Showing posts with label education. Show all posts

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.


அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டிய ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.


தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், கல்வியலாளர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கல்வித் துறை தொழிற்சங்க பிரதிநிதிகளைக் கொண்ட முறையான பொறிமுறையின் மேற்பார்வையின் கீழ் அந்த செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அவர்கள் இங்கு முன்மொழிந்தனர்.


கல்வி மறுசீரமைப்புகளை வெற்றிகரமாக்குவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெறுவது அத்தியாவசியமானது என்றும், சந்தேகம் அல்லது அவநம்பிக்கையுடன் மாற்றத்தை மேற்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய கல்வி மறுசீரமைப்புகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.


அரசாங்கம் தொடங்கியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து இங்கு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, முதலாம் தர மறுசீரமைப்பு செயற்பாடுகளைத் திட்டமிட்டபடி செயற்படுத்துவதாகவும், ஆனால் மொடியுல்களைத் தயாரிப்பதில் எழுந்துள்ள சிக்கல்கள், ஆசிரியர் பயிற்சியில் ஏற்படும் தாமதம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்த்து 6ஆம் வகுப்பு பாட மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் தொடங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


மறுசீரமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போட்கள், தொலைக்காட்சிகள் மற்றும் கணனிகள் போன்ற அடிப்படை வசதிகளைப் பெற்றோரின் பணத்தில் அன்றி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.


மேலும், மாகாணங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், ஊதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் இங்கு ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.


இலங்கை பிரிவெனா ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் வண. வகமுல்லே உதித தேரர், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வண. யல்வெல பஞ்ஞாசேகர தேரர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக அலஹப்பெரும, கல்வி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.ஜி.பி.எல். லால் குமார, அதிபர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ ஆகியோர் உட்பட பல ஆசிரியர் தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பலர் இதில் கலந்து கொண்டனர். தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.


மாளிகைக்காடு செய்தியாளர்


அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தின் கல்வி, இணைச் செயற்பாடு மற்றும் ஒழுக்கத் துறைகளில் சிறப்பான சாதனைகளைப் புரிந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் “லீடர் கிளாஸ்டர் ஹீரோஸ் – இரண்டாம் சீசன்” நிகழ்வு சனிக்கிழமை (10) சிறப்பாக நடைபெற்றது.

அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.நூருல் ஹுதா உமர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலையின் சாதனை மாணவர்கள் மேடையில் அழைக்கப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மட்டுமல்லாது, சமூக பொறுப்புணர்வு, தலைமைத்துவ திறன் மற்றும் ஒழுக்க வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீனின் ஆலோசனை, வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாகவும் சிம்ஸ் கெம்பஸ் தவிசாளர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா, பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச். றியாசா, என். வரணியா, எம்.எல்.எம். முதரிஸ், ஏ.பி.எப். நஸ்மியா, எஸ். சுரேஷ், அஸ்மா அப்துல் மலிக் ஆகியோர் கௌரவ அதிதியாகவும், ஆசிரிய ஆலோசகர்களான எஸ்.எம்.எம். அன்சார், எம்.எம்.எம். றபீக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், கல்வி அதிகாரிகள், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மாணவர்களின் சாதனைகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

எதிர்காலத் தலைமுறையை திறமையான, ஒழுக்கமுள்ள சமூகத் தலைவர்களாக உருவாக்கும் நோக்குடன், இத்தகைய ஊக்குவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.

 


நூருல் ஹுதா உமர்


அக்கரைப்பற்று கல்வி வலய கமு/அக்/ பதுரியா வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக பாடசாலை பெற்றோர்கள் இன்று (08) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் மொத்த அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் தற்போதைய அதிபர், அதே பாடசாலையில் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்திய பெற்றோர்கள், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் இடமாற்றம் செய்து அனுப்பப்பட்ட சாய்ந்தமருதை சேர்ந்த புதிய அதிபர் பாடசாலைக்கு வரக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள், கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாணவர் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் இடமாற்றம் வேண்டாம், அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் அதிபரை நீக்க வேண்டாம் போன்ற கருத்துப்பட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளும் போராட்டத்தில் காணப்பட்டன.

