Showing posts with label Eastern Sri Lanka. Show all posts

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்      

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைய தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் 11 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசன் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் ரதீஸ் உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 10 இலட்சம் ஒதுக்கீட்டுடன் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதேநேரம் இங்கு கருத்து வெளியிட்ட மக்கள் இவ்வீட்டுத்திட்டத்தினை வழங்கிய அரசுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தார்.



நூருல் ஹுதா உமர்


பொத்துவில் - அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கடந்த வியாழக்கிழமை (30.04.2026) அன்று கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களுக்காக கிழக்கில் உள்ள சட்டத்தரணிகள் இனம், பிரதேச வேறுபாடுகள் பாராமல் மே 06ம் திகதி நீதிமன்றுக்கு சமூகமளித்து அந்த  இளைஞர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

நாளுக்கு நாள் முஸ்லிங்களின் இருப்பு கேள்விக்குறியாகும் நிலை இலங்கையில் உருவாகி வருகிறது. முஸ்லிம் பெயர் தாங்கியவர்களாக, அடையாளம் தாங்கியவர்களாக இருந்தால் அரச பாதுகாப்பு இயந்திரம் உற்றுநோக்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது. பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்கள் பொத்துவில் - அறுகம்பை பிரதேசத்திற்கு கடந்த வாரம் சுற்றுலா சென்று அங்கு உணவருந்தவும், தங்குவதற்கும் நல்ல ஹோட்டல் தொடர்பில் விசாரித்தபோது பிரதேசவாசிகள் இஸ்ரேல் நாட்டவர்கள் தங்கும் பிரதேசம் நல்ல இடம் என்றும் அங்கே தான் நல்ல உயர்ரக ஹோட்டல்கள் இருப்பதாகவும் பரிந்துரைத்துள்ளனர்.

அதனடிப்படையில் அங்கு செல்ல முச்சக்கர வண்டி சாரதியிடம் கோரிய போதே பொலிஸாருக்கு  தகவல் வழங்கப்பட்டு பொலிஸாரினால் கடந்த வியாழக்கிழமை (30.04.2026) அன்று அவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா செல்லும் எல்லோரும் ஒழுங்கான உணவகங்களை சுற்றுலா தளங்களில் தேடுவது வழமையே. அதற்காக கைது செய்வதென்பது எந்த வகையில் நியாயம்?

இனிவரும் காலங்களில் உதிர்ந்து விழும் இஸ்ரேல் நாட்டவர்களின் முடியை முஸ்லிங்கள் மிதித்தால் கூட பாதுகாப்பு தரப்பு கைது செய்வார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்த இளைஞர்களுக்கு உதவிய அவர்களின் குடும்பத்தினரை கூட தீவிரமாக பாதுகாப்பு துறையினர் கண்காணிக்கும் நிலை இருக்கிறது. இஸ்ரேல் நாட்டவர்களினால் நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்தை விட அவர்களின் பாதுகாப்புக்கே அரசாங்கம் அதிக நிதியை செலவிடவேண்டியிருக்கிறது.

பொத்துவில் - அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களும் நீதித்துறை சரியாக செயற்பட்டமையால் 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் வழக்கு விசாரணை மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போது கிழக்கில் உள்ள 100 கணக்கான சட்டத்தரணிகள் வேறுபாடுகள் பாராமல் நீதிமன்றுக்கு சமூகமளித்து சட்டத்தை காத்து மனித உரிமையை நிலைநாட்டி அந்த  இளைஞர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் பாராளுமன்ற அமர்வுகளில் இந்த அநீதி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரலெழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படியான நிலை தொடர்ந்தால் வெள்ளையர்கள் முதல் இப்போதைய ஆட்சி வரை நாட்டுக்கு விசுவாசமாக வாழும் முஸ்லிங்கள் இலங்கையில் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ்வதில் பாரிய சவால் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

 


( வி.ரி.சகாதேவராஜி)


இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (02) சனிக்கிழமை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனின் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

​​இதன் போது வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து உயர்ஸ்தானிகருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புக்களால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசியல் தீர்வு விவகாரத்தில் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளையும், தற்போதைய கள நிலவரங்களையும் நேரில் கேட்டறிந்த உயர்ஸ்தானிகர் அவர்கள், தமிழ் மக்களின் ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் மிகுந்த அக்கறையுடன் செயற்படும் என உறுதியளித்தார்.

​இச்சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.ஶ்ரீநேசன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை விரிவாக முன்வைத்திருந்தனர்.

