Showing posts with label SriLanka. Show all posts


 நூருல் ஹுதா உமர்


நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி டாக்டர் ஜே.சிவசுப்ரமணியம் அவர்களின் தலைமையில், நிந்தவூர் 3 பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட அரச ஸ்தாபனங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நோய் தடுப்பு பரிசோதனை இன்று (16.01.2026) மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, டெங்கு கொசு பெருகக் கூடிய இடங்கள் உள்ளனவா என ஆராயப்பட்டதுடன், அவற்றை அகற்றுவது தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு வேலைத்தளங்களில் சுகாதார நிலைமைகள் ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடுகள் காணப்பட்ட இடங்களில் உடனடி சீரமைப்பு மேற்கொள்ளுமாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அதேவேளை, வீதியோர கடைகள் மற்றும் உணவகங்களில் உணவு சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறை, சுற்றுப்புற சுத்தம் மற்றும் உணவு கையாளும் நடைமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. சுகாதார விதிமுறைகளை மீறிய இடங்களுக்கு தேவையான எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டன.

பொது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில், இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டெங்கு நோய் பரவலைத் தடுப்பதற்கும், உணவு சுகாதாரத்தை பேணுவதற்கும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 


நூருல் ஹுதா உமர்


காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் திரு. அ. சுந்தர குமார் அவர்கள் தனது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில், அவரை கௌரவிக்கும் சேவை நலன் பாராட்டு விழா காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பாஸ்கரன், உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், சபை உறுப்பினர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்டது.

நிகழ்வின் போது, திரு. அ. சுந்தர குமார் அவர்கள் அரச சேவையில் ஆற்றிய நீண்ட கால அர்ப்பணிப்பான சேவை, நிர்வாக திறமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் குறித்து நினைவுகூரப்பட்டு பாராட்டப்பட்டன. அதன் அடையாளமாக அவருக்கு நினைவுச் சின்னமும், கௌரவப்பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், நிகழ்வில் உரையாற்றியோர், தனது சேவை காலம் முழுவதும் பிரதேச சபையின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் நலனுக்கும் உறுதுணையாக செயல்பட்ட அவரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டனர். ஓய்வுபெற்ற பின்னரும் அவர் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

பிரதேச சபை பிரமுகர்கள் பலரினதும் பங்கேற்பு மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களுடன் இந்த சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

 


அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரி பிரதான வீதியில் ஆற்றையும் கடலையும் இணைக்கும் பாலத்தின் கீழ் நட்டாற்றில் உள்ள பெரும் பாறையில் பாரிய முதலையொன்று துயில் கொள்வதைக் காணலாம். நீண்ட தூரத்தில் இருந்து எடுத்த படம் இது.


படங்கள் வி.ரி. சகாதேவராஜா 

 


கடுமையான வெள்ளப்பெருக்கின் போது நீரில் மூழ்கிய கலா ஓயா பாலத்தின் வழியாக பேருந்தை ஓட்ட முயன்றதற்காக, இரண்டு பயணிகளின் மரணத்திற்கு காரணமானதாகவும், உயர் நீதிமன்ற நீதிபதி உட்பட 66 பேரின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 (வி.ரி.சகாதேவராஜா)

பொத்துவில் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கழுகொல்ல கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு கனடா - கல்முனை பிராந்திய இணையத்தினர் பொங்கல் பரிசை நேற்று வழங்கினர் .

கல்முனை கனடா பிராந்திய இணைய நிறுவனத்தினர் அந்த மக்களுக்கு சாரி மற்றும் பொங்கல் பானை அகப்பை உள்ளிட்ட உள்ளீடுகளை 
தாயக இணைப்பாளர் என். சௌவியதாசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான வி.ரி.சகாதேவராஜா, எஸ். சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கழுகொல்ல சமூக செயற்பாட்டாளர் நந்தினி தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் 21 பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப தாய்மாருக்கு இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டது.

.


