Showing posts with label SriLanka. Show all posts

 


கடந்ந 2025.11.28 முதல் 12.06 ந் திகதி வரை , தான் பயன்படுத்தி வந்த செல்பேசிகள் மற்றும் (இணைய வசதிகள்) டயலொக் தொலைக்காட்சி போன்றவை செயலிழந்தன. 

குறிப்பிட்ட  இந்த செயலிழப்புக்கான. காரணங்களோ அல்லது அது பற்றிய முன்னறிவித்தல்களோ  DialogPLC  குழுமத்தினால், தமக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.

 குறித்த இந்த செயலிழந்த காலப்பகுதியில்,  தனக்கான கட்டணங்களும் குறிப்பிட்ட டயலொக் நிறுவனத்தினால், அறவீடு செய்யப்பட்டுள்ளாக, சட்டத்தரணி இயாஸ்டீன்  தனக்கு ஏற்பட்டிருந்த இழப்புக்களுக்கு எதிராக, கோரிக்கை கடிதம் வரைந்துள்ளார்.

இவற்றினால் தனக்கு ஏற்பட்ட உளவியல் ரீதியிலான பாதிப்புக்கள், வருமான இழப்பு, மற்றும் அசௌகரியங்களும் குறித்த டயலொக் நிறுவனத்தினால் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்தன எ்ன்பதாகவும் குறித்துரைத்துள்ளார்.

தனக்கு ஏற்றபட்ட பாதிப்புக்களுக்குரிய இழப்பீட்டினை வழங்குமாறும், இக் கோரிக்கை கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் டயலாக் நிறுவனம் உரிய பதிலை வழங்காவிடின்  கல்முனை நீதிமன்றில் சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் என்பதாகவும் குறித்த கோரிக்கை கடித்தில், சட்டத்தரணி இயாஸ்டீன் தெரிவித்துள்ளார்.




 ( வி.ரி.சகாதேவராஜா)


 பேரிடரால் மோசமாக பாதிக்கப்பட்ட மலையகத்தில் இடம்பெயர்ந்து கோணக்கலை மற்றும் பதுளை மீதுன்பிட்டிய அகதி முகாம்களில் வாழும் 207  குடும்பங்களுக்கு இராமகிருஷ்ண மிஷன் முதற்கட்டமாக அத்தியாவசிய பொதிகளை இன்று (8) திங்கட்கிழமை வழங்கி வைத்தது.

 உலகளாவிய இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ்  இதனை நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.


சுவாமி ஜீ தலைமையிலான குழுவினர்  இதுவரை பசளை மடுல்சீமை பதுளை பிரதேசங்களில் கடந்த ஐந்து நாட்களாக தங்கியிருந்து12 முகாம்களை பார்வையிட்டு அவற்றுள் 8 முகாம்களை பொறுப்பேற்று அவர்களுக்கு
சாரி சரம்பெட் சீட் 
குளிர் கால தொப்பி 
பாய்- மற்றும் 
பெனடால் 
சித்தாலேப்ப ஜீவனி
குழந்தைகள் பால்மா 
மற்றும் 
பெண்களுக்கான உடைகள் போன்ற உடுதுணி நிவாரண பொருட்களை  வழங்கி வருகின்றார்கள்.

 


கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழை வெள்ளப் பெருக்கினால் 45,387 குடும்பங்களைச் சேர்ந்த 144,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். 



திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 153 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேர் இடம்பெயர்ந்து தொடர்ந்தும் 05 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்ததுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (07) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


இதுரை 122 வீடுகள் முழுமையாகவும் 2,156 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் இருவர் உயிரிழந்ததுடன் 12,469 குடும்பங்களைச் சேர்ந்த 34,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்றினால் இதுரை 11 வீடுகள் முழுமையாகவும் 946 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.

 

 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டடு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொருட்களை அரசாங்கம் மற்றும் பொது அமைப்புகள் வழங்கிக்கொண்டிருக்கின்றன.

 

 


முன்னாள் அமைச்சர் 'சொல்லின் செல்வர்' செல்லையா இராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.


தலைசிறந்த சிறந்த பேச்சாளராக திகழ்ந்த அவர் 1956 முதல் 1989 வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


இராசதுரை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தார். இராசதுரை ,ஊடகவியலாளராகவும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும்பணியாற்றினார். 



இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக முதன் முதலாக மட்டக்களப்பு தொகுதியில் 1956 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். 



தொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 


1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் ஜே. ஆர். ஜெயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.



இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார். பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து சென்னையில் வாழ்ந்து வந்தார் .


அவரது மறைவுக்கு கொழும்பு சாயி மத்திய நிலையம் அனுதாபத்தைதெரிவித்துள்ளது.

இறுதிக்கிரிகைகள் சென்னையில் நடைபெறவுள்ளது.



நூருல் ஹுதா உமர்


மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மூதூர் பிரதேச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில், புதிய பிரதேச செயலாளர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து விபரமான கலந்துரையாடினார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைகள், பிரச்சனைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர்.



 நாகலகம் தெருவில் உள்ள களனி கங்கையில் நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது ↘️ நீர்ப்பாசனத் துறையின் கூற்றுப்படி.


பெரும்பாலான ஆறுகள் இப்போது சாதாரண மட்டத்தில் உள்ளன, மேலும் பெரிய மற்றும் சிறிய ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை சீராகக் குறைந்து வருகிறது ↘️.

பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன் 

 


திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால்குழி பிரதேசத்தில் வெள்ளநீர் அதிகரித்ததால் காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.


 


மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.


 


நூருல் ஹுதா உமர்
நாட்டில் சமீபத்திய கனமழை காரணமாக வெள்ள நீர் வடிகால் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்தும் சில இடங்களில் அதிகரித்தும் வருகிற நிலையில், பலர் அந்த இடங்களை நேரில் பார்க்க அலையலையாக திரள்வது அதிகாரிகளின் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாவடிப்பள்ளி மற்றும் கிட்டங்கி போன்ற பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் முழுமையாக சரிந்து விடாத நிலையில், நதிக்கரைகள், பாலத்தடைகள், ஆறு கரைகள் போன்ற இடங்களுக்கு மக்கள் மிக அருகில் சென்று புகைப்படம் எடுப்பதும், வீடியோ பதிவு செய்வதும் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள், வெள்ளநீர் வடிந்தோடும் இத்தகைய இடங்களின் அடிப்பகுதியில் ஆழ்ந்த பள்ளங்கள் உருவாகியிருக்கலாம், மணல்வரடு தளர்ந்திருக்கலாம், திடீர் நீரோட்ட மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால் பொதுமக்களுக்கு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சிலர் குடும்ப சகிதம் வாகனங்களுடன் வெள்ளப்பாதைகளுக்கு நெருக்கமாக செல்வதும், ஆற்றங்கரையில் நிற்கும் பாதைகளில் தங்குவதும் சறுக்கி விழும் அபாயத்தை அதிகரிக்கிறது. சமூக ஊடகங்களில் பதிவிடும் முயற்சியால் ஆபத்தான பகுதிகளுக்கு செல்வது அபாயத்தை ஏற்படுத்தும் செயல் என பாதுகாப்பு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தும் அவற்றை பொருட்படுத்தாமல் மக்கள் சுற்றுலா பயணிகள் போல படையெடுத்து வருகிறார்கள்.

வெள்ள நீர் வழிந்தோடும் எந்தப் பகுதியிலும் தேவையற்றுச் செல்ல வேண்டாம் என்றும் ஆறு/ஏரி கரைகள், உடைந்த தடைகள், பாலங்களின் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறும், குழந்தைகளை இத்தகைய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லாமல் இருக்குமாறும், அதிகாரிகள் வெளியிடும் எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும், பொதுமக்கள் தேவையற்ற கூட்ட நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயல்படுமாறு மக்களை பாதுகாப்பு படை கேட்டுக்கொண்டுள்ளது.

 


( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனைப் பிரதேசத்தில் இன்று (27) வியாழக்கிழமை  கடல் கொந்தளிப்பு காரணமாக சீறி எழுந்த அலைகள் வீதியை தாண்டி ஊருக்குள் போக முற்பட்டது.

 மீனவர்கள் தமது படகுகளை அவசர அவசரமாக பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

கல்முனையின் கரையோர கடல் பகுதிகளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

குறிப்பாக  பெரியநீலாவணை மருதமுனை கல்முனை. போன்ற கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு நிலையில் காணப்படுகிறது. 

