Showing posts with label SriLanka. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித என்புகள், எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையின் மனச்சாட்சியையே உலுக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.

இந்தக் கண்டுபிடிப்பு, எமது நாட்டின் கடந்தகால வன்முறை மற்றும் காணாமற்போனோர் தொடர்பான தீர்க்கப்படாத கேள்விகளை மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. பல தசாப்தங்களாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து பதில் தேடி அலைந்து வரும் குடும்பங்களின் வலியையும் வேதனையையும் இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும்,

மனித உயிர்களின் மதிப்பை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மதிக்க வேண்டியது ஒவ்வொரு நாகரிக சமூகத்தினதும் கடமையாகும். எனவே செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக சுயாதீனமான, வெளிப்படையான, நியாயமான மற்றும் நீதியான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

காலம் தாழ்த்தப்படும் ஒவ்வொரு நாளும், உண்மையை எதிர்நோக்கி காத்திருக்கும் குடும்பங்களின் வேதனையை மேலும் அதிகரிக்கின்றது. ஆகவே சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும், நீதித்துறை அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும், மனித உரிமை அமைப்புகளும் ஒருங்கிணைந்து அறிவியல் ரீதியான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

இந்த மனித எச்சங்கள் யாருடையவை? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? அவர்களது குடும்பங்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்க வேண்டும். உண்மையை மறைப்பதும், காலம் தாழ்த்துவதும் அல்லது விசாரணையை பலவீனப்படுத்துவதும் எந்தவொரு சமூகத்திற்கும் நீதியை வழங்காது.

போராலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பது நிலையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் அடிப்படையாகும். உண்மையை அறியும் உரிமையும், நீதியைப் பெறும் உரிமையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அடிப்படை மனித உரிமைகளாகும்.

எனவே செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும், எந்தவித அரசியல் அல்லது நிர்வாக தலையீடுகளுமின்றியும் முன்னெடுக்கப்பட்டு, காலம் தாழ்த்தாது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன். உண்மையை வெளிக்கொணர்வதே நல்லிணக்கத்தின் முதல் படியாகும்; நீதியை நிலைநாட்டுவதே நிலையான சமாதானத்தின் அடித்தளமாகும் என்று தெரிவித்துள்ளார்

 

வி.சுகிர்தகுமார்          


 15 வருடங்களின் பின்னர் அக்கரைப்பற்று 241 ஆம் படைப்பிரிவு இராணுவத்தினரின் வசமிருந்த ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கு உரிமையான அரிசி குற்றும் ஆலை அமைந்திருந்த சுமார் 2 ஏக்கர் காணி இன்று (22)விடுவிக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்க அவர்களின் உத்தரவின்பேரில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இக்காணி விடுவிக்கப்பட்டது.
கடந்த 15 வருடங்களாக இக்காணியை வழங்கக்கோரி பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் நடவடிக்கை எடுத்து வந்தது. இருப்பினும் அச்செயற்பாடு வெற்றியளிக்கவில்லை.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஊடாக அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் இது தொடர்பான மகஜர்கள் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து இக்காணி விடுவிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் நா.ஏரம்பமூர்த்தி தெரிவித்தார்.
காணி விடுவிப்பு கடித ஒப்பந்தமானது இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்றதுடன் விடுவிப்பு ஒப்பந்தத்தில் அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் டபிள்யு இ.டி.எச்.ஆர்.கே. வெலிக்கண்ணா மற்றும் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி இராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன் கேர்ணல் திலீப ஆகியோர் கையொப்பமிட்டனர்.
தொடர்ந்து காணி விடுவிப்பிற்கான ஒப்பந்த கடித்தினை பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்தன் பிற்பாடு களவிஜயமொன்றினை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட இடத்தினையும் பார்வையிட்டனர்.
இதேநேரம் இக்காணி விடுவிப்பிற்காக உத்தரவிட்ட ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு அக்கரைப்பற்று 241 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உள்ளிட்டோருக்கும் இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.
காணி கையளிப்பு நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் ஆர்.ரதீசன் மற்றும் பலநோக்கு கூட்டுறவுச்சங்க நிருவாகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

