Showing posts with label Eastern Sri Lanka. Show all posts

 நூருல் ஹுதா உமர


தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன (NISD) சமூகப் பணி கற்கைகளின் இறுதி வருட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஃபர்ஸ்ட்ஹேண்ட் – சமூகப் பணி இடையீட்டு முகாம் 2026” நிகழ்வு இன்று (20) சாய்ந்தமருது கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வு, சமூகப் பணி கள அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குவதோடு சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வுகளையும் முன்னெடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூகப் பணி கற்கைகளின் இறுதி வருட மாணவர் ஏ.என். அஹமட் அத்னாஃப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கெளரவ விருந்தினராக BCAS கல்முனை வளாகத்தின் முகாமையாளர் கே.எம். இஷ்ராக் கலந்து கொண்டதுடன், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக அதிகாரி எம்.என்.எம். ரம்ஸான், நிர்வாக கிராம அலுவலர் எம்.எஸ்.எம். நளிர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத், மனநல ஆலோசனை அதிகாரி எம்.எப். பர்சானா, உலகளாவிய பிரிவுகள் இலங்கையின் திட்ட இயக்குநர் எஸ். ரூதரன், ஆல்பா சுகாதார ஆலோசனை நிறுவனத்தின் உதவி முகாமையாளர் ஏ.எம்.எம். தக்மீல் மற்றும் இஸ்லாமிக் ரிலீப் அமைப்பின் கண்காணிப்பு, மதிப்பீடு, பொறுப்புக்கூறல் மற்றும் கற்றல் ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. ஹனீஃப் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு சமூகப் பணி, மனநலம், போதைப்பொருள் தடுப்பு, சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக கருத்தரங்குகள் மற்றும் வழிகாட்டல் அமர்வுகளை நடத்தினர்.

நிகழ்வில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அதிகாரிகள், விரிவுரையாளர்கள், மேற்பார்வையாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

இந்த சமூகப் பணி இடையீட்டு முகாமை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இறுதியாண்டு பயிற்சி மாணவர்களான ஏ.என். அஹமட் அத்னாஃப், எம்.கே.எப். சனா அப்ரி மற்றும் ஆர்.எம். ஹசன் ஆகியோர் அடங்கிய ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


 நூருல் ஹுதா உமர்


மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டார் சரிட்டி (Qatar Charity) நிறுவனத்தின் அனுசரணையில் இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்கள் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபீர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது கட்டார் சரிட்டி நிறுவனத்தின் செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.எப்.எம். கப்ளீன் கலந்து கொண்டு, இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்களை கல்லூரி அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கல்லூரி மாணவர்களுக்கு சுத்தமான மற்றும் குளிர்ந்த குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த உதவி, பாடசாலை சமூகத்தினரால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. மேலும், இவ்வன்பளிப்பை வழங்கிய கட்டார் சரிட்டி நிறுவனத்திற்கும், இதனைப் பெற்றுக்கொள்வதற்காக முனைப்புடன் செயற்பட்ட திருமதி நசீஹா சஹ்பி அவர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.

இந்த அன்பளிப்பு மாணவர்களின் நலன் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பாக அமையும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 நூருல் ஹுதா உமர்


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய, இவ்வாரம் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முதல் கட்ட நடவடிக்கைகள் சாய்ந்தமருதில் திங்கட்கிழமை (15) ஆரம்பிக்கப்பட்டன.

இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜூன் 15 முதல் 20 ஆம் திகதி வரை மதஸ்தலங்கள், பொதுச் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

முதல் நாளான இன்று, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மாதன் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் பொறுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து விசேட களப்பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது, டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக சுத்தம் செய்யப்பட்டதுடன், நீர் தேங்கி நிற்கும் பாத்திரங்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டன. மேலும், டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதில் சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கைகளுடன் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமானது என அதிகாரிகள் தெரிவித்தனர். வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களாவது ஒதுக்கி வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்க முடியும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

டெங்கு ஒழிப்பு வாரத்தின் கீழ் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 


( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவு மக்கள் வங்கி முகாமையாராக மீண்டும்  திருநா.உமாசங்கரன் இன்று(15) திங்கட்கிழமை பதவியேற்றார்.

