Showing posts with label Eastern. Show all posts

 


(நூருல் ஹுதா உமர்)

அக்கரைப்பற்றில் நடைபெற்ற நோன்புப்பெருநாள் தொழுகையும், பெருநாள் குத்பாவும் (நூருல் ஹுதா உமர்)

 


வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு இரண்டரை வயது குழந்தையுடன் நேற்று (19) சென்று காணாமல்போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்தும் குழந்தை வவுணதீவு கொத்தியாவலை பிரதேச வயலில் இருந்தும் உயிருக்கு போராடிய நிலையில் உயிருடன் இன்று (20) மீட்கப்பட்டதுடன் அந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது.


இது பற்றி தெரியவருவதாவது,


வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் தாய் ஒருவர் அவரது இரண்டரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து எடுப்பதற்காக நேற்று காலையில் வீட்டில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவர் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்ததுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.


இந்நிலையில் இன்று காலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் மாட்டுபட்டியில் பால் எடுப்பதற்காக சிலர் சென்று கொண்டிருந்தபோது அப் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதை கண்டனர்.


இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் கிணற்றில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதாக அப் பெண் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.


இதேவேளை குறித்த குழந்தை கொத்தியாவலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரம் கொண்ட வயல் பகுதியில் கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.


குழந்தை மீட்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து தாய் மீட்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  


இதனைத் தொடர்ந்து பொலிஸார் நீதிமன்ற அனுமதியை பெற்று தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்த அழுகிய நிலையில் இருந்த சுமார் 20 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவரின் சடலம் ஒன்றை மீட்டு பிரேத பரிசோதணைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்தனர்.


இதேவேளை இச் சம்பவத்தில் உயிர் தப்பிய தாய் தான் சம்பவதினம் மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்துக்கொண்டு ஈட்டு கடையில் 34 ஆயிரம் ரூபாவுக்கு அடைவில் இருந்த தங்க ஆபரணம் ஒன்றை மீட்டெடுத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறி வவுணதீவு கொத்தியாவலையில் உள்ள தனது வீட்டிற்கு பிரயாணித்து தாண்டியடி பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு நோக்கி சென்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


அதேவேளை இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அவர் பெரும் அதிர்சியடைந்து பயந்த நிலையில் இருந்து வருவதால் அவரிடம் தொடர்ந்து தற்போது விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இதேவேளை குறித்த இளம் தாய் கடத்தப்பட்டாரா? கொள்ளையர்கள் வாகனத்தில் கடத்தி சென்றனரா? தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா? என பல கோணத்தில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, பொலிஸார், மாவட்ட புலனாய்வு பிரிவினர், விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


(கனகராசா சரவணன்)


 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்        

 அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்ல ஸ்தாபகர் தின நிகழ்வுகளும் இந்தியாவில் இருந்து வருகைதந்த வளவாளர்களையும் வள்ளல்களையும் வரவேற்கும் நிகழ்வும் அறநெறி ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் (19) இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் திருச்சி உதயா உணவுகள் பதப்படுத்தல் உற்பத்தி பயிற்சியாளர் எஸ்.பொன் செல்வி சரவணன் தொழில் ஆலோசகர் மற்றும் எழுத்தாளர் எம்.ஞானசேகரன் சமூக சேவகர் எம்.பி.பழனிச்சாமி திருமதி கண்ணம்மாள் சண்முகம் சட்டத்தரணி மற்றும் ரோட்டறி கழகத்தின் செயலாளர் எப்.டபிளியு.பிறங்கிளின் விஜயகுமார் பணியகம் சார்ந்த தரச்சான்று உத்தியோகத்தர் சதீஸ்பாபு உள்ளிட்ட பிரதேச சபை தவிசாளர் தர்மதாச அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜி என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபகராக இருந்து வழிநடத்திவரும் த.கயிலாயபிள்ளை அவர்களை முன்னிறுத்தி ஸ்தாபகர் தினமாக மார்ச் மாதம் 17ஆம் திகதியாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் பின்னராக இந்தியாவில் இருந்து வருகை தந்த வளவாளர்களும்; வள்ளல்களும் இணைந்து இல்ல வளர்ச்சிக்காக உதவி செய்வதாக உறுதி அளித்ததோடு பிரதேச உற்பத்தியாளர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முன்வருவதாகவும் கூறினர்.
இறுதியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சேவை செய்யும் அறநெறி ஆசிரியர்கள் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்து இளைஞர் மன்றத்தின் நிதியினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

