Showing posts with label SriLanka. Show all posts

 


மட்டக்களப்பில் நடைபெற்ற பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்ட விழிப்புணர்வு நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ கலந்து கொண்டார்.


மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூக அபிவிருத்திச் சபைகளை வலுப்படுத்துதல் மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படமாட்டாது என்றும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.


 தமிழக முதலமைச்சர் விஜய் பதவியேற்றமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்த நிலையில், முதல்வர் விஜய் ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.


 


போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய பட்டுவத்தே சாமர எனப்படும் சந்தேக நபரை 72 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


இலங்கை அரச புலனாய்வுச் சேவை மற்றும் அஸர்பைஜான் நாட்டு பாதுகாப்புச் சேவை இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு நடவடிக்கையின் மூலம் இந்த சந்தேக நபர் அஸர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்டார்.


இதனைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவினர் கடந்த 2026.05.10 அன்று அவரை இலங்கைக்கு அழைத்து வந்தனர்.


தற்போது மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


 


காலி, டங்கேந்தர டிக்சன் சந்திப் பகுதியில் இன்று (12) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளுது.




 காரில் வந்த மர்ம நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

(FilePhoto)
கொழும்பு, டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகக் குறைந்தது பத்து தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு விரைந்துள்ளன.


தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்தத் தீ விபத்தினால் இதுவரை எவருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், தீ விபத்து குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் பூதவுடல் மீதான இறுதிக்கிரியை இன்று (10) மாலை 5 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.


கடந்த எட்டாம் திகதி (08) காலை அவர் உயிர்மாய்ப்பு செய்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. 


இதற்கிடையில், இவரது மரணம் குறித்த பிரேதப் பரிசோதனையை முன்னெடுப்பதற்காக, கொழும்பு பிரதான விசேட சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்ன தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசேட சட்ட வைத்தியக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. 


கோட்டை நீதிவான் பசந்த அமரசேன வழங்கிய உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பிரேதப் பரிசோதனை நேற்று (09) காலை கொழும்பு சட்ட வைத்திய மற்றும் நச்சுயியல் நிறுவனத்தில் நடைபெற்றது. 


இதன்போது, மேலதிக ஆய்வுகூடப் பரிசோதனைகளுக்காக அவரது உடற்பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 


நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகளுக்காக தோண்டப்பட்டு, பின்னர் முறையாகச் சீரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளை புனரமைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்ய கல்முனை மாநகர சபைக்கு கல்முனை மேல் நீதிமன்றம் மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
குறித்த வழக்கு, இலங்கை நீதிக்கான மய்யம் (Center for Justice Sri Lanka) அமைப்பினால் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குடிநீர் இணைப்புப் பணிகளுக்காக மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல்வேறு வீதிகள் தோண்டப்பட்ட போதிலும், பணிகள் நிறைவடைந்த பின்னர் அவை முறையாக மறுசீரமைக்கப்படாததால் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகன சாரதிகள் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்ததாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இவ்வழக்கு நேற்று (08) வெள்ளிக்கிழமை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஜுட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கல்முனை மாநகர சபை சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தில் முன்னேற்ற அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையில், குடிநீர் இணைப்புகளுக்காக வெட்டப்பட்டிருந்த இடங்களில் இதுவரை சுமார் 300 வீதி பகுதிகள் முழுமையாகப் புனரமைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், எஞ்சியுள்ள வீதிப் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்ய மேலும் மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுவதாக மாநகர சபை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனை பரிசீலித்த நீதிபதி, மீதமுள்ள அனைத்து வீதிப் புனரமைப்புப் பணிகளையும் நிறைவு செய்ய 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் விண்ணப்பதாரர் சார்பில் இலங்கை நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் மற்றும் செயலாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் ஆகியோர் முன்னிலையாகினர்.
அதேவேளை, கல்முனை மாநகர சபை சார்பில் சட்டத்தரணி சப்ரின் சலாஹுதீன் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்களும் நீதிமன்றத்தில் முன்னிலை யாகியிருந்தனர்.

 


ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்கிடமாக இருப்பதால் ஐந்து பேர் கொண்ட விசேட சட்ட மருத்துவ அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் மரணப் பரிசோதனையை முன்னெடுக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, இன்று (09) முற்பகல் மரணப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதனையடுத்து, மரணப் பரிசோதனைக்கான சாட்சிகளை எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், அன்னாரது உடலத்தை அவரது மனைவியின் மூத்த சகோதரியிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

 


🔴​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை பெரும் சோகம் அரங்கேறியுள்ளது! 😭


​🛑 என்ன நடந்தது?

