Showing posts with label education. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


2026 ஆம் ஆண்டிற்கான கோட்ட மட்ட தமிழ் தினப் போட்டிகளில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டிகளில் பாடசாலை மாணவர்கள் மொத்தமாக 05 முதலாம் இடங்கள், 01 இரண்டாம் இடம், 02 மூன்றாம் இடங்கள் எனப் பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வெற்றிகளுக்காக மாணவர்களை அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்து வழிநடத்திய தமிழ் துறை ஆசிரியர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாதிம் அவர்களுக்கும் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் அவர்கள் பாடசாலை சார்பாக தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.


 நூருல் ஹுதா உமர்


கல்வி, உயர் கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் பிரதம மந்திரியும், கல்வி, உயர் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனது முன்மொழிவில் இலங்கையில் அமைந்துள்ள 06 தமிழ் மொழி மூல தேசிய கல்வியியற் கல்லூரிகளில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் 1992ம் ஆண்டிலிருந்து 20 வருடங்கள் உடற்கல்வி பாடநெறி சிறப்பாக கற்பிக்கப்பட்டு நாட்டுக்குத் தேவையான சிறந்த உடற்கல்வி ஆசிரியர்களை உருவாக்கி வந்தது. 2013ம் ஆண்டில் சிலரது தனிப்பட்ட நலனுக்காக இக்கற்கை நெறி இடைநிறுத்தப்பட்டன. எனவே, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் உடற்கல்வி கற்கை நெறிக்கு போதுமான இடவசதிகள், வசதியான விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளதுடன் அண்மையில் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 02 உடற்கல்வி விரிவுரையாளர்கள் இக்கல்லூரிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, இடைநிறுத்தப்பட்ட உடற்கல்வி பாடநெறியினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை கௌரவ பிரதம மந்திரி அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக விளக்கங்களைப் பெற்றுக் கொண்ட கௌரவ பிரதம மந்திரி அவர்கள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்ட உடற்கல்வி கற்கை நெறியினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அவர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் போட்டிப் பரீட்சைக்கு தோற்றி 172 புள்ளிகளுக்கு குறைவாகப் புள்ளிகளைப் பெற்ற தகுதியான 1216 ஆசிரியர்கள் மீதமாக உள்ளனர். இவ் ஆசிரியர்களில் 50 வயதினை பூர்த்தி செய்தவர்களும் உள்ளனர். சென்ற 26.11.2025 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கௌரவ பிரதம மந்திரி அவர்களை சந்தித்த அதிபர் பரீட்சை எழுதிய ஆசிரியர்களுக்கு இதுவரை அதிபர் நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. பரீட்சை எழுதியவர்களில் பலர் 50 வயதினை தாண்டியுள்ளனர். எனவே, இவர்களின் விடயமாக கல்வி அமைச்சின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்குமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

அதிபர் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அவர்களை பதிலளிக்குமாறு பிரதம மந்திரி பணித்தார்.

இது தொடர்பாக பதிலளித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அதிபர்களால் கல்வி அமைச்சுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டு தற்போது அந்த வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்துள்ளன. எனவே, அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு அதிபர் நியமனம் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் மயோன் சமூக சேவை அமைப்பின் அனுசரனையில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்கை நெறி தெரிவு மற்றும் விண்ணப்பித்தல் வழிகாட்டல் நிகழ்வு மாளிகைக்காடு பாவா ரோயல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம வளவாளராக ஆசிரியர் சபீர் ஹமீட் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு துறைகளிற்கும் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கான விண்ணப்பித்தல் மற்றும் கற்கை நெறி தெரிவு தொடர்பான வழிகாட்டலை வழங்கினார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மற்றும் சமூகவியல் துறை பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பல்கலைக்கழக நடைமுறை தொடர்பில் விஷேட உரையாற்றினார்.  மேலும் மயோன் சமூக சேவை அமைப்பு சார்பாக நிகழ்வின் கெளரவ அதிதியாக திடீர் மரண விசாரணை அதிகாரி, மொழிபெயர்ப்பாளர் ஏ.எச்.அல் ஜவாஹீர் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு இளைஞர் சேவை அதிகாரி அன்வர் அப்துல் கபூர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