 


நூருல் ஹுதா உமர்


கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட இணைந்த சேவை உத்தியோகத்தர்கள் 2026 ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற கட்டளைக்கமைய இதுவரை விடுவிக்கப்படாத உத்தியோகத்தர்களை 20 ந் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்


இது தொடர்பாக (17.03.2026) ந் திகதி ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாகாண அமைச்சர்களின்  செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களின் மாதாந்த கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார்


இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,


ஆளுநரின் உத்தரவின்படி, 03.03.2026 முதல் இடமாற்ற உத்தரவுகளில் உள்ள அனைத்து அலுவலர்கள்/பணியாளர்களையும் வரும் வெள்ளிக்கிழமை, 20.03.2026-க்குள் விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த உத்தரவை மீறினால்,  இலங்கை அரசாங்க தாசன விதி கோவை மற்றும் கிழக்கு மாகாண அரச ஒழுங்கு விதி (E.Code) விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் மேலும் வலியுறுத்தி உள்ளதாக  ஆளுநரின் செயலாளர் பி. வாகேஷன், அறிவித்துள்ளார்.

 


நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்டம் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ள மாவட்டமாக காணப்படுவதால், தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, தற்போது வாரத்திற்கு 75 லீட்டர் என்ற அளவில் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு விவசாய நடவடிக்கைகளுக்கு முற்றிலும் போதாது. ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள குறைந்தது 20 லீட்டர் எரிபொருள் தேவையாகும் நிலையில், இந்த ஒதுக்கீடு நடைமுறையில் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, குறிப்பாக உழவு இயந்திரங்களுக்கு விவசாய நடவடிக்கைகளை சீராக செய்ய வாரத்திற்கு குறைந்தபட்சம் 300 லீட்டர் எரிபொருளாவது ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், உழவு இயந்திரங்களை கலப்பையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், மற்ற வாகனப் பயணிகளுக்கும் ஆபத்து விளைவிக்கும் சூழல் உருவாகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், எரிபொருளை கலன்களில் (containers) வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது விவசாய நடவடிக்கைளை மேற்கொள்ளும் காலம் என்பதால் விவசாயத்தை பாதுகாக்கவும், உற்பத்தியை நிலைநிறுத்தவும் ஜனாதிபதி, பிரதமர், விவசாய அமைச்சர், எரிசக்தி அமைச்சர் போன்றோர்கள் தலையிட்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 


நூருல் ஹுதா உமர்)


சாய்ந்தமருது அல்-அமானா நற்பணி மன்றத்தினால் தேவை உடைய மக்களுக்கான உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வும், அமைப்பின் பொதுக்கூட்டமும், வருடாந்த இப்தார் நிகழ்வும் புதன்கிழமை மாலை சாய்ந்தமருது அல்-அமானா நற்பணி மன்ற காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு அல்-அமானா நற்பணி மன்றத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல். பரீட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் போது பொருளாதார தட்டுப்பாட்டில் உள்ள குடும்பங்கள், பெருநாளை கொண்டாட வசதியற்ற ஏழைகள், அங்கவீனர்கள், அனாதைகள், விதவைகள் மற்றும் வாழ்வாதாரம் இழந்த பலருக்கு பண உதவிகளும் உலருணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உலமாக்கள், பிரதேச செயலக அதிகாரிகள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்தார் நிகழ்வில் விசேட மார்க்க உரையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சாய்ந்தமருது கிளைத்தலைவர் எம்.எம்.எம். சலீம் (சர்க்கி) நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மன்றத் தலைவர் ஏ.எல். பரீட், அமைப்பின் வரலாற்றை நினைவுகூர்ந்தார். 1986 ஆம் ஆண்டு “அன்ஸாரிகள் சங்கம்” என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, ஆரம்பத்தில் மீனவர்களின் நலன், மத நடவடிக்கைகள் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக “சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒன்றியம்” என மாற்றம் பெற்று பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் அவர் கூறினார்.