 நூருல் ஹுதா உமர


தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன (NISD) சமூகப் பணி கற்கைகளின் இறுதி வருட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஃபர்ஸ்ட்ஹேண்ட் – சமூகப் பணி இடையீட்டு முகாம் 2026” நிகழ்வு இன்று (20) சாய்ந்தமருது கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வு, சமூகப் பணி கள அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குவதோடு சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வுகளையும் முன்னெடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூகப் பணி கற்கைகளின் இறுதி வருட மாணவர் ஏ.என். அஹமட் அத்னாஃப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கெளரவ விருந்தினராக BCAS கல்முனை வளாகத்தின் முகாமையாளர் கே.எம். இஷ்ராக் கலந்து கொண்டதுடன், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக அதிகாரி எம்.என்.எம். ரம்ஸான், நிர்வாக கிராம அலுவலர் எம்.எஸ்.எம். நளிர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத், மனநல ஆலோசனை அதிகாரி எம்.எப். பர்சானா, உலகளாவிய பிரிவுகள் இலங்கையின் திட்ட இயக்குநர் எஸ். ரூதரன், ஆல்பா சுகாதார ஆலோசனை நிறுவனத்தின் உதவி முகாமையாளர் ஏ.எம்.எம். தக்மீல் மற்றும் இஸ்லாமிக் ரிலீப் அமைப்பின் கண்காணிப்பு, மதிப்பீடு, பொறுப்புக்கூறல் மற்றும் கற்றல் ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. ஹனீஃப் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு சமூகப் பணி, மனநலம், போதைப்பொருள் தடுப்பு, சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக கருத்தரங்குகள் மற்றும் வழிகாட்டல் அமர்வுகளை நடத்தினர்.

நிகழ்வில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அதிகாரிகள், விரிவுரையாளர்கள், மேற்பார்வையாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

இந்த சமூகப் பணி இடையீட்டு முகாமை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இறுதியாண்டு பயிற்சி மாணவர்களான ஏ.என். அஹமட் அத்னாஃப், எம்.கே.எப். சனா அப்ரி மற்றும் ஆர்.எம். ஹசன் ஆகியோர் அடங்கிய ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கட்டுநாயக்க விமான நிலையத்தின் 'கோல்ட் ரூட்' முனையத்தைப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்த முயன்ற டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயது மாணவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கனடாவிலிருந்து டுபாய் வழியாக இலங்கை வந்த விமானத்தில் போதைப்பொருட்களைக் கொண்டு வந்துள்ளார்.அவரது 2 பயணப் பொதிகளில் 146 பாக்கெட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 37.639 கிலோ கிராம் ஹசீஸ் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி சுமார் 37 கோடியே 70 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.


விமான நிலைய வரலாற்றிலேயே 'கோல்ட் ரூட்' வசதியைப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறை. சந்தேகநபர் தற்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


பெறுபேறுகள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இம்முறை அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை 11,790 என குறிப்பிட்டார். 


மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளனர்.


அதனடிப்படையில், விஞ்ஞானத்தில் 70.1% மற்றும் கணிதத்தில் 72.03% மாணவர்கள் சித்தியடைந்துள்ளனரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அம்பாறை பெண் வைத்தியர் மரணம்: ஐடி காதலனின் மறுபக்கம் அம்பலம்!

அம்பாறை வைத்தியசாலையின் இயன்முறை வைத்தியர் (Physiotherapist) ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. 


அவரது காதலனே சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது. 


இதற்கமைய, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் உள்ள இடமொன்றில் கார் ஒன்றுக்குள் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக நேற்று (17) பிற்பகல் 2.00 மணியளவில் தெல்தெனிய பொலிஸாருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. 


பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, பூட்டப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் சடலம் இருப்பதைக் கவனித்துள்ளனர். 


அதனைத் தொடர்ந்து, பொலிஸார் அந்த காரின் கதவை உடைத்து அவரது சடலத்தை வெளியே எடுத்து சோதனையிட்டனர். 


அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக பணிபுரிந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது. 


அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். 


அதன்படி, அந்த ஹோட்டலின் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தபோது, மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. 


சந்தேக நபரான காதலன் கன்​னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் என்றும், அவர் தற்போது அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. 


இதனால், அவரைக் கண்டுபிடிப்பதற்காகப் போலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 


தமது தங்கை நுவரெலியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருப்பதாகவும், அவர் பல நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என்பதால் அந்த இடத்தை சோதனையிட உதவி தேவை என்றும் கூறி கோட்டவெவ, தலாவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (17) காலை நுவரெலியா போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 


அதற்கமைய, நுவரெலியா பொலிஸ் குழுவினர் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று சோதனையிட்ட போது அங்கு யாரும் இருக்கவில்லை. 