 உலகில் தமிழர் சமூகத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக தைத் திருவிழா அல்லது தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


 தை மாதத்தின் முதல் நாளில் ( ஜனவரி 14 அல்லது 15) நடைபெறும் இந்த பண்டிகை, தமிழர் வாழ்வில் மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் சமூகத்திலும் மிக முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படும் ஒன்று. 
இது இயற்கையின் பெருமையை, விவசாயத்தின் மகத்துவத்தை மற்றும் குடும்ப, சமூக உறவுகளின் அமைதியை உணர்த்தும் ஒரு பண்பாட்டு விழா ஆகும்.

விவசாய  நன்மை மற்றும் நன்றி என்பவற்றை மக்களிடம் கொண்டு வரும் ஒரு சிறப்பான விழாவாகும்.
பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம்
 என்பது சூரிய தேவனை மரியாதை செய்யும் திருவிழாவாகும்.இயற்கைக்கு நன்றி சொல்லும் நாள் இது.

தை பொங்கலுக்கான சிறந்த நேரம்:*

2026 ஜனவரி 15 வியாழக்கிழமை தைப்பொங்கல் திருநாள் காலை 8 முதல் 9 மணி வரை சூரிய ஓரை என்பதால், இந்த நேரத்தில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மகத்தான பலனை தரும். 9 முதல் 10 மணி வரை சுக்கிர ஓரை, இந்த நேரத்தில் பூஜை செய்தால் குடும்ப சாந்தி, செல்வ வளம் அதிகரிக்கும். இந்த இரண்டு நேரங்களையும் நேரங்களையும் தவறினால், காலை 10.30 முதல் 11.30 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். பக்தியுடன் செய்த வழிபாடு வருடம் முழுவதும் நன்மையும், சந்தோஷமும் தரும் என்று சித்தர்கள் குரல் தெரிவிக்கிறது.
     


என்ற ஆன்மீகத்தை வளர்க்கும் முக்கிய காரணியாகும்.



தைப் பொங்கல் என்பது மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பான சின்னமாகும். இது நமக்கு இயற்கைக்கு நன்றி சொல்லும், குடும்பங்களோடு சந்தோஷத்தை பகிரும், சமூகத்தின் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு அற்புத வாய்ப்பு அளிக்கிறது.


பாரம்பரியத்தின் சிறப்பான சின்னமாகும். இது நமக்கு இயற்கைக்கு நன்றி சொல்லும், குடும்பங்களோடு சந்தோஷத்தை பகிரும், சமூகத்தின் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு அற்புத வாய்ப்பு அளிக்கிறது.


 இந்த ஆண்டு தைத் திருவிழா ஒவ்வொருவருக்கும் சந்தோஷம், வளம் மற்றும் நற்பணி நிறைந்ததாக அமைய வாழ்த்துகள்.

தைப்பொங்கல்  பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அவையாவன:
1️⃣ போகி
– பழையதை அகற்றி, புதியதை வரவேற்கும் நாள்
– வீடுகளைச் சுத்தம் செய்து, போகி தீ மூட்டல்
2️⃣ தைப்பொங்கல் (சூரிய பொங்கல்)
– சூரிய பகவானுக்கு நன்றி கூறும் முக்கிய நாள்
– புதுப் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு
3️⃣ மாட்டுப் பொங்கல்
– விவசாயத்திற்கு உதவும் மாடுகளுக்கு மரியாதை
– மாடுகளை அலங்கரித்து பூஜை செய்வது
4️⃣ காணும் பொங்கல்
– உறவினர்கள், நண்பர்கள் சந்திக்கும் நாள்
– வெளியே சென்று மகிழ்ச்சி பகிரும் நாள்.