பின்னர் மக்களின் தேவைகள் அதிகரித்ததை முன்னிட்டு, 2008 ஆம் ஆண்டு அப்போதைய பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் “அல்-அமானா நற்பணி மன்றம்” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக உருவெடுத்து தற்போது பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்த பின்னர் அரசு மேற்குப் பகுதிகளில் காணிகளை வழங்கி குடியிருப்புகளை அமைத்தாலும், அனைவரும் வீடுகளை பெற முடியாத சூழல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் பலர் அருகிலுள்ள பகுதிகளில் சிறு நிலப்பகுதிகளை வாங்கி தங்களது குடியிருப்புகளை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வீதி அமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மன்றம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், தேவையுடைய மக்களின் நியாயமான ஆதரவின் மூலம் அவற்றை வெற்றிகரமாக சமாளித்ததாகவும் தெரிவித்தார். வீதிகளுக்கு பெயரிடுதல் தொடர்பாகவும் அவர் கருத்துகளை வெளியிட்டார்.

இந்த நிகழ்வு சமூக ஒற்றுமையையும், சேவை மனப்பான்மையையும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.



(வி.ரி.சகாதேவராஜா)

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவமானது நேற்று (16) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் மாங்காடு சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
 
அரசாங்கத்தினால் நிலையான கட்டமைப்பில் ஆரம்பிக்கப்பட்ட "கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டமானது நெறிமுறை கொள்கைகள், தூய்மையான பெளதீக சூழல்மற்றும் சுற்றுசூழல் நிலைத்தன்மையை அபிவிருத்தி செய்வதற்கான நாடுதழுவிய தார்மீக அர்ப்பணிப்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த நோக்கங்களை அடைவதற்காக "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டம், தேசிய ரீதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமங்கள் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு இணையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தெரிவு செய்யப்பட்ட கிராமத்தில் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் உடல்நலம், வீட்டு முகாமை மற்றும் சமூக நல்வாழ்வு, கலாசார மற்றும் ஆன்மீக அபிவிருத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் ஊடாக அக் கிராமங்களை உற்பத்தித் திறன் ஊடக அபிவிருத்தி செய்வதே இதன் நோக்கமாகும்.

இதன்போது  பிரதேச செயலாளரினால் சமூக உற்பத்தித்திறன் திட்டம் மற்றும் அதன் நோக்கங்களை பற்றிய தெளிவூட்டல் இடம்பெற்றதுடன், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை தவிசாளர்  மே. வினோராஜ்  மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா பிரதேச ஒருங்கிணைப்பாளர்  எம். சனுஜன் ஆகியோரின் விசேட உரைகள்  இடம்பெற்றது. 

மேலும் கிளீன் ஸ்ரீலங்கா தொடர்பான காணொளிகளும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், உற்பத்திதிறன் உத்தியோகத்தர்களினால்    அடையாளம் காணப்பட்ட மற்றும் எதிர்கால சமூக உற்பத்தித்திறன் அபிவிருத்தி திட்டமும் பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. சத்யகெளரி தரணிதரன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, திணைக்களங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாங்காடு கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், மாங்காடு கிராம ஆலயங்கள்  மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்       


 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனங்காட்டு பாலத்தின் கீழான ஆற்றில்; இருந்து சடலமொன்று பொலிசாரால் இன்று(18) மீட்க்கப்பட்டது.
சடலமாக மீட்க்கப்பட்டவர் அக்கரைப்பற்றில் வாழ்ந்து கோளாவில் 2 இல் வசித்து வந்த 51 வயதுடைய சாமித்தம்பி திவ்வியராஜா எனும் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டார்.
குறித்த நபர் நேற்று முதல் காணவில்லை என குடும்பத்தார் தேடிவந்த நிலையில் இன்று காலை பாலத்தின் கீழான ஆற்றில்; சடலம் மிதப்பதாக நேரில் கண்டவர்கள் பொலிசாருக்கு தகவலை வழங்கினர்.
இதனை அறிந்து கொண்ட உறவினர்கள் சடலத்தை நேரில் கண்டு அடையாளம் காட்டினர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டதுடன் உறவினர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தடயவியல் பொலிசாருக்கும் தகவல் வழங்கப்பட்டு அவர்களது விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
இதேநேரம் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தவரின் மனைவி மரணடைமடைந்த நிலையில் அவர் உறவினர்களது வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆராய்ந்தார்


இன்று(17)  குருக்கள்மடம் மனித புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்தினை நீதிபதி  சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கி பயணித்த முஸ்லிம் பயணிகள் விடுதலைப்புலிகளினால் இடை மறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று (17) முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கின் ஒரு பகுதியாக, களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி ரி. பிரதீபன் தலைமையில், பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் குருக்கள் மடத்தில் உள்ள மனித புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்தை நேரில் பார்வையிட்டனர்.