எனினும், அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்த போது, கடந்த 16ஆம் திகதி இரவு 9.50 மணியளவில் அந்தப் பெண்ணின் காதலன் அங்கு வரும் காட்சி பதிவாகியிருந்தது. 


அங்கு சுமார் 40 நிமிடங்கள் தங்கியிருந்த அந்த நபர், பின்னர் இரவு 10.30 மணியளவில் மயக்க நிலையில் இருந்த இளம்பெண்ணைத் தூக்கிக்கொண்டு வெளியேறியுள்ளார். 


அதன் பின்னர், அவர் அந்தப் பெண்ணைக் காரில் ஏற்றிச் சென்றுள்ளார். 


இளம்பெண் காணாமல் போனமை குறித்து நுவரெலியா பொலிஸார் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்திருந்த பின்னணியில், தெல்தெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. 


தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் ஒன்றில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக அந்த அழைப்பில் கூறப்பட்டுள்ளது. 


அதற்கமைய, தெல்தெனிய பொலிஸ் குழுவினர் அந்த இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது, காரின் முன் இருக்கை நீட்டப்பட்டு, கருப்பு நிற துணியால் மூடப்பட்டிருந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. பூட்டப்பட்டிருந்த காரின் கதவை உடைத்து பொலிஸார் சடலத்தை வெளியே எடுத்தனர். 


அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அந்தச் சடலம் நுவரெலியாவில் காணாமல் போன இளம்பெண்ணுடையது என்பது உறுதி செய்யப்பட்டது. 


ஷம்யா தர்ஷனி என்ற 34 வயதுடைய அவர், அம்பாறை பொது வைத்தியசாலையில் இயன்முறை மருத்துவ நிபுணராக பணிபுரிந்தவர் என்பதைப் பொலிஸார் கண்டறிந்தனர். 


கண்டி, கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான அவருக்கும், உயிரிழந்த பெண்ணுக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகின்றது. 


குறித்த பெண் தனது காதலனுடன் கனடா செல்லும் நோக்கத்தில், வட்டிக்கு மற்றும் சில நபர்களிடமிருந்தும், வங்கியிலிருந்தும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கடனாகப் பெற்று காதலனிடம் கொடுத்துள்ளார். 


இருப்பினும், இதுவரை வெளிநாடு செல்வதற்கான எந்த ஏற்பாடுகளும் நடக்காத பின்னணியில், கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டதால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


இத்தகைய சூழ்நிலையில் தான், அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி நுவரெலியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளார். 


இதற்கிடையில், அவர் தனது சகோதரனைத் தொலைபேசியில் அழைத்து, தான் 3 நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். 


மேலும், அம்பாறை வைத்தியசாலையின் மனநல மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்து, தான் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


அதற்கு அந்த மருத்துவர், உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று மனநல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார். 


எனினும், கடந்த 16ஆம் திகதி மாலை 4 மணிக்குப் பிறகு பெண்ணின் கைபேசி செயலிழந்ததை அடுத்து, அவரது சகோதரர் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 


மேலதிக விசாரணைகளில், பெண்ணின் உடலைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட கார், அவரது காதலனின் அம்பாறை பகுதியைச் சேர்ந்த மற்றொரு காதலிக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. 


இதற்கிடையில், சடலம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையின் பின்னர், மரணத்திற்கான காரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


இது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்ட மரணமா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 


இதற்கமைய, பெண்ணின் காதலனான தினேத் திஸாநாயக்க என்பவரைக் கைது செய்வதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாரவின் நேரடி மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகின்றன.

 


மனநலம் சார்ந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் திருமண மற்றும் விவாகரத்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட அடையாள விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


மனைவி மீதான மனநல பாதிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு கணவர் தாக்கல் செய்திருந்த விவாகரத்து தொடர்பான மேல்முறையீட்டு மனு ஒன்றை தள்ளுபடி செய்த மதுரை உயர் நீதிமன்ற கிளைவு, 'ஒருவரின் மனநலம் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தனிநபரின் கண்ணியம், தனியுரிமை மற்றும் சமூக வாழ்வில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்' என்றும் சுட்டிக்காட்டியது.


"பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் பெண்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்பது 'மனநலம்' தொடர்பானதாகவே இருக்கும். தீர்ப்பு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வழங்கப்பட்டாலும் கூட, இந்த குற்றச்சாட்டுகள் அவர்களை வாழ்க்கை முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும், எனவே இந்த உத்தரவு மிகச் சிறந்த முன்னெடுப்பு" என வழக்கறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.