தற்போதைய அதிபரின் தலைமையில் பாடசாலையின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாகவும், மாணவர் ஒழுக்கம் மற்றும் கூடுதல் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தூர பிரதேசத்திலிருந்து  இங்கு வந்து கடமையாற்றுவது அந்த அதிபருக்கு கஷ்டமான ஒன்றாக இருக்கும் என்பதுடன் பாடசாலையில் முழுமையாக அவரால் அக்கறை செலுத்த முடியாத நிலை இருக்கிறது என்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், காரணமற்ற இடமாற்றம் பாடசாலையின் வளர்ச்சியை பாதிக்கும் என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதுகுறித்து உரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, மாணவர்களின் நலனை முதன்மைப்படுத்தி தீர்வு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

 


( வி.ரி.சகாதேவராஜி)

 
எமது சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தங்கியுள்ளது 
என காரைதீவு பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன் தெரிவித்தார்.

காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி விபுலவிழுதுகளின்  27 வது வருட விடுகைவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"கல்வியில் முதலீடு செய்வதே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்" என்றும் கூறினார்.

மொன்டிசோரி பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி விரி. சகாதேவராஜா தலைமையில் காரைதீவு இராமகிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலை மண்டபத்தில் நேற்று  (6) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன், கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதாமதி சந்திரகாந்தன், ஓய்வு நிலை அதிபர் க.புண்ணியநேசன், தொழிலதிபர் வி.சந்திரமோகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அங்கு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் உரையாற்றுகையில்..

முன்பள்ளி கல்வியே ஒரு குழந்தையின் அறிவு, ஒழுக்கம் மற்றும் சமூக உணர்வை உருவாக்கும் அடித்தளமாக அமைகின்றது என குறிப்பிட்டார்.

இங்கு பயின்று தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற சோ.குருஷித், ச.பத்மவர்ஷான், பி.சாரினி, ச.டுர்க்கா, ச.சஜீன், சு.கனீஷா, வி.விருஷாளி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

பணிப்பாளர் மற்றும் ஆசிரியைகளான நிலா,  ரம்யா ஆகியோரும் பெற்றோரால் கௌரவிக்கப்பட்டனர்.

மாணவரின் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. குறிப்பாக இந்து கலாசார திணைக்களம் அண்மையில் கொழும்பில் நடாத்திய தேசிய மட்ட அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கதாப்பிரசங்க போட்டியில் விபுலானந்த மொண்டிசோரி மாணவி யு.அம்சிகாவின் கதாப்பிரசங்கமும் அரங்கேறியது.

நிகழ்வில் பெற்றோர், ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் விழாக் குழுவினர் கலந்து கொண்டார்கள்.

 


நூருல் ஹுதா உமர்


2026 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரக் கல்வியைத் தொடங்குவதற்கு தகுதி பெற்ற (முதலாம் ஆண்டு) மாணவர்களுக்காக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை வக்ஃப் சபையுடன் இணைந்து, முஸ்லிம் தரும நிதியத்திலிருந்து (MCF) புலமைப்பரிசில் வழங்கத் தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம். எஸ். எம். நவாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பில் மேலும், இந்த புலமைப்பரிசில் திட்டம், வேறு எந்த நிறுவனத்திலிருந்தும் புலமைப்பரிசில் அல்லது நிதியுதவி பெறாத, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானம், கணிதம், வணிகம், கலை மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் க.பொ.த உயர்தர பாடத்திட்டத்தைப் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து துணை ஆவணங்களையும் இணைத்து, 2026 ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலின் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் அடிப்படையில் தகுதியுடையவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் உண்மைப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று, உண்மைப்படுத்தப்பட்ட க.பொ.த (சா.த) தேர்வு முடிவுகளின் பிரதியொன்று, உண்மைப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதியொன்று, குறைந்த வருமானம் உள்ளவர் என்பதை உறுதிப்படுத்தும் கிராம சேவகர் சான்றிதழ், குறைந்த வருமானம் உள்ளவர் என்பதை உறுதிப்படுத்தும் பள்ளிவாசல் கடிதம், பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தல் கடிதம் போன்றன இணைத்து அனுப்ப வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