சுமார் 120 இற்கும் மேற்பட்ட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

அரச பாடசாலைகளில் பதில் அதிபர்கள் பிரச்சினை: ஜனாதிபதியிடம் தீர்வு கோரி வேண்டுகோள்


நூருல் ஹுதா உமர் 


அரச பாடசாலைகளில் நீண்டகாலமாக கடமையாற்றி வரும் பதில் அதிபர்கள் தங்களது சேவை நிலை தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


2026 ஏப்ரல் 27ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களில், தற்காலிக, நாளாந்த, பதிலீடு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேவையில் உள்ள சுமார் 9,800 அரசு ஊழியர்களை நிரந்தரமாக்கும் முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிறுத்தி, அதே கொள்கையின் அடிப்படையில் பதில் அதிபர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பதில் அதிபர்கள் தெரிவித்ததாவது, 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் தங்களது சேவை நிலைமை தொடர்பில் சரியான தீர்வுகள் எடுக்கப்படாமல் இருப்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அதிபர் இல்லாத பாடசாலைகளை திறம்பட வழிநடத்தி வந்த போதிலும், சிலர் மீண்டும் ஆசிரியர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


மேலும், வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் பணியாற்றிய பலர் இந்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றம், பொது சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


இந்நிலையில், பதில் அதிபர்களுக்கென தனிப்பட்ட போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வயது வரம்பை கடந்தும் நீண்டகால சேவையாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சு, மாகாண நிர்வாகங்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பலமுறை எழுத்து மற்றும் நேரடி முறையில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்பதில் அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.


மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட கல்வி அமைச்சு அதிகாரிகளையும் நேரில் சந்தித்து தங்களது பிரச்சினைகள் எடுத்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.


நாட்டின் கல்வி அமைப்பை நிலைநிறுத்துவதில் தங்களது பங்களிப்பு முக்கியமானது என வலியுறுத்திய பதில் அதிபர்கள், தங்களது மனிதாபிமான மற்றும் தொழில்நிலை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி, பதில் அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெற உள்ளது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். சுமார் 08:30 மணிக்கு இவிஎம் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும்.


 நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் 75ஆம் ஆண்டு பூர்த்தி (பவள விழா) நிகழ்வுகளின் தொடக்கமும், அதனை ஒட்டிய ஊடக சந்திப்பும் இன்று (03) பாடசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம். எம். ஹிர்பஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை முன்னிறுத்தும் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், புனர் நிர்மாணம் செய்யப்பட்ட முன்பள்ளி கட்டிடம், நவீன வசதிகளுடன் கூடிய விஞ்ஞான ஆய்வுக்கூடம் மற்றும் பல்லூடக மற்றும் ஆங்கிலப் பிரிவு ஆகியவை விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பாடசாலையின் பெயரை “அல் ஜலால் மகாவித்தியாலயம்” என மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

75ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நடைபவனி, நினைவு மலர் வெளியீடு, பழைய மாணவர்கள் ஒன்றுகூடல், கவியரங்கு, கட்டுரை மற்றும் விவாதப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், மாணவர் திறன்கள் வெளிப்படுத்தும் கண்காட்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. சமூக நலத்திட்டங்களாக மருத்துவ முகாம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இதனுடன், பவள விழா நினைவு சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், விழாவை முன்னிட்டு சிறப்பு மேலங்கி வெளியீடும் இடம்பெறவுள்ளது.

பல தசாப்தங்களாக கல்வித் துறையில் சிறந்து விளங்கி, சமூகத்திற்கு பல்வேறு சாதனையாளர்களை உருவாக்கிய கல்வி நிலையமாக அல் ஜலால் வித்தியாலயம் திகழ்கிறது. கல்விசார் முன்னேற்றத்துடன் மட்டுமல்லாமல், மாணவர்களின் ஒழுக்கம், தலைமைத்திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் பணியிலும் இந்நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது.

இவ்விழா, பாடசாலையின் வரலாற்றுப் பயணத்தை மீள்பார்க்கும் ஒரு முக்கிய தருணமாக மட்டுமல்லாமல், கல்வி முன்னேற்றம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு பிரதிநிதிகள், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தனர்.