கடல் அலைகளின் சீற்றம் காரணமாக வீதீகளில் கடல் அலை பரவுவதோடு கடல் அரிப்பும் பாரியளவில் இடம்பெறுகிறது.
 மீனவர்களது. மீன்பிடி படகுகள் யாவும் வீதிக்கு இழுக்கப்படுகின்றன. கடல் பகுதிகளை பார்வையிடச் செல்லும் மக்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு பெரிய நீலாவணை பொலீசார். மக்களை அறிவுறுத்துவதை காணக்கூடியதாக இருந்தது. இன்று கல்முனையில். மழை சற்று குறைந்திருந்தாலும் காற்றின் வேகம். சற்று அதிகமாகவே காணப்படுகிறது. வெள்ள. நிலையும் தொடர்கிறது. மக்களது இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்துள்ளது.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின் வீதியில் பாதையை  விட்டு விலகி சொகுசு கார் ஒன்று நீரில் பாய்ந்தது. நீரில் பாய்ந்த காரில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

கார் நீரில் முற்றாக மூழ்கியிருந்த நிலையில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக மீட்பு தொண்டர்களின் போராட்ட மீட்புக்கு பின்னரே கார் கரையேற்றப்பட்டு காருக்குள் இருந்த மூவரையும் அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா அமைப்புக்கள், கல்முனை சுழியோடிகள், மீட்பு படையினர், பொலிஸார், கடற்கடையினர், பிரதேச செயலக அதிகாரிகள், கல்முனை மாநகர சபை ஊழியர்கள், பொதுநல அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் இந்த மீட்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர்.

சம்பவ இடத்திட்க்கு கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் போன்றோர்களும் விஜயம் செய்திருந்தனர். மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 .


(சுகிர்தகுமார்)


அக்கரைப்பற்று அலிக்கம்பை பிரதான வீதியில் உள்ள தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் அப்பாதை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம் அலிக்கம்பை பிரதான குடிநீர் இணைப்பு குழாய் வெள்ளத்தினால் அள்ளுண்டதனால் குடிநீர் இணைப்பும் தடைப்பட்டுள்ளது.
அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் பலத்த காற்றுடனான மழை காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் வெள்ளம் பாய்ந்து வருவதால் பிரதான வீதிகள் சில போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அம்பாரை பிரதான வீதியில் அதிகாலையில் வீழ்ந்த மரத்தினை அகற்றும் நடவடிக்கையினை அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை உள்ளிட்டவர்கள் இணைந்து முன்னெடுத்தனர்.
இதேநேரம் வெள்ளம் புகுந்த வீடுகளில் வாழ்ந்த மக்கள் இடப்பெயர்ந்தும் வருகின்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தாழ் நில பிரதேசங்களில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் சில குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
ஆயினும் வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக இருந்த பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரங்களை நீர்ப்பாசன திணைக்களம் கனரக வாகனத்தின் உதவியோடு அகற்றி வருகின்றது.
வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணிகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் இன்று காலை முன்னெடுத்துள்ள நிலையில் 135 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 24 குடும்பங்கள் இடப்பெயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பிலும் அவர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

 


தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பிலான வழக்கில் வாழைச்சேனை தவிசாளர்,பிரதி தவிசாளர் உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேருக்கும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர் இரண்டு உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் இன்றைய தினம்  (25) வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

 

கடந்த 22ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.

 

வாழைச்சேனை பிரதேசசபைக்குட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதிகள் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாக தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளரினால் குறித்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.

 

இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துவந்தனர்.

 

இதன்கீழ் வாழைச்சேனை பிரதேசபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக்குறிக்கும் பெயர்ப்பலகைகளை நேற்றைய தினம்(24)  வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில் ஒருவரை கைதுசெய்திருந்தனர்.

 

இது தொடர்பில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர்,பிரதி தவிசாளர் உறுப்பினர் இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் நால்வரும் ஆஜராகியிருந்தனர்.

 

இன்றைய தினம் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியுள்ளார்.