சம்பந்தப்பட்ட இடம் தற்போது பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த மனித புதைகுழி தொடர்பான முதல் கட்ட அகழ்வாய்வு பணிகள் எதிர்வரும் மார்ச் 30ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெறவுள்ள அகழ்வாய்வை முன்னிட்டு இந்த விசேட கள விஜயம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்      


கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய தேசத்தை கட்டி எழுப்பும் வளமான கிராமம் சமூக உற்பத்திதிறன் மாதிரிக்கிராம அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (16) ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட அக்கரைப்பற்று 7ஆம் பிரிவில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாசா பிரதேச ஒருங்கிணைப்புக் குழத்தலைவரின் பிரதிநிதியும் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசன் பிரதேச சபை உறுப்பினரும் பிரஜா சக்தி தலைவருமான எம்.தங்கேஸ்வரன் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் நேசராஜா உள்ளிட்ட கிராமத்தின் முக்கியஸ்தர்கள்  பலர் கலந்து கொண்டனர்.
உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான முர்தாளா மற்றும் முஹம்மத் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கிளின் சிறிலங்கா தொடர்பான கீதமும் விசேட காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அக்கரைப்பற்று ஆம் பிரிவின் திட்ட அறிக்கை தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசனிடம் கையளிக்கப்பட்டது.
இதன் பின்னராக அதிதிகள் அனைவரும் இணைந்து மாதிரிக்கிராமத்தின் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்;டது.



 நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் "வாழ்வில் வசந்தம்" வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் 21 வது பகுதி அளவான வீட்டுக்கு நிர்மாண வேலைகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 2026.02.15 இடம்பெற்றது

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்ஹாஜ் ஏ எம் ஜவ்பர், சங்கைக்குரிய மௌலவி அஷ் ஷெய்க் ஏ எம் இப்ராஹிம், நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது உட்பட  பலரும் கலந்து கொண்டனர்

நிந்தவூர் - 1 ம் பிரிவில் விசேட தேவை உடைய குடும்பம் ஒன்றுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் நிந்தவூரை சேர்ந்த கல்விமான் மர்ஹும் சீ ஓ லெஸ்தகீர் அவர்களின் புதல்வரும்,  இலங்கை சுங்க திணைக்களத்தின் ஓய்வுநிலை பிரதிப் பணிப்பாளர்  ஓ எல் சப்ரி இஸ்மத் மற்றும் அவரது புதல்வர்களின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் இந்த வீடு பெஸ்ட் ஒப் யங் அமைப்பினால் நிர்மாணித்து வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

இதன் மூலம்  வாழ்வதற்கு ஓரளவேனும் வசதியான வீடின்றி கஷ்டப்பட்ட ஏழைக் குடும்பத்தின் நிரந்தர வீட்டுக்கான கனவு இந்த ரமழானில் நிறைவேற்றப்பட உள்ளது
 


 நூருல் ஹுதா உமர்


மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை வினைத்திறனாக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் தெரிவித்தார்.

மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் சனிக்கிழமை (14) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பணிப்பாளர் மேற்படி குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், மல்வத்தை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.எல்.குடாபடு மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில், வைத்தியசாலையில் தற்போது நிலவும் அத்தியாவசியத் தேவைகள், ஆளணிப் பற்றாக்குறை மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவையில் உள்ள சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதனையடுத்து, வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளுக்கும் நேரில் விஜயம் செய்த பணிப்பாளர், அங்குள்ள நிலைமைகளை அவதானித்ததுடன், வைத்தியசாலை நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட அவசரத் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.

வைத்தியசாலையின் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கி வரும் பொறுப்பு வைத்திய அதிகாரி உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களையும் பணிப்பாளர் இதன்போது பாராட்டினார்.


  (வி.ரி. சகாதேவராஜா)

 கல்முனை  ஆதார வைத்தியசாலையில்  சர்வதேச மகளிர் தினம்  வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கம்  தலைமையில் நேற்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிரா சபியுதீனின் வழிகாட்டலின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  டாக்டர் எஸ்.இஸ்ஸதீன், கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி அதிகாரி திருமதி ஜெனிதா மோகன், மற்றும் கல்முனை வடக்கு சுகாதார சேவைகள் பணிமனையின் பொது சுகாதார தாதிய சகோதரி திருமதி சீஎம்.பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

 


நூருல் ஹுதா உமர்


வடமத்திய மாகாணத்தில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்கு எளிதில் செல்ல உதவும் நோக்கில் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றது.

