Showing posts with label Eastern. Show all posts



நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (11) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல். அப்துல் லத்தீப் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களினால் நிந்தவூர் பிரதேசத்தின் அடிப்படை வசதிகள், கல்வி, வீதி மற்றும் வடிகால் அபிவிருத்தி, மின்சாரம், விளையாட்டு வசதிகள் மற்றும் குடியிருப்பு தேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 32 முக்கிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

கடலரிப்பு தடுப்பு வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தல், இலங்கை மின்சார சபை நிந்தவூர் பாவனையாளர் சேவை நிலையத்திற்கான நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கு அரச காணி ஒதுக்கீடு, பல பாடசாலைகளில் கட்டிடங்கள், வகுப்பறைகள், விஞ்ஞான ஆய்வு கூடங்கள், கணினி ஆய்வு கூடங்கள், சுற்று மதில்கள், உள்ளக வீதிகள் மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துதல் போன்றவை முக்கியமாக விவாதிக்கப்பட்டன.


அதேபோல், விவசாயத்திற்கு பொருத்தமற்றதாக அடையாளம் காணப்பட்ட காணிகளை மண் நிரப்பி குடியிருப்பு தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டது.

மேற்கண்ட அனைத்து முன்மொழிவுகளும் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வாசித், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 நூருல் ஹுதா உமர்


ஓய்வு பெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரியும், ஊடகவியலாளருமான கலாநிதி முகம்மட் சாலிஹீன் எழுதிய “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” எனும் நூலின் வெளியீட்டு விழா இன்று நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அறிவியல் மற்றும் கல்வி ஆர்வலர்கள், பேராசிரியர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், நூல் குறித்து விரிவான நூல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. வளிமண்டலவியல் தொடர்பான அடிப்படை கருத்துக்களை எளிமையாகவும், அறிவியல் துல்லியத்துடனும் எடுத்துரைக்கும் இந்த நூல், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது வாசகர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பேராசிரியர்கள் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.ஏ.எம். தாஹிர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நூலை வெளியிட்டு வைத்ததுடன், நூலாசிரியரான கலாநிதி முகம்மட் சாலிஹீனைப் பாராட்டி உரையாற்றினார். அவர் தனது உரையில், அறிவியல் நூல்களை தாய் மொழியில் வெளியிடுவது சமூகத்தின் அறிவுத்தள வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் எனக் குறிப்பிட்டார்.

வளிமண்டலவியல் துறையில் நீண்ட கால அனுபவமும், ஆய்வுப் பங்களிப்புகளும் கொண்ட கலாநிதி முகம்மட் சாலிஹீனின் இந்த நூல், இலங்கைத் தமிழ்ச் சூழலில் ஒரு முக்கிய அறிவியல் ஆவணமாகக் கருதப்படுவதாக நிகழ்வில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், புவியியல் துறைத் தலைவர் கலாநிதி ஐ.எல். மொஹமட் ஜாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். ஹனிபா உட்பட ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

( எம். என்.எம்.அப்ராஸ்)


 விவசாய திணைக்களத்தினால் மிளகாய் பயிர் செய்கையில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்தில் கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பிரிவில் ஐம்பது வீதம் 50% மானிய விலையில் நாற்று வளர்ப்புப்பைகள் வழங்கிய மிளகாய் செய்கை மேற்கொள்ளும் வீட்டுத் தோட்ட செய்கையாளருக்கு உயர் விளைச்சலை தரும் MICHHY -01 மிளகாய் நாற்றுக்கள் மற்றும் வீட்டுத் தோட்ட விதைப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தில் இன்று(06)இடம்பெற்றது. 

கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் போதனாசிரியர் என்.யோகலக்ஷ்மி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் வலய உதவி விவசாய பணிப்பாளர் டப்ளியு.ஜி.ஆர்.ருக்மன் சோமரத்ன மற்றும் அம்பாரை மாவட்ட மறு பயிர் செய்கை விவசாய பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிஹார்,கல்முனை விவசாய விரிவாக்கல் நிலைய தொழி நுட்ப உதவியாளர் சி.அஸ்வினி ஆகியோர் கலந்து கொண்டனர். 

