Showing posts with label education. Show all posts

 


கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் திறந்து வைப்பு

நூருல் ஹுதா உமர்


கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் இன்று (17) காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.


பாடசாலை உதவி அதிபர் எம்.எச்.ஐ. இஸ்ஸத் அவர்களின் நெறிப்படுத்தலிலும், அதிபர் எஸ்.எம்.எஸ். ரிஸ்ஸானா அவர்களின் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கணித ஆய்வுகூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.


கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலயத்தின் ஸ்தாபன மற்றும் பொது நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் அவர்களும், பிரதிக் கல்விப் பணிப்பாளரும் காரைதீவு பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ. சஞ்சீவன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.


விசேட அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர் தலில் அபூபக்கர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை பொறியியலாளர் இசட்.ஏ. அஸ்மீர், அல்-மீஸான் பௌண்டேஷன் தவிசாளர் நூருல் ஹுதா உமர் மற்றும் கல்முனை கல்வி மாவட்டத்தின் பல பாடசாலைகளைச் சேர்ந்த கணிதப் பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.


மாணவர்களின் கணிதக் கற்றலை செயன்முறை மற்றும் அனுபவ அடிப்படையிலானதாக மாற்றுவதற்காக நிறுவப்பட்டுள்ள இந்த ஆய்வுகூடம், கணிதக் கருத்துக்களை எளிதாக விளங்கிக் கொள்ளவும், மாணவர்களின் பகுத்தறிவு, தர்க்க சிந்தனை மற்றும் பிரச்சினைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்தவும் உதவும் என நிகழ்வில் அதிதிகளினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.


பிரதி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


கல்வித் துறையில் புதுமையான கற்றல் வளங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாக இக்கணித ஆய்வுகூடம் அமைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றும் எனவும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.


 யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுத்த நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா இன்றையதினம், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.



இந் நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதியரசர் சம்பத் அபேயகோன் பிரதம விருந்தினராகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் கௌரவ விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் சுஹர்ஷி ஹேரத்தும் பங்கேற்றிருந்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நீதம் இதழ் வெளியிடப்பட்டு வருவதுடன் இம்முறை பத்தாவது தடவையாகவும் குறித்த இதழ் வெளியிடப்படாமை குறிப்பிடத்தக்கது.


 


மாளிகைக்காடு செய்தியாளர்


கல்முனை கமு/கமு/ அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் விஞ்ஞானக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (15) நடைபெற்ற "Science Expo – 2026" விஞ்ஞானக் கண்காட்சி மாணவர்களின் ஆக்கபூர்வமான அறிவியல் படைப்புகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளுடன் வெற்றிகரமாக நிறைவுற்றது.

பாடசாலை பிரதி அதிபர் எம்.எச்.ஐ. இஸ்ஸத்தின் நெறிப்படுத்தலில் பாடசாலை அதிபர் திருமதி எஸ்.எம்.எஸ். ரிஸானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கல்விப் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் யூ.எல். ரியால் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மேலும் ஆசிரியர் ஆலோசகர் (விஞ்ஞானம்) ஏ.ஜி.எம். ஜூலூல், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆலோசகர் (விஞ்ஞானம்) எம்.எஸ்.எஸ். அமீன், அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல். நூருல் ஹுதா உமர், கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ். பைசால், கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தின் அதிபர்  எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களின் அறிவியல் ஆக்கங்களைப் பார்வையிட்டதுடன், அவர்களின் திறமைகளைப் பாராட்டினார்.

கண்காட்சியில் மாணவர்கள் உருவாக்கிய பல்வேறு விஞ்ஞான மாதிரிகள், பரிசோதனை விளக்கங்கள், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், இயற்பியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் தொடர்பான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இவை வருகை தந்த பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அதிதிகள் பாராட்டைப் பெற்றன.

மாணவர்களிடையே அறிவியல் சிந்தனை, ஆராய்ச்சி மனப்பாங்கு மற்றும் புதுமை திறனை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்தும் நடத்தப்படும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது.

 மாளிகைக்காடு செய்தியாளர்


சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா திங்கட்கிழமை (13) காலை பாடசாலை வளாகத்தில் ஒழுக்காற்று சபை தலைவர் எம்.எப்.எம். றிபாஸ் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறுவர் மற்றும் NICU பிரிவின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஏ.எம். மிஸ்பாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய மாணவர் தலைவர்களுக்கு பதவிச் சின்னங்களை அணிவித்து, உறுதிமொழி வழங்கி பதவியேற்றினார்.

கௌரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா மாலீக் கலந்து கொண்டதுடன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் நூருல் ஹுதா உமர் விசேட அதிதியாக பங்கேற்றார்.