தைப்பொங்கல் விழா குடும்பத்தையும், சமூகத்தையும் ஒன்றிணைக்கும் சக்தியுடையது. வீட்டின் சமையலறை, நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் இணைத்து அனைவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. இதனால் தந்தை, தாய், பிள்ளைகள் மற்றும் பெரியோர் அனைவரும் ஒரு குடும்பமாக சேர்ந்து திருவிழாவை கொண்டாடுவார்கள்.
இத்தகைய திருவிழா நம் பாரம்பரிய பண்பாடு, விவசாய வாழ்வு, இயற்கையுடன் இணைந்து வாழ்வது என்பதில் சிறந்த படிப்பினையை வழங்குகிறது. தைப்பொங்கல் நமது முன்னோர்களின் வாழ்வின் மகத்தையும், தமிழ் பண்பாட்டின் அழகையும், சமூக உறவுகளின் வலிமையையும் சுட்டிக்காட்டுகிறது.
முடிவாக, தைப்பொங்கல் மக்களுக்கு நல்வாழ்க்கை, உழைப்பின் மதிப்பு மற்றும் சமூக ஒற்றுமையை உணர்த்தும் ஒரு ஆன்மிகப் பெருமை கொண்ட திருவிழாவாகும். இது வாழ்வின் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளும், நமது பாரம்பரியத்தின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு பொதுப் பண்டிகையாகும். 
அத்தகைய பண்டிகையை உரிய சம்பிரதாய முறைப்படி கொண்டாடி மகிழ்வோம்.

வித்தகர் விபுலமாமணி விரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்


 


மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள இக்பால் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கான நடமாடும் சேவை இன்று புதன்கிழமை (14) இக்பால் நகர் பல்தேவை கட்டிடத்தில்  இடம்பெற்றது 


மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.


இதன்போது காணி ஆவணம் தொடர்பான ஆலோசனை,அஸ்வெசுவ, அரசாங்க கொடுப்பணவுகள் தொடர்பான ஆலோசனைகள்,இறப்பு பிறப்பு பதிவுகளுக்கான வழிகாட்டல், மக்களின் குறைபாடுகளை கேட்டறிதல்,ஆயுர்வேத வைத்திய சேவை என பல சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன .


இவ் நடமாடும் சேவையில் மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு சேவை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


காலடிக்குச் சென்று மக்களுக்கு சேவை வழங்கும் இவ் நடமாடும் சேவையானது ,ஒவ்வொரு புதன்கிழமையும்  ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது

 


இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறைக்கப்படுமென வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. 


இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை நாளை மறுநாள் (16) முதல் ஒரு கிலோகிராம் 125 ரூபாவினால் குறைக்க பால்மா இறக்குமதியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்

 வாசகர்களுக்கு இந்த பொங்கல் புது தொடக்கம், புது நம்பிக்கை,பெரும் மகிழ்ச்சி கொண்டு வரட்டும்!

உங்கள் இல்லம் செழிப்பாலும் சந்தோஷத்தாலும் நிரம்ப, உழைப்பிற்கு இனிய பலன் கிடைக்க, புதிய நம்பிக்கைகள் மலர இந்த பொங்கல் திருநாள் துணை நிற்கட்டும். 

இனிய பொங்கல் வாழ்த்துகள்

 


ஈரானில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் நடப்பு அரசாங்கத்தின் வீழ்ச்சியை காட்டுவதாக ஜேர்மனி விமர்சித்துள்ளது.

 


ஈரானின் ஆட்சி அதன் “இறுதி நாட்கள்களில் இருப்பதாக ஜேர்மனி சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார்.

 


வன்முறை மூலம் மட்டுமே ஒரு ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும் என்றால், அந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


ஈரானில் தற்போது இடம்பெற்று போராட்டங்களில் அமெரிக்கா தலையிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.


அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டிய ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.


தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், கல்வியலாளர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கல்வித் துறை தொழிற்சங்க பிரதிநிதிகளைக் கொண்ட முறையான பொறிமுறையின் மேற்பார்வையின் கீழ் அந்த செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அவர்கள் இங்கு முன்மொழிந்தனர்.


கல்வி மறுசீரமைப்புகளை வெற்றிகரமாக்குவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெறுவது அத்தியாவசியமானது என்றும், சந்தேகம் அல்லது அவநம்பிக்கையுடன் மாற்றத்தை மேற்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய கல்வி மறுசீரமைப்புகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.