மேலும், உலகம் முழுவதும் வாழும் பழைய மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் மற்றும் சமூக அங்கத்தினர்கள் அனைவரும் இணைந்து பவள விழாவை வெற்றிகரமாக கொண்டாட ஒத்துழைக்குமாறு பாடசாலை நிர்வாகம் திறந்த அழைப்பை விடுத்துள்ளது. பவள விழாவின் முக்கிய நோக்கங்களாக,

பாடசாலையின் வரலாற்றை உலகறியச் செய்தல், மாணவர்களிடையே பற்றுணர்வை உருவாக்குதல், நவீன கல்வி வசதிகளை மேம்படுத்துதல், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்பை வலுப்படுத்துதல், இணைப்பாட செயற்பாடுகளை ஊக்குவித்தல், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணருதல், ஆசிரியர்களை ஊக்குவித்தல், சேர்க்கை வீதத்தை உயர்த்துதல் மற்றும் பாடசாலை – சமூக உறவை பலப்படுத்துதல் ஆகியவை இவ்விழாவின் முக்கிய நோக்கங்களாக அமைந்துள்ளன.


 நூருல் ஹுதா உமர்


மே தினத்தை முன்னிட்டு, இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா (HNDA) பட்டதாரிகள் தங்களது தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனையில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், நீண்டகாலமாக நிலவி வரும் தொழில்முறை அங்கீகாரக் குறைபாடு, சம்பள அநீதி மற்றும் சேவை அமைப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து தீவிர கவலை வெளியிடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் கருத்து தெரிவித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், கணக்கியல் துறையில் பணியாற்ற தேவையான முழுமையான தகுதிகள் இருந்தும், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் அரசுத் துறைகளில் உரிய அங்கீகாரம் பெறாமல் பின்தள்ளப்படுவதாக குற்றம்சாட்டினர். குறிப்பாக, பட்டப்படிப்பு தகுதியுடன் இணையான நிலை வழங்கப்படாதது காரணமாக பதவி உயர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தொழிற்சங்கங்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதிமொழிகளை இதுவரை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்கான தனித்த சேவை அமைப்பை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகள் பலமுறை அறிவிக்கப்பட்டும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சம்பள கட்டமைப்பில் நிலவும் வேறுபாடுகளும் இச்சந்திப்பில் முக்கியமாக முன்வைக்கப்பட்டன. ஒரே பணியை மேற்கொள்ளும் பட்டப்படிப்பு தகுதியாளர்களுடன் ஒப்பிடும்போது உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் குறைந்த சம்பளம் பெறுகின்றனர் என்பதுடன், சேவை அனுபவம் அதிகரித்தாலும் அதற்கேற்ற சம்பள உயர்வுகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்கால தேவைகள் தொடர்பாக பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா தகுதியை பட்டப்படிப்பிற்கு இணையானதாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தல், தனித்த சேவைப் பிரிவை உடனடியாக அமல்படுத்தல், சமச்சீர் சம்பள கட்டமைப்பை உறுதி செய்தல், பதவி உயர்வுகளில் சம வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் மேலதிக கல்வி மற்றும் தொழில்முறை முன்னேற்ற வாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்குகின்றன.

அரசுக்கு மூன்று ஆண்டுகள் காலம் கொடுத்துள்ளோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கடந்த காலத்தில் போராடியது போல  போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என இந்த தொழிற்சங்கம் எச்சரித்துள்ளன.

இதன்போது மறைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களுக்கு மௌன பிரார்த்தனை செய்யப்பட்டதுடன் இந்த தொழில் சங்க வளர்ச்சியில் பங்காற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளர்களான கே.கோபாலசிங்கம், ஏ.எஸ்.எம். முஜாஹித் ஆகியோர் பொன்னாடை போத்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.  மே தினத்தின் பின்னணியில் வெளிப்பட்ட இந்தக் கோரிக்கைகள், நாட்டின் தொழிலாளர் உரிமைகள் மற்றும் கல்வித் தகுதிகளின் மதிப்பீடு குறித்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளன.

 (வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய நிரந்தர அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த அதிகாரியான ஆதம்பாவா முகம்மது நௌஸாத் நேற்று (27) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அச் சமயம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இள வயதிலேயே திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர், கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

வடமத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களங்களில் உதவிக்கல்விப் பணிப்பாளராகவும், மூதூர், சம்மாந்துறை, கிண்ணியா ஆகிய வலயக் கல்வி அலுவலகங்களில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
மேலும், மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் அதிபராகவும் சேவையாற்றியவர்.

இவர், கல்வி நிர்வாகத்தில் விரிவான அனுபவத்துடன் தற்போது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் நிரந்தர அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.


நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை சுகாதார பிரிவிற்குட்பட்ட இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை இலக்கு வைத்து இன்று (27) விசேட சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்தச் சோதனை நடவடிக்கைகள் நான்கு விசேட குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக 42 உணவகங்கள் மற்றும் டெஸ்ட் கடைகள் இதன்போது பரிசோதிக்கப்பட்டுள்ளன.

சோதனைகளின் போது சுகாதார விதிமுறைகளை மீறி, அசுத்தமான முறையில் உணவு தயாரிப்பு மற்றும் கையாளுதல் இடம்பெற்றிருந்த சில உணவகங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நடவடிக்கை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் மாவட்ட சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர், உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர், மற்றும் பிரிவு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய திடீர் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சம்மாந்துறை மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தெரிவித்தார்.


நூருல் ஹுதா உமர்

மருதமுனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான புதுமுக மாணவர்களை வரவேற்று கௌரவிக்கும் ‘Embark 2026’ நிகழ்வு ஷம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் பி.எம். அல் நஹ்தி மற்றும் செயலாளர் எம்.ஏ.எம்.சியாம் தலைமையில், நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையின் ஆலோசகர், வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷஸ்லி ஹமீத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கிராஅத் மற்றும் தலைமை உரையுடன் தொடங்கிய நிகழ்வில், பேராசிரியர் எம்.எம்.பாஸில் மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் உரையாற்றினார். “நீங்கள் நாளைய தலைவர்கள்; உங்களுக்கு வானமே எல்லை” என அவர் வலியுறுத்தியதுடன், மாணவர்கள் தங்களது பல்கலைக்கழக வாழ்க்கையை பயனுள்ளதாக வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பின்னர் உரையாற்றிய டொக்டர் ஷஸ்லி ஹமீத், பல்கலைக்கழக வாழ்க்கையின் முக்கியத்துவம், அனுபவங்கள் மற்றும் எதிர்கால இலக்குகளை அடையும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுடன் மனம்விட்டு பகிர்ந்துகொண்டார். அவரது உரை மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது.

மேலும், 2025 ஆம் ஆண்டு முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அதிதிகளுக்கும் கௌரவச் சின்னங்கள் வழங்கப்பட்டன. அமைப்பின் வரலாறு, பணிகள் மற்றும் நோக்கங்கள் குறித்து முன்னாள் உறுப்பினர்கள் விளக்கமளித்ததுடன், மாணவர்களின் சந்தேகங்களுக்கு குழுவாகவும் தனிப்பட்ட முறையிலும் பதிலளிக்கப்பட்டது.

 


( எம். என். எம். அப்ராஸ்)

 

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கற்கைகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையம் (CDPL) ஏற்பாடு செய்திருந்த 2022/2023 கல்வியாண்டிற்கான கலை இளமாணி (BA External) பட்டப்படிப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும் வழிகாட்டல் கருத்தரங்கும் ( 25ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் அவர்கள் பிரதான உரையாற்றினார். அவர் தனது உரையில்வெளிவாரி பட்டப்படிப்பு என்பது எளிதான பாதை அல்லஅது ஒழுக்கம்நேர முகாமைத்துவம்சுயமுனைப்பாடு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை வலியுறுத்தும் தனித்துவமான கல்விப் பாதை எனக் குறிப்பிட்டார்.

மேலும்குடும்பப் பொறுப்புகள் மற்றும் தொழில் வாழ்க்கையுடன் இணைந்து கல்வியைத் தொடரும் மாணவர்களின் உறுதியை அவர் பாராட்டியதுடன்வழங்கப்படும் கற்றல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி கல்விப் பயணத்தை பொறுப்புடன் முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். வெளிவாரி மற்றும் உள்வாரி பட்டப்படிப்புகளுக்கு இடையில் தரத் தளத்தில் எந்தவித வேறுபாடும் இல்லையெனவும்கடுமையான சேர்க்கை மற்றும் மதிப்பீட்டு முறைகள் மூலம் கல்வித் தரம் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

வெளிவாரி கற்கைகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையத்தின் வளர்ச்சியையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் மந்தமாக இருந்த இந்த நிலையம் தற்போது பல்வேறு பட்டப்படிப்புகள் மற்றும் பயிற்சித் திட்டங்களை முன்னெடுத்து பல்கலைக்கழகத்தின் முக்கிய கல்வி விரிவாக்க நிலையமாக வளர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளராக பணியாற்றிய கலாநிதி சபீனா அவர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

