Showing posts with label Eastern Sri Lanka. Show all posts

 


சித்திரைப் புத்தாண்டை் முன்னிட்டு தமது சொந்ா இடங்களுக்குச்  செல்வதற்காக, பொது மக்கள் காத்திருக்கின்ற காட்சிகள் இவை.

 


நூருல் ஹுதா உமர் 



சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நவ்ஷாத் முஸ்தபா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவினர் இன்று (08) சம்மாந்துறையில் இயங்கும் இரண்டு அரபுக் கல்வி நிறுவனங்களில் விசேட கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இதன்படி, தப்லீகுள் இஸ்லாம் ஆண்கள் அரபிக் கலாசாலை மற்றும் திராசதுல் பெண்கள் அரபிக் கலாசாலை ஆகியவற்றில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, குறித்த கல்வி நிறுவனங்களின் பொதுவான சுகாதார நிலைமைகள், சமையலறை மற்றும் உணவுக் கூடங்களின் தூய்மை, கழிப்பறை வசதிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலை, உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனையின் போது அடையாளம் காணப்பட்ட சில குறைபாடுகளை சரிசெய்வது தொடர்பில், குறித்த கலாசாலைகளின் நிர்வாகத்தினரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதன்போது, சுகாதாரத் தரநிலைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நிர்வாகத்தினருடன் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்குவதே இவ்வாறான சுகாதார பரிசோதனைகளின் பிரதான நோக்கமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து ரயில் வளாகத்துக்கு பெட்டிகளைக் கொண்டு சென்ற ரயில் இயந்திரம் ஒன்றில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. 


சுமார் 60 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள இயந்திரத்தில் திடீரென தீப் பரவியமைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 வி.சுகிர்தகுமார்      


இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த மில்லர் புவுண்டேசன் நிறுவனத்தின் உரிமையாளரும் சந்தைப்படுத்தல் முகாமையாளமான டாக்டர் எஸ்.சுந்தர் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் அழைப்பின் பேரில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நலிவுற்ற பெண்களை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபிள்ளையின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் (08)இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி மற்றும் சுயதொழில் மூலம் வலுவூட்டி அவர்களை சிறந்த முயற்சியாளர்களாக மாற்றுவது தொடர்பில் தெளிவூட்டினார்.
மலேசியா நாட்டில் அன்மையில் இடம்பெற்ற சிறுதானிய உற்பத்தியினை ஊக்குவிக்கும் உலக தமிழ் வர்த்தக மாநாட்டில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் சார்பில் மன்ற இணைப்பாளர் அசோகா ஆறுமுகம் கலந்து கொண்டார்.
இதன் பயனாக இலங்கைக்கான விஜயத்தின்போது அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு வருகைதந்த அவர் சுயதொழில் முயற்சி தொடர்பிலும் இதன் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது தொடர்பிலும் கலந்து கொண்ட பெண்களுக்கு விளக்கமளித்தார்.
இதற்கான இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பாகவும் விளக்கினார்.
இதேநேரம் குறித்த வேலைத்திட்டத்தின் மூலம் ஆலையடிவேம்பு பிரதேசம் அடையவுள்ள நன்மை தொடர்பிலும் இதற்கான ஒத்துழைப்பை வழங்கும் மில்லர் புவுண்டேசன் நிறுவனத்திற்கும் பிரதேச செயலாளர் நன்றி தெரிவித்தார்.
இந்து இளைஞர் மன்றம் முன்னெடுத்திருக்கும் இப்பணி பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு சிறப்பாக முன்கொண்டு செல்லப்படும் என தலைவர் த.கயிலாயபிள்ளை குறிப்பிட்டார்.
அத்தோடு சுந்தர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


 ( வி.ரி. சகாதேவராஜா)


திருக்கோவில்  பிரதேச செயலகத்தின் புதிய  கணக்காளராக, கல்முனை  ஆதார வைத்தியசாலையின் கணக்காளராக கடமையாற்றிய எம்.கேந்திரமூர்த்தி,  நேற்று (7) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர்  த.கஜேந்திரன் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் .

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ரெட்னம் சுவாகர், பிரதேச செயலகத்தின்உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உசாந்த்,சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம்.அரசரெத்தினம், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.பிரதீப், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.