அதேசமயம், ஒருவர் விவாகரத்து பெற்றவரை திருமணம் செய்யும்போது அவரது பின்புலம் குறித்தோ அல்லது முந்தைய திருமண உறவு குறித்தோ அறிந்துகொள்ளும் வகையிலும் வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்பதையும் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.


நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ஆர்.ஆர்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய மதுரை உயர் நீதிமன்ற கிளை விவாகரத்து தொடர்பான ஒரு மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்தது.




இந்த வழக்கில், கணவர் தாக்கல் செய்த மனுவில், திருமணத்துக்கு முன்பே மனைவிக்கு ஸ்கிசோஃப்ரேனியா (Schizophrenia - ஒருவித மனநல ஒருங்கின்மை) இருந்ததாகவும், அந்த விவரம் மறைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு அவர் விவாகரத்து கோரியிருந்தார்.


ஆனால் அவரது மனுவை தஞ்சாவூர் குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார்.


கணவரது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் போதுமான மருத்துவ ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறிய நீதிமன்றம், 'மருத்துவ பரிந்துரைகள் மற்றும் மருந்துச் சீட்டுகள் மட்டும் ஒருவருக்கு ஸ்கிசோஃப்ரேனியா இருப்பதை நிரூபிக்க போதுமானதல்ல' என்றும் கூறியது.



பெயர்களை வெளியிடுவதால் என்ன பாதிப்பு?


'மனநலக் குறைபாடு குறித்த குற்றச்சாட்டுகள் பின்னர் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டாலும், அதனால் ஏற்படும் சமூக அவப்பெயர் பல ஆண்டுகள் நீடிக்கக்கூடும்' என நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.


"திருமண வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், சமூக உறவுகள் மற்றும் தனிநபரின் கண்ணியம் ஆகியவற்றில் இத்தகைய குற்றச்சாட்டுகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்."


"ஒருவரின் பெயருடன் 'மனநல நோயாளி' என்ற முத்திரை இணைக்கப்படுவது அவருடைய வாழ்நாள் முழுவதும் அவரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும் என்பதை பாதிக்கக்கூடும்" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற வழக்குகளில் எதிர்காலத்தில்,


கணவன், மனைவி ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்படக் கூடாது.

முகவரி, குடும்ப விவரங்கள் உள்ளிட்ட அடையாளம் காண உதவும் தகவல்கள் நீக்கப்பட வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளில் தரப்பினரை "X" மற்றும் "Y" போன்ற குறியீட்டு பெயர்களால் குறிப்பிட வேண்டும்.

மனநலக் குறைபாடு தொடர்பான விவாகரத்து மற்றும் குடும்பநல வழக்குகளில் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய வழக்குகளில் மனுக்கள், உத்தரவுகள், தீர்ப்புகள் உள்ளிட்ட பொதுமக்கள் அணுகக்கூடிய நீதிமன்ற ஆவணங்களில் அடையாள விவரங்கள் வெளியிடப்படக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


"மனநலக் குறைபாடு குறித்த கடுமையான குற்றச்சாட்டுடன் கூடிய திருமணம் சார்ந்த வழக்குகள் அதிகரித்துள்ளதாலும், வழக்கு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் அடையாளம் அவர்களின் வாழ்நாளின் எஞ்சிய நாட்களில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலும், இதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது" என நீதிபதிகள் தெரிவித்தனர்.


இந்த உத்தரவு அனைத்து விவாகரத்து வழக்குகளுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் கூறவில்லை. மனநலக் குறைபாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் இடம்பெறும் திருமண மற்றும் குடும்பநல வழக்குகளை மையமாகக் கொண்டே இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.


விவாகரத்து வழக்குகள், மதுரை உயர்நீதிமன்ற அமர்வு, பெண்கள், மனநலம் 

படக்குறிப்பு,சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை

ஏன் இந்த உத்தரவு முக்கியமானது?

"இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிடுவதற்கு ஏற்கெனவே சட்டத் தடை உள்ளது. ஆனால், மனநலக் குறைபாடு குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெறும் குடும்பநல வழக்குகளில் பெயர்களை மறைக்க வேண்டும் என்ற தெளிவான நீதிமன்ற வழிகாட்டுதல்கள் அரிதாகவே உள்ளன. அப்படியிருக்க இதை வரவேற்க வேண்டும்" என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸ்.


தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் கையாண்ட ஒரு வழக்கை மேற்கோள் காட்டிய அவர், "சில வருடங்களுக்கு முந்தைய அந்த விவாகரத்து வழக்கில், பெண் தரப்பில் நான் வாதாடினேன். தனது பெயர் கொண்ட தீர்ப்பு அல்லது உத்தரவு நகல்கள், விவாகரத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் பொதுவெளியில் இருப்பது தனது எதிர்கால வாழ்க்கையை, வேலைவாய்ப்புகளை பாதிக்கக்கூடும் என அவர் கருதியதால், அவரது அடையாளத்தை வழக்கு விசாரணையில் வெளிப்படுத்த வேண்டாம் என நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்தோம். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது" என்கிறார்.


இங்கு ஒருவர் மீது, குறிப்பாக திருமணம் சார்ந்த வழக்குகளில் எளிதாக குற்றச்சாட்டுகள் வைத்துவிடலாம், அதுவும் மனநலம் சார்ந்த குற்றச்சாட்டு எனும்போது அது பிற்காலத்தில் 'பொய்' என நிரூபிக்கப்பட்டாலும் கூட, அது அவர்களுக்கு ஒரு களங்கமாகவே இருக்கும் என குறிப்பிடுகிறார் ராஜீவ் ரூஃபஸ்.


'சமூகம் என்னை மனநோயாளியாக பார்க்கிறது'

விவாகரத்து வழக்குகள், மதுரை உயர்நீதிமன்ற அமர்வு, பெண்கள், மனநலம் 

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

திருநெல்வேலியைச் சேர்ந்த 60 வயதான, பெயர் குறிப்பிட விரும்பாத பெண் ஒருவர் திருமண உறவு சார்ந்த ஒரு வழக்கில் தனது கணவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளால் மிகவும் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.


பிபிசி தமிழிடம் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவையும் வரவேற்றார்.


"எனது 30 வருட திருமண வாழ்வின் இறுதியில் நான் மனநல நோயாளியாக மாற்றப்பட்டேன்" என்கிறார் அவர்.


"திருமண வாழ்க்கையில் தொடர்ந்து உடல் மற்றும் மனநலம் சார்ந்த சித்திரவதைகள், அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். எங்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி, எனது கணவர் இரண்டாம் திருமண உறவின் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டார். அதையும் பொறுத்துக்கொண்டேன்."


"எனக்கு மனரீதியாக ஏதோ ஒரு பிரச்னை உள்ளது என ஒரு மனநல மருத்துவர் மூலம் நம்பவைத்து, சில மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வைத்தார். என்னுடைய நகைகள், சொத்துகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு, எனது 54வது வயதில் என்னை கைவிட முயற்சித்தபோது, என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எங்கள் ஊர் நீதிமன்றத்தில் 'குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின்' கீழ் வழக்கு தொடர்ந்தேன்" என்கிறார் அப்பெண்.


தொடர்ந்து பேசிய அவர், "ஆனால் என் கணவர் எனக்கு தீராத மனநோய் உள்ளது, அதனால் நான் வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறினார். இறுதியில் எனக்கு எந்த மனநல பிரச்னைகளும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து எனது கணவர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், அங்கும் எனக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது" என்கிறார்.


அவர் கூறிய வழக்கு விவரங்களை அவரது வழக்கறிஞரிடம் பேசி பிபிசி தமிழ் உறுதி செய்துகொண்டது.


தீர்ப்புகள் சாதகமாக வந்தாலும் சமூகம் மற்றும் உறவுகள் தன்னைப் பார்க்கும் பார்வை மாறவில்லை என்கிறார் அப்பெண்.


"இங்கு ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதை மட்டும் தான் சமூகம் கவனிக்கும், அவை பொய் என நிரூபிக்கப்படுவதை பலரும் கவனிப்பதில்லை." என்கிறார் அவர்.


கூடுதல் வழிகாட்டுதல்கள்

"குடும்ப நல வழக்குகளில் மனநலப் பிரச்னைகள் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைத் தடுக்கும் வகையில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவு அமைந்துள்ளது" என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தகுமாரி.


"அதேசமயம், 'மனநோயாளிகளை' மனிதாபிமானத்தோடு அணுகும் ஒரு உத்தரவு இது. பொதுவெளியில் அவர்களை அடையாளப்படுத்துவது தவறு என்பதை இது அழுத்தமாக வலியுறுத்துகிறது" என்றும் அவர் கூறுகிறார்.