இதன்போது மாணவர் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம், ஒழுக்கம், பொறுப்புணர்வு, சேவை மனப்பான்மை மற்றும் முன்னுதாரணமான நடத்தையின் அவசியம் குறித்து அதிதிகள் கருத்துரைகளை வழங்கினர்.

புதிய மாணவர் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக பதவிப் பொறுப்புகள் வழங்கப்பட்டதுடன், தலைமைத்துவப் பொறுப்புகளை நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றுவதாக அவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதன்போது ஆங்கில மொழித்தின போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாதிம், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 


பாறுக் ஷிஹான்


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் 2022/2023 கல்வியாண்டு மாணவர்களுக்கான தீவிரக் கற்கைநெறி (Intensive Programme) நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (06) தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தீவிரக் கற்கைநெறியின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஏ.எச். றிபாஸ் வரவேற்புரையாற்றியதுடன், பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் தலைமையுரையாற்றினார். மாணவர்களின் ஆளுமை, தலைமைத்துவம், சமூகப் பொறுப்புணர்வு, மொழித்திறன் மற்றும் டிஜிட்டல் அறிவாற்றலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என அவர் தெரிவித்தார். பல்கலைக்கழகக் கல்வி பாட அறிவுடன் மட்டுமன்றி சமகால உலகின் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து 2022/2023 கல்வியாண்டு மாணவர்களுக்கு தீவிரக் கற்கைநெறி நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ்.எம். ஜுனைடீன், தமிழ், அரபு, ஆங்கில மொழிப் புலமை, தகவல் தொழில்நுட்ப அறிவு, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டுத் திறன் மற்றும் சரியான Prompting திறன் ஆகியவை எதிர்காலப் பட்டதாரிகளுக்கு இன்றியமையாதவை எனக் குறிப்பிட்டார். மேலும், தொழில்துறை எதிர்பார்க்கும் திறன்களுடன் சமூகப் பொறுப்புணர்வும் தொழில்முறை ஒழுக்கமும் கொண்ட பட்டதாரிகளாக மாணவர்கள் உருவாக வேண்டும் என வலியுறுத்தினார்.

நிகழ்வின் இறுதியில் உதவி விரிவுரையாளர் எம்.எஸ்.எவ். பஹீமா நன்றியுரையாற்றினார். நிகழ்வில் கல்விசார் பணியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 


( வி.ரி.சகாதேவராஜா)


தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கியின் ஏற்பாட்டில் 2023,2024,2025 ஆண்டுகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 100 க்கு மேற்பட்ட மாணவர்கள் பதக்கம் அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.


" இளைய மனங்களை ஊக்கப்படுத்தி ஔிமயமான நாளை உருவாக்குவோம் " எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக நடைபெற்ற இவ் விழா, தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் என்.ஜனன் தலைமையில் தம்பிலுவில் மத்திய மகாவித்தியால ஒன்று கூடல் மண்டபத்தில்  நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது.


 தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கியில்  சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் மாணவர்களில் தரம் 05 புமைப்பரிசில் 2023,2024,2025 ஆண்டுகளில் சித்தியடைந்த 100 மேற்பட்ட மாணவர்களுக்கு புலமைபரிசில் சான்றிதழ் மற்றும் பரிசுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் கௌரவ அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 நூருல் ஹுதா உமர்


உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் CIPM ஆகியன இணைந்து கடந்த 04 ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்திய சுற்றாடல் வினாடி வினா போட்டியில், அம்பாறை மாவட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிந்தவூர் கமு/கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மாணவி சக்கி அஹமட் ஸீனத் அலீனா மாகாண மட்டப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

குறித்த மாணவி அண்மையில் வெளியிடப்பட்ட 2025 (2026) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்று கல்வித்துறையிலும் சிறப்பான சாதனையைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தேசிய மட்டத்திற்குத் தெரிவாகி பாடசாலைக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவிக்கு பாடசாலை சமூகம் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், மாணவிக்கு வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை வழங்கிய பாடசாலை அதிபர் ஏ.சி. ஹமீது, அம்பாறை மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை இணைப்பாளர் கே. குரைஷியா, சுற்றாடல் கழகப் பொறுப்பான உதவி அதிபர் எம்.ரீ. பெனாசிரா , பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், சுற்றாடல் கழக ஜனாதிபதி பதக்கப் பொறுப்பாசிரியை ஏ.எப். ருஸ்மா, சுற்றாடல் கழக ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஆளணியினருக்கும் பாடசாலை சமூகத்தினர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.


 நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 2026 ஜூலை 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஒலுவிலில் உள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர் மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

மூன்று நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய 3,398 பட்டதாரிகளுக்கு ஒன்பது தனித்தனி அமர்வுகளில் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா, உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தலைமையிலும், வேந்தர் கலாநிதி பாயிஸ் முஸ்தபா, PC முன்னிலையிலும் நடைபெறவுள்ளது. விழாவின் நிர்வாக ஒருங்கிணைப்பை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மேற்கொள்கிறார்.