வடமத்திய மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க, Qatar Charity அமைப்பினால் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தொலைதூரப் பகுதிகளில் இருந்து பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் கல்வி பயணத்தை எளிதாக்கும் நோக்கில் இச்சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் வடமத்திய மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆனந்த ரத்நாயக்க, பொதுமக்கள் தொடர்பு அலுவலர் அசேல விஜேசிங்க, Qatar Charity அமைப்பின் இலங்கை பிரதிநிதி மற்றும் அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு, பொருளாதார வசதிகள் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு உதவுவதோடு, சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான மனிதநேய நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.


 நூருல் ஹுதா உமர்


புனித ரமழான் மாதத்தையும் எதிர்வரும் நோன்புப் பெருநாளையும் முன்னிட்டு, நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் சபையின் உறுப்பினர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரகாரம் குறித்த கல்வி நிறுவனங்கள் 2026 மார்ச் 25 ஆம் திகதி வரை செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மார்க்க கடைமைகளில் முழுமையாக ஈடுபடக கூடிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்கும், அமைதியான முறையில் மத கடமைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் குறித்த அறிவுறுத்தலை பின்பற்றி, 2026 மார்ச் 25 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச சபை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


 ( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை வைஎம்சீஏ( YMCA)  அனுசரணையுடன், கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் இன்று (14) சனிக்கிழமை காலை கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது.

 இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த சேகரத்தின் முகாமைகுரு அருட்திரு.  ரவி முருகப்பிள்ளை மற்றும் அருட் செல்வி சலோஜினி ஆகியோர் கலந்து கொண்டதுடன் திருச்சபையின் மக்களும் இணைந்து கொண்டனர்.
 சேகரிக்கப்பட்ட குப்பைகளை அகற்றுவதற்கு கல்முனை மாநகர சபையினால் வாகன ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 அதேபோல,  குறித்த பணியில் ஈடுபட்டவர்களுக்கு கல்முனை இராணுவத்தினரால்  குளிர்பானம் வழங்கி  வைக்கப்பட்டது.

  


( வி.ரி. சகாதேவராஜா)


 திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன்  இன்று (13) வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

பதவியேற்றகையோடு ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார்.

அவருடன் லாகுகலை பிரதேச செயலாளர் எஸ்.நவநீதராஜா காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பிரணவரூபன், சீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பதவியேற்பு விழாவிற்கு தம்பலகாமம் சென்றிருந்தனர்.

அங்கு பிரதேச செயலாளராக இருந்த திருமதி ஸ்ரீபதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபராக பதவியுயர்வு பெற்ற காரணத்தால் அங்கு வெற்றிடம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவைச் சேர்ந்த சதிசேகரன்( சதீஷ்) இறுதியாக லாகுகல உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றியிருந்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் சதீஷ் , காரைதீவில் பயின்று,  திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரம் இந்து கல்லூரியில் 2012 முதல், ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார்.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்      

 அம்பாரை மாவட்டம் சாகாமம் நீர்ப்பாசன குளத்தின் மூலமும் மற்றும் பன்னலகம அம்பலன் ஓயா வடிச்சல் நீர் மூலமும் சிறுபோக செய்கை மேற்கொள்ளக்கூடிய விவசாய நில அளவின் எண்ணிக்கை 2824 ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் (13)இடம்பெற்ற சிறுபோகச் செய்கை தொடர்பான ஆரம்ப கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பகுதியில் சிறுபோக செய்கை மேற்கொள்ளக்கூடிய  2824 ஏக்கர்களில் நேரடிப்பாய்ச்சலாக 1285 ஏக்கரும் பன்னலகம வடிச்சல் மூலம் 972 ஏக்கரும் அம்பலன் ஓயா வடிச்சல் மூலம் 567 ஏக்கரும் செய்கை பண்ணவும் விவசாயிகளின் விருப்பின் பேரில் விபுலானந்தா காணி உள்ளிட்ட 140 ஏக்கர் காணி செய்கை பண்ணவும் அனுமதியளிக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ்; தலைமையில் நடைபெற்ற சிறுபோகச் செய்கைக்கான கூட்டத்தில்
இக்கூட்டத்தில் தம்பிலுவில் மாகாண பிரதி நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் இராஜேஸ்கண்ணா மற்றும் பிரதேச நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்;; உள்ளிட்ட அதிகாரிகள் விவசாய பெரும்பாக உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள், விவசாய பிரதிநிதகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் பிரகாரம் பட்டிமேடு வடக்கு, பட்டிமேடு தெற்கு, பட்டிமேடு மத்தி, மொட்டையாகல், சேனைக்கண்டம் தெற்கு, சேனைக்கண்டம் வடக்கு ஊரக்கை கண்டம் தாலிபோட்டாறு வடக்கு ஆத்துக்கண்டம் தாலிபோட்டாறு தெற்கு ஆத்துக்கண்டம் சுவாமி விபுலானந்தா இல்லக்காணி; அனுமதியளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் போது வடிச்சல் நீரை பயன்படுத்தி மேலதிகமாக நெற்செய்கையை மேற்கொள்வதற்கான கோரிக்கையினை விவசாயிகள் முன்வைத்தனர்.
இதேநேரம் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக கட்டடங்கள் நிர்மாணிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.


