Showing posts with label Eastern. Show all posts

 



மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி நகரில்  களுவாஞ்சிகுடி எரிபொருள் வர்த்தக சங்கத்தினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

 

இந்த போராட்டமானது இன்று (22 )பிற்பகல் களுவாஞ்சிகுடி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக, இடம்பெற்றது.


இந்த எரிபொருள் நிலையத்தை குத்தகைக்கு எடுத்து நடத்துபவர் மேல் சில குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  


வருடத்தில் சுமார் 200 நாட்கள் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை என்றும், பெற்றோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதோடு நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இந்நிலையில்,விவசாயிகளும் கடற்றொழிலாளர்களும் அதிகம் வாழும் இப்பகுதியில், நீண்டகாலமாக நிலவும் இந்த எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.


எனவே, தற்போதைய குத்தகைதாரரிடமிருந்து இந்த எரிபொருள் நிலையத்தை அரசாங்கம் மீளப்பெற்று, வருடம் முழுவதும் 24 மணி நேரமும் முறையாக நடத்தக்கூடிய தகுதியான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோசம் எழுப்பினர்.


இந்நிலையில் குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


 


நூருல் ஹுதா உமர்


யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித என்புகள், எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையின் மனச்சாட்சியையே உலுக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.

இந்தக் கண்டுபிடிப்பு, எமது நாட்டின் கடந்தகால வன்முறை மற்றும் காணாமற்போனோர் தொடர்பான தீர்க்கப்படாத கேள்விகளை மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. பல தசாப்தங்களாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து பதில் தேடி அலைந்து வரும் குடும்பங்களின் வலியையும் வேதனையையும் இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும்,

மனித உயிர்களின் மதிப்பை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மதிக்க வேண்டியது ஒவ்வொரு நாகரிக சமூகத்தினதும் கடமையாகும். எனவே செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக சுயாதீனமான, வெளிப்படையான, நியாயமான மற்றும் நீதியான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

காலம் தாழ்த்தப்படும் ஒவ்வொரு நாளும், உண்மையை எதிர்நோக்கி காத்திருக்கும் குடும்பங்களின் வேதனையை மேலும் அதிகரிக்கின்றது. ஆகவே சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும், நீதித்துறை அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும், மனித உரிமை அமைப்புகளும் ஒருங்கிணைந்து அறிவியல் ரீதியான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

இந்த மனித எச்சங்கள் யாருடையவை? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? அவர்களது குடும்பங்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்க வேண்டும். உண்மையை மறைப்பதும், காலம் தாழ்த்துவதும் அல்லது விசாரணையை பலவீனப்படுத்துவதும் எந்தவொரு சமூகத்திற்கும் நீதியை வழங்காது.

போராலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பது நிலையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் அடிப்படையாகும். உண்மையை அறியும் உரிமையும், நீதியைப் பெறும் உரிமையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அடிப்படை மனித உரிமைகளாகும்.

எனவே செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும், எந்தவித அரசியல் அல்லது நிர்வாக தலையீடுகளுமின்றியும் முன்னெடுக்கப்பட்டு, காலம் தாழ்த்தாது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன். உண்மையை வெளிக்கொணர்வதே நல்லிணக்கத்தின் முதல் படியாகும்; நீதியை நிலைநாட்டுவதே நிலையான சமாதானத்தின் அடித்தளமாகும் என்று தெரிவித்துள்ளார்

 


( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவில் இலங்கை வங்கியின் கியூஆர் வேலைத்திட்டம் வங்கி முகாமையாளர் திருமதி யாழினி தலைமையில் நேற்று முன்தினம் பரவலாக முன்னெடுக்கப்பட்டது.


இலங்கை வங்கி ஏற்பாடு செய்துள்ள நாடு முழுவதும் நடைபெறும் டிஜிட்டல் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணம் காரைதீவு பிரதேசத்தில் உள்ள வியாபார நிலையங்களுக்கு QR வங்கி முகாமையாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

 


நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள், பிரித்தானியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.


​இச்சந்திப்பின் போது,பிரித்தானியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தூதரக ரீதியாக எதிர்நோக்கும் பிரதான  பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தர முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.


​மேலும், பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தங்களது முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான சாதகமான சூழலை உருவாக்குமாறும், அதற்குரிய முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் அவர் இதன்போது வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.


​இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதையும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதையும் நோக்காகக் கொண்டே இந்த முக்கிய சந்திப்பு லண்டனில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


#தோழர்பிரபு #கந்தசாமிபிரபு #batticaloajvp #nppsocialnetwork #batticaloanpp #NPPsupport #தேசியமக்கள்சக்தி #nppsrilanka #NPPGovernment  #dccbatticaloa #JVP #sunilhandunneththi #DCCChairman #Batticaloa #CleanSriLanka

#AKD #ANURAKUMARADISSANAYAKE #PresidentAKD# #foryoupageシ #Batticaloa

 நூருல் ஹுதா உமர்


நிந்தவூர் கடற்கரைப் பகுதியில், குறிப்பாக பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான கடல் அலையின் தாக்கம் மற்றும் கடல் அரிப்பு காரணமாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடல் அரிப்பு தீவிரமடைந்துள்ளதால், கரைவலை மீனவர்கள் தங்களது வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். கடற்கரைப் பகுதியில் வலைகளை இழுப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாத காரணத்தால், அவர்கள் தற்போது வீதியோரப் பகுதிகளில் வலை இழுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக கடல் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக, கரைவலை மீனவர்கள் தங்களது தோணிகளை பயன்படுத்தி சுதந்திரமாக கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். மேலும், வலைகளை கரைக்கு இழுத்துவர முடியாத நிலை அவர்களின் தொழிலையும் வருமானத்தையும் பாதித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

மீனவர்களின் இந்த நடவடிக்கையால், அப்பகுதி வீதியை பயன்படுத்தும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அன்றாடம் பயணிக்கும் வாகன ஓட்டிகள், மீன் குளிரூட்டும் லொறிகள், தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்டோர் வீதியோரத்தில் இழுக்கப்படும் வலைகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலைமை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடல் அரிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் நிரந்தர தீர்வொன்றை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல் அரிப்பின் தாக்கத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும் நிந்தவூர் கடற்கரைப் பகுதிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

 நூருல் ஹுதா உமர


தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன (NISD) சமூகப் பணி கற்கைகளின் இறுதி வருட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஃபர்ஸ்ட்ஹேண்ட் – சமூகப் பணி இடையீட்டு முகாம் 2026” நிகழ்வு இன்று (20) சாய்ந்தமருது கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வு, சமூகப் பணி கள அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குவதோடு சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வுகளையும் முன்னெடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூகப் பணி கற்கைகளின் இறுதி வருட மாணவர் ஏ.என். அஹமட் அத்னாஃப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கெளரவ விருந்தினராக BCAS கல்முனை வளாகத்தின் முகாமையாளர் கே.எம். இஷ்ராக் கலந்து கொண்டதுடன், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக அதிகாரி எம்.என்.எம். ரம்ஸான், நிர்வாக கிராம அலுவலர் எம்.எஸ்.எம். நளிர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத், மனநல ஆலோசனை அதிகாரி எம்.எப். பர்சானா, உலகளாவிய பிரிவுகள் இலங்கையின் திட்ட இயக்குநர் எஸ். ரூதரன், ஆல்பா சுகாதார ஆலோசனை நிறுவனத்தின் உதவி முகாமையாளர் ஏ.எம்.எம். தக்மீல் மற்றும் இஸ்லாமிக் ரிலீப் அமைப்பின் கண்காணிப்பு, மதிப்பீடு, பொறுப்புக்கூறல் மற்றும் கற்றல் ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. ஹனீஃப் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு சமூகப் பணி, மனநலம், போதைப்பொருள் தடுப்பு, சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக கருத்தரங்குகள் மற்றும் வழிகாட்டல் அமர்வுகளை நடத்தினர்.

நிகழ்வில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அதிகாரிகள், விரிவுரையாளர்கள், மேற்பார்வையாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

இந்த சமூகப் பணி இடையீட்டு முகாமை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இறுதியாண்டு பயிற்சி மாணவர்களான ஏ.என். அஹமட் அத்னாஃப், எம்.கே.எப். சனா அப்ரி மற்றும் ஆர்.எம். ஹசன் ஆகியோர் அடங்கிய ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 நூருல் ஹுதா உமர்


சமூக சேவையே என்னை ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், நாட்டின் உயர்மட்ட பொறுப்புகளை வகிக்கும் நிலைக்கும் கொண்டு வந்தது. சமூக சேவை என்பது வெறும் உதவிச் செயல் அல்ல, அது மனிதனை முழுமையான மனிதனாக உருவாக்கும் ஒரு உயர்ந்த பணியாகும். இளைஞர்கள் சமூகப் பணியின் அவசியத்தை உணர்ந்து சமூக மாற்றத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தெரிவித்தார்.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன சமூகப் பணி கற்கையின் இறுதியாண்டு மாணவர்களின் First-Hand Social Work Intervention Camp 2026 நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,  

