Showing posts with label Eastern. Show all posts

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்           

 அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் மயானத்தின் முன்பாக கண்டக்குழி பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய பொருட்களை சேகரிக்கும் நாடார் நிலையமொன்றில் இன்று (09) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இத்தீப்பரவால் அப்பகுதி கரும்புகை நிரம்பி காட்சியளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று மாநாகர சபையின் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.
இதேநேரம் சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று இராணுவம் மற்றும் பொலிசாரும் சென்றிருந்ததுடன் தீப்பரவலுக்கான காரணத்தை கண்டறியும் விசாரணைகளையும் பொலிசார் முன்னெடுத்திருந்தனர்.
தீப்பரவல் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமை எரிவாயு மொத்த வியாபார நிலையம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நூருல் ஹுதா உமர்

கருப்பைக் கழுத்து புற்றுநோய் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் கருப்பைக் கழுத்து புற்றுநோயின் அறிகுறிகள், நோயால் ஏற்படக்கூடிய ஆபத்துகள், ஆபத்துக் காரணிகள், நோயைக் கண்டறியும் முறைகள், சிகிச்சை முறைகள் மற்றும் வருமுன் காப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

கருப்பைக் கழுத்து புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அதற்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியும் என அவர் வலியுறுத்தினார். மேலும், இந்நோயுடன் நெருங்கிய தொடர்புடைய Human Papillomavirus infection (HPV) தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. HPV எவ்வாறு பரவுகிறது, அதனைத் தடுப்பதில் HPV தடுப்பூசியின் முக்கியத்துவம் என்ன, பெண்கள் மற்றும் இளம் வயதினருக்கு இந்தத் தடுப்பூசி ஏன் அவசியம் என்பன குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அத்துடன், தாய்மார்கள் மற்றும் குடும்பங்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதிலும் பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களின் பங்கு மிக முக்கியமானது எனக் குறிப்பிடப்பட்டதுடன், சமூக மட்டத்தில் அவர்களின் சேவைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நூருல் ஹுதா உமர்


இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் (FSLGA) ஏற்பாட்டில் நடைபெற்ற மாகாண மட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் காரைதீவு பிரதேச சபை சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இப்போட்டியில் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்களும், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களும் பங்கேற்று தமது கருத்துக்கள் மற்றும் வாதங்களை முன்வைத்தனர். போட்டியின் இறுதியில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் 299 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகித்ததுடன், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் 254 புள்ளிகளைப் பெற்றனர்.

இதன்மூலம் 45 புள்ளிகள் வித்தியாசத்தில் காரைதீவு பிரதேச சபை வெற்றியீட்டியுள்ளது

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அறிவாற்றல், பகுப்பாய்வுத் திறன், பொதுக் கொள்கைகள் தொடர்பான புரிதல் மற்றும் மேடைப் பேச்சுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இவ்விவாதப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களின் இந்த வெற்றி, சபையின் செயற்பாட்டுத் திறன் மற்றும் உறுப்பினர்களின் விவாத ஆற்றலை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதேச மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றிக்காக காரைதீவு பிரதேச சபையின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்ற குழுவினருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

 


சுகிர்தகுமார்          

அரசாங்கத்தின் சமூக சக்தி 'ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டம்' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நெல் உலர்த்தும் ஆலை மற்றும் ஆரோக்கிய உணவு விற்பனை நிலைய விஸ்தரிப்பு நிலைய திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (02)(நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அனுசரணையுடன் 30 மில்லியன் நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆh.திரவியராஜ்; தலைமையில் சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் ஆரோக்கிய உணவு விற்பனை நிலைய விஸ்தரிப்பு நிலைய வேலைத்திட்டமும் பனங்காடு பிரிவில் நெல் உலர்த்தும் ஆலை நிலைய நிர்மாணிப்பு வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது
நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு இணைப்பாளர் ஆர்.ரதீசன் திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் பிரஜாசக்தி தவிசாளர்கள், ஆலய தலைவர்கள் விவசாயிகள்;, பொதுமக்கள், அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் விவசாயிகளின் நன்மை கருதியும் பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


ஹுதா உமர்


அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் அவர்கள், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதம், இன்று (01) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் பீ. வாகீசன், கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே. குணநாதன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் சுமார் 45 கலாசார உத்தியோகத்தர்களில், விண்ணப்பிக்கத் தகுதியுடைய தரம் I கலாசார உத்தியோகத்தர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது.

