Showing posts with label SriLanka. Show all posts


 நூருல் ஹுதா உமர்


கல்வி, உயர் கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் பிரதம மந்திரியும், கல்வி, உயர் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனது முன்மொழிவில் இலங்கையில் அமைந்துள்ள 06 தமிழ் மொழி மூல தேசிய கல்வியியற் கல்லூரிகளில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் 1992ம் ஆண்டிலிருந்து 20 வருடங்கள் உடற்கல்வி பாடநெறி சிறப்பாக கற்பிக்கப்பட்டு நாட்டுக்குத் தேவையான சிறந்த உடற்கல்வி ஆசிரியர்களை உருவாக்கி வந்தது. 2013ம் ஆண்டில் சிலரது தனிப்பட்ட நலனுக்காக இக்கற்கை நெறி இடைநிறுத்தப்பட்டன. எனவே, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் உடற்கல்வி கற்கை நெறிக்கு போதுமான இடவசதிகள், வசதியான விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளதுடன் அண்மையில் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 02 உடற்கல்வி விரிவுரையாளர்கள் இக்கல்லூரிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, இடைநிறுத்தப்பட்ட உடற்கல்வி பாடநெறியினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை கௌரவ பிரதம மந்திரி அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக விளக்கங்களைப் பெற்றுக் கொண்ட கௌரவ பிரதம மந்திரி அவர்கள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்ட உடற்கல்வி கற்கை நெறியினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அவர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் போட்டிப் பரீட்சைக்கு தோற்றி 172 புள்ளிகளுக்கு குறைவாகப் புள்ளிகளைப் பெற்ற தகுதியான 1216 ஆசிரியர்கள் மீதமாக உள்ளனர். இவ் ஆசிரியர்களில் 50 வயதினை பூர்த்தி செய்தவர்களும் உள்ளனர். சென்ற 26.11.2025 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கௌரவ பிரதம மந்திரி அவர்களை சந்தித்த அதிபர் பரீட்சை எழுதிய ஆசிரியர்களுக்கு இதுவரை அதிபர் நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. பரீட்சை எழுதியவர்களில் பலர் 50 வயதினை தாண்டியுள்ளனர். எனவே, இவர்களின் விடயமாக கல்வி அமைச்சின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்குமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

அதிபர் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அவர்களை பதிலளிக்குமாறு பிரதம மந்திரி பணித்தார்.

இது தொடர்பாக பதிலளித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அதிபர்களால் கல்வி அமைச்சுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டு தற்போது அந்த வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்துள்ளன. எனவே, அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு அதிபர் நியமனம் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.


 ( காரைதீவு  வேதசகா)

கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில், இலக்கியச் சந்திப்பொன்று கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில்  நேற்று நடைபெற்றது.

இந்த இலக்கியச்சந்திப்பில், கல்முனைப் பிராந்தியத்தைச் சேர்ந்த கலைஞர்களான வைரமுத்து கணேசன் ( சேனைக்குடியிருப்பு), சதானந்தம் ரகுவரன் (கோட்டைக்கல்லாறு), சண்முகம் சுந்தரராஜன் (சேனைக்குடியிருப்பு) ஆகியோர் தத்தமது காத்திரமான இலக்கிய அனுபவப் பகிர்வுகளை  பகிர்ந்தனர்.

இலக்கியச் சந்திப்பிற்கு சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா  தலைமை வகித்தார்.

எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மைய ஸ்தாபகர் புவி.கேதீஸ்ஸின் வழிகாட்டலில், செயலாளர் கே.சாந்தகுமார், பொருளாளர் என்.அருளானந்தம், திட்டமிடல் பணிப்பாளர் ப.சந்திரமோகன் ஆகியோர் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள, இளம் ஊடகவியலாளர் ரிஷி வீடியோ படப்பிடிப்பை மேற்கொண்டார்.

 


முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில், அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கிடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இதனால் அப்பகுதியில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.


"அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறிவிட்டது"

ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளையகமான கதம் அல்-அன்பியா அமெரிக்கா திட்டமிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


ஈரானின் ஜஸ்க் கடலோரப் பகுதியிலிருந்து புறப்பட்ட ஈரானிய எண்ணெய் கப்பலையும், ஃபுஜைரா துறைமுகத்திற்கு அருகே சென்ற மற்றொரு கப்பலையும் அமெரிக்கப் படைகள் இலக்கு வைத்துள்ளன.


 கடல் பகுதியில் மட்டுமன்றி, ஈரானின் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.