தனது இளமைக்கால அனுபவங்களை நினைவுகூர்ந்த ஆதம்பாவா எம்.பி, பல்கலைக்கழகக் கல்வியை முடித்த பின்னர் வேலைவாய்ப்பின்மை காரணமாக பல சவால்களை எதிர்கொண்டதாகவும், அந்தக் காலகட்டத்தில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை ஒருங்கிணைத்து இயக்கங்களை முன்னெடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

1990களின் இறுதியில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் அமைப்பை உருவாக்கி, பட்டதாரிகளின் உரிமைகளுக்காகப் போராடியதன் மூலம் சமூக சேவையின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்ததாகவும் அவர் கூறினார். அந்தப் போராட்டங்களே பின்னர் தனது தலைமைத்துவப் பயணத்திற்கான அடித்தளமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

“ஒரு சமூகத்தின் முன்னேற்றம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மட்டும் ஏற்படாது. ஒவ்வொருவரும் தங்களது குடும்பம், கிராமம், பணியிடம் மற்றும் சமூகத்தின் மீது பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். வீதியில் உள்ள ஒரு தடையை அகற்றுவதும் சமூக சேவையே. பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடப்பதும் சமூக சேவையே,” என அவர் விளக்கினார்.

சமூக சேவை இஸ்லாமிய போதனைகளிலும் முக்கிய இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்களுக்காகச் செய்யப்படும் பணியே உண்மையான சேவை எனச் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, அரசாங்கத்தின் “பிரஜா சக்தி” வேலைத்திட்டத்தின் ஊடாக வறுமை ஒழிப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கிராம மட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வின் நிறைவில், சமூகப் பணி கற்கைகளைத் தொடரும் மாணவர்கள் தங்களை சமூக மாற்றத்தின் முன்னோடிகளாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், சமூக சேவையின் ஊடாகவே நிலையான மாற்றங்களையும் உண்மையான மனநிறைவையும் அடைய முடியும் என்றும் ஆதம்பாவா எம்.பி வலியுறுத்தினார்.

 


சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளி மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் பொருட்டு ஆளுமை விருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்   பயிற்சி வேலைத்திட்டம் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.



இதன் போது  சமுர்த்தி திட்ட முகாமையாளர் எஸ்.எல். அஸீஸ்  இணைப்பில் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதியாக பிரதேச செயலக கணக்காளர் அமிர் அலி கலந்து கொண்டார்.

தொழில் முயற்சியாளர்களுக்கு  தேவையான தொழில்   சந்தை  மற்றும்  நிதி மேலாண்மை   போன்றவை  இப்பயிற்றி வேலைத்திட்டத்தில் விளக்க  விரிவுரை வழங்கப்பட்டதுடன்   பேசும் பயிற்சிகள் , கேள்வி பதில் ஊடாக நேரடி வழிகாட்டல் போன்றவற்றையும் மேற்கொள்ளப்பட்டு பங்கேற்பாளர்களின்   நம்பிக்கையும் திறனும் அதிகரிக்க வளவாளர்களால் விரிவுரைகள் நடத்தப்பட்டது .

மேலும் தேசிய முயற்சியாண்மை அபிவிருத்தி அதிகார சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.எம். நபீல், சிறு கைத்தொழில் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எல். அப்துல் ஜலீல் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன்  சமுர்த்தி வங்கி சங்க முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எம்.அம்சார்,  திட்ட உதவியாளர் ஏ.எஸ்.எம். ஜஃபர், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ். சனுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.


 நூருல் ஹுதா உமர்


மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டார் சரிட்டி (Qatar Charity) நிறுவனத்தின் அனுசரணையில் இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்கள் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபீர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது கட்டார் சரிட்டி நிறுவனத்தின் செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.எப்.எம். கப்ளீன் கலந்து கொண்டு, இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்களை கல்லூரி அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கல்லூரி மாணவர்களுக்கு சுத்தமான மற்றும் குளிர்ந்த குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த உதவி, பாடசாலை சமூகத்தினரால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. மேலும், இவ்வன்பளிப்பை வழங்கிய கட்டார் சரிட்டி நிறுவனத்திற்கும், இதனைப் பெற்றுக்கொள்வதற்காக முனைப்புடன் செயற்பட்ட திருமதி நசீஹா சஹ்பி அவர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.