இன்று சனிக்கிழமை அதிகாலை, வைத்தியசாலையின் பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இருளைக் கிழித்துக்கொண்டு எழுந்த தீப்பிழம்புகள் மருந்துக் களஞ்சியத்தை முற்றாகச் சூழ்ந்துகொண்டன.


​⚔️ தீயுடன் பெரும் போராட்டம்!

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த யாழ். மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள், தீயைக் கட்டுப்படுத்த உயிரைப் பணயம் வைத்துப் போராடினர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே தீ ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 🚒💦


​💊 கோடிக்கணக்கான இழப்பு!

இந்த விபத்தில் புற்றுநோய் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைக்குத் தேவையான பல கோடி ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் தீயில் கருகிச் சாம்பலாகியுள்ளன. இது ஒட்டுமொத்த வடமாகாண சுகாதார சேவையையும் உலுக்கியுள்ளது. 🥹💸


​🔍 காரணம் என்ன?

மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

​யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது! 🩹🙏

​​#Jaffna #JaffnaTeachingHospital #Emergency #SriLankaNews #BreakingNews #FireAccident #MedicalCrisis #JaffnaNews #HealthAlert #யாழ்ப்பாணம் #தீவிபத்து #மருத்துவமனை #TrendingNews #lka


 இந்த சீசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எளிதாக இருக்கவில்லை. தொடர் காயங்களால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவர்கள் முதல் 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி மழையால் தடைபட்டதால் ஒரு புள்ளி கிடைத்தது. அந்த முதல் 6 போட்டிகளில் அவர்கள் பெற்றிருந்த ஒரே புள்ளி அதுதான். மற்ற 5 போட்டிகளிலுமே தோற்றிருந்தார்கள்.

ஆனால், தற்போது தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது அந்த அணி. ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவு செய்த கேகேஆர், நேற்று (மே 8) டெல்லி கேபிட்டல்ஸ் அணியையும் வீழ்த்தியது.

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 142 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. பின்னர் அந்த இலக்கை 14.2 ஓவர்களிலேயே சேஸ் செய்தது நைட் ரைடர்ஸ். அந்த அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 10 போட்டிகளில் 9 புள்ளிகள் பெற்று 7வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது அஜிங்க்யா ரஹானேவின் அணி. நெருக்கடியான இந்த கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற டாப் 4 இடத்தில் இருக்கும் அணிகளே அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும்போது, கேகேஆர் தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருப்பதன் காரணம் என்ன?


 நூருல் ஹுதா உமர்


கல்வி, உயர் கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் பிரதம மந்திரியும், கல்வி, உயர் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனது முன்மொழிவில் இலங்கையில் அமைந்துள்ள 06 தமிழ் மொழி மூல தேசிய கல்வியியற் கல்லூரிகளில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் 1992ம் ஆண்டிலிருந்து 20 வருடங்கள் உடற்கல்வி பாடநெறி சிறப்பாக கற்பிக்கப்பட்டு நாட்டுக்குத் தேவையான சிறந்த உடற்கல்வி ஆசிரியர்களை உருவாக்கி வந்தது. 2013ம் ஆண்டில் சிலரது தனிப்பட்ட நலனுக்காக இக்கற்கை நெறி இடைநிறுத்தப்பட்டன. எனவே, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் உடற்கல்வி கற்கை நெறிக்கு போதுமான இடவசதிகள், வசதியான விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளதுடன் அண்மையில் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 02 உடற்கல்வி விரிவுரையாளர்கள் இக்கல்லூரிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, இடைநிறுத்தப்பட்ட உடற்கல்வி பாடநெறியினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை கௌரவ பிரதம மந்திரி அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக விளக்கங்களைப் பெற்றுக் கொண்ட கௌரவ பிரதம மந்திரி அவர்கள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்ட உடற்கல்வி கற்கை நெறியினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அவர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் போட்டிப் பரீட்சைக்கு தோற்றி 172 புள்ளிகளுக்கு குறைவாகப் புள்ளிகளைப் பெற்ற தகுதியான 1216 ஆசிரியர்கள் மீதமாக உள்ளனர். இவ் ஆசிரியர்களில் 50 வயதினை பூர்த்தி செய்தவர்களும் உள்ளனர். சென்ற 26.11.2025 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கௌரவ பிரதம மந்திரி அவர்களை சந்தித்த அதிபர் பரீட்சை எழுதிய ஆசிரியர்களுக்கு இதுவரை அதிபர் நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. பரீட்சை எழுதியவர்களில் பலர் 50 வயதினை தாண்டியுள்ளனர். எனவே, இவர்களின் விடயமாக கல்வி அமைச்சின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்குமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

அதிபர் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அவர்களை பதிலளிக்குமாறு பிரதம மந்திரி பணித்தார்.