பதவியேற்பு நிகழ்வில் கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன்  குருக்கள் சமய ஆராதனை நடத்தினார்.

இந்த நிகழ்வில் மக்கள் வங்கியின் அம்பாறை மாவட்ட உதவி பிராந்திய முகாமையாளர் ஜி.பம்பரதெனிய  கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
அவர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு உத்தியோக பூர்வமாக நடைபெற்றது.

காரைதீவில் முகாமையாளராக பணியாற்றிய எஸ். கரிகாலன் கல்முனை மக்கள் வங்கி முகாமையாளராக இடமாற்றலாகி செல்கிறார்.

காரைதீவைச்
சேர்ந்த திருநா.  உமாசங்கரன் முன்னர் ஆறரை வருட காலம் காரைதீவிலும் இறுதியாக திருக்கோவிலில் மூன்றரை வருட காலமும்  முகாமையாளராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை  ஒளிரும் கரங்கள் (Rising Hands) நிறுவனத்தினுடாக  தொழில் பயிற்சியை மேற்கொள்ளும் விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும்  அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கான ஒருநாள் செயலமர்வு மட்டக்களப்பு  மியானி (Miyani ) நிலையத்தில் நேற்று  நடைபெற்றது.

நிறுவனத்தின் பணிப்பாளர் ரி.இளையராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர்  எஸ். சந்திரகுமார்  மற்றும்  அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி  எல். சுபாஷ்கரன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

 மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும்  நிகழ்வுகளை  மட்டக்களப்பு விவேகானந்தா தொழிநுட்பக்கல்லூரி வளவாளர்கள்  மேற்கொண்டனர்.

 இந்நிகழ்வில்  சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களும்,  அவர்களது பெற்றோர்களும்  கலந்துகொண்டதுடன்  தங்களது தொழில்  பயிற்சி சார்ந்த விடயங்களை செயன்முறை மூலமாக நிலையத்திற்கு வெளியே சுற்றுலா சென்று கற்றுக்கொள்ளக்கூடியதாக இச் செயலமர்வு அமைந்திருந்தது சிறப்பம்சமாகும்.

 நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை பிரதேச சபையில் உள்ள உறுப்பினர்களின் கருத்துகளும், மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட முன்மொழிவுகளும் உரிய கவனத்தைப் பெறாமல் புறக்கணிக்கப்படுவதாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.சி. நௌஸா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“ஒரு தவிசாளர் தனது சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் சமமாக வழிநடத்தி, அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் வளங்களையும் வாய்ப்புகளையும் சமமாகப் பகிர்ந்தளித்து, மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால் சம்மாந்துறை பிரதேச சபையில் அத்தகைய நடைமுறை காணப்படவில்லை.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடனும், சமூகத்திற்கு பயனுள்ள திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் மக்கள் பிரதிநிதியாக நான் இந்த சபைக்கு வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது மக்களின் நலனை முன்னிறுத்திய பல முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது மிகுந்த மனவேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சபை அமர்வொன்றில் நான் ‘பெண்கள் வலுவூட்டல்’ தொடர்பான பிரேரணையை முன்வைத்தேன். சம்மாந்துறையின் பின்தங்கிய பகுதிகளில் சுயதொழில் மேற்கொண்டு வரும் பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முன்மொழிவு கொண்டுவரப்பட்டது. ஆடு வளர்ப்பு, நெசவு, ஆடைத் தயாரிப்பு, சிறு கைத்தொழில்கள் உள்ளிட்ட பல துறைகளில் பயிற்சிகளும் ஊக்குவிப்புகளும் வழங்கப்பட்டால் பெண்களின் பொருளாதார நிலை உயர்வதோடு, வறுமையையும் குறைக்க முடியும் என்பதை விரிவாக விளக்கியிருந்தேன்.