இந்த அன்பளிப்பு மாணவர்களின் நலன் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பாக அமையும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்         

 மனிதவலு வேலைவாய்ப்புத்திணைக்களம் மற்றும் தொழில் அமைச்சு ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த தொழில் சந்தை 2026 இன் நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று(17) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் மனிதவள அபிவிருத்தி உத்;தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ்லீன் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மாவட்;ட செயலக இணைப்பாளர் என்.அருளானந்தம் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்; ரி.பரமானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதிதிகள் ஜதீஸ்வரா நடனாலய மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் வரவேற்க்கப்பட்டனர்.
தொழில்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் வழங்கும் நிறுவனங்களுடன் தொழில் தேடுநர்களை இணைக்கும் ஒரு பாலமாக இந்நிகழ்வு நடைபெற்றதுடன் தொழில் சந்தையில் 20 இற்கும் மேற்பட்ட துறைசார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொழில் வெற்றிடங்கள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
நிகழ்வில் மூன்றாம் நிலைக்கல்வி ஆணைக்குழுவினால் அதிகாரமளிக்கப்பட்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரும் அக்கரைப்பற்று தொழில் நுட்ப கல்லூரியின் வளவாளருமான எம்.எஸ்.எம்.பிஸ்ரின் தொழில் வழிகாட்டல் தொடர்பில் சிறப்பு விளக்கமளித்தார்.
இதேநேரம் 25 வயதிற்கு மேற்பட்டோருக்கான இலவச மருத்தவ பரிசோதனையினை தாதியர் உதவியாளர் பயிற்சி நெறியை வழங்கிவரும் ஐ என் பி எஸ் கல்லூரி நடாத்தியதுடன் தொழில் முயற்சியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்கள் பயன்படுத்தக்கூடிய நவீன தொழில் நுட்ப உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இத்தொழில் சந்தையில் பெருந்திரளான தொழில் தேடுநர்களான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்ளை சமர்ப்பித்துள்ளதுடன் நன்மையடைந்தனர்.


 நூருல் ஹுதா உமர்


சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வெறும் மேடைப் பேச்சுகளிலும் விளம்பர நிகழ்வுகளிலும் மட்டுப்படாமல் நடைமுறையிலும் வெளிப்பட வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சபூர் ஆதம் வலியுறுத்தியுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் அண்மைய அமர்வில் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நிர்வாகத்தின் கீழ் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத நிலை தொடர்வது கவலைக்குரிய விடயமாகும் என தெரிவித்தார்.

அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரிமியர் லீக் போட்டித் தொடரை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இதுவரை கழிவறை வசதி ஏற்படுத்தப்படாதிருப்பதை சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகக் கூறினார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினை குறித்து சபையில் சுட்டிக்காட்டியிருந்த போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக இளைஞர்கள் மைதான மதில்கள் மற்றும் புல்வெளிப் பகுதிகளைப் பயன்படுத்தும் நிலை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அக்கரைப்பற்று பொதுச் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்குத் தேவையான கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்ததையும் அவர் நினைவூட்டினார்.

“மக்கள் பயன்படுத்தும் பொது இடங்களில் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவது என்பது வெறும் கட்டுமானப் பணியல்ல. அது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் மனித கண்ணியத்துடன் தொடர்புடைய அடிப்படை பொறுப்பாகும். எனவே மற்றவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உபதேசம் செய்வதற்கு முன் தமது நிர்வாகத்தின் கீழ் உள்ள இடங்களின் நிலைமைகளை முதலில் சீரமைக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

தனது கோரிக்கைகளைத் தொடர்ந்து, பொது விளையாட்டு மைதானத்திற்கும் பொதுச் சந்தை பள்ளிவாசலிற்கும் தேவையான கழிவறை வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகர முதல்வர் சபையில் உறுதியளித்துள்ளதாகவும் சபூர் ஆதம் தெரிவித்தார்.

மக்களின் அன்றாட தேவைகளை அடையாளம் கண்டு அவற்றை சபையின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தப் பொறுப்பை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ஆசிரியையின் மோட்டார் சைக்கிளும், மட்டக்களப்பிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியையை உடனடியாக மீட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த, தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது மட்டக்களப்பு பூம்புகார் பகுதியில் வசித்து வந்தவருமான திருமதி பிரேமநந்தினி மிதுலோஜன் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சிறிய காயங்களுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மருதமுனைக்கு தனியான நகர சபை கோரி அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் குரல்


நூருல் ஹுதா உமர் 


மருதமுனை மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் தனியான நகர சபை அமைக்கும் முயற்சியை துரிதப்படுத்தும் நோக்கில், மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (16) இரவு தனியார் விடுதியில் ஏற்பாடு செய்து தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளது.


மருதமுனையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமையத்தின் பிரதான செயற்பாட்டாளர்களான எம்.ஐ.எம். முஹர்ரப் மற்றும் பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸீல், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் ஆகியோர், மருதமுனை பிரதேசத்திற்குத் தனியான நகர சபை அமைப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.


அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, கல்முனை கரைவாகு மேற்கு மற்றும் பட்டின சபை என நான்கு தனித்தனி நிர்வாக அலகுகளாக இயங்கி வந்த பகுதி, பின்னர் ஒன்றிணைக்கப்பட்டு கல்முனை பிரதேச சபையாகவும், அதன் பின்னர் கல்முனை மாநகர சபையாகவும் தரமுயர்த்தப்பட்டது என்றனர்.


முன்னர் கல்முனை கரைவாகு வடக்கு கிராம சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்ட மருதமுனை, தற்போது தனியான நிர்வாக அலகு ஒன்றைப் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கான கோரிக்கையை மருதமுனை மக்கள் நீண்டகாலமாக முன்வைத்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.


இந்நிலையில், மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் அண்மையில் கூடி, தனியான நகர சபை கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், அதன்படி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்த முயற்சியின் முதல் கட்டமாக முன்னாள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவை சந்தித்து ஆலோசனைகளும் அனுபவங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் ஒத்துழைப்பைப் பெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.


மருதமுனையில் காணப்படும் மக்கள் தொகை, நிலப்பரப்பு, வர்த்தக நிலையங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் நிர்வாக வளங்கள் என்பன தனியான நகர சபை ஒன்றை அமைப்பதற்கான போதுமான அடிப்படைகளை வழங்குவதாகவும் அவர்கள் வலியுறுத்தினர்.


மேலும், தற்போது கல்முனை மாநகர சபையின் கீழ் கிடைக்கும் சேவைகள் போதுமானதாக இல்லாத நிலையில், மருதமுனைக்கு தனியான நிர்வாக அலகு உருவாக்கப்பட்டால் வீதிகள், வர்த்தக கட்டமைப்புகள் மற்றும் உள்ளூர் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகவும் திறம்படவும் முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.


அதேவேளை, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதிகாரப் பகிர்வு மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இக்காலகட்டம், மருதமுனையின் கோரிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்கச் சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.


மருதமுனையில் இயங்கி வரும் 21 பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அனைத்து பள்ளிவாசல்கள் அமையம், இந்த முயற்சியை அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பொதுநல நோக்கத்துடன் முன்னெடுத்து வருவதாகவும், கல்வியாளர்கள், சட்டத்தரணிகள், நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தது.


மருதமுனையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் மக்களின் நிர்வாகத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தனியான நகர சபை அமைக்கும் கோரிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என அமையத்தின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதன்போது சட்ட ஏற்பாடுகள் மற்றும் நகரசபை கோரிக்கைக்கான வாய்ப்புக்கள் தொடர்பில் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் விரிவாக விளக்கமளித்தார்.

 


காரைதீவு பிரதேச சபையின் 12வது மாதாந்த சபைக் கூட்டத்தில் அனல் பறந்த விவாதம் : பள்ளிக்காணி வழக்கு தொடர்பில் சூடு பிடித்த விவாதம் - சபையை ஒத்திவைத்த தவிசாளர் 


நூருல் ஹுதா உமர் 


காரைதீவு பிரதேச சபையின் 04வது சபையின் 12வது மாதாந்த சபைக் கூட்டம் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் பிரதேச சபை அலுவலக சபா மண்டபத்தில் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதேச மக்களின் நலன் மற்றும் அபிவிருத்தியை முன்னிறுத்திய பல முக்கிய பிரேரணைகள் ஆராயப்பட்டது. 