(நூருல் ஹுதா உமர்)
சம்மாந்துறை விளையாட்டு தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், அதனை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடையே நீண்ட நாளாக நிலவி வந்த கவலைகளை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் குழு கடந்த 06.04.2026 அன்று ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தது.
அப்போது, குறித்த விளையாட்டு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர். குறிப்பாக நீச்சல் தடாகத்தின் சேதமடைந்த நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இளம் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கும், பிரதேச விளையாட்டு மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தடாகத்தை உடனடியாக சீரமைப்பது அவசியம் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, பிரதேச சபை தவிசாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் நீச்சல் தடாகத்தை விரைவாக சீரமைக்கும் பணிகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், சம்மாந்துறை பகுதியில் நீச்சல் விளையாட்டை மேலும் ஊக்குவிக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும், இளைஞர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த சிறந்த சூழல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கள விஜயத்தில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான், ஏ.சி.எம். நயீம், முஹம்மட் ஆசிக், முஹம்மட் ஹாலீத், பஹ்மி சுலைமான், எம்.எல்.ஏ. கபூர் முஹம்மது ரிஸ்விகான், ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத்தொகுதி அப்துல் ஸலாம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

நூருல் ஹுதா உமர்

தற்போதைய பொருளாதார சூழ்நிலையை முன்னிட்டு, மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைச் சிக்கனமாகக் கடைப்பிடிக்குமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அலுவலகங்கள், நூலகங்கள் மற்றும் பொது விளையாட்டு மைதானங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை இயன்றளவு குறைத்து, வளங்கள் வீணாகாமல் பாதுகாக்கும் நோக்கில் இந்த விசேட பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சபையின் நிதிச் சுமையையும் குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அணைத்து வைக்க வேண்டும். இயற்கை வெளிச்சத்தை அதிகப்படியாகப் பயன்படுத்தி மின் பயன்பாட்டை குறைக்கும் பழக்கத்தை உத்தியோகத்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


ஒட்டமவாடி மயானத்திற்கான போக்குவரத்து வசதி: கொழும்பு மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றம்


நூருல் ஹுதா உமர் 


கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்து ஒட்டமவாடி மஜ்மா நகர் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் கல்லறைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்துமாறு கோரி முன்வைக்கப்பட்ட தீர்மானம், கொழும்பு மாநகர சபையின் மாதாந்திரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.


இத்தீர்மானத்தை ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் கலிலூர் ரஹ்மான் முன்வைத்தார். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஆதிஃப் அவர்களால் வழிமொழியப்பட்ட இத்தீர்மானம் பின்னர் சபையில் அங்கீகரிக்கப்பட்டது.


கொரோனா சூழ்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள், கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் கொரளைப்பத்து மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒட்டமவாடி மஜ்மா நகர் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டவர்களில், கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட குடிமக்களும் அடங்கியுள்ளனர்.


இஸ்லாமிய சமய மரபின்படி, கல்லறைகளுக்கு சென்று பிரார்த்தனை மற்றும் பிற சமயச் சடங்குகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். குறிப்பாக ரமலான் மற்றும் ஹஜ் போன்ற விசேஷ காலங்களில் இந்த தேவையானது அதிகரிக்கிறது.


இதனை முன்னிட்டு, பெருநாளுக்கு அடுத்த முதல் சனிக்கிழமையன்று மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்ற நாளொன்றில், போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மாநகர சபையிடம் கோரப்பட்டுள்ளது.


இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய ஜன மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய குடியரசு முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அக்கூட்டத்தின் போது சபை அறையில் இல்லாதமை கவனிக்கப்பட்டது.

 ( வி.ரி.சகாதேவராஜா)


மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா அதிபர் ஆ.கிருபாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அங்கு நேர்முகத் 
தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்டு இருநாள் பயிற்சிகளை முடித்துக்கொண்ட மாணவர் 
தலைவர்களுக்கு மேலங்கி அணிவித்து சின்னம் சூட்டும் நிகழ்வும் விளையாட்டில் 
பங்குபற்றவுள்ள மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வும் மாகாண மட்ட 
கணித ஒலிம்பியாட் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு 
செய்யப்பட்ட மாணவன் தட்சணாமூர்த்தி நதுஜனைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் 
நடைபெற்றன. 


முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அபிவிருத்திக்குப் 
பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி தேவரஜனி உதயகரன் 
கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் அ.தேகதாஸ்
கலந்துகொண்டார்.

 பெற்றோர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் 
கலந்து சிறப்பித்திருந்தனர்.


 ( வி.ரி. சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைகின்ற சமகாலத்தில் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றது.

இன்றைய தினம் (4) புதன்கிழமை பட்டப்பகலில் காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் வளத்தாப்பிட்டி பிரதான வீதி ஊடாக யானைகள் பட்டாளமாக பயணித்தது.
 
பிரதான வீதியில் பயணித்தவர்கள் சிலமணிநேரம் தாமதித்து பயணிக்க வேண்டி இருந்தது.

எதிர்வரும் விதைப்பு காலத்துக்கு முன்பதாக இந்த யானைகளின் அட்டகாசம் மேலும் தொடரலாம் என்று மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

 


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பகுதியில் மனித குடியேற்றத்திற்கு பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகள் வளர்க்கப்பட்டதால் அயல் வீட்டாருக்கு கடும் அசௌகரியங்களும் சுகாதாரத் தொந்தரவுகளும் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்க்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அயல் வசிப்பிடத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே. மதன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுற்றுச்சூழல் பிரிவிற்கு பொறுப்பான சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் அதிகாரிகள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட இடத்தில் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.

பரிசோதனையின் போது, குடியிருப்பு பகுதியின் மத்தியில் எருமை மாடுகள் வளர்க்கப்பட்டு, கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படாததன் காரணமாக துர்நாற்றம் மற்றும் கொசு பெருக்கம் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக பொதுமக்கள் தொல்லை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பொதுச் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் வளர்ப்பதை தவிர்க்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் எதிர்காலத்திலும் கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த வட கீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி ஓய்ந்திருக்கின்ற இந்நிலையில் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரசேத்திலுள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம், ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுகின்றது.


கடந்த காலங்களிலும் அக் குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 


எனவே, இதனைக் கருத்திற்கொண்டு அப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேற்ப்பதற்காகச் செல்பவர்களும், தமது கால்நடைகள் விடையத்திலும் மிகவும் அவதானத்துன் நடமாடுமாறு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.



மட்டக்களப்பு செய்தியாளர் 


 


நூருல் ஹுதா உமர்


இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் தலைவராக திருமதி ஆரிக்கா காரியப்பர் அவர்கள் மீண்டும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று (18) கல்முனையில் நடைபெற்றது. அதில் 2026ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தலைவராக போட்டியின்றி மீண்டும் திருமதி ஆரிக்கா காரியப்பர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் முன்னதாகவும் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டு, சட்டத்துறையில் தொழில்முறை தரநிலைகளை உயர்த்தும் முயற்சிகள், சட்டத்தரணிகளின் நலன், இளம் சட்டத்தரணிகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் சமூக நீதிக்கான செயற்பாடுகள் போன்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.

அவரது மீண்டும் தெரிவு, கல்முனை சட்டத்தரணிகள் மத்தியில் அவருக்கு உள்ள நம்பிக்கையையும் மதிப்பையும் வெளிப்படுத்துவதாக சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

புதிய நிர்வாக சபை விரைவில் தனது பணிகளைத் தொடங்கவுள்ளது என்றும், சட்டத்துறையின் மேம்பாடு மற்றும் நீதித்துறையுடன் இணைந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் மேலும், இவ்வருட செயலாளராக சட்டத்தரணி ஏ.ஜி. பிரேம் நவாத் அவர்களும் பொருளாளராக சீ.ஐ. சஞ்சித் அஹமட் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.



 நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (15) விசேட பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி தனது கண்டன அறிக்கையை வெளியிட்டது.