வீட்டுத் தோட்ட மிளகாய் செய்கை மேற்கொள்ளும் போது மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்குறித்த MICHHY -01 மிளகாய் நாற்றுகளுக்கான உர தயாரிப்பு அதன் பயன்கள் தொடர்பில் விவசாய திணைக்கள அதிகாரிகளினால் வீட்டு தோட்ட செய்கை செய்கையாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.


அக்கரைப்பற்று - கல்முனை வீதியில் 

டிப்பர் வாகனம் விபத்து

- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சாரதி..


அக்கரைப்பற்று - கல்முனை வீதியில் டிப்பர் வாகனம் விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சாரதி ஒலுவில் பிரதேசத்தில் இன்று நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகித் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த வேளையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, இன்னொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்தின் போது வாகனத்தில் இருந்த ஏராளமான நெல் மூட்டைகள் வீதியோரத்தில் சிதறின. 


#Tipper #Accident #Akkaraipattu #HeavyRain #DriverEscaped #Thinakaran #SriLanka #LKA #SL

 


திருகோணமலை இறால்குழி கிராமத்தில் மனித பாவனைக்கு உதவாத புழுக்கள் நிறைந்த 1500 கிலோ கிராம் மீனை மூதூர் சுகாதார வைத்திய அதிகாரிகள் சுற்றிவளைத்து கைப்பற்றியுள்ளனர். 


இறால்குழி கிராமத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதர்கள் அடங்கிய குழுவினர் (05) மேற்கொண்ட சோதனையின் போது மாசடைந்த இந்த மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 


கருவாடு தயாரிப்பதற்காக இந்த மீன்கள் வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


சுகாதார விதிமுறைகளை மீறி இவ்வாறு தரமற்ற மீன்களை சேமித்து வைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து  குறித்த மீன்கள் உடனடியாக கைப்பற்றப்பட்டதுடன்  சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட  நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


பொதுச் சுகாதாரத்திற்கு ஏற்படும் அபாயத்தை கருத்திற்கொண்டு கைப்பற்றப்பட்ட மீன்களை உடனடியாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நியூஸ் டே செய்தியாளர் கூறினார். 


உணவுப் பொருட்களை வாங்கும் போது அதன் தரம், சுகாதார நிலை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

இலங்கையின் 78ஆவது சுதந்திரநாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இன்று (04) கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.


யாழ்ப்பாணம் பல்கலைகமகழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கற்புடன் இடம்பெற்ற இந்த மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியானது கிளாநொச்சி கந்தசுவாமிகோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் இடம்பெற்றது.


இவ்வார்ப்பட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படு கொலைக்கான நீதி, வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எனபவற்றைக் கோரி கோசங்களை எழுப்பியதுடன், தமிழ் இனப் பிரச்சினைகான தீர்வை வலியுத்தியும், தமிழர் தாயகப்பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோங்களை எழுப்பியவாறும், பதாதைகளைத் தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.


அதேவேளை தமிழர்கள் இந்த நாட்டில் அடிமைப்படுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத் தாங்கியவாறு "சிங்ககொடி அவமானச் சின்னம், இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்" எனக் கோசங்களை எழுப்பியும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.


மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர்பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள் எனப் பெருந்திரளானவர்கள் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.


இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப்பேரணி இடம்பெற்றபோது A-09 பிரதான வீதியின் ஒருபக்க வழித்தடத்தில் வீதிப் போக்குவரத்து சிறிதுநேரம் தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


விஜயரத்தினம் சரவணன்



( வி.ரி. சகாதேவராஜா)
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78வது தேசிய சுதந்திரதின நிகழ்வு
சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இன்று  வெகு  விமர்சையாக கொண்டாடப்பட்டது.

 சாய்ந்தமருது  முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலினதும், பைத்துஸ் ஸக்காத்தினதும் மற்றும் வர்த்தக சங்கத்தின் தலைவருமான அல்-ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் பள்ளிவாசல் முன்றலில் இன்று காலை 06.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், ஜம்மிய்யத்தல் உலமா, வர்த்தக சங்கம் ஆகிய வற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும், பொலிஸ் பரிசோதகருமான ஏ.ஜே.டி. சில்வா கலந்து சிறப்பித்தார்.