அதன் முடிவில், கிழக்கு மாகாணத்தில் இருந்து இரு அதிகாரிகள் மட்டுமே சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் பதவிக்கு தெரிவு


கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் (EFO) புதிய செயலகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது


நூருல் ஹுதா உமர் 


கிழக்கு பிராந்தியத்தில் சமூக சேவைகளை முன்னெடுக்கும் நோக்கில் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் (EFO) புதிய செயலகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (31) சிறப்பாக நடைபெற்றது.


பிரதேசத்தின் முன்னணி கல்விமான்கள், திணைக்களத் தலைவர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட சமூகப் பொறுப்புமிக்க ஆளுமைகளை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கி வரும் கிழக்கு நட்புறவு ஒன்றியம், கடந்த மூன்று தசாப்தங்களாக பல்வேறு சமூக நலப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.


“நட்புறவின் மூலம் மனிதநேயமிக்க சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குதல்” என்ற தூரநோக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, வறுமை மற்றும் கஷ்டமான சூழ்நிலைகளில் வாழும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களை நேரடியாக அடையாளம் கண்டு, அவர்களின் கல்வி, கலாசார, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.


உறுப்பினர்கள், கொடையாளர்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு நலத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், ஒன்றியத்தின் நீண்டகால கனவாக விளங்கிய சொந்த செயலகக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை, அதன் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.


இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளரும் பொறியியலாளருமான எம்.எம். நஸீர், “இந்த புதிய கட்டிடம் வெறும் கட்டடம் அல்ல. இது எமது ஒன்றியத்தின் ஒற்றுமை, நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் இலட்சியத்தின் சின்னமாகும். எதிர்காலத்தில் பிரதேசத்தின் சமூக, கலாசார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் மையமாக இது திகழும்” எனத் தெரிவித்தார்.


மேலும், இந்தக் கட்டிடத்தை குறுகிய காலத்திற்குள் நிர்மாணித்து முடிப்பதற்காக உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்களின் தொடர்ச்சியான ஆதரவும் பங்களிப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.


அத்துடன், ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி மறைந்த முன்னோடிகளை நினைவுகூர்ந்த அவர், இத்திட்டத்தை சாத்தியமாக்க பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.


கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் புதிய செயலகக் கட்டடம், அமைப்பின் எதிர்கால செயற்பாடுகளுக்கான வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்         

நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்படவுள்ள 20 இலட்சம் பெறுமதியான 11 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (31) நடைபெற்றது.
கடந்த காலத்தில் இடம்பெயர்ந்து மீள்குடியேறி வீடுகள் இன்றி சிறிய கொட்டகைகளினுள் வாழ்ந்து வரும் அலிக்கம்பை கிராமத்தில் இவ்வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் அங்கு இவ்வருடம் 43 வீடுகள் நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடும் அரசினால் வழங்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் அலிக்கம்பை தேவகிராமத்தின் புனித சபேரியார் திருத்தலத்தின் பங்குத்தந்தை ஆன்ரோய் உதவிப்பங்குத்தந்தை சுஜீவன் ஆகியோரின் விசேட ஆராதனைகளுடன் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரஜா சக்தி தலைவர் ஜெபநேசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோ கிராம உத்தியோகத்தர் நிதர்சன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயபால உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
நீண்டகாலமாக வீடுகள் இன்றி மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் அக்கிராம மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.