பட்டமளிப்பு விழாவின் ஆரம்ப அமர்வில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டங்கள் வழங்கப்படுவதுடன், மத்திய மாகாண ஆளுநரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் சரத் அபேயகோன் பட்டமளிப்பு உரையை ஆற்றவுள்ளார்.

ஜூலை 25 ஆம் திகதி நடைபெறும் முதல் நாளில், காலை முதலாவது அமர்வில் பொறியியல் பீடம் (2018/2019 மற்றும் 2019/2020 கல்வியாண்டுகள்) மற்றும் தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படும். தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது அமர்வுகளில் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் இரண்டு கல்வியாண்டுகளைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

ஜூலை 26ஆம் திகதி, பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டு கல்வியாண்டுகளைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கான நான்காவது அமர்வு நடைபெறவுள்ளது. பின்னர் ஐந்தாவது மற்றும் ஆறாவது அமர்வுகளில் கலை மற்றும் கலாசார பீட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படும்.

இறுதி நாளான ஜூலை 27ஆம் திகதி, முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் பட்டதாரிகளுக்காக ஏழாவது மற்றும் எட்டாவது அமர்வுகள் நடைபெறவுள்ளன. ஒன்பதாவது மற்றும் இறுதி அமர்வில் கலை மற்றும் கலாசாரப் பீடம், முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடம் ஆகியவற்றின் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

மொத்தமாக 3,398 பட்டதாரிகள் இவ்வாண்டு பட்டம் பெறுகின்றனர். இதில் பொறியியல், தொழில்நுட்பவியல், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி, பிரயோக  விஞ்ஞானம், கலை மற்றும் கலாசாரம், முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களும் அடங்குகின்றனர். இது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி வளர்ச்சியையும் உயர்கல்வித் துறைக்கான அதன் பங்களிப்பையும் வெளிப்படுத்தும் முக்கியமான கல்வி நிகழ்வாகக் கருதப்படுகிறது.

பட்டமளிப்பு ஆடை பெற்றுக்கொள்ள அறிவிப்பு

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பட்டதாரிகள் தங்களுக்கான பட்டமளிப்பு அங்கி (Convocation Cloak), மாலை, அனுமதிச்சீட்டு மற்றும் தொடர்புடைய பொருட்களை ஜூலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தங்களது பீடங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அத்துடன், பட்டமளிப்பு அங்கி மற்றும் மாலையைப் பெற்றுக்கொள்ளும் போது, மாணவர்கள் தங்களது மாணவர் பதிவேடு அல்லது மாணவர் அடையாள அட்டையுடன், முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட அறிவிப்புப் படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், உரிய அடையாள ஆவணங்கள் மற்றும் அறிவிப்புப் படிவம் இல்லாமல் பட்டமளிப்பு பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் அறிவித்துள்ளார்.

 


ஹமீத் அல்-ஹுசைனியா கல்லூரியில் அல் ஹாஜ் இலியாஸ் அப்துல் கரீம் ஓம்னி பிளொக் புதிய ஒன்பது மாடி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது : பிரதி சபாநாயகர் பங்கேற்றார்.


நூருல் ஹுதா உமர்


கொழும்பு 12 ஹமீத் அல்-ஹுசைனியா கல்லூரியின் 141 ஆண்டு கால கல்விப் பாரம்பரியத்தில் புதிய அத்தியாயத்தைப் பதிக்கும் வகையில், முன்மொழியப்பட்டுள்ள ஒன்பது மாடிக் கல்வி, விளையாட்டு மற்றும் புத்தாக்க வளாகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28) கோலாகலமாக நடைபெற்றது.


இந்தப் பாரிய கல்வித் திட்டத்தின் புதிய கட்டிடத்திற்கு "அல் ஹாஜ் இலியாஸ் அப்துல் கரீம் ஓம்னி பிளொக்" (Al Haj Eliyas Abdul Kareem Omni Block) என உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டதுடன், அதற்கான நினைவுக் கல்லும் திறந்து வைக்கப்பட்டது.


மறைந்த அல் ஹாஜ் எம்.எச். உமர் அவர்களின் கல்வித் தொலைநோக்குப் பார்வையையும், ஹமீத் அல்-ஹுசைனியா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியையும் அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், லைட் ஃபார் லைஃப் (Light for Life – LFL) அமைப்பின் தலைவர் அல் ஹாஜ் எஸ்.எஸ்.யூ. ஜைனுல் ஆப்தீன் தலைமையிலான பணிப்பாளர் சபையின் அழைப்பின் பேரிலும், மலிபன் வோவன்ஸ் (Maliban Wovens Pvt. Ltd.) நிறுவனத்தின் தலைவர் அல் ஹாஜ் இலியாஸ் அப்துல் கரீம் அவர்களின் அனுசரணையிலும் முன்னெடுக்கப்படுகிறது.


இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதிலும் தேசிய அபிவிருத்தியை வலுப்படுத்துவதிலும் தரமான கல்வி மற்றும் நவீன கல்விசார் உட்கட்டமைப்புகள் வகிக்கும் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார்; அத்துடன், இந்த முக்கிய முன்னெடுப்பை மேற்கொண்ட 'லைட் ஃபார் லைஃப்' (Light for Life) அமைப்பு மற்றும் ஹமீதியன் சமூகத்தினரின் கூட்டு முயற்சிகளை அவர் பாராட்டினார்.


மேலும், கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக பிரதம அதிதி, கௌரவ அதிதி, அல்-ஹாஜ் எலியாஸ் அப்துல் கரீம் மற்றும் அவரது குடும்பத்தினர், 'லைட் ஃபார் லைஃப்' (LFL) அமைப்பின் பிரதிநிதிகள், ஹமீத் அல்-ஹுசைனி கல்லூரியின் அதிபர், மற்றும் நன்கொடையாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் இணைந்து அடிக்கல் நாட்டும் நிகழ்வை மேற்கொண்டனர்.


அமைக்கப்படவுள்ள இந்த ஒன்பது மாடிகளைக் கொண்ட கல்வி, விளையாட்டு மற்றும் புத்தாக்க வளாகம் இக்கல்லூரிக்காக மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய கல்விசார் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இது கட்டி முடிக்கப்பட்டதும், நவீன 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப (ICT) ஆய்வகங்கள், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி வசதிகள், விரிவுரை அரங்குகள், மொழி மையங்கள், விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர் மேம்பாட்டு வசதிகள் மற்றும் நவீன நீச்சல் தடாக வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைய உள்ளது.


இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முஃப்தி, வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள், அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், அதிபர்கள், நன்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலதரப்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கல்வியின் மூலம் எதிர்கால தலைமுறையை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த மாபெரும் திட்டம், ஹமீத் அல்-ஹுசைனியா கல்லூரியின் வரலாற்றில் நீடித்த கல்வி மரபை உருவாக்கும் முக்கிய முதலீடாக கல்வியாளர்கள் மற்றும் பழைய மாணவர்களால் வரவேற்கப்படுகிறது.


நூருல் ஹுதா உமர்

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நீண்டகால தேவையாக இருந்து வந்த நவீன விஞ்ஞான ஆய்வுகூடம், நேற்று திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிஷாத் அவர்களின் தொலைநோக்குப் பார்வை, அயராத முயற்சி மற்றும் அர்ப்பணிப்புமிக்க தலைமையின் பலனாக இந்த முயற்சி வெற்றியளித்துள்ளது.

அதிபர் ஏ.ஜி.எம். றிஷாத் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில், கல்முனை கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எச். றியாஸா பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆய்வுகூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

நிகழ்வில் விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.ஜி.எம். ஜுலூல், பகுதித் தலைவர் இசட்.எம். நூறுல் அமீன், விஞ்ஞானப் பாட ஆசிரியை திருமதி மஜீட், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

ஆய்வுகூடத்தை நவீன வசதிகளுடன் உருவாக்குவதற்கு தேவையான உபகரணங்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம். மாஹிர் மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் ஆகியோர் வழங்கி வைத்திருந்தனர்.

மேலும், அட்டாளைச்சேனை மற்றும் மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரிகளின் கட்டுறுப் பயிற்சி ஆசிரியப் பயிலுநர்களான எம்.எஸ்.எம். ஹப்ஸான், எம்.எம். மஃப்ஷான், ஜே.எச். ரிலா, ஏ.எச்.எம். ஷிமான், கதீஸா உம்மா மற்றும் ஏ.எஸ்.எப். ரிஸ்கா ஆகியோரின் அர்ப்பணிப்பான பங்களிப்பும் ஆய்வுகூடத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் விஞ்ஞான சுய ஆக்கங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்களும் இடம்பெற்றது.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் திருமதி எஸ்.எம்.எஸ். ரிஸ்ஸானா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிப் பணிப்பாளர் திருமதி எம்.எச். ரியாசா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கௌரவ விருந்தினராக கல்முனை கல்வி வலய பிரதிப் பணிப்பாளர் திரு எஸ். சுரேஷ் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக ஆசிரிய ஆலோசகர்களான திருமதி கிருஷ்ணகுமாரி டேவிட், ஐ.எம்.மவ்சூர், பாடசாலைக்கான வலயக்கல்வி பணிமனை இணைப்பாளர் தலில் அபூபக்கர் ஆகியோர் நிகழ்வைச் சிறப்பித்தனர்.