மேலும்பல்கலைக்கழகங்கள் குறைந்த வளங்களுடனும் நிதி கட்டுப்பாடுகளுடனும் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர்இந்நிலையிலும் சமூகத்திற்கான கல்வி சேவையை விரிவுபடுத்தும் பொறுப்பை தொடர்ந்து ஏற்று வருவதாக தெரிவித்தார். வெளிவாரி மாணவர்கள் இந்த வாய்ப்புகளை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வெளிவாரி பட்டப்படிப்புகளில் மூன்று ஆண்டுகளுக்குள் பட்டம் பெறும் மாணவர்களின் வீதம் சுமார் 10–15% மட்டுமே உள்ளதெனக் குறிப்பிட்ட அவர்மாணவர்கள் தங்களது முயற்சியால் இந்த வெற்றிவிகிதத்தை உயர்த்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

நிகழ்வில் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் அவர்கள் பாடத்திட்டம் தொடர்பான விரிவான விளக்க உரையாற்றினார். தனது உரையில்இந்தப் பட்டப்படிப்பு இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மற்றும் தர உறுதிப்படுத்தல் செயல்முறைகளின் அடிப்படையில் மீள வடிவமைக்கப்பட்டு தரநிலைக்கு உட்பட்டதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும்புதிய பாடத்திட்டம் தொழில்சார் தேவைகளுடன் இணங்க மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், basket system, செயன்முறை கற்றல் மற்றும் internship training போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார். கலைத்துறை மாணவர்களுக்கே உரிய internship வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்தப் பட்டப்படிப்பின் கல்வித் தரம் UGC மதிப்பீட்டின் அடிப்படையில் “B” தரநிலையைப் பெற்றுள்ளதாகவும்இது நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடத்தக்க நிலையை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் Virtual Learning Environment (VLE), course manual system மற்றும் தனிப்பட்ட server வசதிகள் போன்ற நவீன கற்றல் வளங்கள் வழங்கப்படுவதாகவும்வெளிவாரி மாணவர்களுக்கான நூலக வசதிகளை விரிவுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற seminar களில் கட்டாயமாக பங்கேற்பதும், assignment களை நேரத்தில் சமர்ப்பிப்பதும்சுய ஒழுக்கத்துடன் படிப்பை முன்னெடுத்துச் செல்லுவதும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

வெளிவாரி கற்கைகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி எம்.சி. அப்துல் நாசர் அவர்கள் நிகழ்விற்கு தலைமை தாங்கி வரவேற்பு மற்றும் வழிகாட்டல் உரையாற்றினார். வெளிவாரி பட்டப்படிப்பு என்பது கடின உழைப்புஒழுக்கம்நேர முகாமைத்துவம் மற்றும் தொடர்ச்சியான முயற்சி ஆகியவற்றை வலியுறுத்தும் கல்விப் பயணம் என அவர் குறிப்பிட்டார். வெளிவாரி மற்றும் உள்வாரி பட்டங்களுக்கு இடையில் எந்தவித தர வேறுபாடும் இல்லையெனவும்ஆனால் பட்டத்தை வெறும் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் பெற முடியாதுமாணவர்களின் அர்ப்பணிப்பும் முயற்சியும் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்குறைந்தளவு மாணவர்களே குறிப்பிட்ட காலத்திற்குள் பட்டம் பெறுகின்றனர் என்பதையும் குறிப்பிட்ட அவர்இந்த நிலையை மாற்ற மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். குடும்பப் பொறுப்புகள்தொழில் மற்றும் பொருளாதார சவால்களுடன் கல்வியை முன்னெடுக்கும் வெளிவாரி மாணவர்களுக்கு சமநிலை பேணும் திறன் மிகவும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மாணவர்கள் வெற்றியை அடைய மூன்று முக்கியக் கோட்பாடுகளையும் அவர் முன்வைத்தார்: கடின உழைப்புதொடர்ச்சியான முயற்சி மற்றும் இலக்கில் நிலைத்திருக்கும் மனப்பாங்கு. தற்காலிக சிதறல்கள் கல்விப் பயணத்தை பாதிக்கக்கூடும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