 


காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலில் குறித்த வர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளது.


இந்நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச இளைஞர்களின் ஒத்துழைப்புடன் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 


மாளிகைக்காடு செய்தியாளர்


அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் உரை மேடை (Podium) என்பன இன்று கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் நிதி மற்றும் கணக்காய்வு கிளை செயலாளர் எல். முஹம்மட் நிப்றாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், அமைப்பின் தவிசாளரும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான நூருல் ஹுதா உமர் அவர்கள் அன்பளிப்புகளை வழங்கி வைத்தார்.

இதன்போது கல்லூரியின் உதவி அதிபர், ஒழுக்காற்றுக் குழு பொறுப்பாசிரியர், அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கல்லூரிக்கு வழங்கப்பட்ட உரை மேடை, ஒலிவாங்கித் தாங்கி மற்றும் ஒலிவாங்கிகள் ஆகியவை பாடசாலையின் கல்வி மற்றும் இணைபாட செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஏ. முகமது நௌசாத் அவர்கள், அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் இந்த தாராளமான பங்களிப்பு கல்லூரியின் கூட்டங்கள், ஒன்றுகூடல்கள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதாரமாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறந்த தகவல் தொடர்பு மற்றும் கல்விச் சூழலை உருவாக்க இவ்வசதிகள் உதவும் என்றும், கல்வி மேம்பாட்டின் மீது அமைப்பு காட்டிவரும் அக்கறை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சமூக நலப்பணிகள் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதுடன், மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வசதிகளை வழங்கும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

 நூருல் ஹுதா உமர்

கல்முனை கடற்கரைப் பகுதியில் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் முன்னாள் கடலரிப்பைத் தடுக்கும் நோக்கில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இடப்பட்டிருந்த பாறாங்கற்கள் அகற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கரையோரம் பேணல் மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் மறுத்துள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டம் இல. 12 of 2016 இன் கீழ் கல்முனையைச் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர்  எம்.எஸ்.பௌசர் முன்வைத்த தகவல் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள கிழக்கு மாகாண கரையோரம் பேணல் மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறையின் பிராந்திய பொறியியலாளர் எம். துளசிதாசன், குறித்த பாறாங்கற்கள் அகற்றப்படவில்லை என்றும், நடைபாதை அல்லது அழகுபடுத்தல் வேலைத்திட்டங்களுக்காக அவை மாற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் (நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப்) முன்பகுதியில் கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னர் இடப்பட்டிருந்த மெட்ரிக் தொன் கணக்கான பாறாங்கற்கள் அகற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கு “இல்லை” என பதிலளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பாறாங்கற்கள் நடைபாதை அல்லது அழகுபடுத்தல் திட்டங்களுக்காக அகற்றப்பட்டனவா என்ற கேள்விக்கும் திணைக்களம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கல்முனை பகுதியில் தற்போது அதிகரித்து வரும் கடலரிப்பிற்கான முக்கிய காரணமாக 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுக நிர்மாணம் அமைந்துள்ளதாக திணைக்களம் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது.

இந்த தகவல்கள், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ பதிலில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்ட பொய் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுள்ளது




இன்று காலை அக்கரைப்பற்று மட்டக்களப்பு பிரதான விதியில் சென்ற தனியார் பேரூந்துகளுக்கு, டயர்களில் காற்றுப் போனதால், பயணிகள் பாதிப்புற்றுள்ளனர்

 #MorningMotivation | இன்று செய்யும் முயற்சி...


#MotivationalQuotes | #PTQuotes | #Motivational | #TuesdayMotivation

 


சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய “சிறந்த வாழ்வுக்கான கௌரவிப்பு விழா – 2026” 


நூருல் ஹுதா உமர் 


புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் “சிறந்த வாழ்வுக்கான கௌரவிப்பு விழா – 2026” நிகழ்வு இன்று (24) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மிகவும் விமர்சையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.