முபாறக் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாலர், சாய்த்தமருது ஜம்மிய்யத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் மற்றும் பொருலாளர், சாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள், ஆகியவர்களுடன் சாய்ந்தமருத வர்த்தக சங்கத்தின் செயலாளர், பொருளாலர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.

 காரைதீவு பிரதேச சபையில் சுதந்திர தின நிகழ்வு!

நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தின விழா இன்று (4) காரைதீவு சபை வளாகத்தில் உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உப தவிசாளர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, விசேட உரையையும் நிகழ்த்தினார். அத்துடன் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பஸ் நிலையம், சுவாமி விபுலானந்தர் சுற்றுவட்டம் போன்ற பிரதேசங்களில் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
இவ்விழாவில், பிரதித் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், சபை செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 (ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார்)           

 

 78ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில்; பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்றன.
இடம்பெற்ற நிகழ்வுகளில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி கணக்காளர் அரசரெத்தினம் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா தலைமைப்பீட முகாமையாளர் கே.நேசராஜா கிராம நிருவாக அலுவலர் பரிமளவாணி உள்ளிட்ட அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம் இசைத்தல் ஆகிவற்றோடு ஆரம்பமான சுதந்திர நிகழ்வில்; சமய அனுஸ்டானம் இடம்பெற்றதுடன் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்களை நினைவு கூரப்பட்டது.
பின்னர் பிரதேச செயலாளரின் உரையும் இடம்பெற்றது.
இறுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு; மரநடுகையும் ஆரம்பிக்கப்பட்டதுடன் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றச்சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் பொது இடங்களில் நடுகை செய்யும் பொருட்டு மரக்கன்றுகள் வழங்கும் நடவடிக்கை பிரதேச செயலாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

 


( Rep/Irsaath)

இலங்கையின் 78 சுதந்திர தினம், இன்று நாடு தழுவிய ரீதியில், அனுஷ்டிக்கப்பட்டது. இதேவேளை, தமிழ் கட்சிகள் சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனம் செய்திருந்தன. கரிநாள் நிகழ்வில் மட்டக்களப்புக்கு, பேருந்து ஒன்றில் செல்லவிருந்தவர்கள், அக்கரைப்பற்று. மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக சுதந்திரக் கொடியுடன் நின்ற ஒருசிலரால், தடுத்து நிறுத்தப்பட்டுருந்தனர். 

 சுமார் பத்து நிமிடங்கள் வரை போக்குவரத்தும் தடைப்பட்டு காணப்பட்டிருந்தது அக்கரைப்பட்டி போலீசார் கூறிய எடுத்து விஜயம் செய்து போக்குவரத்தை சீர் செய்திருந்தார்கள். ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொள்ளச் சென்றவர்கள் பேருந்து புறப்பட்டார்கள்.

நூருல் ஹுதா உமர்


ஒலுவில் ஷஹ்வா அரபுக் கல்லூரியின் நீண்ட நாள் தேவையாக இருந்த நவீன தொழில்நுட்ப பாடத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான கணிணிகளின் தேவை குறித்து கல்லூரி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால், கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஊடாக பெறுமதியான கணிணிகள் (02) கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினரும் கட்சியின் பிரதி செயலாளருமான எம்.ஏ. அன்சில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.சிறாஜ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா, கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


நூருல் ஹுதா உமர்


கல்முனை மாநகர சபையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இதுவரை நடத்தப்படாததன் காரணமாக, கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக, கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எச்.எம். அப்துல் மனாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் நியமிக்கபப்ட்டும் இதுவரை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் முறையாக நடைபெறாததால், மக்களின் அடிப்படை தேவைகளை மையமாகக் கொண்ட பல அபிவிருத்தி திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும், அரச திணைக்களங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கல்முனை மக்களின் நீண்ட நாள் தேவைகளான உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்பில் முறையான தீர்மானங்கள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே, ஜனாதிபதி, அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் போன்றோர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை மீண்டும் ஆரம்பித்து, கல்முனை மக்களின் அபிவிருத்தி தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என எம்.எச்.எம். அப்துல் மனாப் வலியுறுத்தியுள்ளார்.



 கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 


வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 


மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.