இது தொடர்பாக பதிலளித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அதிபர்களால் கல்வி அமைச்சுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டு தற்போது அந்த வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்துள்ளன. எனவே, அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு அதிபர் நியமனம் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.


 ( காரைதீவு  வேதசகா)

கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில், இலக்கியச் சந்திப்பொன்று கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில்  நேற்று நடைபெற்றது.

இந்த இலக்கியச்சந்திப்பில், கல்முனைப் பிராந்தியத்தைச் சேர்ந்த கலைஞர்களான வைரமுத்து கணேசன் ( சேனைக்குடியிருப்பு), சதானந்தம் ரகுவரன் (கோட்டைக்கல்லாறு), சண்முகம் சுந்தரராஜன் (சேனைக்குடியிருப்பு) ஆகியோர் தத்தமது காத்திரமான இலக்கிய அனுபவப் பகிர்வுகளை  பகிர்ந்தனர்.

இலக்கியச் சந்திப்பிற்கு சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா  தலைமை வகித்தார்.

எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மைய ஸ்தாபகர் புவி.கேதீஸ்ஸின் வழிகாட்டலில், செயலாளர் கே.சாந்தகுமார், பொருளாளர் என்.அருளானந்தம், திட்டமிடல் பணிப்பாளர் ப.சந்திரமோகன் ஆகியோர் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள, இளம் ஊடகவியலாளர் ரிஷி வீடியோ படப்பிடிப்பை மேற்கொண்டார்.

 


முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில், அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கிடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இதனால் அப்பகுதியில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.


"அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறிவிட்டது"

ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளையகமான கதம் அல்-அன்பியா அமெரிக்கா திட்டமிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


ஈரானின் ஜஸ்க் கடலோரப் பகுதியிலிருந்து புறப்பட்ட ஈரானிய எண்ணெய் கப்பலையும், ஃபுஜைரா துறைமுகத்திற்கு அருகே சென்ற மற்றொரு கப்பலையும் அமெரிக்கப் படைகள் இலக்கு வைத்துள்ளன.


 கடல் பகுதியில் மட்டுமன்றி, ஈரானின் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.


"இது தற்காப்புத் தாக்குதல் மட்டுமே"

ஈரானின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க இராணுவம், ஈரானின் தூண்டுதலற்ற தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே தாம் செயல்பட்டதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


ஹோர்முஸ் நீரிணையை மூன்று அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் கடக்க முயன்றபோது, ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சிறிய ரகப் படகுகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியது.


 இந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஈரானிய இராணுவத் தளங்கள் மீது துல்லியமான பதிலடித் தாக்குதல்களை அமெரிக்கப் படைகள் மேற்கொண்டுள்ளன.


 உலகளாவிய மசகு எண்ணெய் போக்குவரத்தில் ஹோர்முஸ் நீரிணை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையேற்றம் மற்றும் பிராந்திய பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

 


ஈரானுடன் எட்டப்படவுள்ள புதிய உடன்படிக்கைக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கோடும், ஹோர்முஸ் நீரினையை மீண்டும் திறக்கும் குறிக்கோளுடனும் முன்னெடுக்கப்பட்ட "புரொஜெக்ட் ஃப்ரீடம்" இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.


இருப்பினும், ஈரான் துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் முற்றுகைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ஜனாதிபதி டிரம்ப், பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளின் கோரிக்கைகளையும், தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ள உடன்படிக்கைகளின் முன்னேற்றத்தையும் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.


"ஒப்பந்தத்தை இறுதி செய்து கையெழுத்திட முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக, குறுகிய காலத்திற்கு இந்த இராணுவ நடவடிக்கையை நிறுத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட "புரொஜெக்ட் ப்ரீடம்" நடவடிக்கை காரணமாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவியதுடன், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.