கலாசார மற்றும் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு பயிற்சிப் பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வாக அமைந்த இவ்விழாவில், தேசிய பிரதீபா போட்டிகள் மற்றும் மாகாண மட்டங்களில் சாதனை படைத்த பலரும் கௌரவிக்கப்பட்டனர்.


நிகழ்விற்கு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. நௌசாத் தலைமை தாங்கினார். சாய்ந்தமருது கலாசார அதிகார சபை தலைவர் கலைஞர் அஸ்வான் எஸ். மௌலானாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை கரையோர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு சபை உறுப்பினருமான அதம்பாவா அபூபக்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.


மேலும் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். அஸீக் கலந்து கொண்டதுடன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டி.எம். ரின்சான் கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பழீல், அக்கரைப்பற்று, மருதமுனை கலாச்சார நிலையப் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ரஸ்மி மூஸா உள்ளிட்ட பலரும் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


நிகழ்வை சாய்ந்தமருது கலாசார அதிகார சபை பிரதித்தலைவர் நூருல் ஹுதா உமர் நெறிப்படுத்தினார். இவ்விழாவின் சிறப்பம்சமாக தேசிய பிரதீபா போட்டியில் வெற்றியீட்டிய கலைஞர்கள், மாகாண மட்டத்தில் சாதனை படைத்த இளம் கலைஞர்கள், கலாசார துறையில் நீண்டகால சேவையாற்றி வரும் பிரதேசத்தின் மூத்த கலைஞர்களான பல்வேறு கலை மற்றும் சமூக துறைகளில் பங்களிப்பு செய்த வளவாளர்கள் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.


பாரம்பரிய கலை, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் பாடல்கள், நடனங்கள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேசத்தின் கலை, கலாசார மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமைந்ததாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.


இளம் தலைமுறையினரின் திறமைகளை வெளிக்கொணர்வதோடு, பாரம்பரிய கலைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியில் இவ்வாறான நிகழ்வுகள் முக்கிய பங்காற்றுகின்றன என உரையாற்றிய அதிதிகள் கருத்து வெளியிட்டனர்.

 #திரும்பவில்லை 🥺


களுதாவளையை சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் எனும் இளைஞர் நேற்றைய தினம் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு சென்று இன்னும் திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 


பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 


முடியுமானோர் பகிர்ந்து உதவுங்கள், அயலூரில் உள்ள மீனவர்களினூடாக ஏதும் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 


@highlight

 


Vijayaraja Sugirthakumar

அம்பாறை மாவட்டம் வட்டமடு கொக்குளுவ பகுதியில் யானைத்தாக்குதலில் ஒருவர் பலியானார்.

குறித்த சம்பவம் (23) மாலை இடம்பெற்றுள்ளது.

 சம்பவத்தில் பலியானவர் அக்கரைப்பற்று மகாசக்தி வீதியை சேர்ந்த 63வயதுடைய கந்தசாமி கணேசமூர்த்தி என தெரியவருகின்றது. 

 உயிரிழந்தவரின் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளை பராமரிக்கும் இவர் கொக்குளுவ பகுதிக்கு சென்று கால்நடைகளை பார்த்து விட்டு வருகையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த பகுதியில் யானைகளின் அட்டகாசம் தொடர்ந்தும்  அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளும் கால்நடை உரிமையாளர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

 இதற்கு முன்னரும் 
பல யானை தாக்குதல் சம்பவம் இப்பகுதியில்  இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


( வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டத்தின் பாணமை சந்தியில் இருந்து , காட்டிற்குள் இருக்கும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயம் நோக்கிச் செல்லும் பிரதான வீதிக்கான திசை நிர்ணய வீதி அறிவித்தல் பலகை இதுவரை பாணமைச் சந்தியில் நிறுவப்படவில்லை என பக்தர்களும் பொதுமக்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.