 நூருல் ஹுதா உமர்


பிரின்ஸ் கல்லூரியின் 13வது வருடாந்த கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும் கடந்த 03.01.2025 அன்று நற்பிட்டிமுனை கமு/கமு/லாபிர் வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். அவருடன் கௌரவ அதிதிகளாக தாருல் ஹிக்மா அரபு கல்லூரி பணிப்பாளர் அஷ் ஷெய்க் அல். நாசீர்கனி, கமு/கமு/லாபிர் வித்தியாலய அதிபர் எம்.சி. நஜீப், கல்முனை மாநகர சபை முன்னாள்  உறுப்பினர் எம்.எஸ்.எம். ஹாரீஸ், எம்.ஐ. நிரோஷ் (JP), ஏ.ஆர். நிஸாப்தீன் (L.O), நிலா ஃபவுண்டேஷன் எம்.ஐ.எம். நிசாம், ஏ.எஸ்.எம். ஜஹ்பர் (SDO), ஆசிரியர் ஐ.எம். றிபான் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை அலங்கரித்தனர்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக 2025 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பிரின்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்று பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.

மாணவர்களின் கல்வி மற்றும் கலைத் திறன் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, அனைவரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நிறைவுற்றது.

(நூருல் ஹுதா உமர்)


கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 2026 மற்றும் 2027 ஆண்டுகளுக்கான பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம் 03.01.2026 அன்று கல்முனை வர்த்தகர் மர்ஹும் எம்.பி. மொஹிதீன் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவரும் அதிபருமான எம்.எஸ்.எம். பைசால் அவர்களின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் ஆரம்பத்தில் முன்னாள் பழைய மாணவர் சங்க செயலாளர் யூ.எல். ஹாஜா அவர்கள் 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான கடந்தகால செயற்பாடுகளை விளக்கமாக எடுத்துரைத்தார். அவை சபையோரால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர் கடந்தகால செயற்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் நிறைவேற்றப்படாத சில விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தார். மேலும் நிகழ்கால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் பாடசாலையின் கல்வி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் அவர் முன்மொழிவுகளை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பொருளாளர் கடந்த கால வரவு–செலவுக் கணக்கை சபையில் சமர்ப்பித்தார். அது சபையோரால் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிகழ்வின் இறுதிக் கட்டத்தில் 2026 மற்றும் 2027 ஆண்டுகளுக்கான புதிய பழைய மாணவர் சங்க நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. அதன்படி, சங்கத் தலைவராக அதிபர் எம்.எஸ்.எம். பைசால், செயலாளராக யூ.எல். ஹாஜா, பொருளாளராக எஸ்.என். ஹஸ்மி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் உப தலைவர்கள், உப செயலாளர்கள், உப பொருளாளர், கணக்காய்வாளர், ஊடகப் பொறுப்பாளர், விளையாட்டு பொறுப்பாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

நூருல் ஹுதா உமர்


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் 2024/2025 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் இணைந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு 2026.01.01 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு புதிய மாணவர்களை நோக்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக 2024/2025 கல்வியாண்டுக்கான Undergraduate Guide வெளியீடு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பீடத்திற்கு உட்பட்ட துறைத்தலைவர்கள் உரையாற்றினர்.

புதிய கல்விப் பயணத்தை ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் முக்கிய நிகழ்வாக இந்த ஆரம்ப விழா அமைந்திருந்தது. புதிய மாணவர்கள் அனைவரும் கல்விப் பயணத்தில் முழுமையான வெற்றியை அடைய வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தது.

நிகழ்வில் பதில் பதிவாளர் எம். ஐ. நௌபர், பீடாதிபதிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பேராசிரியர்கள், நூலகர், பல்கலைக்கழக பொறியியலாளர், பிரதம பாதுகாப்பு அதிகாரி, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்

 


தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். 


சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாட நூல் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை அவர் தமது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.


 


( வி.ரி.சகாதேவராஜா)

 சமகாலத்திற்கு பொருத்தமான தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த சம்மாந்துறை மாணவனுக்கு ஊக்குவிப்பாக 50 ஆயிரம் ரூபாய் பரிசை சம்மாந்துறை பிரதேச சபை வழங்கி கௌரவித்தது.

சம்மாந்துறை அல் - அமீர் வித்தியாலத்தின் தரம் 09 கல்வி பயிலும் மாணவன் ஏ.எம்.எம்.அப்ஹாம் தன்னியக்க வெள்ள வீதித் தடை உபகரணத்தை கண்டுபிடித்து மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தார் .