 


"#மே_தினம்

#தொழிலாளர்_பெற்ற_சீதனம்'

உழைப்பின் 

உயர்வை போற்றி

பாடுபடும் 

பாட்டாளி 

வர்க்கத்தை 

மேன்மையுற செய்திட

"மே' 

தினத்தில் உறுதி ஏற்போம்!


என் இனிய

தொழிலாளர் தின

நல்வாழ்த்துகள்! 🫡👏


|| #MayDay || #மேதினம் ||

|| #LabourDay2026 ||


 அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட பல்வேறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள இரவு நேர உணவகங்களில்  பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திடீர் சோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு  தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.


கடந்த திங்கட்கிழமை (27) இரவு முதல் இவ் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அதிகாரிகளினால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதன்போது இரவு நேர உணவகங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  தரமற்ற உணவுகள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன்  10 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
 
குறித்த பரிசோதனை யாவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்   ஆலோசனையின் பேரில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில்  முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையில் உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா ,சம்மாந்துறை ,கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது சுமார் 42 உணவகங்கள் மற்றும் 'டேஸ்ட்' கடைகள் விரிவாகச் சோதனை செய்யப்பட்டன. குறிப்பாக உணவகங்களின் சமையலறைகள், உணவுத் தயாரிப்பு இடங்கள் மற்றும் களஞ்சிய அறைகள் ஆகியவற்றின் தூய்மை நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 


நூருல் ஹுதா உமர்


அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் குழுத் தலைவருமான ஏ. ஆதம்பாவா தலைமையில், பிரதேச செயலாளர் அஹமட் அப்கர் ஒருங்கிணைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கலந்து கொண்டு, பிரதேச மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தி தொடர்பான பல்வேறு முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்தார்.

கூட்டத்தில் வீதி புனரமைப்பு, வடிகால் வசதிகள், கல்வி மேம்பாடு மற்றும் வெள்ள அனர்த்த முகாமைத்துவம் ஆகியவை முக்கியமாக பேசப்பட்டன. ஒலுவில் பிரதேசத்தில் வைத்தியசாலை வீதி, லைட் ஹவுஸ் வீதி குறுக்குத் தெருக்கள், அன்சாரி ஜும்ஆ பள்ளி வீதி, மத்திய வீதி, பழைய தபால் வீதி உள்ளிட்ட பல வீதிகளை காபட் வீதிகளாக மாற்றி புனரமைக்க கோரப்பட்டது. மேலும் லைட் ஹவுஸிலிருந்து துறைமுகம் வரை காபட் வீதி அமைத்து மின் இணைப்பும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதேபோல் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மைதானத்தின் மேற்குப் பகுதியில் புதிய வடிகான்கள் அமைத்து வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாப்பு வழங்குவதும், வைத்தியசாலை வீதி மற்றும் துறைமுக வீட்டுத்திட்டத்தை இணைக்கும் குறுக்கு வீதிகளை அமைப்பதும் முன்மொழியப்பட்டது.

பாலமுனை பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் பாதை மற்றும் வடிகால் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக பாலமுனை 04 மற்றும் 05 கிராம சேவகர் பிரிவுகளில் கைவிடப்பட்ட பாதை அமைப்புகள் காரணமாக வெள்ளம் காரணமாக போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அவசரமாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் பாலமுனை 05 கடற்கரை வீதியில் நீர் தேக்கம், தரமற்ற கல்வெட்டு மூடிகள் காரணமாக விபத்து அபாயம், குறுகிய வடிகால் கொள்ளளவு போன்ற பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு தேவைப்படுவதாக வலியுறுத்தப்பட்டது. ஹுசைனியா நகர் மற்றும் பாலமுனை 01, 02 பகுதிகளிலும் புதிய வடிகான்கள் அமைக்க வேண்டிய அவசியம் எடுத்துரைக்கப்பட்டது.

கல்வி அபிவிருத்தி தொடர்பாக அல்-ஜாயிஸ்ஸா மகளிர் கல்லூரி, தாருல் ஹஸனாத் வித்தியாலயம், இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலயம், மின்ஹாஜ் மஹா வித்தியாலயம் மற்றும் அந்நூர் மஹா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு புதிய பலமாடிக் கட்டிடங்கள் மற்றும் வகுப்பறைகள் அமைக்க கோரப்பட்டது. மேலும் தாருல் இல்ம் வித்தியாலயத்திற்கு கதிரைகள் வழங்குதல் மற்றும் இப்னு ஸீனா பாடசாலையின் சேதமடைந்த மண்டபத்தை அவசரமாக புனரமைத்தல் தேவையாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதனுடன், ஒலுவில் சீனம்பிட்டி வடிச்சல் வாய்க்காலை முறையாக பராமரித்து வெள்ளக் கட்டுப்பாடு ஏற்படுத்துதல், லைட் ஹவுஸ் மின் விளக்கை மீண்டும் செயல்படுத்துதல், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களில் வடிகான்களுக்கு முன்னுரிமை வழங்குதல் மற்றும் பாலமுனை பகுதியில் கலாச்சார மண்டபம் அமைத்தல் ஆகிய முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.

கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டங்களை துரிதமாக அமுல்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வலியுறுத்தினார்.

 


(Rep/Saakir)

அக்கரைப்பற்று மகளிர் மகா சங்கத்தின்

மகளிர் தின சிறப்பு நிகழ்வு

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்ததிற்குட்பட்ட  மகளிர் மகா சங்கத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழ‌மை (17) கொக்கோ கார்டனில் வெகுவிமர்ச்சியாகவும் கோலாகலமாகவும் நடாத்தப்பட்டது.


அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டார்.


அக்கரைப்பற்று மகளிர் மகா சங்கத்தின் பிரதானி, தேசிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சகோதரி ஆயிஷா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  பிரதேச செயலகத்தின் கணக்காளர் றஹுமான், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் தமீம், தேசிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று ஒருங்கிணைப்பாளர் தோழர் அபு சஹீட்

மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளரும் மாநகர சபையின் உறுப்பினருமான ரமீஸ் மொஹியடின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் ஆரிப், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் வாசனா, அக்கரைப்பற்று மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சகோதரி ரேகா உட்பட மகளிர் மகா சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


பிறந்திருக்கும் பராபவ சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டு கழகம் (KSC) தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியமான "ஒஸ்கார்" இணைஅனுசரணையில், மாபெரும் கலாச்சார விளையாட்டு விழாவை இன்று (18) சனிக்கிழமை நடாத்தியது.

 அதன் மரங்களாக , இன்று (18) சனிக்கிழமை காலையில் மரதன் ஓட்ட நிகழ்வு சிறப்பாக கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுமார் ஒரு மணிநேரம் ஊருக்குள் வலம் வந்த மரதன் ஓட்டம் காரைதீவு விளையாட்டு கழக தலைமையக முன்றலில் நிறைவடைந்தது.

கழகத் தலைவர் வை.கோபிகாந்த் தலைமையில் இடம்பெற்ற காலை நிகழ்வில்,  கழக போசகர்களான வி.இராஜேந்திரன், வி.ரி.சகாதேவராஜா, சி.நந்தகுமார் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு மரதனை ஆரம்பித்து நிறைவு செய்தனர்.

கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் புத்தாண்டு மரதன் ஓட்டப் போட்டியை கண்டு களித்தனர்.

 


சித்திரைப் புத்தாண்டை் முன்னிட்டு தமது சொந்ா இடங்களுக்குச்  செல்வதற்காக, பொது மக்கள் காத்திருக்கின்ற காட்சிகள் இவை.

 


நூருல் ஹுதா உமர் 



சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நவ்ஷாத் முஸ்தபா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவினர் இன்று (08) சம்மாந்துறையில் இயங்கும் இரண்டு அரபுக் கல்வி நிறுவனங்களில் விசேட கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இதன்படி, தப்லீகுள் இஸ்லாம் ஆண்கள் அரபிக் கலாசாலை மற்றும் திராசதுல் பெண்கள் அரபிக் கலாசாலை ஆகியவற்றில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, குறித்த கல்வி நிறுவனங்களின் பொதுவான சுகாதார நிலைமைகள், சமையலறை மற்றும் உணவுக் கூடங்களின் தூய்மை, கழிப்பறை வசதிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலை, உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனையின் போது அடையாளம் காணப்பட்ட சில குறைபாடுகளை சரிசெய்வது தொடர்பில், குறித்த கலாசாலைகளின் நிர்வாகத்தினரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதன்போது, சுகாதாரத் தரநிலைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நிர்வாகத்தினருடன் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்குவதே இவ்வாறான சுகாதார பரிசோதனைகளின் பிரதான நோக்கமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து ரயில் வளாகத்துக்கு பெட்டிகளைக் கொண்டு சென்ற ரயில் இயந்திரம் ஒன்றில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. 