அரசாங்கம் தொடங்கியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து இங்கு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, முதலாம் தர மறுசீரமைப்பு செயற்பாடுகளைத் திட்டமிட்டபடி செயற்படுத்துவதாகவும், ஆனால் மொடியுல்களைத் தயாரிப்பதில் எழுந்துள்ள சிக்கல்கள், ஆசிரியர் பயிற்சியில் ஏற்படும் தாமதம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்த்து 6ஆம் வகுப்பு பாட மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் தொடங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


மறுசீரமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போட்கள், தொலைக்காட்சிகள் மற்றும் கணனிகள் போன்ற அடிப்படை வசதிகளைப் பெற்றோரின் பணத்தில் அன்றி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.


மேலும், மாகாணங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், ஊதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் இங்கு ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.


இலங்கை பிரிவெனா ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் வண. வகமுல்லே உதித தேரர், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வண. யல்வெல பஞ்ஞாசேகர தேரர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக அலஹப்பெரும, கல்வி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.ஜி.பி.எல். லால் குமார, அதிபர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ ஆகியோர் உட்பட பல ஆசிரியர் தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பலர் இதில் கலந்து கொண்டனர். தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.


 


நூருல் ஹுதா உமர்


அண்மைக்காலமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைவாக (12) திங்கட்கிழமை மாலை நுளம்பு கட்டுப்பாட்டு புகை விசிறல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நடவடிக்கை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலை வீதியில் இடம்பெற்றதுடன், டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை தடுக்கும் வகையில் புகை விசிறல் மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில், சுற்றுப்புறங்களை சுத்தமாக பேணுதல், நீர் தேங்கி நிற்கும் இடங்களை அகற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 


இலங்கை பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற, வேலையில்லாத ஆயுர்வேத வைத்தியர் சங்கம் மற்றும் அரச வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் சித்த வைத்தியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்குமிடையிலான சந்திப்பு  நேற்று (12) அலரி மாளிகையில் இடம்பெற்றது.



 


நூருல் ஹுதா உமர்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் முதற்கட்ட வேலைத்திட்டமாக நிர்மாணிக்கப்பட்ட வாவிக்கரை பூங்கா மற்றும் அதனுடன் இணைந்த மிதக்கும் படகுகள் தொகுதி ஆகியவற்றை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் நேற்று (12) நேரில் சென்று பார்வையிட்டார்.

அத்தோடு, குறித்த பூங்காவின் விஸ்தரிப்பு பணிகள் தொடர்பாகவும், 2026 ஆம் ஆண்டுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் ஒதுக்கப்படவுள்ள நிதியின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அடுத்தகட்ட வேலைத்திட்டங்களுக்கான முன்னாய்வுகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக, சம்பந்தப்பட்ட வேலைத்திட்டங்களுக்கான நிதிகள் விரைவில் ஒதுக்கப்படவுள்ளதுடன், வாவிக்கரை வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள ஏனைய பிரதேசங்களின் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்புடைய அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளர் எம்.ஐ.எம் ஜெஸீம், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களின் ஏகோபித்த தீர்மானங்களுக்கு அமைவாக, அனர்த்தங்களுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட அனைத்து வீதிகளையும் சீரமைத்து, அவற்றை தொடர்ச்சியாகப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை பொதுமக்களிடம் ஒப்படைத்து, அதனை மேற்பார்வை செய்யும் மக்கள் மையப்படுத்தப்பட்ட நடவடிக்கையை அக்கரைப்பற்று பிரதேச சபை முன்னெடுத்து வருகிறது.

அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று (13) செவ்வாய்க்கிழமை, பள்ளிக்குடியிருப்பு முதலாம் பிரிவில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்திற்கு பின்னால் காணப்படும் வீதிகள், பொதுமக்களின் நேரடி பங்களிப்புடனும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தின் ஈடுபாட்டுடனும்  சீரமைக்கப்பட்டு வருகின்றன.