தான் ஒரு வெளிவாரி மாணவராக கல்வி கற்ற அனுபவத்தையும் பகிர்ந்த அவர்உறுதியும் முயற்சியும் இருந்தால் வெளிவாரி பட்டப்படிப்பிலும் வெற்றி பெற முடியும் என மாணவர்களை ஊக்குவித்தார். கல்வி தனிப்பட்ட முன்னேற்றத்திற்கே அல்லாது பெற்றோர்ஆசிரியர்கள் மற்றும் சமுதாயத்தின் பெருமையாகவும் அமைய வேண்டும் எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் முகாமையத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாதர உறுதிப்படுத்தல் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். ஹிலால்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஐ.எம். சமீம்வெளிவாரி கற்கைகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையத்தின் பிரதி பணிப்பாளர்களான சிரேஷ்ட விரிவுரையாளர் சரீனா யூ.எம்.ஏ. கபூர்கலாநிதி எம்.ஐ.எம். றியாத்சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். சரீப்டீன்சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. பாத்திமா தஹாரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சுமார் 700 மாணவர்கள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வை சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எச். நபார் அவர்கள் ஒருங்கிணைத்ததுடன்பொருளியல்துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி எம்.ரீ. ஆஹிலா ஹனீஹா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பேரறிவாளன், இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.


சிறையிலிருந்து விடுதலையான்பின் பேரறிவாளன் பற்றிய தகவல்கள் குறைவாகவே காணப்பட்டன.


இந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறார். சிறைமீண்ட பின் சட்டம் பயின்று வழக்கறிஞராகியுள்ளார்.


எந்த நீதிமன்றத்தின் படிகளில் தனக்கான நீதிக்காக காவலர்கள் புடைசூழ 31 ஆண்டுகள் ஏறி இறங்கினாரோ அதே நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாளை மறுதினம் (26) நடைபெறவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை, மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.


பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.


புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (24) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


விண்ணப்பங்களை தற்போது ஒன்லைன் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும். இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் இதற்கான இணையத்தளம் செயலிழக்கப்படும் என்பதால், அதன் பின்னர் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பம் கோரலுக்கான காலப்பகுதி எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


(பு.கஜிந்தன்)


பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று இம்முறை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதற்காக உழைத்த அனைவரையும் பாராட்டும் அதேவேளை, இந்த இடத்தை எமது மாகாணம் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பும், அடுத்த ஆண்டு இவ்வீதத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் எமக்கு ஏற்பட்டுள்ளதை நாம் ஒவ்வொருவரும் மனதிலிருத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் ஏற்பாட்டில், 2025ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு ஆலய முன்றலில் இன்று (21) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சாதனை மாணவர்களைக் கௌரவித்த பின்னர் உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,


ஆலயங்களின் சமூகப் பொறுப்பும் வெளிப்படைத்தன்மையும் சமூகப் பணிகளுக்காக நிதியுதவி கோரினால் பலரும் தயங்குவார்கள். ஆனால், ஆலயங்களுக்குத் தாராளமாக வழங்குவார்கள். எனவே, ஆலய நிர்வாகங்கள் அந்தப் பணத்தை வைத்துச் சிறந்த சமூகப் பணிகளை முன்னெடுக்க முடியும். அந்த வகையில், புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தினர் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியது.


ஆலயங்கள் தொடர்பில் எனக்குக் கிடைக்கப்பெறும் சில முறைப்பாடுகள் கவலைக்குரியனவாக உள்ளன. பல கோடி ரூபாய்களைச் செலவிட்டு ஆலயங்களைப் புனரமைப்புச் செய்து, கும்பாபிஷேகமும் நடத்தி முடித்த பின்னர், அது தொடர்பான கணக்கறிக்கைகளை வெளியிடாத ஆலயங்கள் உள்ளன.


இது குறித்து அண்மையில்கூட எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சில இடங்களில் ஆலய நிர்வாகங்களுக்குள் முரண்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகளும் நடைபெறுகின்றன. வழக்குகளுக்காக செலவிடும் பணத்தை, ஆலயத்தின் பெயரால் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் பயன்படுத்தலாம்.