சுமார் 60 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள இயந்திரத்தில் திடீரென தீப் பரவியமைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 வி.சுகிர்தகுமார்      


இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த மில்லர் புவுண்டேசன் நிறுவனத்தின் உரிமையாளரும் சந்தைப்படுத்தல் முகாமையாளமான டாக்டர் எஸ்.சுந்தர் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் அழைப்பின் பேரில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நலிவுற்ற பெண்களை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபிள்ளையின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் (08)இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி மற்றும் சுயதொழில் மூலம் வலுவூட்டி அவர்களை சிறந்த முயற்சியாளர்களாக மாற்றுவது தொடர்பில் தெளிவூட்டினார்.
மலேசியா நாட்டில் அன்மையில் இடம்பெற்ற சிறுதானிய உற்பத்தியினை ஊக்குவிக்கும் உலக தமிழ் வர்த்தக மாநாட்டில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் சார்பில் மன்ற இணைப்பாளர் அசோகா ஆறுமுகம் கலந்து கொண்டார்.
இதன் பயனாக இலங்கைக்கான விஜயத்தின்போது அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு வருகைதந்த அவர் சுயதொழில் முயற்சி தொடர்பிலும் இதன் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது தொடர்பிலும் கலந்து கொண்ட பெண்களுக்கு விளக்கமளித்தார்.
இதற்கான இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பாகவும் விளக்கினார்.
இதேநேரம் குறித்த வேலைத்திட்டத்தின் மூலம் ஆலையடிவேம்பு பிரதேசம் அடையவுள்ள நன்மை தொடர்பிலும் இதற்கான ஒத்துழைப்பை வழங்கும் மில்லர் புவுண்டேசன் நிறுவனத்திற்கும் பிரதேச செயலாளர் நன்றி தெரிவித்தார்.
இந்து இளைஞர் மன்றம் முன்னெடுத்திருக்கும் இப்பணி பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு சிறப்பாக முன்கொண்டு செல்லப்படும் என தலைவர் த.கயிலாயபிள்ளை குறிப்பிட்டார்.
அத்தோடு சுந்தர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


 ( வி.ரி. சகாதேவராஜா)


திருக்கோவில்  பிரதேச செயலகத்தின் புதிய  கணக்காளராக, கல்முனை  ஆதார வைத்தியசாலையின் கணக்காளராக கடமையாற்றிய எம்.கேந்திரமூர்த்தி,  நேற்று (7) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர்  த.கஜேந்திரன் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் .

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ரெட்னம் சுவாகர், பிரதேச செயலகத்தின்உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உசாந்த்,சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம்.அரசரெத்தினம், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.பிரதீப், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.




(நூருல் ஹுதா உமர்)
சம்மாந்துறை விளையாட்டு தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், அதனை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடையே நீண்ட நாளாக நிலவி வந்த கவலைகளை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் குழு கடந்த 06.04.2026 அன்று ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தது.
அப்போது, குறித்த விளையாட்டு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர். குறிப்பாக நீச்சல் தடாகத்தின் சேதமடைந்த நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இளம் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கும், பிரதேச விளையாட்டு மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தடாகத்தை உடனடியாக சீரமைப்பது அவசியம் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, பிரதேச சபை தவிசாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் நீச்சல் தடாகத்தை விரைவாக சீரமைக்கும் பணிகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், சம்மாந்துறை பகுதியில் நீச்சல் விளையாட்டை மேலும் ஊக்குவிக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும், இளைஞர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த சிறந்த சூழல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கள விஜயத்தில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான், ஏ.சி.எம். நயீம், முஹம்மட் ஆசிக், முஹம்மட் ஹாலீத், பஹ்மி சுலைமான், எம்.எல்.ஏ. கபூர் முஹம்மது ரிஸ்விகான், ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத்தொகுதி அப்துல் ஸலாம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

நூருல் ஹுதா உமர்

தற்போதைய பொருளாதார சூழ்நிலையை முன்னிட்டு, மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைச் சிக்கனமாகக் கடைப்பிடிக்குமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அலுவலகங்கள், நூலகங்கள் மற்றும் பொது விளையாட்டு மைதானங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை இயன்றளவு குறைத்து, வளங்கள் வீணாகாமல் பாதுகாக்கும் நோக்கில் இந்த விசேட பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சபையின் நிதிச் சுமையையும் குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அணைத்து வைக்க வேண்டும். இயற்கை வெளிச்சத்தை அதிகப்படியாகப் பயன்படுத்தி மின் பயன்பாட்டை குறைக்கும் பழக்கத்தை உத்தியோகத்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


ஒட்டமவாடி மயானத்திற்கான போக்குவரத்து வசதி: கொழும்பு மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றம்


நூருல் ஹுதா உமர் 


கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்து ஒட்டமவாடி மஜ்மா நகர் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் கல்லறைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்துமாறு கோரி முன்வைக்கப்பட்ட தீர்மானம், கொழும்பு மாநகர சபையின் மாதாந்திரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.