வரம்புக்குட்பட்ட வளங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருந்த போதிலும், தன்னால் முடிந்த அளவைத் தாண்டி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக அக்கரைப்பற்று பிரதேச சபை மேற்கொண்டு வரும் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளதாகவும், சவால்களை இதய சுத்தியுடன் ஏற்றுக்கொண்டு, மக்கள் சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக், உப தவிசாளர், உறுப்பினர்கள், சபை செயலாளர், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அனைத்து ஊழியர்கள் மற்றும் இந்த நடவடிக்கைகளுக்கு தோள் கொடுத்து பங்களிக்கும் அனைவருக்கும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்

 


நூருல் ஹுதா உமர் 


கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியிலிருந்து 7வருட ஆலிம் கற்கையை நிறைவு செய்து வெளியேறிய நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நான்கு உலமாக்கள் நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து அறிமுகம் செய்து கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் நஜ்முதீன் நபீஸ், மர்ஹூம் றபாய்தீன் சப்னாஸ், முஹம்மத் நவாஸ் அஷ்பாக் அகமட் , ஹாரூன் முகம்மட் சப்ரி ஆகியோர் அன்பளிப்புகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

நற்பிட்டிமுனை ஜாமிஉல் ஹிக்மா சார் பள்ளிவாசல்கள் கூட்டமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ. எல்.நாஸிர் கனி (ஹாமி) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசல், ஆஷுர் பஸார் பள்ளிவாசல் மற்றும் றாஜிஹி பள்ளிவாசல் ஆகியவற்றின் நிருவாகிகள், இமாம்கள், புதிய உலமாக்களின் உறவினர்கள் அடங்கலாக பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


 


இலங்கையின் மூத்த பத்திரிகையாளரும் பாதுகாப்பு ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 81.


இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் தெஹிவளையில் உள்ள கிராண்ட் மசூதி கல்லறையில் நடைபெறும் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது உடல் தெஹிவளை ஹில் ஸ்ட்ரீட், சிறிவர்தன சாலை, எண் 11 C/1 இல் காலை 9.00 மணி முதல் வைக்கப்படும்.

பல தசாப்தங்களாக நீடித்த பத்திரிகைத் துறையில், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டதற்காக இக்பால் அத்தாஸ் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டார்.

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். 


மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பரந்தன் - முல்லைத்தீவு வீதியில், முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தின் போது காருக்குள் சிக்கி நசுங்கிய நிலையில் இருந்த இருவரது உடல்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. 

படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். 

 

இந்த விபத்தில் விசுவமடு பகுதியை சேர்ந்த 32, 34, 46 வயதானவர்களே உயிரிழந்தனர்.

மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். 

 

கிளிநொச்சி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் திகதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது.


ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 420 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. அவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2,600 பேர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


இந்த சூழலில், ஈரானின் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத் அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், கலகக்காரர்களுக்கு உதவுபவர்கள் அல்லது வன்முறையில் பொருட்களை சூறையாடுபவர்கள் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான, விரைவான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


அந்த குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரேவித தண்டனைதான் கிடைக்கும். அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்ட கூடாது என வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.


ஈரானின் பதற்ற நிலைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், வத்திக்கான் சிட்டியில் பாப்பரசர் லியோ இறை வணக்க நிகழ்ச்சிக்கு பின்னர் கூடியிருந்த கூட்டத்தினரின் முன் பேசும்போது, ஈரான் மற்றும் சிரியா போன்ற மத்திய கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான பதற்ற நிலையால், மக்கள் பலர் பலியாகி வருகின்றனர்.


அவர்களுடன் என்னுடைய எண்ணங்கள் உள்ளன. ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன். அதற்காக வேண்டி கொள்கிறேன் என்றார்.


இதேபோன்று, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் கூறும்போது, வன்முறையை தவிர்க்க வேண்டும் என ஈரானிய அதிகாரிகளை வலியுறுத்தினார். அயர்லாந்து, இஸ்ரேல் நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களும் ஈரான் சூழல் பற்றி வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.