அவரின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் (50,000/=) ஐம்பது ஆயிரம் ரூபாய்  வழங்குவதற்கு சம்மாந்துறை பிரதேச சபையின் அனைத்து  உறுப்பினர்களின் ஏகமனதாக ஆதரவளித்தனர்.

 சம்மாந்துறை பிரதேச சபையின் விசேட  அமர்வு  தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் சபா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பின்னர் சாதனை மாணவனை சபைக்கு அழைத்து அங்கு தவிசாளர் மாஹிர் காசோலை வழங்கி கௌரவித்தார்.



நூருல் ஹுதா உமர்

அரசாங்கத்தினால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக சட்டத்திருத்தத்தில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் இது தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனுப்பிய இரண்டு கடிதங்களை உடனடியாகத் திரும்பப்பெறக் கோரியும், அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி (செவ்வாய்கிழமை) ஒருநாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

இத்தீர்மானம் நேற்று 28ஆம் திகதி நடைபெற்ற அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனுப்பிய Letter no. UGC/HR/2/3/264 dated 03.12.2025 மற்றும் Letter no. UGC/L/40 dated 18.12.2025 எனும் இரண்டு கடிதங்களே இந்தப் போராட்டத்திற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

அண்மையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பல்கலைக்கழக சட்டத்திருத்தம் தேவையானதுதான் என்றாலும், அதில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை திருத்துவதற்காக பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் முன்வைத்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக, கல்வி அமைச்சரும் பிரதமரும் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது



 பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத்தின் உப தலைவர் எம். ஏ. எம். சமீம் தெரிவித்துள்ளார்.


மேலும், குறிப்பாக பீடாதிபதி மற்றும் திணைக்களத் தலைவர் நியமனம் தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதங்களை உடனடியாக திரும்பப் பெறாவிடில், தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 


நூருல் ஹுதா உமர்

பல்லின மாணவர்களின் பல்வகை கலை நிகழ்ச்சிகளுடன் காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையின் 30 வது வருடாந்த விடுகை விழாவும் பரிசளிப்பு விழாவும் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இன்று (27) சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பாலர் மாணவர்களின் நடனம், நாடகம், பாடல், கவிதை வாசிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன. சிறுவர்களின் திறமைகள் மற்றும் தன்னம்பிக்கை வெளிப்படும் வகையில் அமைந்த நிகழ்ச்சிகள் விழாவிற்கு சிறப்புச் சேர்த்தன.
மேலும் கல்வி, ஒழுக்கம் மற்றும் இணைப்பாட செயற்பாடுகளில் சிறப்பாகத் திகழ்ந்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன் மூலம் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் விழா அமைந்திருந்தது.
நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி. அருணன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்களான ஏ. சஞ்சீவன், ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ் அவர்களும் விசேட அதிதியாக நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்த அல்-மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல். என். ஹுதா உமர் கலந்து கொண்டதுடன் மேலும், ஆலய நிர்வாகத்தினர், பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர், கல்வி ஆர்வலர்கள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மூன்று தசாப்தங்களை கடந்த கல்விச் சேவையில் பாடசாலை வகித்த பங்களிப்பு குறித்து நினைவுகூரப்பட்டதுடன், எதிர்கால கல்வி முன்னேற்றத்திற்கான திட்டங்களும் இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டன.


சேவையில் பாடசாலை வகித்த பங்களிப்பு குறித்து நினைவுகூரப்பட்டதுடன், எதிர்கால கல்வி முன்னேற்றத்திற்கான திட்டங்களும் இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டன


நூருல் ஹுதா உமர்


2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பெரும் வெற்றிகளைப் பெற்று தந்த சாதனை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் "GRAND ACHIEVERS' DAY - 2025 " பெருவிழா நேற்று (2025.12.26 ) மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். ஆர். ஹஸந்தி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாதனை மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், சாதனை மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


( வி.ரி. சகாதேவராஜா)


மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச செயலக சமுர்த்தி மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு இணைந்து பிரதேச சிறுவர் கழகங்களிடையே நடாத்திய ஓவியம் மற்றும் பதாதை தயாரித்தல் போட்டியிலே பங்குபற்றிய சிறுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர்  தலைமையில் இன்று (2025.12.26) வெள்ளிக்கிழமை பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