 நூருல் ஹுதா உமர்


உலக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, கல்முனை பிராந்திய வாய் சுகாதார பிரிவால் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சுவரொட்டிப் போட்டியின் வெற்றியாளர்களுக்குப் பரிசில்கள் உட்பட சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

குறித்த சுவரொட்டிப் போட்டியின் வெற்றியாளர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் நேற்று (28) பிராந்திய பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய வாய் சுகாதார பிரிவினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய வாய் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் யூ.ஹபீப் முஹம்மட், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தரம் 6 முதல் 9 வரையான ஒரு பிரிவிலும், தரம் 10 முதல் 13 வரையான மற்றுமொரு பிரிவிலும் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களின் ஆக்கத்திறன் மற்றும் நோய் குறித்த தெளிவை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் 10 சிறந்த சுவரொட்டிகள் நடுவர்களினால் தெரிவு செய்யப்பட்டன. இதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பணிப்பாளரினால் விசேட பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், ஏனையோருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, பிராந்திய வாய் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் யூ. ஹபீப் முஹம்மட், வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அவற்றைத் தடுக்கும் முறைகள் குறித்து விளக்கக் காட்சிகளுடன் விரிவுரை நிகழ்தினார். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டது.

இப்போட்டியில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த சுவரொட்டிகளை எதிர்காலத்தில் பொது விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 (நூருல் ஹுதா உமர்)


கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில், இவ்வாண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரிசோதனை முகாம் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (27) மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.பி.ஏ.றாஜி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்முனை வலயத்திற்குட்பட்ட பல பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மாணவர்களின் செய்முறை அறிவையும் பரீட்சைத் தயார்பாட்டையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயற்பாடு, கல்வி வளர்ச்சிக்கான முக்கிய முயற்சியாக அமைந்தது.

 


நூருல் ஹுதா உமர்


அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி. எம். எம். அன்சார் அவர்களின் ஏற்பாட்டில், அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இன்று (27.01.2026) அக்கரைப்பற்று பிரதேச செயலகக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள், பொதுமக்களின் அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாகச் சவால்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். எஸ். உதுமாலெப்பை, எம். எஸ். அப்துல் வாசித், அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வரும் முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லாஹ், அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ. ராசீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், அக்கரைப்பற்று உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எம். தமீம், திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.




வி.ரி. சகாதேவராஜா)

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் பொங்கல் திருவிழா இன்று (26) திங்கட்கிழமை கோலாகலமாக  இடம்பெற்றது.

கலை கலாசார பாரம்பரிய அறுவடை ,புதிர் எடுத்தல் ,நெல் குற்றி புத்தரிசி எடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்வுகள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஐஎஸ்ஏ. கமல் நெத்மினியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உழவர் கண்காட்சி மற்றும் பாடசாலை மாணவர்களினால் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் வண்ணம் நடனங்கள் , சிலம்பம் என பற்பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

இங்கு தவிசாளர் அவர்கள் உரையாற்றுகையில் 

தைப் பொங்கல் என்பது
ஒரு சமய விழா மட்டும் அல்ல…
ஒரு உழைப்பின் திருவிழா.
விவசாயியின் வியர்வைக்கு மரியாதை செலுத்தும் நாள்.
இயற்கைக்கு நன்றி கூறும் நாள்.
ஒற்றுமையும் பகிர்வும் மலர்கின்ற நாள்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்”
என்ற பழமொழிக்கு ஏற்ப,
இந்த தை மாதம்
நம் அனைவருக்கும்
புதிய நம்பிக்கையையும்
புதிய பாதையையும்
புதிய முன்னேற்றத்தையும்
கொண்டு வர வேண்டும்.
நாவிதன்வெளி பிரதேசம் என்பது
பல இனங்கள், பல மதங்கள், பல பண்பாடுகள்
ஒற்றுமையாக வாழும்
ஒரு அழகான பூங்கா போன்றது 
அந்த ஒற்றுமையே
நம் பலம்…
நம் வளர்ச்சியின் அடித்தளம்.
பிரதேச சபை தவிசாளராக,
மக்களின் நலன்,
இளைஞர்களின் எதிர்காலம்,
விவசாய வளர்ச்சி,
கல்வி, சுகாதாரம்,
அடிப்படை வசதிகள்
என அனைத்திலும்
நாம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
இந்த தைப்பொங்கல்
எங்கள் மக்களின் வாழ்வில்
மகிழ்ச்சி பொங்கட்டும்,
நலம் பொங்கட்டும்,
ஒற்றுமை பொங்கட்டும் என தெரிவித்தார்.