 

பெயர் பதாகைகளை திருடியது,அரச உத்தியோகத்தர் ஒரு விடயத்தினை அதாவது ஒரு பெயர் பலகையினை நட்டால் அது அப்புறப்படுத்துவது குற்றம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த குற்றச்சாட்டுகள் பொருத்தமற்ற குற்றச்சாட்டுகள் என்று நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணி சுமந்திரனால் கொண்டுசெல்லப்பட்டதுடன் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேசசபை சட்டத்தின் கீழ்பொதுவழிகள் சட்டம் தொடர்பில் சொல்லப்பட்டுள்ளது வீதிகள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேசசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.பிரதேசசபை தவிசாளர் அந்த சட்டத்தின் கீழ் அதிகாரமுடையவர்.அந்த அதிகாரத்தின் கீழ் செய்யப்பட்ட விடயத்தினை அகற்றினார் என்று எக்காலத்திலும் குற்றச்சாட்டினை முன்வைக்கமுடியாது.அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அதனை அவர் செய்துள்ளார் என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

 

அத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் அனுமதியைப்பெற்றே பெயர்ப்பலகை இடப்படவேண்டும் என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணியினால் கொண்டுவரப்பட்டபோது அதனை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதுடன் எதிர்காலத்தில் முறையான அனுமதியைப்பெற்றுக்கொள்வதாகவும் எதிர்காலத்தில் முறையாக அனுமதி கோரும்போது அதனை சபையில் சமர்ப்பித்து சபையினால் முறையான அனுமதியை வழங்கமுடியும் என்று கூறியதன் அடிப்படையில் வழக்கு சுமுகமாக தீர்க்கலாம் என்ற காரணத்தினாலும் பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பிணைவழங்ககூடிய காரணங்களைக்கொண்டிருப்பதனாலும் ஐந்து பேரையும் பிணையில் செல்ல அனுமதித்தது.

 

எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் பிரதேசசபையின் முறையான அனுமதிபெறப்பட்டு பெயர்ப்பலகையிடும் பணிகள் நடைபெற்று இது தொடர்பான பிரச்சினை முடிவுறுத்தப்படுமானால் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த வழக்கு முடிவுக்கு வரும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.

 


இதன்போது வாழைச்சேனை பிரதேசபையின் தவிசாளர்,பிரதி தவிசாளர்,இரண்டு பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுதியளித்து. இந்த வழக்கானது மீண்டும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

வீரமுனை செய்தியாளர்

 


நூருல் ஹுதா உமர்


காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் ஏதென்ஸில் நடைபெறும் 2025 ஐரோப்பிய தன்மை செலவு பகுப்பாய்வு சங்கத்தின் (SBCA) மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வெளிநாட்டிற்குச் செல்வதால் காரைதீவு பிரதேச சபையின் மூத்த உறுப்பினரும், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளருமான எம்.எச்.எம். இஸ்மாயில் இன்று முதல் காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளராக கடமையேற்றார்.

இன்று (25) முதல் 05.12.2025 வரை காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளராக கடமையாற்ற தனது பொறுப்புகளை காரைதீவு பிரதேச சபை செயலாளர் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டார். இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான அறிவித்தலை முறையாக கிழக்கு மாகாண ஆளுநருக்கு காரைதீவு பிரதேச சபை தெரியப்படுத்தியுள்ளது.

 


வி.சுகிர்தகுமார்    


அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தாழ் நில பிரதேசங்களில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளது.
அக்கரைப்பற்று சந்தை பகுதி உள்ளிட்ட பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நேற்று முதல் ஆரம்பித்த பலத்த மழை இன்று (25) காலையிலும் தொடரும் நிலையில் மீண்டும் மழை பெய்யவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றது.
ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருகின்றது.
இதனால் மக்களது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்திலும் பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மரமொன்றும் வீட்டின் மீது வீழ்ந்துள்ளது.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவி;ற்குட்பட்ட வெள்ளநீர் வழிந்தோடும் பிரதான பனங்காட்டு பாலத்தின் கீழாக சல்வீனியா தாவரம் சூழ்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதனை அகற்றி வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணிகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் இன்று காலை முன்னெடுத்துள்ளார்.
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாசவின் பணிப்பின் பேரில் வெள்ளத்தை வடிந்தோடச் செய்யும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.