'ஆக்கபூர்வமான ஆக்கங்களை அறிவித்தலாக ஒப்படைத்தல்' என்னும் தொனிப் பொருளின் கீழ் சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு போதைப் பொருளுக்கு எதிரான மனநிலையினை உருவாக்குவதனை நோக்கமாக கொண்டு ஏற்பாடு செய்த இந்த  ஓவியம் மற்றும் பதாதை தயாரித்தல் போட்டியில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  சிறுவர் கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்  கே. உதயகுமார், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்  எம். புவிதரன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்  தெ. உதயசுதன் மற்றும் அலுவலக  உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 நூருல் ஹுதா உமர்


வடக்கு – கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரும், இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியுமான மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஏ.சி. காதர் முகைதீன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.12.2025) அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) வளாகத்தில் நடைபெற்றது.

கடந்த 20.12.2025 (சனிக்கிழமை) அன்று 88 வயதில் வஃபாத்தான மர்ஹூம் காதர் முகைதீன் அவர்கள், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் அதிபராக பணியாற்றியதோடு, இப்பாடசாலையை தேசிய பாடசாலையாக உயர்த்துவதற்கான அடித்தளத்தை அமைத்த முக்கிய கல்வி நிர்வாகியாக விளங்கினார்.

அன்னாரின் கல்விச் சேவைகளை நினைவுகூரும் வகையில், இந்நிகழ்வை பாடசாலை நிருவாகமும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்வில் மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு, சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்றனர்.

பாடசாலை அதிபர் உரையாற்றும் போது, மர்ஹூம் காதர் முகைதீன் அவர்கள் கல்விக்காக செய்த அர்ப்பணிப்பான சேவைகள் மற்றும் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர், “ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதை அவர் செய்து விட்டுச் சென்ற பணிகளே பேசும். இன்று ஒரு சேவையாளருக்காக நாம் அனைவரும் ஒன்றுகூடி இறைவனிடம் பிரார்த்திக்கும் நிலைமை, அவர் இந்த சமூகத்திற்கு செய்த அரிய சேவைகளுக்கான உயிர்ப்பான சாட்சி” எனக் குறிப்பிட்டார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் கல்வி வரலாற்றுச் சேவைகளை நினைவுகூரும் வகையில், இந்நிகழ்வு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.

 


(வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறை வலய கல்விப் பணியகத்தின் வண்ணச் சிறகு ஓவிய கண்காட்சி 2025 தொடர்ச்சியாக 4நாட்கள் இடம்பெற்று இன்று வெள்ளிக்கிழமை நிறைவுக்கு வந்தது.

வரலாறு படைத்த ஓவியக் கண்காட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வலய சித்திர பாட ஆசிரிய ஆலோசகர் 
எஸ்.எல்.ஏ. முனாப் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்           
 சுவாமி விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபகரும் இந்து இளைஞர் மன்ற தலைவருமான த.கயிலாயபிள்ளையின் தலைமையில் நேற்று (23)இடம்பெற்ற அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் WG திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை ஆணையாளர் MBA சுபியான் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாசா ஆகியோர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வில் விசேட அதிதிகளாக திருக்கோவில் கல்வி வலய முன்பள்ளி பாடசாலைகளின் இணைப்பாளர் உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.விவேகானந்தராஜா சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் கே.ஜெயதாஸ் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் தெய்வேந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
35 வருடங்களை கடந்து பல்வேறு சேவையாற்றிவரும் இந்து இளைஞர் மன்றத்தினரால் பராமரிக்கப்பட்டுவரும் சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லத்தினால் 34 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்படும் பாலர் பாடசாலையின் விடுகை விழாவிற்கு வருகை தந்த அதிதிகளுக்கு மாணவர்கள் பெருவரவேற்பை அளித்தனர்.
இதன் பின்னராக மாணவர்களின் கலைத்திறமையினை வெளிக்காட்டுகின்ற பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
மாணவர்களின் சிறப்புமிக்க கலை நிகழ்வுகளை கண்டுகளித்த அதிதிகள் சிறப்பாக இயங்கிவரும் பாலர் பாடசாலை மற்றும் அதனை வழிநடத்தும் ஆசிரியர்கள் இந்து இளைஞர் மன்றத்தினரை பாராட்டி பேசினர்.
நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் றுபு திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை ஆணையாளர் யுடீயு சுபியான் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

 


( வி.ரி.சகாதேவராஜா)

 நாட்டில் உள்ள தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கு 23.12.2025 முதல் 04.01.2026 வரையும் 
முஸ்லிம் பாடசாலைகளுக்கு 27.12.2025 முதல் 04.01.2026 வரையும் விடுமுறை வழங்கப்படுகின்றது.