மேலும், அழைக்கப்பட்ட விருந்தினர்களாக கல்முனை அஸ்மா ஜுவல்ஸ் உரிமையாளர் எம்.ஆர்.ஏ.ஆர். ரிஸ்வான், அக்கரைப்பற்று ராசிக் பரீத் வித்தியாலய அதிபர் ஏ.எம். பரீத் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினர்.

இந்நிகழ்வின் போது மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், ஜனநாயக ஆட்சிமுறை, பொறுப்புணர்வு, தலைமைத்துவத் திறன் மற்றும் சமூகப் பொறுப்புகளை மாணவர்களிடையே வளர்ப்பதில் மாணவர் பாராளுமன்றத்தின் முக்கியத்துவம் குறித்து விருந்தினர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தி, பொறுப்பான குடிமக்களை உருவாக்கும் நோக்கில் பாடசாலையில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் பாராட்டத்தக்கவை என விருந்தினர்கள் தெரிவித்தனர். நிகழ்வின் இறுதியில் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கடமைகளை நேர்மையுடனும் பொறுப்புடனும் முன்னெடுத்து, பாடசாலையின் கல்வி மற்றும் ஒழுக்க முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்தனர்.

இந்நிகழ்வை அல்-அஸ்ஹர் வித்தியாலய மாணவர் பாராளுமன்றக் குழுவினர் சிறப்பாக ஒருங்கிணைத்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


ஆசிரியர்களுக்கு நன்றிக்கடன் செலுத்திய பழைய மாணவர்கள் : சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் உணர்வுபூர்வ கௌரவிப்பு விழா – ஒன்றுகூடலுக்கான சிறப்பு T-Shirt அறிமுகம்


நூருல் ஹுதா உமர் 


சாய்ந்தமருது கமு/கமு/மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற 1992/2005 பழைய மாணவர்கள், தங்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களுக்கும் முன்னாள் அதிபருக்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வு நேற்றிரவு உணர்வுபூர்வமாக சாய்ந்தமருது கமு/கமு/மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய தொழிநுட்ப மண்டபத்தில் நடைபெற்றது.


1992 முதல் 2005 வரையிலான காலப்பகுதியில் இப்பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், தங்களது ஆசிரியர்கள் மற்றும் அக்காலத்தில் பாடசாலையின் அதிபராகப் பணியாற்றிய எம்.ஐ. ஜப்பார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


நிகழ்வை மேலும் அர்த்தமிக்கதாக்கும் வகையில் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்காக இராப்போசன விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட தருணங்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தன.


இதனுடன், பழைய மாணவர்களின் ஒன்றுகூடலின் அடையாளமாக வடிவமைக்கப்பட்டிருந்த சிறப்பு T-Shirt ஒன்றும் இந்நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது பழைய மாணவர்களிடையேயான ஒற்றுமை, நட்பு மற்றும் பாடசாலையின் மீதான பற்றுறுதியை பிரதிபலிக்கும் சின்னமாகக் கருதப்படுகிறது.


ஆசிரியர்களை மறவாமல் நன்றியுடன் கௌரவிக்கும் இம்முயற்சி, மாணவர்–ஆசிரியர் உறவின் உயரிய பண்பையும் கல்வியின் மனிதநேயப் பெறுமதிகளையும் வெளிப்படுத்தும் முன்னுதாரணமாகப் பலராலும் பாராட்டப்பட்டது.


“ஆசான்களை மதிக்கும் மாணவர்களை உருவாக்கிய கல்வி நிலையங்களில் சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயம் முன்னணியில் திகழ்கிறது. காலம் கடந்த பின்னரும் தங்களது ஆசிரியர்களுக்கு பழைய மாணவர்கள் வழங்கும் மரியாதையும் நன்றியுணர்வும் கல்வியின் உண்மையான வெற்றியை எடுத்துக்காட்டுகின்றது” என நிகழ்வில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.




