பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு
இந்த வருடத்திற்கான பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜூலை 6-7 ஆம் திகதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் என்று பிரேசில் அறிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டு வரை வளரும் பொருளாதாரங்களின் கூட்டமைப்பிற்கு பிரேசில் தலைமை தாங்குகிறது.
மேலும் உலகளாவிய தெற்கு நாடுகளிடையே உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் பிரிக்ஸ் அமைப்பு கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் இணைந்து நிறுவப்பட்டது. பிறகு, 2010ஆம் ஆண்டு தென் ஆபிரிக்கா இந்த அமைப்பில் இணைந்தது.
கடந்த ஆண்டு, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் இந்த கூட்டமைப்பு விரிவடைந்தது.
இதுதவிர துருக்கி, அசர்பைஜான் மற்றும் மலேசியா முறையாக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளன, மேலும் பல நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர்வதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.