இந்த உத்தரவு வரவேற்கப்பட வேண்டியது என்றாலும், திருமண உறவு சார்ந்த சில வழக்குகளில் தங்களது அல்லது எதிர்தரப்பின் பெயர் வெளியாவது அவசியம் என நினைப்பவர்கள் அதற்கான சிறப்பு அனுமதியை நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறுகிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுரேகா.


"அதேபோல, ஒருவர் மறுமணம் செய்துகொள்ளும்போது, அவர் முந்தைய திருமண உறவிலிருந்து எதற்காக விலகினார் என்பதை துணையாக வருபவர் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்பினால், அதற்கு சட்டத்தில் எளிய வழிகள் இருக்க வேண்டும்."


"தனிப்பட்ட நபரின் பெயர் கொண்ட ஆவணங்கள் பொதுவெளியில் இருக்காது எனும்போது, சிறப்பு அனுமதி மூலம் தகுதியான காரணத்துடன் ஒருவர் அதை அணுகுவதற்கான வழிகாட்டுதல்களை நீதிமன்றங்கள் அளிக்க வேண்டும்" என்றும் கூறுகிறார் வழக்கறிஞர் சுரேகா.

 நூருல் ஹுதா உமர்





தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு, காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாடசாலை வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு உத்தியோகத்தர்கள், காரைதீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள், காரைதீவு பிரதேச சபை  உறுப்பினர்கள், சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கையின் போது, சுற்றுப்புற சுகாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் நுளம்பு பெருக்கத்தைத் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

டெங்கு ஒழிப்பு என்பது சுகாதாரத் துறையின் மட்டுப்படுத்தப்பட்ட பொறுப்பல்ல என்றும், பொதுமக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் ஒன்றிணைந்து தங்களது முழுமையான பங்களிப்பினை வழங்கியதுடன், ஆரோக்கியமான மற்றும் டெங்கு நோயற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினர்.


நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

ஜூன் 15 முதல் 20 ஆம் திகதி வரை மதஸ்தலங்கள், பொதுச் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை இலக்காகக் கொண்டு டெங்கு கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் பொறுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பரிசோதனைகளின் போது நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக சுத்தம் செய்யப்பட்டதுடன், தேங்கியிருந்த நீரும் அகற்றப்பட்டது. சுற்றுப்புற சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், டெங்கு பரவலுக்கான காரணிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், நோய் பரவலைத் தடுக்கும் நடைமுறைகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. டெங்கு நோயின் ஆரம்ப அறிகுறிகள், பரவும் விதம் மற்றும் தடுப்பு வழிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வீடுகள், தொழில் நிலையங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாகப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சுகாதார அதிகாரிகள், வாரந்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது ஒதுக்கி நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை பரிசோதித்து அகற்றுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

“டெங்கு ஒழிப்பு என்பது சுகாதாரத் துறையின் மட்டும் பொறுப்பல்ல; ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்பாகும்” என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்ததுடன், “சுத்தமான சூழல் – டெங்கு இல்லா சமூகம்” என்ற இலக்கை அடைவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் செயற்பாட்டு பங்களிப்பும் அவசியம் எனவும் குறிப்பிட்டனர்.


 நூருல் ஹுதா உமர்


மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டார் சரிட்டி (Qatar Charity) நிறுவனத்தின் அனுசரணையில் இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்கள் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபீர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது கட்டார் சரிட்டி நிறுவனத்தின் செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.எப்.எம். கப்ளீன் கலந்து கொண்டு, இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்களை கல்லூரி அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கல்லூரி மாணவர்களுக்கு சுத்தமான மற்றும் குளிர்ந்த குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த உதவி, பாடசாலை சமூகத்தினரால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. மேலும், இவ்வன்பளிப்பை வழங்கிய கட்டார் சரிட்டி நிறுவனத்திற்கும், இதனைப் பெற்றுக்கொள்வதற்காக முனைப்புடன் செயற்பட்ட திருமதி நசீஹா சஹ்பி அவர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.