அத்துடன், சாய்ந்தமருது பகுதியில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்டபோது, சட்டத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் ஜனநாயகத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் நேரடியான அச்சுறுத்தலாகும் என வலியுறுத்தப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் திணைக்கள அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இத்தகைய கொடூரச் செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் ஆயுத கலாச்சாரத்தை முற்றாக ஒழித்து நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக முழுமையான, சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், சட்டத்துறையின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தலைமையில் கொழும்பு நகரிலுள்ள சட்டத்தரணிகள் சங்க செயலகத்தில் அமைந்துள்ள கலாநிதி எச்.டபிள்யூ. ஜயவர்தன கேட்போர் கூடத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாதிருந்தாலும், அதற்கு தங்களின் முழுமையான ஆதரவை வழங்குவதாக சம்மாந்துறை கிளை அறிவித்துள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா, உப தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நஸீல், செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி வை.எம்.ஏ. சியாத், பொருளாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷாமிலா மன்சூர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எச். அரூஸ் அடங்கலாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சம்மாந்துறை கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இரத்மலானையிலிருந்து மட்டக்களப்புக்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.


பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (08) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் ஆலோசனைக் கூட்டத்தின்போதே, இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.


அதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தின்போது அண்மையில் பாலையடிவட்டை கிராமத்துக்கு கள விஜயம் மேற்கொண்டபோது, அங்குள்ள இராணுவ முகாமை அகற்றவேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கையை முன்னிட்டு, தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக 12 பேர்ச் காணியை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


எனினும், இது போதுமானதல்ல என சுட்டிக்காட்டியதையடுத்து, முழு காணியையும் விடுவிப்பதற்கான ஆய்வினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.


மேலும், பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தின் காணியிலும் இராணுவ முகாம் அமைந்துள்ள நிலையில், அதன் ஒரு பகுதி இதுவரை விடுவிக்கப்படாதுள்ளதாக சாணக்கியன் தெரிவித்தார். குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அந்த காணியை விடுவிக்க முடியுமா என்பது தொடர்பில் மீளாய்வு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.


அத்துடன், மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கெவுளியாமடு பகுதியில் வனபரிபாலனத் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கு காணி வழங்குமாறு கோரப்பட்டுள்ளமை தொடர்பிலும் மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.


மட்டக்களப்பு விமான நிலைய வீதியை மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மாநகர சபைக்கு விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கும் அறிவித்தலை மட்டக்களப்பு விமானப்படையினருக்கு வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.


மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ள காலங்களில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோடமேடு கிராமம், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமம், கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரம்படித்தீவு மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பண்டாரியாவெளி ஆகிய கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு, வீடுகள் நீரில் மூழ்குவதால் மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர் என சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.


இந்த கிராமங்களில் உயரமான மாடிக் கட்டிடங்கள் இல்லாததே இந்நிலைக்கு காரணம் என குறிப்பிட்ட அவர், அவ்வாறான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்யுமாறு அதிகாரிகளிடம் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.


அண்மையில் தித்வா புயலால் பயிர்செய்கை பாதிக்கப்பட்ட காயான்கேணி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதாக மக்கள் முறையிட்டிருந்த நிலையில், குறித்த இழப்பீட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


மேலும், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆனைகட்டியவெளி கிராமத்தில் உள்ள சமுளயடிவட்டை வீதி 2024 ஆம் ஆண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை புனரமைக்கப்படவில்லை என கூட்டத்தின் போது சாணக்கியன் எடுத்துரைத்தார்.


அந்த வீதியையும், ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட வெலிக்கந்தை ஊடாக வடமுனைக்கு செல்லும் பாதையையும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதனுடன், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் மட்டக்களப்பு விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில், எத்தனை விமான போக்குவரத்துகள் இடம்பெற்றால் மக்களுக்கு பயனளிக்கும் என்பதனை மீளாய்வு செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி சாணக்கியன் இராசமாணிக்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


இந்த அனைத்து விடயங்களும் தொடர்பாக அடுத்த பாதுகாப்பு அமைச்சு ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை மாநகர சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் விரிவான டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் இன்று (17) முன்னெடுக்கப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு உதவியாளர்களின் பிரசன்னத்துடன் பல வீடுகள் பார்வையிடப்பட்டு, நீர் தேங்க கூடிய இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் அதேவேளையில் நிவர்த்தி செய்யப்பட்டது.
 