 நூருல் ஹுதா உமர்

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முதலாம் முயற்சி பெறுபேறுகளின் அடிப்படையில், நாட்டின் கல்வி வலயங்களுக்கிடையிலான தரவரிசையில் அக்கரைப்பற்று கல்வி வலயம் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் பெருமையை உயர்த்தியுள்ளது.
பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோற்றிய 1,727 மாணவர்களில் 1,475 பேர் உயர்தரக் கல்விக்குத் தகுதி பெற்று 85.41 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் அக்கரைப்பற்று கல்வி வலயம் தேசிய ரீதியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
தேசிய தரவரிசையில் கண்டி கல்வி வலயம் 85.97 சதவீதத்துடன் முதலிடத்தையும், அக்கரைப்பற்று 85.41 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், கல்முனை கல்வி வலயம் 84.63 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
மேலும், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 1,324 பேர் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில், தமிழ்/சிங்களம், ஆங்கிலம் மற்றும் கணிதம் உள்ளிட்ட மூன்று திறன்களுடன் சித்தி பெற்று 76.66 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், கல்முனை கல்வி வலயம் 3ஆம் இடத்தையும், திருக்கோவில் கல்வி வலயம் 4ஆம் இடத்தையும், மட்டக்களப்பு கல்வி வலயம் 11ஆம் இடத்தையும், சம்மாந்துறை கல்வி வலயம் 33ஆம் இடத்தையும், அம்பாறை கல்வி வலயம் 37ஆம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு அர்ப்பணிப்பின் பலனாக அக்கரைப்பற்று, கல்முனை கல்வி வலயங்கள் இந்த வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அக்கரைப்பற்று மற்றும் கல்முனை கல்வி வலயங்கள் தேசிய தரவரிசையின் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெற்றிருப்பது கிழக்கு மாகாணத்தின் கல்வித் தரம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவதை உறுதிப்படுத்தும் முக்கியமான சான்றாகக் கருதப்படுகிறது.
கல்விச் சமூகத்தினர் இந்த சாதனையை வரவேற்று, எதிர்கால ஆண்டுகளில் முதலிடத்தை நோக்கி பயணிக்கும் வகையில் கல்வி முன்னேற்ற நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



மாளிகைக்காடு விசேட நிருபர்
கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் தலைவர்களுக்கான பதக்க அணிவிப்பு விழாவும், தலைமைத்துவ பயிற்சிகளை முடித்துக்கொண்ட மாணவ தலைவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும் பாடசாலையின் ஸ்மார்ட் அறையில் நடைபெற்றது.
பாடசாலை உதவி அதிபர் எம்.எச்.ஐ. இஸ்ஸத்தின் நெறிப்படுத்தலில் அதிபர் எஸ்.எம்.எஸ். ரிஸானா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம். ரோசான் அக்தர் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக தேசிய மாணவர் படையணியின் 38ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் கே.எம். தமீம், அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல். நூருல் ஹுதா உமர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளையின் தலைவர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.முர்ஷித் முப்தி (ஸஃதி, நஜ்மி) ஆகியோர் கலந்துகொண்டு தலைமைத்துவ திறன்கள் தொடர்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வின் போது 2026 ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்கள் மற்றும் மாணவர் தலைவிகள் உத்தியோகபூர்வமாக பதக்கங்களைப் பெற்றுக்கொண்டு தங்களது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர். பாடசாலையின் ஒழுக்கம், தலைமைத்துவம், சேவை மனப்பான்மை மற்றும் மாணவர் நலன்களை முன்னிறுத்தும் வகையில் அவர்கள் செயற்பட வேண்டுமென அதிதிகள் வலியுறுத்தினர்.
உரையாற்றிய அதிதிகள், மாணவர் தலைவர்கள் கல்வியில் மட்டுமன்றி ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் சமூகப் பணிகளிலும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனக் குறிப்பிட்டார்கள். மேலும், எதிர்கால சமூகத்தின் தலைவர்களாக உருவாகும் மாணவர்கள் தலைமைத்துவப் பண்புகள், தொடர்பாடல் திறன்கள் மற்றும் குழு செயற்பாடுகளை பாடசாலை மட்டத்திலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
நிகழ்வில் எஸ்.எம்.எம். நகையக உரிமையாளர் எஸ்.எம்.எம். அப்சர், தொழிலதிபர் ஏ.எம். சிப்னாஸ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டதுடன், மாணவர் தலைவர்களின் உறுதிமொழி ஏற்பும் இடம்பெற்றது.
பாடசாலையின் ஒழுக்காற்று சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை வளர்க்கும் முக்கிய நிகழ்வாக அமைந்ததுடன், புதிய மாணவர் தலைவர்களுக்கு தங்களது பொறுப்புகளை உணர்த்தும் சிறப்பான நிகழ்வாகவும் அமைந்தது.

 


கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 78ஆவது ஆண்டு நிறைவு விழா 

நூருல் ஹுதா உமர் 


கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 78ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு நிகழ்வுகள் இன்று (25) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றன.