இந்த அன்பளிப்பு மாணவர்களின் நலன் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பாக அமையும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்         

 மனிதவலு வேலைவாய்ப்புத்திணைக்களம் மற்றும் தொழில் அமைச்சு ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த தொழில் சந்தை 2026 இன் நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று(17) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் மனிதவள அபிவிருத்தி உத்;தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ்லீன் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மாவட்;ட செயலக இணைப்பாளர் என்.அருளானந்தம் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்; ரி.பரமானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதிதிகள் ஜதீஸ்வரா நடனாலய மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் வரவேற்க்கப்பட்டனர்.
தொழில்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் வழங்கும் நிறுவனங்களுடன் தொழில் தேடுநர்களை இணைக்கும் ஒரு பாலமாக இந்நிகழ்வு நடைபெற்றதுடன் தொழில் சந்தையில் 20 இற்கும் மேற்பட்ட துறைசார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொழில் வெற்றிடங்கள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
நிகழ்வில் மூன்றாம் நிலைக்கல்வி ஆணைக்குழுவினால் அதிகாரமளிக்கப்பட்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரும் அக்கரைப்பற்று தொழில் நுட்ப கல்லூரியின் வளவாளருமான எம்.எஸ்.எம்.பிஸ்ரின் தொழில் வழிகாட்டல் தொடர்பில் சிறப்பு விளக்கமளித்தார்.
இதேநேரம் 25 வயதிற்கு மேற்பட்டோருக்கான இலவச மருத்தவ பரிசோதனையினை தாதியர் உதவியாளர் பயிற்சி நெறியை வழங்கிவரும் ஐ என் பி எஸ் கல்லூரி நடாத்தியதுடன் தொழில் முயற்சியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்கள் பயன்படுத்தக்கூடிய நவீன தொழில் நுட்ப உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இத்தொழில் சந்தையில் பெருந்திரளான தொழில் தேடுநர்களான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்ளை சமர்ப்பித்துள்ளதுடன் நன்மையடைந்தனர்.


 நூருல் ஹுதா உமர்


சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வெறும் மேடைப் பேச்சுகளிலும் விளம்பர நிகழ்வுகளிலும் மட்டுப்படாமல் நடைமுறையிலும் வெளிப்பட வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சபூர் ஆதம் வலியுறுத்தியுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் அண்மைய அமர்வில் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நிர்வாகத்தின் கீழ் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத நிலை தொடர்வது கவலைக்குரிய விடயமாகும் என தெரிவித்தார்.

அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரிமியர் லீக் போட்டித் தொடரை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இதுவரை கழிவறை வசதி ஏற்படுத்தப்படாதிருப்பதை சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகக் கூறினார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினை குறித்து சபையில் சுட்டிக்காட்டியிருந்த போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக இளைஞர்கள் மைதான மதில்கள் மற்றும் புல்வெளிப் பகுதிகளைப் பயன்படுத்தும் நிலை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அக்கரைப்பற்று பொதுச் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்குத் தேவையான கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்ததையும் அவர் நினைவூட்டினார்.

“மக்கள் பயன்படுத்தும் பொது இடங்களில் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவது என்பது வெறும் கட்டுமானப் பணியல்ல. அது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் மனித கண்ணியத்துடன் தொடர்புடைய அடிப்படை பொறுப்பாகும். எனவே மற்றவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உபதேசம் செய்வதற்கு முன் தமது நிர்வாகத்தின் கீழ் உள்ள இடங்களின் நிலைமைகளை முதலில் சீரமைக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

தனது கோரிக்கைகளைத் தொடர்ந்து, பொது விளையாட்டு மைதானத்திற்கும் பொதுச் சந்தை பள்ளிவாசலிற்கும் தேவையான கழிவறை வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகர முதல்வர் சபையில் உறுதியளித்துள்ளதாகவும் சபூர் ஆதம் தெரிவித்தார்.

மக்களின் அன்றாட தேவைகளை அடையாளம் கண்டு அவற்றை சபையின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தப் பொறுப்பை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் கடுமையான வைத்தியர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர் வலியுறுத்தினார்.

காரைதீவு பிரதேச சபையின் நான்காவது சபையின் 12ஆவது மாதாந்த சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (16) தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் பிரதேச சபை அலுவலக சபா மண்டபத்தில் நடைபெற்றபோது உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்றபோது அங்கு நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை கண்கூடாகக் கண்டேன். ஐந்து வைத்தியர் பதவிகளுக்கான அனுமதி இருந்த போதிலும் தற்போது மூன்று வைத்தியர்கள் மட்டுமே கடமையில் உள்ளனர். வெளிநோயாளர் பிரிவில் (OPD) அதிகளவான நோயாளர்கள் வைத்தியர்களின் பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

நானும் எனது குடும்ப உறுப்பினருக்கான சிகிச்சைக்காகச் சென்றபோது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் வைத்தியசாலைப் பொறுப்பு மருத்துவ அதிகாரியிடம் விசாரித்தபோது வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதாக அறிந்து கொண்டேன்.