 இந்த தமிழர் பாரம்பரிய பொங்கல் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் நெத்மினி,பிரதம அதிதியாக முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தவராசா கலையரசன், முன்னாள் பிரதி பிரதம செயலாளர் மு. கோபாலரெத்தினம்,முன்னைநாள் தவிசாளர்கள் , நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கு. புவனரூபன் , நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள், நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர்,சுகாதார வைத்திய அதிகாரி,பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



அதிதிகளாக கலந்து சிறப்பித்த அதிதிகள் அனைவருக்கும் தமிழர் மாண்பை எடுத்தியம்பும் விதமாக நினைவு சின்னங்கள் மற்றும் நவ தானியங்கள் அடங்கிய பொற்கிழிகள் வழங்கி பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த தமிழர் பாரம்பரிய பொங்கல் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் நெத்மினி,பிரதம அதிதியாக முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தவராசா கலையரசன், முன்னாள் பிரதி பிரதம செயலாளர் மு. கோபாலரெத்தினம்,முன்னைநாள் தவிசாளர்கள் , நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கு. புவனரூபன் , நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள், நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர்,சுகாதார வைத்திய அதிகாரி,பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



நூருல் ஹுதா உமர்


நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த அவசர சேவை வாகனம் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக பல ஆண்டுகள் தாமதமான இத்திட்டம், ஊர் மக்களின் துயரங்களைத் துடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நல் உள்ளங்களின் தாராளமான நிதியுதவியால் நிறைவேறியுள்ளது.

நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் மற்றும் அக்கரைப்பற்று அல்-பர்ஷான் ஜனாஸா சேவை அமைப்பின் தலைவர் பொறியியலாளர் எம்.எம்.எம். ரியாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.றியாஸ் (ஆசிரியர்) தலைமையில், குறித்த அவசர சேவை வாகனம் மக்களின் சேவைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இச்சேவைக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் அமைப்பின் சார்பில் இதயபூர்வமான நன்றிகள் தெரிவிக்கப்பட்டது டன், அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் உயரிய நற்கூலிகளை வழங்கி, செல்வத்திலும் வாழ்வில் பரக்கத் செய்வானாக எனப் பிரார்த்தனை செய்யப்பட்டது. இம்மகத்தான சமூக சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட அனைவரினதும் பிரார்த்தனைகளும் ஆதரவுகளும் அவசியம் எனவும் அமைப்பு தெரிவித்துள்ளது.




நூருல் ஹுதா உமர்


மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் உஸ்தாத்மார்களுக்கான இலவச வைத்திய பரிசோதனை மற்றும் சுகாதார வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று காலை (23.01.2026) கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பு வளவாளராக, அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட நிர்வாக சபை உறுப்பினரும், ஓய்வுபெற்ற வைத்தியருமான எஸ்.ஏ.ஆர்.எம்.எஸ்.எம்.மௌலானா அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.

நிகழ்வின் போது மாணவர்கள் மற்றும் உஸ்தாத்மார்களுக்கு இலவசமாக உடல் ஆரோக்கிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள், நோய்களைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் தினசரி சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பாக பயனுள்ள வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் கல்வி முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானது என்பதை வலியுறுத்திய சிறப்பு வளவாளர், சுகாதார விழிப்புணர்வை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

கல்லூரி நிர்வாகம், உஸ்தாத்மார்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, அனைவரிடமும் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

 


திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சருமான  கெளரவ அருண் ஹேமச்சந்திரா அவர்களின் அன்புத்தாயாரும், பிரபல வைத்தியர் ஹேமச்சந்திரா குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியுமான திருமதி. ஜீவாந்தினி ஹேமச்சந்திரா அவர்கள் இன்று காலமானார். 


அன்னாரின் மறைவினால் துயரத்தில் வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று பி.ப 2.00 மணிக்கு திருகோணமலையில் இடம்பெறும்.


#Trincovoice #arunhemachandra

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.