கூட்டத்தின் ஆரம்பத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், கடந்த அமர்வின் கூட்டறிக்கையும் உறுதிப்படுத்தப்பட்டதுடன் கூட்டத்தில் சபைக்கு தெரியப்படுத்தப்படும் முக்கிய விடயமாக, 2026ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட டித்வா வேலைத்திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ள காரைதீவு–07 பிரதேசத்தில் அமைந்துள்ள திருமால் முக வீதியை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கான கேள்வி கோரல் நடவடிக்கைகள் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சபைக்கு சமூகமளித்த உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், உறுப்பினர்களான ஏ.எம்.ஜாஹீர், எம்.என்.எம். ரணீஸ் ஆகியோர் முஸ்லிம் பிரதேசங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமது எதிர்ப்பை முன்வைத்து காரசாரமாக கருத்துக்களை முன்வைத்தனர். 


இதனைத் தொடர்ந்து தவிசாளரால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைகளில், 2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான மீளளிக்கப்படாத முத்திரை வரியை கிழக்கு மாகாண திறைசேரி இடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான அனுமதி பெறப்பட்டதுடன், இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக கல்விக் கருத்தரங்கொன்றை நடத்துதல் மற்றும் அலுவலகப் பயன்பாட்டிற்கான போட்டோ பிரதி இயந்திரத்திற்கு புதிய டோனர் கொள்வனவு செய்வதற்கான அனுமதி பெறப்பட்டது


மேலும், சபையின் JCB இயந்திரத்தை முழுமையாக திருத்தம் செய்தல், காரைதீவு கடற்கரை பூங்காவில் உள்ள கடையறையை மாதாந்த வாடகை அடிப்படையில் வழங்குதல் மற்றும் நிதி உதவியாளர் இடமாற்றத்தைத் தொடர்ந்து அலுவலக காசோலைகளில் கையொப்பமிடும் அதிகாரிகளை நியமித்தல் தொடர்பான பிரேரணைகளும் விவாதிக்கப்பட்டு JCB இயந்திரத்தை முழுமையாக திருத்தம் செய்யும் பிரேரணை ஒத்தி வைக்கப்பட்டது. 


அத்துடன், பள்ளிவாசல் காணியென முன்வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குக்கான வழக்கறிஞருக்கு தற்போது வழங்கப்படும் ரூபா 5,000 கொடுப்பனவை ரூபா 10,000 ஆக அதிகரித்தல் தொடர்பிலான பிரேரணை முன்வைக்கப்பட்ட போது சகல முஸ்லிம் உறுப்பினர்களும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இதன்போது எழுந்தது. சபையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 05 நிமிடங்கள் சபையை தவிசாளர் ஒத்திவைத்ததுடன் மீண்டும் சபை ஆரம்பிக்கப்பட்டவுடன் தவிசாளர் வாக்கெடுப்பை பணித்தார். வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மறுத்து முஸ்லிம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததுடன் பிரேரணைகளில் இருந்த பிரச்சினைகளை ஆராய குழுநிலை விவாதம் ஆரம்பிக்கப்பட்டு பிரச்சினைகள் ஆராயப்பட்டதுடன் வழக்கறிஞருக்கு தற்போது வழங்கப்படும் ரூபா 5,000 கொடுப்பனவை ரூபா 10,000 ஆக அதிகரித்தல் தொடர்பிலான பிரேரணை தவிசாளரினால் வாபஸ் பெறப்பட்டது. 


இதற்கிடையில், காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான காணி கடந்த 50 ஆண்டுகளாக திண்மக்கழிவு இடமாற்று நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அக்காணியில் தகனசாலை அமைப்பதற்கும், புதிய சட்டபூர்வ குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் மேலும் 30 ஆண்டுகளுக்கு பயன்படுத்துவதற்குமான அனுமதியைப் சபை வழங்கியது. 


இக்கூட்டத்தில் காரைதீவு பிரதேசத்தின் கல்வி, நிர்வாகம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொதுச் சேவைகளின் மேம்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் பல விடயங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

 


நூருல் ஹுதா உமர்


பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டிலும், சுகாதார அமைச்சின் வழிகாட்டலிலும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம்” திங்கட்கிழமை (15) சம்மாந்துறையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், பிரதேச செயலாளர் அல்ஹாஜ் மொஹமட் ஹனீபா, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி நிஸ்ரின் ஸியாத், பிரதேச சபைச் செயலாளர் யு.எல்.ஏ. மஜீத், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பைலான் நளீம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் இந்நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தின் முதல் மூன்று நாட்களில் பொது இடங்கள், வீதியோரக் கான்கள், பஸ் தரிப்பிடங்கள் மற்றும் சந்தைப் பகுதிகள் ஆகியவற்றில் விசேட பரிசோதனை மற்றும் துப்பரவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தைக்காப்பள்ளிக் கான், நூர் பள்ளிக் கான், சுவன்யார் ஆரைப்பற்றைக் கான் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள இடங்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன், நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகை விசுறல் (Fogging) நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

டெங்கு உள்ளிட்ட நுளம்புகள் மூலம் பரவும் நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


 ( வி.ரி.சகாதேவராஜா)


 கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மத்திய முகாம் நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்பட்ட பன்னிரண்டாம் கிராமத்தில் விவசாய பாதை ஒன்று அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.