பாணமை சந்தியிலிருந்து உகந்தமலை ஆலயத்திற்குச் செல்லும் பாதை பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

 குறிப்பாக வருடாந்த உற்சவ காலங்களிலும் கதிர்காமம் பாதயாத்திரை நடைபெறும் நாட்களிலும் ஆயிரக்கணக்கான மூவின பக்தர்களும்  இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.

எனினும், உகந்தமலை ஆலயத்திற்கான திசை நிர்ணய அறிவிப்பு பலகை இல்லாத காரணத்தால் வெளிமாவட்டங்களிலிருந்து வருவோர் மற்றும் முதல் முறையாக வருகை தரும் யாத்திரிகர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பாணமை சந்தியில் இருந்து உகந்தமலை முருகன் ஆலயத்திற்கான வீதி அறிவித்தல் பலகையை உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளரும் சமய ஆர்வலருமான கண.இராசரத்தினம் (கண்ணன்) கூறுகையில்..  பாணமைச் சந்தியில் மாத்திரம் அல்ல, அதனை அடுத்து  வருகின்ற கண்ணகை அம்மன் கோயில் சந்தியிலும் கூமுனை சந்தியிலும் இதனை நிறுவினால் மக்களுக்கு பேர் உதவியாக இருக்கும் என்றார்.

 


புதிய காத்தான்குடி மீன்பிடிஇலாக வீதியின் 9ம் கிளைச் சந்தியில் வடிகான் வேலைகள் இடம் பெற்றுக் கொண்டிருப்பதால் இந்த பாதையால் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பணிவாய் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்

 


( வி.ரி.சகாதேவராஜா)


பொத்துவில் மீள்குடியேற்ற கிராமமான கனகர் கிராமத்தில், அங்கு வாழும் மக்களின் மிக அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான குடிநீர் கிணறு ஒன்று உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. 

‘வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா’ அமைப்பின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இக் கிணறு, நேற்று முன்தினம் (23.05.2026) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

​பொத்துவில் கனகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எஸ். செல்வகுமாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், கனகர் கிராமத்துக்குப் பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர் ரி. ராஜேந்திரன், அபிவிருத்தி உத்தியோகத்தர்  காண்டீபன் மற்றும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் என் சௌவியதாசன் மற்றும் கிராமப் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

​‘உதவும் பொற்கரங்கள்’ அமைப்பின் பணிப்பாளர்  விசு கணபதிப்பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க, வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டு இக்குடிநீர் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

​இக்கிராமத்தில் சுமார் 73 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், இதுவரை இரண்டு பொதுக்கிணறுகள் மாத்திரமே பாவனையில் இருந்துள்ளன.
 
 இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காகவும், தமது வாழ்வாதாரத் தோட்டப் பயிர்ச்செய்கைகளுக்கான நீரைப் பெற்றுக் கொள்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

​தமது நீண்டநாள் தேவையறிந்து இப் பொதுக்கிணற்றைப் பெற்றுத் தந்தமைக்காக, வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பின் தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்குக் கிராம மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். அத்துடன், இவ்வாறான பொதுக் கிணறுகளைத் தேவைகளுள்ள ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்து அமைத்துத் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     🌊


🇱🇰 தேசப்பற்றும் சமூகப் பொறுப்புணர்வும் இணைந்த மறக்கமுடியாத சேவைப் பயணம்…

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்தின் ஓர் முக்கிய அம்சமாக, இன்றைய அதிகாலை நேரத்தில் கடற்கரை சுத்திகரிப்பு பணிகள் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உயரிய நோக்கத்துடன் 241 Brigade Army படையினர் அர்ப்பணிப்புடனும் ஒழுங்குடனும் இப்பணியில் ஈடுபட்டனர்.