இந்தப் பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட போதிலும், இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது எனக்கு பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நானே ஒரு சுயதொழில் முயற்சியாளராக இருந்து, பல்வேறு பயிற்சிகளும் ஊக்குவிப்புகளும் மூலம் முன்னேறிய அனுபவம் கொண்டவன். அதேபோல் பின்தங்கிய பெண்களும் முன்னேற வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த முன்மொழிவை கொண்டுவந்தேன்.

அதுமட்டுமல்லாமல், மகளிர் தினம், அன்னை தினம் போன்ற சந்தர்ப்பங்களில் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான நிகழ்ச்சிகளை சபையின் ஊடாக நடத்த வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தபோதும் அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

சபையில் நாம் சிறுபான்மை உறுப்பினர்களாக இருப்பதால் எங்களது கருத்துகளும் கோரிக்கைகளும் ஓரங்கட்டப்படுகின்றன. இது ஜனநாயகத்திற்கும் மக்கள் பிரதிநிதித்துவத்திற்கும் பொருந்தாத நிலையாகும்.
மேலும், எங்களது பிரதேசத்தில் சேதமடைந்துள்ள ஒரு முக்கிய பாலம் தொடர்பாக பலமுறை கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆரம்ப கட்டத்திலேயே சிறிய செலவில் சீரமைக்கக்கூடியதாக இருந்த அந்தப் பாலம் இன்று பெருமளவில் சேதமடைந்துள்ளதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பல விடயங்களில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி எங்களை ஓரங்கட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக நான் கருதுகிறேன்.

நான் பல பெண்கள் வலுவூட்டல் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றுள்ளேன். நாட்டின் பல பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி சபைகள் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றன. ஆனால் சம்மாந்துறை பிரதேச சபையில் அத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாததன் காரணம் என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பெண்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு தேவையான முக்கியத்துவத்தை தற்போதைய நிர்வாகம் வழங்கவில்லை என்பதை நான் ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றார்.
 

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்           

 அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் மயானத்தின் முன்பாக கண்டக்குழி பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய பொருட்களை சேகரிக்கும் நாடார் நிலையமொன்றில் இன்று (09) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இத்தீப்பரவால் அப்பகுதி கரும்புகை நிரம்பி காட்சியளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று மாநாகர சபையின் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.
இதேநேரம் சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று இராணுவம் மற்றும் பொலிசாரும் சென்றிருந்ததுடன் தீப்பரவலுக்கான காரணத்தை கண்டறியும் விசாரணைகளையும் பொலிசார் முன்னெடுத்திருந்தனர்.
தீப்பரவல் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமை எரிவாயு மொத்த வியாபார நிலையம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 


( வி.ரி.சகாதேவராஜா)


மாகாண நன்கொடை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி - 01 இல் அமையப்பெறவுள்ள இயற்கை உர தயாரிப்பு இடத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு  இன்று 2026.06.05 ம் திகதி வெள்ளிக்கிழமை தவிசாளர் இ. ரூபசாந்தன்   தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உபதவிசாளர் கே.புவனரூபன்,  உறுப்பினர் கே.உதயகுமார் ஆகியோருடன் எஸ்.ரஞ்சித்குமார் (தொழிநுட்ப உத்தியோகத்தர்) மற்றும் எம். நிப்றாஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 மேற்குறிப்பிட்ட இயற்கை  உர தயாரிப்பு இடத்திற்கான சுற்று மதில்  பகுதி அளவில் நிறைவுற்றிருந்தது  அதனை முழுமை படுத்தி நிறைவுற வைபவத்திற்கு  மூன்று மில்லியன் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

நூருல் ஹுதா உமர்


இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் (FSLGA) ஏற்பாட்டில் நடைபெற்ற மாகாண மட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் காரைதீவு பிரதேச சபை சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இப்போட்டியில் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்களும், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களும் பங்கேற்று தமது கருத்துக்கள் மற்றும் வாதங்களை முன்வைத்தனர். போட்டியின் இறுதியில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் 299 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகித்ததுடன், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் 254 புள்ளிகளைப் பெற்றனர்.