அன்னமலை விவசாய போதனாசிரியர் பி.குணநீதராசா வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஎல்எம்.அஸ்மி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .

நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இ.ரூபசாந்தன் , கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.றினோஸ்  அம்மாறை மாவட்ட பிரதி  விவசாய பணிப்பாளர் பி.திஸாநாயக்க உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியியல் இப் பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 


நூருல் ஹுதா உமர்


வெள்ளப்பெருக்கு மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது அவசர நிலைமைகளை திறம்பட கையாளும் நோக்கில் சாய்ந்தமருது ஜனாஸா அமைப்பின் உறுப்பினர்களுக்கான படகு ஓட்டும் பயிற்சி முகாம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் கல்முனை கிடங்கிப் பாலம் அண்மித்த பகுதியில் நடைபெற்று வரும் இப்பயிற்சி முகாமில் ஜனாஸா அமைப்பின் உறுப்பினர்கள் பலர் பங்கேற்று பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.

அனர்த்த காலங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக மீட்பது, அவசர உதவிகளை விரைவாக வழங்குவது, படகுகளை பாதுகாப்பாக இயக்குவது மற்றும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பான நடைமுறைப் பயிற்சிகள் இதில் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி நிகழ்வு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஏ.எம். றியாஸ் தலைமையில் இடம்பெற்று வருவதுடன், பயிற்றுவிப்பாளர்கள் மூலம் செயல்முறை அடிப்படையிலான விளக்கங்களும் வழங்கப்படுகின்றன.

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் சமூகத்திற்கு உடனடி உதவிகளை வழங்கக்கூடிய தன்னார்வத் தொண்டர்களை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி முன்னெடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளில் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் பணிகளில் இப்பயிற்சி பெரிதும் உதவியாக அமையும் எனவும், சமூக சேவையை மேம்படுத்தும் இந்த முயற்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

மருதமுனையில் பாதுகாப்பான மற்றும் சட்ட ரீதியான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

சுவிட்சர்லாந்து தூதுவர் டாக்டர் சிரி வால்ட் பங்கேற்பு


(நூருல் ஹுதா உமர்)


வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம் (ICMPD) ஆகியவற்றின் ஏற்பாட்டில், "இடம்பெயர்வு தகவல் மையம்" (Migration Information Centre - MIC) ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பான மற்றும் சட்ட ரீதியான புலம்பெயர்வு தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று மருதமுனையில் நடைபெற்றது.


வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பான புலம்பெயர்வு நடைமுறைகள், சட்டபூர்வமான வேலைவாய்ப்பு வழிமுறைகள், மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத இடம்பெயர்வினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.


நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வால்ட் (Dr. Siri Walt) கலந்து கொண்டார். அவருடன் தூதரக உயரதிகாரிகள் பங்கேற்றனர். புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவன இலங்கைக்கான இணைப்பாளர் சாமீர் ஸாலிஹ், புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவன இலங்கைக்கான அதிகாரிகளான சுமித்ரா சதாசிவம், சரத் பல்லேகம ஆகியோரும் கலந்து கொண்டு புலம்பெயர்வு தொடர்பிலான விடயங்களை தெளிவுபடுத்தினர். 


இதன்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், தொழிலாளர் உரிமைகள், வெளிநாடுகளில் பணிபுரியும் போது கிடைக்கக்கூடிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் அவசர காலங்களில் தொடர்புகொள்ளக்கூடிய சேவைகள் தொடர்பிலும் விரிவான விளக்கங்களை வழங்கினர்.


மேலும், Migration Information Centre (MIC) ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் தகவல் மற்றும் ஆலோசனை சேவைகள், தொழில்முறை வழிகாட்டல்கள், சட்ட ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வுக்கான ஆதரவு நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.