இதற்கிடையில், ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும், ஹோர்முஸ் நீரினையில் கப்பல் போக்குவரத்திற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், "மிகவும் கடுமையான மற்றும் அழிவுகரமான" பதிலடி கொடுக்கப்படும் என்று வொஷிங்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியும் மேலாண்மை சேவைகள் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் நாயகமுமான விமல் எஸ்.கே.லியனகமவை இலங்கை சுங்கத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


தற்போதைய சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி பி.அருகொட இன்று (05) தனது சேவைக்காலத்தை நிறைவு செய்கிறார்.


அதன்படி, லியனகம நாளை (06) முதல் சுங்கத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


நூருல் ஹுதா உமர் 


பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்தில் கடந்த 30.04.2026 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களின் விவகாரம் தொடர்பில் இன்று (05) மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்ட இளைஞர்களின் நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மௌலவி முஹம்மத் மிப்லால், “இவ்வாறான விவகாரங்களை அரச இயந்திரம் கையாளும் முறை குறித்து ஆளுநர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், பொலிஸார் முறையான விதத்தில் செயல்பட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வழக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக எங்களிடம் தெரிவித்துள்ளார்” என்றார்.

மேலும், சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தனது அறிக்கையை ஆளுநர் பார்வையிட்டதையடுத்து, இவ்விவகாரத்தில் அவர் தனிப்பட்ட கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பிரதியமைச்சர் சுனில் வட்டக்கல ஆகியோருடனும் ஆளுநர் கலந்துரையாடியுள்ளதாகவும், சம்பவம் குறித்து தாமும் கவலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டதாக மிப்லால் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், உழ்ஹிய்யா தொடர்பான விடயங்களும், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் மே மாதக்கூட்டமும், அதனுடன் இணைந்த விசேட கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (03) காலை 10.00 மணிக்கு சம்மாந்துறையில் அமைந்துள்ள பிக் செப் உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எல். அப்துல் சலீம் தலைமையில் நடைபெற்றதுடன், செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ஜே.எம். நவாஸ் அவர்களின் ஒழுங்கமைப்பில் நிகழ்வுகள் ஒழுங்காக முன்னெடுக்கப்பட்டன.

நிகழ்வின் ஆரம்ப கட்டமாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல். ரியாஸ் ஆதம் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நினைவுச்சின்னமும் பொன்னாடையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தங்களது சட்டத் தொழிலில் சுமார் 10 ஆண்டுகளை நிறைவு செய்து சிரேஷ்ட நிலையை அடைந்த மூன்று சட்டத்தரணிகள் – ஏ.ஜே.எம். நவாஸ், யூ.எல்.எம். சமீம் மற்றும் வி.ரி. ஹசீனா – ஆகியோர் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் கௌரவப்பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இக்கௌரவிப்பு நிகழ்வுகள் அனைத்தும் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாதாந்திர கூட்டம், தலைவர் கே.எல். அப்துல் சலீம் தலைமையில் பகற்போசனத்துடன் நடைபெற்றது. கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் சங்கத்தின் பொருளாளர் யூ.எல்.சிபானா உள்ளிட்டவர்களுடன் சிரேஷ்ட சட்டத்தரணிகளான முன்னாள் தலைவர் எஸ்.எம்.எம்.முஸ்தபா, சங்கத்தின் தற்போதைய உப தலைவர் ஏ.எம்.நசீல், வை.எம்.அன்வர் சியாத், ஏ.எச் அறூஸ், எம்.எப்.சாமிலா, ஏ.எல் றியாஸ் ஆதம், எம்.எம்.சஹுபீர் உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் என ஏராளமான சட்டத்தரணிகள் பங்குபற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR 

 


தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த இடி மின்னல் தாக்கங்கள் குறித்து வானிலை ஆய்வாளர் கலாநிதி சசிந்த ஜெயசேகர பொதுமக்களுக்கு விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 


பலத்த இடி மின்னல் நிலவும் சந்தர்ப்பங்களில் வெட்டவெளிகளிலும் ஏனைய வெளி இடங்களிலும் தங்கியிருப்பது உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மிகவும் அபாயகரமான செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


எனவே, இத்தகைய காலப்பகுதிகளில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்த்து, ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடப்பட்ட பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்தோடு, பயணங்களில் ஈடுபடுபவர்கள் இடி மின்னல் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மூடிய நிலையில் உள்ள வாகனங்களுக்குள் தங்கியிருப்பது பாதுகாப்பானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


பொதுமக்கள் இந்த வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றி மின்னல் அபாயங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


(ஞான பிரசாந்தன்)


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.