பாடசாலையின் வரலாற்றுப் பயணத்தையும் கல்விச் சாதனைகளையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் 78 ஆண்டுகால கல்விச் சேவையை நினைவுகூரும் வகையில் பாடசாலை வரலாற்றை உள்ளடக்கி ஆசிரியர் எம்.வை.எம்.வை. இம்ரான் அவர்களினால் தொகுக்கப்பட்ட  புத்தக வெளியீடும், நினைவு மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது. எதிர்கால தலைமுறையினருக்கான பொறுப்புணர்வையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் நோக்கில் இந்த மரநடுகை முன்னெடுக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், பாடசாலைக்கான வலய இணைப்பாளர் ஜெஸ்மி மூஸா, அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.நூருல் ஹுதா, கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக்கழக தலைவர் எஸ்.எம். ஹாஜா, பயிற்றுவிப்பாளர் யூ.எல். பழீல், பழைய மாணவர்கள் சங்க செயலாளர் யூ.எல்.எம். ஹாஜா உட்பட பழைய மாணவர்கள் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக்கழகத்தினர், பழைய மாணவிகள் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். 


மேலும், பாடசாலையின் 78ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக்கழக அனுசரணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள "Brilliant Gateway" நுழைவாயிலின் திறப்பு நிகழ்வும் இடம்பெற்றது. பாடசாலையின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் எதிர்கால நோக்கங்களை பிரதிபலிக்கும் அடையாளமாக இந்த நுழைவாயில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பழைய மாணவர்களினால் நினைவுப்பேனா (Commemorative Pen) அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வியின் அடையாளமாகவும், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களின் பிணைப்பை வலுப்படுத்தும் நினைவுச் சின்னமாகவும் இந்தப் பேனா அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தியில் பங்காற்றிவரும் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாடசாலை பற்றிய வரலாற்று பார்வையை ஓய்வுபெற்ற ஆசிரியர் யூ.எம்.அலி நிகழ்த்தியதுடன் துஆ பிரார்த்தனையை கல்முனை பதுரியா ஜும்மா பள்ளிவாசல் இமாம் ஜே.எம். றிபாஸ் நஜாஹி நிகழ்த்தினார். 


அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 78ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள், கல்வி, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை மையப்படுத்திய பாடசாலையின் நீண்டகால பயணத்தை நினைவுகூரும் வகையிலும், எதிர்கால வளர்ச்சிக்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.

அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான 2026 ஆம் ஆண்டு பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


நேற்று (ஜூன் 22) முதல் ஆரம்பமாகியுள்ள இந்த விண்ணப்ப செயல்முறை, வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரை இணையவழியாக (Online) மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 இப்பரீட்சைக்கு மாணவர்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது. அனைத்து விண்ணப்பங்களும் அந்தந்த பாடசாலை அதிபர்கள் அல்லது தலைவர்கள் ஊடாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


 அதிபர்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகியவற்றுள் ஒன்றிற்குள் பிரவேசித்து, அறிவுறுத்தல்களைப் பின்பற்றி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


 அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி மட்டுமே இதனுள் நுழைய முடியும். விண்ணப்பித்த பின் அதன் அச்சிடப்பட்ட பிரதியை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமாகும்.



2026 ஆம் ஆண்டில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்று, 2027 ஆம் ஆண்டில் முதன்முறையாகப் பொதுத்தராதர உயர்தர (A/L) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் மட்டுமே இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.



தனியார் பாடசாலைகள் தங்களது மாணவர்களின் அனைத்து விபரங்களையும் தரவு அமைப்பில் உள்ளிட்ட பின்னரே கட்டணங்களைச் செலுத்த வேண்டும். கட்டணங்கள் செலுத்தப்பட்ட பின்னர், புதிய மாணவர்களின் விபரங்களை மீண்டும் சேர்க்க முடியாது என திணைக்களம் எச்சரித்துள்ளது.

 


கிழக்கு மாகாண O/L பெறுபேறுகளில் கல்முனை கல்வி வலயம் முன்னிலை : 129 மாணவர்கள் 9A சித்தி பெற்று சாதனை.


நூருல் ஹுதா உமர்


2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் கிழக்கு மாகாண வலய வாரியான பெறுபேறு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயம் பல்வேறு குறியீடுகளில் முன்னிலை வகித்து கல்வித் துறையில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.


கிழக்கு மாகாணத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில், கல்முனை கல்வி வலயம் 84.5% சித்தி வீதத்துடன் முன்னணி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் கணிதம் மற்றும் தமிழ் ஆகிய இரு பாடங்களுடனும் 6 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்களின் வீதம் 75.1% ஆகப் பதிவாகியுள்ளது.


குறிப்பாக, 129 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதேவேளை மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் 124 மாணவர்களுடனும், மட்டக்களப்பு கல்வி வலயம் 122 மாணவர்களுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.


அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்வி வலயமும் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. அக்கரைப்பற்று வலயத்தில் 85.4% சித்தி வீதமும், 55 மாணவர்கள் 9A சித்திகளும் பதிவாகியுள்ளன.