பாதுகாப்பான மற்றும் சட்ட ரீதியான புலம்பெயர்வை ஊக்குவிப்பதன் மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதோடு, மனிதக் கடத்தல் மற்றும் மோசடி நடவடிக்கைகளை குறைப்பதற்கும் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


நிகழ்வில் உரையாற்றிய சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வால்ட், உலகளாவிய ரீதியில் இடம்பெயர்வு ஒரு முக்கிய சமூக மற்றும் பொருளாதார விடயமாக மாறியுள்ள நிலையில், பாதுகாப்பான, ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட மற்றும் சட்டபூர்வமான புலம்பெயர்வு முறைகள் மிகவும் அவசியமானவை என வலியுறுத்தினார். குறிப்பாக வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்கள் உரிய நிறுவனங்களின் ஊடாக மட்டுமே பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தவறான முகவர்கள் மற்றும் சட்டவிரோத வலையமைப்புகளிடம் சிக்காமல் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.


 காரைதீவு பிரதேச மீன்வாடி முறைமையை ஒழுங்குபடுத்த விசேட கலந்துரையாடல்


நூருல் ஹுதா உமர்

இலங்கையின் மிகப் பெரிய மீன் மொத்த விற்பனை நிலையங்களுள் ஒன்றாக விளங்கும் காரைதீவு பிரதேசத்தின் மாளிகைக்காடு மற்றும் காரைதீவு மீன் சந்தைகளில் நிலவும் மீன்வாடி முறைமையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் வியாழக்கிழமை விபுலானந்த கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வஸீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் ஹில்மி, பொது சுகாதார பரிசோதகர்கள், காரைதீவு பொலிஸார், பல்வேறு திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை அதிகாரிகள், மாளிகைக்காடு மற்றும் காரைதீவு பிரதேச மீன் மொத்த விற்பனை நிலைய உரிமையாளர்கள், மீன் வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான கிலோகிராம் மீன்கள் விநியோகிக்கப்படும் மையமாக மாளிகைக்காடு மற்றும் காரைதீவு மீன் சந்தை விளங்கிவருகிறது. இதனால் அப்பகுதி மீன்பிடித் தொழிலும் மீன் வணிகமும் பிராந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றன. எனினும், மீன்வாடி நிர்வாகம், சுகாதார நடைமுறைகள், கழிவு முகாமைத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு சவால்கள் எழுந்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு மீன் வியாபார நடவடிக்கைகளை முறையாக ஒழுங்குபடுத்துவதுடன், சுகாதார தரங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

கூட்டத்தில் கருத்து வெளியிட்ட மீன் மொத்த விற்பனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள், மீன்வாடி தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள், போக்குவரத்து வசதிகள், கழிவுகளை அகற்றுதல், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் தங்களது துறைகளின் பொறுப்புக்கள் மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகள் குறித்து விளக்கமளித்ததுடன், மீன்வாடி நடவடிக்கைகள் சட்டபூர்வமாகவும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகவும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் உரையாற்றிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன், மாளிகைக்காடு மற்றும் காரைதீவு மீன் சந்தைகள் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் முக்கிய வர்த்தக மையங்களாக இருப்பதாகக் குறிப்பிட்டார். எனவே மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையிலும், பொதுச் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையிலும் அனைவரின் ஒத்துழைப்புடன் ஒரு ஒழுங்குமுறைத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், மீன்வாடி முறைமையை நவீனமயப்படுத்துவதற்கும், சுத்தமான மற்றும் நிலையான மீன் சந்தை சூழலை உருவாக்குவதற்கும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கலந்துரையாடலின் இறுதியில், மீன் சந்தைகளின் நிர்வாகம் மற்றும் செயற்பாடுகளை மேலும் ஒழுங்குபடுத்துவதற்காக அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பரிந்துரைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

 


நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை மத்திய வட்டாரத்திற்குட்பட்ட கருவாட்டுக்கல், அம்பாறை 1ம் வீதியில் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட வடிகான் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

குறித்த வடிகான் சேதமடைந்திருந்த காரணத்தால் மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்கி போக்குவரத்திற்கும், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை சம்மாந்துறை பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு சென்று தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் அவர்களின் தலையீட்டின் மூலம் வடிகான் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்த சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களுக்கும் மக்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். வடிகால் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மழைக்காலங்களில் நீர் தேங்கும் பிரச்சினை குறைவடையும் எனவும், பொதுமக்களின் சுகாதார மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி சேவையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் மற்றும் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் ஆகியோருக்கு கருவாட்டுக்கல் 1ம் வீதி மக்கள் தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.