இதன்மூலம் 45 புள்ளிகள் வித்தியாசத்தில் காரைதீவு பிரதேச சபை வெற்றியீட்டியுள்ளது

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அறிவாற்றல், பகுப்பாய்வுத் திறன், பொதுக் கொள்கைகள் தொடர்பான புரிதல் மற்றும் மேடைப் பேச்சுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இவ்விவாதப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களின் இந்த வெற்றி, சபையின் செயற்பாட்டுத் திறன் மற்றும் உறுப்பினர்களின் விவாத ஆற்றலை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதேச மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றிக்காக காரைதீவு பிரதேச சபையின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்ற குழுவினருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

 நூருல் ஹுதா உமர்


நான் பாராளுமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பு வகித்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கல்முனை கடலரிப்பு பிரச்சினையின் அவசரத்தன்மையை எடுத்துரைத்து கோரிக்கை விடுத்ததன் பயனாக, 2024 ஜூலை 18 ஆம் திகதி ரூபா 6 கோடி 26 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் கடலரிப்பை கட்டுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நான் எம்.பியாக இல்லாது போனதன் பின்னர் அந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு கடலரிப்பை கட்டுப்படுத்த இப்போதைய எம்.பிக்கள் தவறியதால் கல்முனை கரையோரம் ஆபத்தில் இருக்கிறது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை கடலரிப்பு விவகாரம் தொடர்பில்  ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

யார் மீதும் எனக்கு தனிப்பட்ட கோபமில்லை. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனாலும் மக்களின் பிரச்சினை தலைக்கு மேலால் போகும்போது உண்மைகளை வெளியிடாமல் மௌனமாக இருக்க முடியாது. பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஆதம்பாவா எம்.பி இருந்தும் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமாக எதையும் செய்யாமல், இந்த விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்க வேண்டிய கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களையும் கூட கடந்த ஒன்றரை வருடங்களாக முறையாக நடத்தப்படாதிருப்பதும் கவலைக்குரிய விடயமாகும்.

ஒலுவில் துறைமுக பிழையான கட்டுமானத்தினால் கல்முனை தொகுதியின் கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் கடலரிப்பு தற்போது உக்கிரமடைந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதுடன், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பில் மீனவ அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு தரப்புகளில் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், இதுவரை உரிய மற்றும் நிரந்தரமான தீர்வுகள் எட்டப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். கடலரிப்பு அடுத்த கட்ட பேரழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

நான் பாராளுமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பு வகித்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் இந்த பிரச்சினையின் அவசரத்தன்மையை எடுத்துரைத்து கோரிக்கை விடுத்ததன் பயனாக, 2024 ஜூலை 18 ஆம் திகதி ரூபா 6 கோடி 26 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் கடலரிப்பை கட்டுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் கீழ் கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதியிலிருந்து மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் வரையிலான பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டன.

எனினும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிலரின் சதியினால் நான் தேர்தல் கேட்கவில்லை. அதன் பின்னர் வந்த எம்.பிக்களினால் இத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாத காரணத்தால், பலாஹ் பள்ளிவாசல் தொடக்கம் கடற்கரை பள்ளிவாசல் வரையிலான பகுதிகள் மீண்டும் கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகி, மீனவர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்து வருகின்றன. அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட மரபுரிமை சொத்தமான கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் முன்னாள் அழகுக்காக நிர்மாணிக்கப்பட்ட சகல வேலைத்திட்டங்களும் கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளது.

கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், இந்த அவசர பிரச்சினைக்கு தேவையான முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக, ஏற்கனவே எனது கோரிக்கைக்கு இணங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையிலும், சுமார் 250 மீற்றர் தூரத்தை பாதுகாக்கும் பணிகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

எனது காலத்தில் மாளிகைக்காடு மையவாடிக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ஊடாகவும், சாய்ந்தமருதில் கடலரிப்பு தடுப்பு அணைகள் நிர்மாணிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் ஊடாகவும் நிதி ஒதுக்கீட்டை பெற்று குறுகிய காலத்திற்குள் தடுப்பணை அமைக்கப்பட்டதுடன், கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதியிலிருந்து பலாஹ் பள்ளிவாசல் வரையிலான பணிகளும் சில மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டிருந்தன. ஆனால் தற்போதைய நிலையில் மிகவும் குறுகிய தூரப் பகுதியை கூட பாதுகாக்க முடியாத நிலை காணப்படுவது வேதனைக்குரியது.