இத்தீர்மானத்தை ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் கலிலூர் ரஹ்மான் முன்வைத்தார். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஆதிஃப் அவர்களால் வழிமொழியப்பட்ட இத்தீர்மானம் பின்னர் சபையில் அங்கீகரிக்கப்பட்டது.


கொரோனா சூழ்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள், கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் கொரளைப்பத்து மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒட்டமவாடி மஜ்மா நகர் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டவர்களில், கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட குடிமக்களும் அடங்கியுள்ளனர்.


இஸ்லாமிய சமய மரபின்படி, கல்லறைகளுக்கு சென்று பிரார்த்தனை மற்றும் பிற சமயச் சடங்குகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். குறிப்பாக ரமலான் மற்றும் ஹஜ் போன்ற விசேஷ காலங்களில் இந்த தேவையானது அதிகரிக்கிறது.


இதனை முன்னிட்டு, பெருநாளுக்கு அடுத்த முதல் சனிக்கிழமையன்று மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்ற நாளொன்றில், போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மாநகர சபையிடம் கோரப்பட்டுள்ளது.


இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய ஜன மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய குடியரசு முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அக்கூட்டத்தின் போது சபை அறையில் இல்லாதமை கவனிக்கப்பட்டது.

 ( வி.ரி.சகாதேவராஜா)


மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா அதிபர் ஆ.கிருபாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அங்கு நேர்முகத் 
தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்டு இருநாள் பயிற்சிகளை முடித்துக்கொண்ட மாணவர் 
தலைவர்களுக்கு மேலங்கி அணிவித்து சின்னம் சூட்டும் நிகழ்வும் விளையாட்டில் 
பங்குபற்றவுள்ள மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வும் மாகாண மட்ட 
கணித ஒலிம்பியாட் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு 
செய்யப்பட்ட மாணவன் தட்சணாமூர்த்தி நதுஜனைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் 
நடைபெற்றன. 


முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அபிவிருத்திக்குப் 
பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி தேவரஜனி உதயகரன் 
கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் அ.தேகதாஸ்
கலந்துகொண்டார்.

 பெற்றோர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் 
கலந்து சிறப்பித்திருந்தனர்.


 ( வி.ரி. சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைகின்ற சமகாலத்தில் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றது.

இன்றைய தினம் (4) புதன்கிழமை பட்டப்பகலில் காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் வளத்தாப்பிட்டி பிரதான வீதி ஊடாக யானைகள் பட்டாளமாக பயணித்தது.
 
பிரதான வீதியில் பயணித்தவர்கள் சிலமணிநேரம் தாமதித்து பயணிக்க வேண்டி இருந்தது.

எதிர்வரும் விதைப்பு காலத்துக்கு முன்பதாக இந்த யானைகளின் அட்டகாசம் மேலும் தொடரலாம் என்று மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

 


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பகுதியில் மனித குடியேற்றத்திற்கு பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகள் வளர்க்கப்பட்டதால் அயல் வீட்டாருக்கு கடும் அசௌகரியங்களும் சுகாதாரத் தொந்தரவுகளும் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்க்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அயல் வசிப்பிடத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே. மதன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுற்றுச்சூழல் பிரிவிற்கு பொறுப்பான சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் அதிகாரிகள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட இடத்தில் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.

பரிசோதனையின் போது, குடியிருப்பு பகுதியின் மத்தியில் எருமை மாடுகள் வளர்க்கப்பட்டு, கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படாததன் காரணமாக துர்நாற்றம் மற்றும் கொசு பெருக்கம் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக பொதுமக்கள் தொல்லை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பொதுச் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் வளர்ப்பதை தவிர்க்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் எதிர்காலத்திலும் கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த வட கீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி ஓய்ந்திருக்கின்ற இந்நிலையில் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரசேத்திலுள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம், ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுகின்றது.


கடந்த காலங்களிலும் அக் குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 


எனவே, இதனைக் கருத்திற்கொண்டு அப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேற்ப்பதற்காகச் செல்பவர்களும், தமது கால்நடைகள் விடையத்திலும் மிகவும் அவதானத்துன் நடமாடுமாறு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.



மட்டக்களப்பு செய்தியாளர் 


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.