"இது தற்காப்புத் தாக்குதல் மட்டுமே"

ஈரானின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க இராணுவம், ஈரானின் தூண்டுதலற்ற தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே தாம் செயல்பட்டதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


ஹோர்முஸ் நீரிணையை மூன்று அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் கடக்க முயன்றபோது, ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சிறிய ரகப் படகுகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியது.


 இந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஈரானிய இராணுவத் தளங்கள் மீது துல்லியமான பதிலடித் தாக்குதல்களை அமெரிக்கப் படைகள் மேற்கொண்டுள்ளன.


 உலகளாவிய மசகு எண்ணெய் போக்குவரத்தில் ஹோர்முஸ் நீரிணை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையேற்றம் மற்றும் பிராந்திய பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

 


ஈரானுடன் எட்டப்படவுள்ள புதிய உடன்படிக்கைக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கோடும், ஹோர்முஸ் நீரினையை மீண்டும் திறக்கும் குறிக்கோளுடனும் முன்னெடுக்கப்பட்ட "புரொஜெக்ட் ஃப்ரீடம்" இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.


இருப்பினும், ஈரான் துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் முற்றுகைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ஜனாதிபதி டிரம்ப், பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளின் கோரிக்கைகளையும், தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ள உடன்படிக்கைகளின் முன்னேற்றத்தையும் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.


"ஒப்பந்தத்தை இறுதி செய்து கையெழுத்திட முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக, குறுகிய காலத்திற்கு இந்த இராணுவ நடவடிக்கையை நிறுத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட "புரொஜெக்ட் ப்ரீடம்" நடவடிக்கை காரணமாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவியதுடன், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.


இதற்கிடையில், ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும், ஹோர்முஸ் நீரினையில் கப்பல் போக்குவரத்திற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், "மிகவும் கடுமையான மற்றும் அழிவுகரமான" பதிலடி கொடுக்கப்படும் என்று வொஷிங்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியும் மேலாண்மை சேவைகள் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் நாயகமுமான விமல் எஸ்.கே.லியனகமவை இலங்கை சுங்கத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


தற்போதைய சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி பி.அருகொட இன்று (05) தனது சேவைக்காலத்தை நிறைவு செய்கிறார்.


அதன்படி, லியனகம நாளை (06) முதல் சுங்கத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


நூருல் ஹுதா உமர் 


பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்தில் கடந்த 30.04.2026 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களின் விவகாரம் தொடர்பில் இன்று (05) மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்ட இளைஞர்களின் நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மௌலவி முஹம்மத் மிப்லால், “இவ்வாறான விவகாரங்களை அரச இயந்திரம் கையாளும் முறை குறித்து ஆளுநர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், பொலிஸார் முறையான விதத்தில் செயல்பட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வழக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக எங்களிடம் தெரிவித்துள்ளார்” என்றார்.

மேலும், சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தனது அறிக்கையை ஆளுநர் பார்வையிட்டதையடுத்து, இவ்விவகாரத்தில் அவர் தனிப்பட்ட கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பிரதியமைச்சர் சுனில் வட்டக்கல ஆகியோருடனும் ஆளுநர் கலந்துரையாடியுள்ளதாகவும், சம்பவம் குறித்து தாமும் கவலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டதாக மிப்லால் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், உழ்ஹிய்யா தொடர்பான விடயங்களும், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் மே மாதக்கூட்டமும், அதனுடன் இணைந்த விசேட கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (03) காலை 10.00 மணிக்கு சம்மாந்துறையில் அமைந்துள்ள பிக் செப் உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எல். அப்துல் சலீம் தலைமையில் நடைபெற்றதுடன், செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ஜே.எம். நவாஸ் அவர்களின் ஒழுங்கமைப்பில் நிகழ்வுகள் ஒழுங்காக முன்னெடுக்கப்பட்டன.