சாய்ந்தமருது மக்களுக்கு மட்டுமன்றி மாளிகைக்காடு, காரைதீவு, மாவடிப்பள்ளி உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் இவ்வைத்தியசாலையை நம்பியே சிகிச்சை பெற்று வருகின்றனர். சில சந்தர்ப்பங்களில் பொத்துவில் பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் வருவதை காண முடிகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற முடியாத பலர் அரச வைத்தியசாலைகளை நம்பி வருகின்றனர். இந்நிலையில் அரச வைத்தியசாலைகளிலேயே வைத்தியர்கள் இல்லாத நிலை மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும், சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட பெண் வைத்தியர் ஒருவர் கடமையைப் பொறுப்பேற்கும் முன்னரே சம்மாந்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதனால் மக்களின் சுகாதார சேவைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார்.

எனவே, கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீடு செய்து சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைதுசெய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர் (IGP), குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் .

 


டெங்கு நோய் பரவலால் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட ஐ.டி.எச்., ராகம, களுபோவில ஆகிய வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். 


கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,


இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 11,000க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த நிலைமை வைத்தியசாலைகளுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ள அதேவேளை, முன்னிலை வைத்தியசாலைகளுக்கும் இது பெரும் சவாலாக மாறியுள்ளது.


டெங்கு நோயினால் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட ஐடிஎச், ராகம, களுபோவில ஆகிய வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக அரசாங்கத்துக்கும் பாரிய நட்டம் ஏற்படும். டெங்கு நோயாளர் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் அவர்களை பராமரிப்பதற்கு அரசாங்கத்தினூடாக அதிக நிதி செலவிட வேண்டும். அதன் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளவே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.


இந்தப் பின்னணியில் நேற்றிலிருந்து (15) எதிர்வரும் 20ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.


இதேவேளை, நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 41,466 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் கண்டுள்ளதுடன் 24 வரையிலான மரணங்கள் பதிவாகியுள்ளன.


அவர்களில் நால்வர் பாடசாலை மாணவர்கள் என்று கூறப்படுகின்றது. 89க்கும் அதிகமான வைத்திய அதிகாரிகள் பிரிவுகளுக்கு டெங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 ( வி.ரி.சகாதேவராஜா)


தேசிய இளைஞர்  சேவைகள் மன்றத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்படும் பத்து லட்சம் தொண்டர்கள் "1 million Volunteers" வேலைத்திட்டத்திற்காக இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகதேர்வானது. மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச  செயலாளர்  உ. உதயஸ்ரீதர்  தலைமையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இதன் போது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிலிருந்து Online முறைமை ஊடாக விண்ணப்பித்திருந்த 30இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் இந்த நேர்முகத்தேர்வில் பங்குபற்றியிருந்ததுடன், இளைஞர் சேவை உத்தியோகத்தர்  த. சபியதாஸ் ஒழுங்குசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச இளைஞர் மன்ற தலைவர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வட பகுதியில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில், அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



அமெரிக்க நேரப்படி காலை 11:20 மணியளவில், எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்திலிருந்து இந்த விமானம் புறப்பட்டுள்ளது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எதிர்பாராதவிதமாக விமானம் விபத்தில் சிக்கியது.


விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், அவசரக்கால மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.



அமெரிக்க விமானப்படையின் மிக முக்கிய மற்றும் வலிமைமிக்க போர் ஆயுதமாக இந்த B-52 ரக விமானங்கள் கருதப்படுகின்றன. 


1950-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க விமானப்படையில் இந்த நீண்ட தூர உத்திசார் குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.எரிபொருள் நிரப்பாமல் தொடர்ந்து 8,800 மைல்கள் வரை பறந்து சென்று இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது.சாதாரண வெடிகுண்டுகள் மட்டுமின்றி, அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் படைத்தது.


வியட்நாம் போர், வளைகுடாப் போர், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சமீபத்திய ஈரான் உடனான மோதல்கள் வரை பல்வேறு முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் இந்த B-52 விமானங்கள் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.