இந்த தேசிய பணியில், அக்கரைப்பற்றின் கல்வி மற்றும் ஒழுக்க மரபை பெருமையுடன் தாங்கி நிற்கும் பெண்கள் அரபுக் கல்லூரிகளில் ஒன்றான மன்பஉல் ஹைராத் பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டது மிகவும் சிறப்புமிக்க அம்சமாக அமைந்தது. ✨


இன்றைய இளம் தலைமுறையினர் புத்தகக் கல்வியோடு மட்டுமல்லாது, சமூக நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நாட்டுப்பற்று மற்றும் மனிதநேய சேவை போன்ற உயரிய பண்புகளிலும் முன்னேறி வருகிறார்கள் என்பதற்கான அழகிய சான்றாக இந்த நிகழ்வு திகழ்கிறது.


கடற்கரையில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றி, சூழலை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதற்காக மாணவிகள் தங்களது நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்தமை, “ஒரு மாணவி சமூகத்தின் மாற்றத்திற்கான சக்தி” என்பதை வெளிப்படுத்துகின்றது. 🌿


ஒரு அரபுக் கல்லூரி மாணவி என்பது மதக் கல்வியில் மட்டுமே சிறந்து விளங்குபவர் அல்ல;

அவர் சமூகத்தின் நலனில் அக்கறை கொள்பவர்,

தேசத்தின் வளர்ச்சியில் பங்காற்றுபவர்,

மனிதநேய சேவையில் முன்நிற்குபவர் என்பதையும் எமது மாணவிகள் செயலில் நிரூபித்துள்ளனர். 🤝


இந்நிகழ்வு உண்மையில் கல்வி நிறுவனங்கள் நாட்டின் கட்டுமானத்தில் எவ்வளவு முக்கிய பங்காற்றுகின்றன என்பதை எடுத்துரைக்கும் அரிய தருணமாகும். குறிப்பாக பெண்கள் சமூக மாற்றத்தின் முன்னோடிகளாக உருவாகி வருவது அனைவருக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.


“சுத்தமான சூழல் — ஆரோக்கியமான தேசம்” 🌍

“சமூக சேவையில் மாணவிகளின் பங்களிப்பு — எதிர்காலத்தின் வெளிச்சம்” ✨


இந்த உயரிய தேசிய பணியில் பங்கேற்ற 241 Brigade Army அதிகாரிகளுக்கும், உலமாக்களுக்கும், சமூக சேவையாளர்களுக்கும், கழகங்களுக்கும், பொதுமக்களுக்கு குறிப்பாக அர்ப்பணிப்புடன் உழைத்த மாணவிகளுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் மற்றும் ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகுக.


📍 மன்பஉல் ஹைராத் பெண்கள் அரபுக் கல்லூரி

📍 அக்கரைப்பற்று

🇱🇰 தேச சேவையில் பெருமையுடன்…

 


வி.சுகிர்தகுமார்       




டித்வா புயல் அனர்த்தம் காரணமாக வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட வியாபார நிலையங்கள் மற்றும் சிறுகைத்தொழில் உற்பத்தி நிலையங்களுக்கான நட்ட ஈடு வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்  (22) நடைபெற்றது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் மற்றும் அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் வசந்தன் சிறுகைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நிம்சாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது பதிவு செய்யப்பட்ட வியாபார நிலையமொன்றிற்கு 2 இலட்சம் இழப்பீடும் பதிவு செய்யப்படாத வியாபார நிலையங்கள் மற்றும் சிறுகைத்தொழில் உற்பத்தி நிலையங்களுக்கு 50 ஆயிரம் ரூபா வீதம் நட்டஈடு வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட 8 விற்பனை நிலைய உரிமையாளர்கள் இன்று நட்டஈட்டு நிதியினை பெற்றுக்கொண்டனர்.
நிதியினை பெற்றுக்கொண்ட வியாபார நிலைய உரிமையாளர் சுவர்ணராஜ் நட்ட ஈட்டினை துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும்  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் நன்றி கூறினார்.
மேலும் நாட்டை சிறப்பாக முன்னெடுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கு எதிர்காலத்திலும் தங்களது ஒத்துழைப்பை வழங்கு உறுதி பூணுவதாகவும் குறிப்பிட்டார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.