ஆனால், புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தினர் பொங்கல் நிகழ்வு முடிந்த கையோடு, தமது வருவாய் தொடர்பான முழுமையான விவரங்களை வெறும் மூன்று நாட்களுக்குள் பொதுவெளியில் சமர்ப்பித்திருந்தனர். இது ஏனைய ஆலயங்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகும். இவ்வாறான வெளிப்படைத்தன்மை ஊடாக அவர்கள் மீதான மதிப்பு மேலும் அதிகரிப்பதுடன், பலரும் அவர்களை நம்பி உதவ முன்வருவார்கள்.


சமூகம் வேறு, ஆலயம் வேறு அல்ல. சமூகத்துக்குச் செய்யும் தொண்டே கடவுளுக்குச் செய்யும் தொண்டாகும். சமூகத்தில் ஒருவன் பட்டினியாக இருக்கும்போது, ஆலயத்துக்கு ஆடம்பரமான கோபுரம் அவசியமில்லை. ஆலயத்தின் வரலாற்றை எதிர்காலத் தலைமுறைக்குக் கடத்துவதற்கு கோபுரங்கள் உள்ளிட்ட நிர்மாணப் பணிகள் அவசியம்தான்; ஆனால், சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் அவற்றை முன்னெடுப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.


போரின் துயரிலிருந்து மீண்டெழுந்த கல்விச் சாதனை கல்வியால்தான் எதனையும் சாதிக்க முடியும். சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும் புரட்சியையும் கல்வியால்தான் ஏற்படுத்த முடியும். இன்று க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடத்தை இந்தக் கிளிநொச்சி மண்ணைச் சேர்ந்த மாணவன் தனதாக்கியுள்ளான்.


இந்தப் பிள்ளைகள் அனைவரும் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர்க் காலத்தில் சிறு குழந்தைகளாக இருந்திருப்பார்கள். அந்தப் போரின் கொடூரம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதன் வலியை அவர்கள் ஆழமாக உணர்ந்திருப்பார்கள். பல குடும்பங்கள் அந்தப் போரில் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டன.


அப்படியானதொரு கொடிய துயரம் நிகழ்ந்து, அழித்தொழிக்கப்பட்ட இந்தக் கிளிநொச்சி மண்ணிலிருந்து, மிகக் குறுகிய காலத்துக்குள் தேசிய மட்டத்தில் ஒரு மாணவன் உச்சத்தைத் தொட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.


முயற்சியும் வழிகாட்டலும் இந்த மாணவர்களின் விடாமுயற்சியே இன்று பெரும் வெற்றியாக மாறியிருக்கின்றது. ஒரு முயற்சி தோல்வியடைந்தால் நாம் வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் என அர்த்தமில்லை. நாம் எப்போது எமது முயற்சியைக் கைவிடுகின்றோமோ, அப்போதுதான் வாழ்க்கையில் தோற்றுப்போகின்றோம்.


இலட்சியத்துடன் உறுதியாகப் போராடினால் நினைத்ததை அடைய முடியும். இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் இந்த மண்ணுக்குச் சேவை செய்ய வேண்டும். தங்களைப் போன்று அடுத்த தலைமுறை மாணவர்களையும் சாதிக்கத் தூண்ட வேண்டும்.


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர், தமது பாடசாலையில் கற்று வெளியேறிய பழைய மாணவர்களைப் பயன்படுத்தி அடுத்தாண்டு பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குவதைப் போன்று, இந்தச் சாதனை மாணவர்களைப் பயன்படுத்தி எதிர்வரும் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம். இவர்களைப் பார்க்கும்போது ஏனைய மாணவர்களுக்கும் நாமும் இவ்வாறு சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இதனை முறையாக ஒழுங்கமைக்க வேண்டும்.


இறுதியாக, நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் சாதித்து உயர்ந்த நிலையை அடைந்தாலும், ஏனையோரை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அனைவரிடமும் பண்பாக நடந்துகொள்ளுங்கள். எத்தகைய சூழ்நிலை வந்தாலும் நேர்மையைக் கைவிடாதீர்கள். அதுவே உங்களை வாழ்வில் மேலும் உயர்த்தும், என்று தெரிவித்தார்.


இந்நிகழ்வில், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன், மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் கண்டாவளைக் கோட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஆலய நிர்வாகத்தினரால் பணப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், ஆலயத்தால் நடத்தப்படும் அறநெறிப் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கும் இதன்போது பரிசுகள் வழங்கப்பட்டன.


இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


(பு.கஜிந்தன்)

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.