கல்முனை கடலரிப்பிற்கான அடிப்படை காரணமாக ஒலுவில் துறைமுக பிழையான கட்டுமானமே இருப்பதாக ஜனாதிபதி முதல் பல அதிகாரிகள் வரை சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, கல்முனை மக்களின் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை நோக்கி அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, கல்முனை நகரத்தையும் அதன் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஒன்றிணைந்து அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் என்றார்.

 


ஹுதா உமர்


அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் அவர்கள், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதம், இன்று (01) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் பீ. வாகீசன், கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே. குணநாதன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் சுமார் 45 கலாசார உத்தியோகத்தர்களில், விண்ணப்பிக்கத் தகுதியுடைய தரம் I கலாசார உத்தியோகத்தர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது.

அதன் முடிவில், கிழக்கு மாகாணத்தில் இருந்து இரு அதிகாரிகள் மட்டுமே சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் பதவிக்கு தெரிவு

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்         

நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்படவுள்ள 20 இலட்சம் பெறுமதியான 11 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (31) நடைபெற்றது.
கடந்த காலத்தில் இடம்பெயர்ந்து மீள்குடியேறி வீடுகள் இன்றி சிறிய கொட்டகைகளினுள் வாழ்ந்து வரும் அலிக்கம்பை கிராமத்தில் இவ்வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் அங்கு இவ்வருடம் 43 வீடுகள் நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடும் அரசினால் வழங்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் அலிக்கம்பை தேவகிராமத்தின் புனித சபேரியார் திருத்தலத்தின் பங்குத்தந்தை ஆன்ரோய் உதவிப்பங்குத்தந்தை சுஜீவன் ஆகியோரின் விசேட ஆராதனைகளுடன் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரஜா சக்தி தலைவர் ஜெபநேசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோ கிராம உத்தியோகத்தர் நிதர்சன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயபால உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
நீண்டகாலமாக வீடுகள் இன்றி மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் அக்கிராம மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.

 


மாளிகைக்காடு செய்தியாளர்


அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் உரை மேடை (Podium) என்பன இன்று கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் நிதி மற்றும் கணக்காய்வு கிளை செயலாளர் எல். முஹம்மட் நிப்றாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், அமைப்பின் தவிசாளரும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான நூருல் ஹுதா உமர் அவர்கள் அன்பளிப்புகளை வழங்கி வைத்தார்.

இதன்போது கல்லூரியின் உதவி அதிபர், ஒழுக்காற்றுக் குழு பொறுப்பாசிரியர், அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கல்லூரிக்கு வழங்கப்பட்ட உரை மேடை, ஒலிவாங்கித் தாங்கி மற்றும் ஒலிவாங்கிகள் ஆகியவை பாடசாலையின் கல்வி மற்றும் இணைபாட செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஏ. முகமது நௌசாத் அவர்கள், அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் இந்த தாராளமான பங்களிப்பு கல்லூரியின் கூட்டங்கள், ஒன்றுகூடல்கள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதாரமாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறந்த தகவல் தொடர்பு மற்றும் கல்விச் சூழலை உருவாக்க இவ்வசதிகள் உதவும் என்றும், கல்வி மேம்பாட்டின் மீது அமைப்பு காட்டிவரும் அக்கறை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சமூக நலப்பணிகள் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதுடன், மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வசதிகளை வழங்கும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

