தில் பாடசாலைக்கென்று இரண்டு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டன. ஆனால் கௌரவ ஜனாதிபதி நிதி வழங்கியும் காணி இல்லாமையினால் அந்த நிதி திறை சேரிக்கு மீண்டும் சென்றுள்ளது. இது எம்மத்தியில் உள்ள அரசியல் சமூக பலத்தினையே நிரூபிக்கின்றது.
அண்மையில் ராகலையில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த இராணுவ கொமாண்டர் ஒருவர் அங்குள்ள தோட்டத்தில் இராணுவ முகாம் அமைக்க 50 ஏக்கர் காணியினை பெற்றுத்தருமாறு என்னிடம் கோரினார். நாம் எம் மக்கள் எங்கு செல்வார்கள் என்று கேட்ட போது அது மூடி கிடக்கும் தோட்டம் தானே என தெரிவித்தார். இது பெரிய வீட்டில் பேச வேண்டிய விடயம் எமது மக்களுக்கு வீடு கட்டுவதற்கு பாடசாலை கட்டுவதற்கு வீதிகள் அமைப்பதற்கு காணிகளை பெற்றுக்கொடுக்காத நிலையில் அப்படியிருக்கும் போது எமது மக்களின் குறைகளை தீர்த்து விட்டு தான் இதை எல்லாம் பேச வேண்டும்.
அதே போன்று தான் சூரியகந்த தோட்டத்தில் 1000 ஏக்கரை பெரும்பான்மை மக்களை குடியமர்த்த வழங்குமாறு ஒரு பெரும்பான்மை அமைச்சர் பாராளுமன்ற பகுதியில் தெரிவித்தார். எமது மக்கள் எங்கு போவார்கள் என்று கேட்ட போது அவர்களை இடையே சொருகி விடலாம் என்றார். இலங்கையில் தேயிலையும், இறப்பரும் மாத்திரம் தான் இருந்தன. அதனால் இந்திய வம்சாவளி மக்கள் மாத்திரம் பெரும்பான்மையாக வாழந்ததனால் சதி திட்டத்தின் கீழ் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு முக்கியதுவம் அளித்து இன்று 70 சதவீதத்திற்கும் மேல் சிறு தேயிலை உற்பத்தி செய்கின்றனர்.
கால் ஏக்கர் அரை ஏக்கர் என ஐந்து லட்சம் பேர் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் இருக்கிறார்கள். அரசாங்கம் அவர்களை ஊக்குவிப்பதே தவிர எமது தோட்டங்களை விருத்தி செய்யவில்லை. அரசாங்கம் தேயிலை தோட்டங்களை விருத்தி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. மக்களின் தேவைகளையாவது பூர்த்தி செய்திருக்கலாம். அதனையும் செய்யவில்லை. அரசாங்கம் நினைத்திருந்தால் வீடுகள் கட்டியிருக்கலாம், வீதிகள் அமைத்திருக்கலாம், ஆங்காங்கே ஓரிரு வீடுகள் கொடுப்பதன் மூலம் ஒரு சமூகம் ஒரு போதும் முன்னேறாது எனவே சரியான முறையில் திட்டங்கள் வகுத்து வீடுகளை கட்ட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.