கிழக்கு மாகாண அளவில் மொத்தமாக 25,941 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 25,370 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். அவர்களில் 18,881 மாணவர்கள் கணிதம் அல்லது தமிழுடன் சித்தி பெற்றுள்ளதுடன், மாகாணத்தின் மொத்த சித்தி வீதம் 74.42% ஆகக் காணப்படுகிறது.


மாவட்ட அடிப்படையில் பார்க்கும்போது, அம்பாறை மாவட்டம் 77.79% சித்தி வீதத்துடன் முதலிடத்திலும், மட்டக்களப்பு மாவட்டம் 75.78% சித்தி வீதத்துடன் இரண்டாம் இடத்திலும், திருகோணமலை மாவட்டம் 66.59% சித்தி வீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.


கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கையில், வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையிலான கல்முனை கல்வி வலயத்தின் தொடர்ச்சியான கல்வி முன்னேற்றம், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு அர்ப்பணிப்பின் விளைவாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இந்த பெறுபேறுகள் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதுடன், எதிர்வரும் ஆண்டுகளிலும் மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்யும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. பெற்று சாதனை.


நூருல் ஹுதா உமர்


2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் கிழக்கு மாகாண வலய வாரியான பெறுபேறு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயம் பல்வேறு குறியீடுகளில் முன்னிலை வகித்து கல்வித் துறையில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.


கிழக்கு மாகாணத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில், கல்முனை கல்வி வலயம் 84.5% சித்தி வீதத்துடன் முன்னணி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் கணிதம் மற்றும் தமிழ் ஆகிய இரு பாடங்களுடனும் 6 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்களின் வீதம் 75.1% ஆகப் பதிவாகியுள்ளது.


குறிப்பாக, 129 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதேவேளை மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் 124 மாணவர்களுடனும், மட்டக்களப்பு கல்வி வலயம் 122 மாணவர்களுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.


அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்வி வலயமும் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. அக்கரைப்பற்று வலயத்தில் 85.4% சித்தி வீதமும், 55 மாணவர்கள் 9A சித்திகளும் பதிவாகியுள்ளன.


கிழக்கு மாகாண அளவில் மொத்தமாக 25,941 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 25,370 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். அவர்களில் 18,881 மாணவர்கள் கணிதம் அல்லது தமிழுடன் சித்தி பெற்றுள்ளதுடன், மாகாணத்தின் மொத்த சித்தி வீதம் 74.42% ஆகக் காணப்படுகிறது.


மாவட்ட அடிப்படையில் பார்க்கும்போது, அம்பாறை மாவட்டம் 77.79% சித்தி வீதத்துடன் முதலிடத்திலும், மட்டக்களப்பு மாவட்டம் 75.78% சித்தி வீதத்துடன் இரண்டாம் இடத்திலும், திருகோணமலை மாவட்டம் 66.59% சித்தி வீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.


கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கையில், வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையிலான கல்முனை கல்வி வலயத்தின் தொடர்ச்சியான கல்வி முன்னேற்றம், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு அர்ப்பணிப்பின் விளைவாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இந்த பெறுபேறுகள் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதுடன், எதிர்வரும் ஆண்டுகளிலும் மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்யும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


பெறுபேறுகள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இம்முறை அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை 11,790 என குறிப்பிட்டார். 


மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளனர்.


அதனடிப்படையில், விஞ்ஞானத்தில் 70.1% மற்றும் கணிதத்தில் 72.03% மாணவர்கள் சித்தியடைந்துள்ளனரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில், கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தின் தரம் 8 மாணவர்களுக்கான நூலக விழிப்புணர்வு மற்றும் வாசிப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பொது நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் மற்றும் நூலக அபிவிருத்தித் திட்டப் பணிகளை முன்னெடுத்து வரும் ஆர்.எம். ஹஸன் ஆகியோர் மாணவர்களிடையே உரையாற்றினர்.

மேலும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (NISD) பல்கலைக்கழக மாணவர்களான எல். நுஸ்லா ரிஸ்னி, எம்.கே.எப். ஸனா அப்ரி மற்றும் ஏ.என்.ஏ. அத்னாப் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம், நூலகப் பயன்பாட்டின் நன்மைகள் மற்றும் அறிவுத் திறன் வளர்ச்சியில் வாசிப்பின் பங்கு குறித்து விளக்கமளித்தனர்.

நிகழ்வின் போது புரொஜெக்டர் வசதியுடன் பல்வேறு காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றதுடன், மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் குழுச் செயற்பாடுகளும் நடத்தப்பட்டன. "வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்" எனும் தொனிப்பொருளில் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளின் ஒரு அங்கமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்கும், நூலகங்களை திறம்பட பயன்படுத்தும் பண்பை வளர்ப்பதற்கும் முக்கிய பங்காற்றியதாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.