மேலும், டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு, சுத்தமான சூழலை பேணுவதின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

 


நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனைக்கமைவாகவும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஏற்பாடு மற்றும் தலைமையிலும் Unicef நிறுவனத்தின் அனுசரனையுடன் “தடுப்பூசி ஏற்றும் தயக்கத்தை நீக்குதல்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (11) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று கருத்தரங்கில், கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.றிஸ்னி முத்து, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. சிவசுப்ரமணியம், மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர், மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது, பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை பற்கிச்சையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், சமயத் தலைவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது டாக்டர் எம்.ஐ.றிஸ்னி முத்து அவர்கள் உரையாற்றுகையில், “சமீபகாலங்களில் தடுப்பூசி பற்றிய தயக்கம் எமது பிரதேசத்தில் அதிகரித்து வருவதால், தடுப்பூசி ஏற்றும் செயல்பாடுகள் குறைந்து காணப்படுகின்றன. இதனை மாற்றுவது நம் அனைவரின் கடமை. தடுப்பூசி பற்றிய பொது மக்களின் சந்தேகங்களுக்கு சரியான விளக்கங்களை வழங்கி, ஒரு தடுப்பூசி ஆயிரம் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்பதை மனதில் கொண்டு அனைவரும் தடுப்பூசிகளைப் பெறுதல் மிக அவசியம்” என வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சமயத் தலைவர் அவர்கள் உரையாற்றுகையில், “தடுப்பூசி ஏற்றுவது மதத்தின் போதனைகளுக்கு எதிரானது அல்ல, மாறாக மனித உயிர்களைப் பாதுகாக்கும் கடமையாகும். எனவே அனைவரும் தடுப்பூசிகளை உறுதியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என மதம் சார்ந்த தெளிவான கருத்துக்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. சிவசுப்ரமணியம் அவர்கள் உரையாற்றுகையில், “2019ஆம் ஆண்டுக்கு முன்னர் 100% தடுப்பூசி பெற்றவர்களின் விகிதம் காணப்பட்ட நிலையில், 2019க்குப் பின்னர் அது படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனை மீண்டும் உயர்த்துவது அனைவரின் பொறுப்பு. பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்.

மேலும், தடுப்பூசி விழிப்புணர்வு தொடர்பான குழு செயல்பாடுகளையும் நடத்தி பங்கேற்பாளர்களின் ஈடுபாட்டை அதிகரித்தார். அதனைத் தொடர்ந்து காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வஸீர் அவர்கள் உரையாற்றுகையில், “தடுப்பூசிகள் நோய்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு தலைமுறையின் ஆரோக்கியத்தையும் உறுதிசெய்கின்றன. சமூகத்தில் பரவி வரும் தவறான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களை மாற்றுவதற்கு ஒவ்வொரு சுகாதார பணியாளரும் முன்னிலையாக வேண்டும். பெற்றோர்களைச் சென்றடையும் வகையில், சுலபமான மொழியில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை பரப்புவது மிகவும் அவசியம்” எனவும் வலியுறுத்தினார்.

இறுதியாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்கள் உரையாற்றுகையில், “தடுப்பூசி என்பது ஒரு குழந்தையின் எதிர்காலத்தையும் சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் ஒரு முக்கியமான கருவி. தவறான நம்பிக்கைகளை நீக்கி, உண்மையான சுகாதார அறிவை சமூகத்துக்குள் பரப்புவது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்” என வலியுறுத்தியதுடன், அனைவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்கள் துறைகளின் வழியாக பொதுமக்களிடையே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை பரப்ப உறுதியெடுத்தனர்.



ஏ.எல்.எம். சபீக் 

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக “டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் செய்தியறிக்கையிடல் காலத்தில் ஊடகச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு” இன்று (01) சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.


இச்செயலமர்வு சட்ட ஊடக மன்றத்தின் பணிப்பாளர் கலாநிதி சட்டத்தரணி விரஞ்சன ஹேரத் தலைமையில் இடம்பெற்றுள்ளது.


இதன்போது ஊடகவியலாளர்களுக்கு ஊடகச் சட்டம், ஊடக ஒழுக்கநெறி, சமூக ஊடக இடுகைகளுக்கான சட்ட விதிகள், ஊடக கண்காணிப்பு சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், நிகழ்வில் பங்கேற்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் மற்றும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். பைறூஸ், மேலும் வீரகேசரி பத்திரிகையின் உதவி ஆசிரியர் ரோபர்ட் அன்டனி உள்ளிட்ட வளவாளராக கலந்து கொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது.


ஏ.எல்.எம். சபீக்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.