 நூருல் ஹுதா உமர்

கல்முனை கடற்கரைப் பகுதியில் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் முன்னாள் கடலரிப்பைத் தடுக்கும் நோக்கில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இடப்பட்டிருந்த பாறாங்கற்கள் அகற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கரையோரம் பேணல் மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் மறுத்துள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டம் இல. 12 of 2016 இன் கீழ் கல்முனையைச் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர்  எம்.எஸ்.பௌசர் முன்வைத்த தகவல் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள கிழக்கு மாகாண கரையோரம் பேணல் மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறையின் பிராந்திய பொறியியலாளர் எம். துளசிதாசன், குறித்த பாறாங்கற்கள் அகற்றப்படவில்லை என்றும், நடைபாதை அல்லது அழகுபடுத்தல் வேலைத்திட்டங்களுக்காக அவை மாற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் (நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப்) முன்பகுதியில் கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னர் இடப்பட்டிருந்த மெட்ரிக் தொன் கணக்கான பாறாங்கற்கள் அகற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கு “இல்லை” என பதிலளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பாறாங்கற்கள் நடைபாதை அல்லது அழகுபடுத்தல் திட்டங்களுக்காக அகற்றப்பட்டனவா என்ற கேள்விக்கும் திணைக்களம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கல்முனை பகுதியில் தற்போது அதிகரித்து வரும் கடலரிப்பிற்கான முக்கிய காரணமாக 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுக நிர்மாணம் அமைந்துள்ளதாக திணைக்களம் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது.

இந்த தகவல்கள், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ பதிலில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்ட பொய் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுள்ளது

 


( வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டத்தின் பாணமை சந்தியில் இருந்து , காட்டிற்குள் இருக்கும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயம் நோக்கிச் செல்லும் பிரதான வீதிக்கான திசை நிர்ணய வீதி அறிவித்தல் பலகை இதுவரை பாணமைச் சந்தியில் நிறுவப்படவில்லை என பக்தர்களும் பொதுமக்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.


பாணமை சந்தியிலிருந்து உகந்தமலை ஆலயத்திற்குச் செல்லும் பாதை பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

 குறிப்பாக வருடாந்த உற்சவ காலங்களிலும் கதிர்காமம் பாதயாத்திரை நடைபெறும் நாட்களிலும் ஆயிரக்கணக்கான மூவின பக்தர்களும்  இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.

எனினும், உகந்தமலை ஆலயத்திற்கான திசை நிர்ணய அறிவிப்பு பலகை இல்லாத காரணத்தால் வெளிமாவட்டங்களிலிருந்து வருவோர் மற்றும் முதல் முறையாக வருகை தரும் யாத்திரிகர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பாணமை சந்தியில் இருந்து உகந்தமலை முருகன் ஆலயத்திற்கான வீதி அறிவித்தல் பலகையை உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளரும் சமய ஆர்வலருமான கண.இராசரத்தினம் (கண்ணன்) கூறுகையில்..  பாணமைச் சந்தியில் மாத்திரம் அல்ல, அதனை அடுத்து  வருகின்ற கண்ணகை அம்மன் கோயில் சந்தியிலும் கூமுனை சந்தியிலும் இதனை நிறுவினால் மக்களுக்கு பேர் உதவியாக இருக்கும் என்றார்.



 அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று (20) நடந்த ஒரு வாகன விபத்தில் இருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமுற்றவர்கள், அம்பத்துஒய பகுதியினைச் சேர்ந்தவர்கள், கூலி வேலை செய்து விட்டு,வீடு நோக்கிப் புறப்ட்ட போது அக்கரைப்பற்று தேசிய பாடசாலைக்கு அருகில், இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ஐந்து சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கார் ஒன்றினை மிக வேகமாக செலுத்தி சென்று  இவர்கள் மீது மோதிவிட்டு விபத்தை ஏற்படுத்தி விட்டு அக்கரைப்பற்று, அம்பாறை வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள் 

குறித்த வாகனம் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கார் எனத் தெரியவந்துள்ளது குறித்த காரின் உரிமையாளர் தான் எனவும் தானே இந்த வாகனத்தை செலுத்தி வந்ததாகவும் ஒருவர் அக்கரைப்பற்று போலீசில் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது இருப்பினும் இது முற்றிலும் பொய்யானது.எனவும் குறித்த சிறுவர்களே குறித்த காரில் பயணித்திருந்ததாகவும்  நேரில் கண்ட சாட்சிகள் அந்த இடத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்து இருக்கின்றார்கள் 

குறிப்பிட்ட சிறுவர்களை, கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றார்கள் அவ்விடத்திற்கு விஜயம் செய்த அக்கரைப்பட்டி போலீசார் நிலைமையைக் கட்டுப்படுத்தி உள்ளார்கள் இதனால் அந்த இடத்தில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது


#Akkaraipattu #RoadAccident #SrilankaNews #Justice #PoliceInvestigation #BreakingNews #qknews

 


நூருல் ஹுதா உமர்


அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் நிந்தவூர் விஜயத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்தை அண்மித்த பகுதிகளில் துப்புரவு மற்றும் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று (19) நடைபெற்ற இந்த நடவடிக்கையில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, பிரதேச சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் தன்னார்வ அடிப்படையில் இணைந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக பிரதேச சபை ஊழியர்களினால் குறித்த பகுதிகள் கட்டம் கட்டமாக சுத்தப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கலாச்சார மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

UMAR LEBBE NOORUL H

 நூருல் ஹுதா உமர்


நிந்தவூர் பிரதேச சபையின் 5ஆம் வட்டாரமான புதுநகர் உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2488/10 இன் பிரகாரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் முகமது முஸ்தபா முகமது அன்சார் அவர்கள் தனது உறுப்பினர்


பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


உள்ளூராட்சி தேர்தல்கள் ஒழுங்கு விதி சட்டத்தின் 66A(1)(a) பிரிவின் கீழ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், குழந்தை மறைக்கார் முகமது ஜெரீஸ் அவர்கள் நிந்தவூர் பிரதேச சபையின் 5ஆம் வட்டார உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இந்த நியமன அறிவிப்பை நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அதிகாரியான கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க அவர்கள் வெளியிட்டுள்ளார்.


அம்பாறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தால் 2026 மே 11ஆம் திகதி வெளியிடப்பட்ட இவ்வறிவிப்பு, 2026 மே 12ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது


 


வி.சுகிர்தகுமார்
        

 அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் முன்பாக அமைந்துள்ள வெள்ளப்பாதுகாப்பு வீதியின் சில பகுதிகள் உடைந்து விழுந்து நீருக்குள் மூழ்கிவரும் நிலையில் அதனை மீள் புனரமைப்பதற்கான முதற்கட்ட பணியினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசனின் ஒத்துழைப்போடு முன்னெடுத்துள்ளார்.
கிராமப்புற சாலை வலையமைப்பில் உள்ள பாதுகாப்பற்ற இடங்களை சரியான முறையில் சீரமைத்தல் எனும் அரசின் வேலைத்திட்டத்திற்கு அமைய இவ்வீதி புனரமைக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் வீதியின் நிலையினை பார்வையிட்டதுடன் புனரமைக்கப்பட வேண்டிய வீதியின் எல்லையினை அளவீடு செய்தனர்.
குறித்த வீதியானது பல வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டபோதும் வீதியின் இரு புறங்களும் முறையாக செப்பனிடப்படாமை மற்றும் கனரக வாகனங்களில் போக்குவரத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக நாளாந்தம் வீதியின் ஓரங்கள் உடைந்து அருகில் உள்ள வாய்க்காலுக்குள் வீழ்ந்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் பலரது கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இருப்பினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக குறித்த வீதியினை புனரமைப்பதற்கான முன்மொழிவினை பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 நூருல் ஹுதா உமர்


பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. நஸீல் அவர்களின் ஏற்பாட்டில், அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா  தலைமையில் இன்று (13.05.2026) பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்தி தேவைகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களால் இரண்டு வேலைத்திட்டங்களுக்காக ரூபாய் 5 இலட்சம் ஒதுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸீத் அவர்களால் 18 வேலைத்திட்டங்களுக்காக ரூபாய் 52 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களால் ஒரு வேலைத்திட்டத்திற்காக ரூபாய் 5 இலட்சம் வழங்கப்பட்டது. மேலும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நான்கு வேலைத்திட்டங்களுக்காக ரூபாய் 12 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 2 இலட்சம் வீதம் வீடமைப்பு நிதி வழங்கப்படவுள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்நிதி வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதேவேளை, பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் 13 வேலைத்திட்டங்களுக்காக ரூபாய் 46 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொத்துவில் பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ. மாபீர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.எம். சப்ரி, கணக்காளர் எஸ்.எப். சபானா, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.