நிகழ்வின் ஆரம்ப கட்டமாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல். ரியாஸ் ஆதம் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நினைவுச்சின்னமும் பொன்னாடையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தங்களது சட்டத் தொழிலில் சுமார் 10 ஆண்டுகளை நிறைவு செய்து சிரேஷ்ட நிலையை அடைந்த மூன்று சட்டத்தரணிகள் – ஏ.ஜே.எம். நவாஸ், யூ.எல்.எம். சமீம் மற்றும் வி.ரி. ஹசீனா – ஆகியோர் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் கௌரவப்பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இக்கௌரவிப்பு நிகழ்வுகள் அனைத்தும் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாதாந்திர கூட்டம், தலைவர் கே.எல். அப்துல் சலீம் தலைமையில் பகற்போசனத்துடன் நடைபெற்றது. கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் சங்கத்தின் பொருளாளர் யூ.எல்.சிபானா உள்ளிட்டவர்களுடன் சிரேஷ்ட சட்டத்தரணிகளான முன்னாள் தலைவர் எஸ்.எம்.எம்.முஸ்தபா, சங்கத்தின் தற்போதைய உப தலைவர் ஏ.எம்.நசீல், வை.எம்.அன்வர் சியாத், ஏ.எச் அறூஸ், எம்.எப்.சாமிலா, ஏ.எல் றியாஸ் ஆதம், எம்.எம்.சஹுபீர் உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் என ஏராளமான சட்டத்தரணிகள் பங்குபற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR 

 


தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த இடி மின்னல் தாக்கங்கள் குறித்து வானிலை ஆய்வாளர் கலாநிதி சசிந்த ஜெயசேகர பொதுமக்களுக்கு விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 


பலத்த இடி மின்னல் நிலவும் சந்தர்ப்பங்களில் வெட்டவெளிகளிலும் ஏனைய வெளி இடங்களிலும் தங்கியிருப்பது உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மிகவும் அபாயகரமான செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


எனவே, இத்தகைய காலப்பகுதிகளில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்த்து, ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடப்பட்ட பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்தோடு, பயணங்களில் ஈடுபடுபவர்கள் இடி மின்னல் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மூடிய நிலையில் உள்ள வாகனங்களுக்குள் தங்கியிருப்பது பாதுகாப்பானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


பொதுமக்கள் இந்த வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றி மின்னல் அபாயங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


(ஞான பிரசாந்தன்)


 


இங்கிலாந்து நாட்டின் தெற்கே பிரிஸ்டல் நகரில் ஸ்டெர்ன்கோர்ட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (03) மணியளவில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்து இருவர் உயிரிழந்துள்ளதாக சாமர்செட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த வெடிவிபத்திற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் பற்றி அவர்களுடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடந்து வருகின்றது.


அந்த பகுதியை பொலிஸார், தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 


மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (03) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

 

2023ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், மொஹமட் முயிசு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வருகை தரும் மாலைதீவு ஜனாதிபதி, எதிர்வரும் 06ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

 

இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

 

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 06 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளன.

 

மாலைதீவு ஜனாதிபதியின் இந்த வருகையை முன்னிட்டு இன்று (03) முதல் வரும் 06ஆம் திகதி வரை கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 

இதேவேளை, ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்றும் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (03) நாட்டை வந்தடையவுள்ளது.

 

இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுகாதாரத் துறை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சர், இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் கலந்துரையாடல்களை நடத்துவார் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

மேலதிகமாக, ரஷ்ய சுகாதார அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்திக்கவுள்ளதுடன், நாளை கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றிற்கும் விஜயம் செய்யவுள்ளார். 

 

இன்று வருகை தரும் ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 05ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 “யாமார்க்கும் குடியல்லோம்" என்ற கருப்பொருளில், கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் பேரெழுச்சியாய் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வு.




 தற்போதைய அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (01) மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடத்திய மே தினக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


நிலக்கரி மோசடி மற்றும் மத்திய திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்டமை ஆகியவை அண்மைய காலத்தின் பாரிய ஊழல்களாகும்.


மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை.


வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டுள்ள நிலையில் ஆளும் தரப்பினர் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.


பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


எதிர்க்கட்சியினர் குரல் எழுப்ப இடமளிக்கப்படாமல் அச்சுறுத்தல்கள் மூலம் ஆட்சி நடத்தப்படுகிறது.


தோல்வி பயத்தினால் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை.


ஐக்கிய மக்கள் சக்தியின் இம்முறை மே தினத்திற்காகத் தெரிவு செய்துள்ள உருட்டு, பிரட்டு, திருட்டு என்ற வாசகம் தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானது.


இந்த வாசகத்தை உள்ளூராட்சி சபைகள் ஊடாக அடிமட்ட மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டும்..


பௌத்த உரிமைகள் மீறப்படுவதாகவும், கத்தோலிக்க திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மரபுகள் மீறப்படுகின்றமையும் கவலையளிக்கிறது.


1977 ஆம் ஆண்டு முதல் ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்போது முடங்கியுள்ளன.


வாழ்த்துச் செய்தியின் இறுதியில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.