கல்வி அமைச்சின் செயலாளர் மேற்படி விடுமுறை சுற்றுநிருபத்தை அனுப்பி வைத்துள்ளார்.

சகல பாடசாலைகளும் புதிய கல்வி ஆண்டுக்காக 
 05.01.2026 ஆரம்பமாகின்றது.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஆ.வாகீசன் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.ஈ. ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்றது.

கியோக்குஷின்ரியூ (Kyokushinryu) சர்வதேச கராத்தே அமைப்பினால் நடாத்தப்பட்ட கறுப்புப் பட்டியினருக்கான  தரப்படுத்தல் நிகழ்வில் சென்சே (Sensei) ஆ.வாகீசன் அவர்கள் கறுப்புப்பட்டியில் அடுத்த நிலையான 2ம் நிலைக்கு (2nd Dan - Nidan) தரமுயர்த்தப்பட்டிருந்தார். இவருக்கான சர்வதேச சான்றிதழ், கறுப்புப்பட்டி, கறுப்புப்பட்டிக்கான சர்வதேச அட்டை (Black belt card)  ஆகியன பாடசாலை அதிபர் அவர்களால் பாடசாலை சமூகமாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.  

வாகீசன் அவர்களால் இந்த பாடலையில் Kyokushin கராத்தே பயிற்சி வகுப்புக்கள் முறையாக நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்ததக்கது. ஊக்குவிப்புக்களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளது.

 தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகள் என்ற வேறுபாட்டை மறந்து, நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 


குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மாத்திரம் வசதி வாய்ப்புகளை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி நிதியத்தினால் முன்னெடுக்கப்படும் 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வட மாகாண மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், இன்று (21) கிளிநொச்சி, இரணைமடு இராணுவ முகாமின் 'நெலும் பியஸ' மண்டபத்தில் நடைபெற்ற இடம்பெற்ற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மக்களுக்குப் பயனுள்ள வகையில் வளங்களைப் பயன்படுத்தக்கூடிய விதத்தில் அரசாங்கம் பொருளாதார முகாமைத்துவத்தை முன்னெடுத்து வருகின்றது. 

அத்தோடு, 2026 ஆம் ஆண்டில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் ஏனைய அரச உத்தியோகத்தர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 

அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்திற்கு அமைச்சுகளிடமிருந்தும் மாகாண மட்டத்திலிருந்தும் சிறந்த ஒத்துழைப்பு அவசியமாகும். 

தேசிய - மாகாண வேறுபாடுகளை மறந்துவிடுங்கள். அந்த ஒவ்வொரு பாடசாலையிலும் இருப்பவர்கள் எமது பிள்ளைகள். அந்த அனைத்துப் பிள்ளைகளுக்கும் உயர்தரமான கல்வியைப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. 

எனவே ஆசிரியர்களை நியமிக்கும் போதும், இடமாற்றம் செய்யும் போதும், அதிகாரிகளை நியமிக்கும் போதும் யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம். 

ஏனைய மாவட்டங்களில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகள் பற்றியும் சிந்தித்து, அனைவரையும் சமமாக நடத்துங்கள். 

நீங்கள் உண்மையான திறமைசாலிகள். இங்குள்ள நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, மீண்டும் வடக்கு மாகாணத்திற்குச் சேவையாற்ற வருவீர்கள் என நான் நம்புகிறேன். 

இன்னும் மூன்று நான்கு வருடங்களில் வடக்குப் பிரதேசம் தொடர்பான தீர்மானங்களை எடுப்பவர்கள் நீங்களே. 

அப்போது நீங்கள் வடக்கு மாகாணத்தின் முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்தித்து செயற்படுவீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். 

ஓர் அரசாங்கமாக நாங்கள் இந்தத் தலையீட்டை மேற்கொள்வது அந்த முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டே என்பதைக் கூற வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.