 56 களில் தீப்பந்தத்துடன் துறை கடந்து கற்பித்த களுதாவளையின் முதல் ஆசிரியை பார்பதி.

இன்று(12) அவரது 31 வது நாள் நினைவு தினம்!

அதையொட்டி இக்கட்டுரை வெளியாகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை கிராமத்தின் முதலாவது ஆசிரியை திருமதி பார்பதி கணபதிப்பிள்ளை ஆவார்.

1956 களில் மின்சாரம் இல்லாத கிராமம் அது. அதிகாலையில் எழுந்து இருள் பிரியும் முன்னர் தீப்பந்தத்துடன் குறுமண்வெளி ஆற்றுத் துறையை  கடந்து படுவான்கரைக்குச் சென்று கற்பித்த ஓர் அர்ப்பணிப்பான ஆசிரியை . கடந்த மாதம் 09 ஆம் திகதி,  தனது 89  வது வயதில்  இறைபதமடைந்தார்.

களுதாவளை கிராமத்தின் கல்வி மற்றும் சமூக பணிகளில் முக்கிய பங்காற்றிய ஆளுமையாக விளங்கிய பார்பதி ஆசிரியையை அந்தப் பகுதி மக்கள் பெருமையுடன் இன்றும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.


களுதாவளை கிராமத்தில் 07.11.1937 இல் பிறந்து வளர்ந்த பார்பதி ஆசிரியை, சிறு வயதிலிருந்தே கல்வி மீது அதிக ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். கல்வியை முடித்த பின்னர் ஆசிரியர் பணியில் இணைந்து பல மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றினார். அவருடைய கற்பித்தல் முறையும், மாணவர்களிடம் கொண்ட அன்பும் காரணமாக அவர் பலராலும் மதிக்கப்பட்ட ஆசிரியராக விளங்கினார்.

அவர் கல்விச் சேவையுடன் மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் தன்னை அர்ப்பணித்தவர். கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் நல்ல பண்புகளின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து உழைத்தார். பல சமூக, மத மற்றும் கலாச்சார நிகழ்வுகளிலும் தீவிரமாக பங்கேற்று சமூக ஒற்றுமையை வலுப்படுத்தினார்.

1953ஆம் ஆண்டு களுதாவளை மத்திய கல்லூரியில் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் ஆசிரியர் துறையில் பணியாற்றி பல ஆண்டுகள் சேவை செய்தார். தனது வாழ்க்கை முழுவதும் மாணவர்களின் கல்வி முன்னேற்றமே தனது இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார்.

"தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் பெறப்படும்"  என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க அவரை பெற்றெடுத்த பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் சமுதாயத்தில் உயர்நிலைகளில் இருக்கின்றார்கள்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த கே. கருணாகரன் மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளராக இருந்து,  தற்போது களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய தலைவரான க. பாஸ்கரன் போன்றோர் அதற்கு சாட்சியமாக உள்ளனர்.
பார்பதி ஆசிரியர் கற்பித்த மாணவர்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி சமூகத்தில் சிறந்த இடங்களைப் பெற்றுள்ளனர். இதனை அந்தப் பகுதி மக்கள் அவருடைய கல்விச் சேவையின் பெருமையாகக் கருதுகின்றனர்.

வித்தகர் விபுலமாமணி  வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.