Showing posts with label Uva. Show all posts


 (க.கிஷாந்தன்)

பதுளை மாவட்டத்தில் லுணுகலை, பசறை, நமுனுகுலை, எல்ல ஆகிய பகுதிகளில் நேற்று (07.12.202) இரவு முதல் பலத்த காற்று வீசுவதனால் அப்பிரதேசங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இன்று (08.12.2022) காலை வீசிய பலத்த காற்றின் காரணமாக பசறை நமுனுகுலை வீதியில் 12ம் கட்டைப் பகுதியில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்தமையினாலும், அதே வீதியில் அம்பலம் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்தமையினாலும் பசறை பண்டாரவளைக்கான பிரதான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதோடு, மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவ படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

ஹொப்டன் 19ம் கட்டை பெருந்தோட்ட பகுதியில் வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்தமையினால் குறித்த வீட்டில் பெண்ணொருவர் காயமுற்ற நிலையில் லுணுகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் லுணுகலை பொலிஸ் சோதனை சாவடியின் மேல் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தமையினால் குறித்த சோதனை சாவடி சேதமடைந்துள்ளது.

மேலும், லுணுகலையில் இருந்து ஜனதாபுர ஊடாக மடூல்சீமை செல்லும் வீதி ஜனதாபுர பகுதியில் வீதியில் மின்கம்பம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

அத்துடன் நமுனுகுலை பொலிஸ் நிலையத்தின் கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளதோடு, நமுனுகுலை பகுதியில் பம்பரகல பத்தன, கந்தசேன, இந்துகல, பிங்கராவ, கனவரல்ல ஆகிய பகுதிகளில் வீட்டு கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளதோடு, சில வீடுகளுக்கு மேல் மரக்கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன.

பசறை பகுதியில் கோணக்கலை மேற்பிரிவில் வீடொன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் குறித்த வீடு சேதமடைந்ததோடு அப்பகுதியிலும் சில வீட்டு கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளன.

மேலும் மீதும்பிடிய, எல்டப், டெமேரியா, மீரியபெத்த, கமேவெல, ஆக்கரத்தன்ன, பசறை நகர் ஆகிய பகுதிகளிலும் காற்றினால் கூரைகள் சேதமடைந்துள்ளன. மேலும் மடூல்சீமை, றோபேரி பகுதிகளில் வீட்டு கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளன.

அத்துடன் பசறையிலிருந்து இங்குருகடுவ செல்லும் வழியாக புத்தல செல்லும் வீதியில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்தமையினால் குறித்த வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இக்காற்றின் காரணமாக அன்றாட தொழிலில் ஈடுபடுவோரும் பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட தொழிலில் ஈடுபடுவோரும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

இதேவேளை, இந்த மினி சூறாவளி காரணமாக சுமார் 26 பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 


நூருள் ஹுதா உமர்


பிரன்லி சிப் அமைப்பும் நியூ சன் ஸ்டார்  கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வலையத்தினால் பதுளையிலுள்ள பிந்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு பதுளை பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும், சக்கர நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டது. 

பதுளை சுகாதார வைத்திய அதிகாரி சுரேஸ்கண்ணண் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், சிறு வயதிலிருந்தே கண்களை கண் மருத்துவர் மூலம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். கண்களில் ஏதேனும் குறைபாடு இருப்பது தெரியவந்தால் ஆரம்ப கட்டத்திலேயே உரிய சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஆரம்பகட்ட சிகிச்சையை மேற்கொள்வது கண்களை பாதுகாக்கும் வழியாகும். வளர்ந்த குழந்தைகளையும் ஆண்டுக்கு ஒரு முறை கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதிப்பது அவசியம். புத்தகம் படிக்கும் போது எழுத்து வேளையில் ஈடுபடும் போது சரியான கோணம் போதிய அளவு வெளிச்சம் ஆகியன இருக்குமாறு பாத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் தொலைகாட்சி பார்ப்பது, கணினி விளையாட்டுகள், கைபேசி விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபடுவதால் கண்கள் சோர்வடைந்து கண்களின் விழித்திரையை பாதிக்கும். மாறுகண் ஏற்படுவதற்கான ஆபத்தும் இருக்கிறது.

கணினி துறையில் வேலை செய்பவர்கள் நீண்ட நேரம் கணினியை பார்த்துக்கொண்டு இருப்பதால் கண்கள் வறட்சி அடையும். எனவே அளவுக்கு அதிகமாக கண்களுக்கு வேலை தராதீர்கள். சில நேர இடைவெளியில் கண்களுக்கு பயிற்சி அளியுங்கள். வெளியில் சென்று வெளிப்பொருட்களை பார்த்து வாருங்கள். பசுமையான பொருட்களை சில நேரம் பாருங்கள். மேலும் விட்டமீன் ஏ உள்ள பழங்களை உண்ணுங்கள். அறிவொளி வளையம் 25 மாணவர்களுக்கு கண்களைக் கொடுத்துள்ளது. அவர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

இநிகழ்வில் பதுளை வலயக்கல்வி பணிப்பாளர் கார்த்தீபன், பதுளை சுகாதார வைத்திய அதிகாரி சுரேஸ்கண்ணண், ஆசிரிய ஆலோசகர் இந்திராணி யோகேந்திரன், பிரன்லிசிப் அமைப்பின் தலைவர் எஸ் யசோதராஜன், சேவைக்கான இணைப்பாளர் பன்னீர்ச்செல்வம், பிரன்லி சிப் அமைப்பின் செயலாளர் எம். எப் ஆரிபா, நியூ சன் ஸ்டார் கழகத்தின் தலைவரும் இளம் விஞ்ஞானியுமான சோ. வினோஜ்குமார், பாடசாலை ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

மக்களுக்கு யோகாக்கலையின் உண்மைகளை உணர்த்த, பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் மற்றுமொரு சேவையே " அறிவொளி வளையம்" என்பது

 


பதுளை, எல்ல, பண்டாரவளை, வெலிமடை, ஊவா பரணகம ஆகிய இடங்களில் விவசாயிகளும், பொது மக்களும் இணைந்து, விவசாயிகளுக்கு உரம் வழங்கக் கோரியும், எரிபொருள் விலையேற்றத்தை குறைக்கக் கோரியும், வாழ்க்கைச் செலவினை குறைக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்



 (க.கிஷாந்தன்)

 

2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் ஊவா மாகாண சபை வளாகத்தில் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் (01.01.2021) இன்று காலை நடைபெற்றது.

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தலைமையிலான அரசாங்கம் கொவிட் வைரஸ் பரவலிற்கு மத்தியில் பல அபிவிருத்தி திட்டங்களை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. "செயற்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு" என்ற வேலைத்திட்டத்தின் கீழ் மலரும் இப்புத்தாண்டில் மேலும் பல பாரிய வேலைத்திட்டங்கள் கிராம மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

கொவிட் வைரஸ் உலகிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. கொவிட்டிற்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பேணி எமது செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும். அர்ப்பணிப்பு, வினைத்திறன் ஆகியவற்றை பேணி அரச சேவையை மக்கள் நலனுள்ளதாக மாற்றியமைக்க அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் என ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

 

இதன்போது செயல்திறன் மிக்க அரச சேவைக்கான உறுதிமொழி வழங்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.

 

இந்த நிகழ்வில் பிரதான செயலாளர் பி.டீ. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் நிஹால் குணரத்தன, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பதவி நிலை உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட சக உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 


(க.கிஷாந்தன்)

பதுளை மாவட்ட கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்குழுவின் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் பதுளை மாவட்டச் செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது கொவிட் தொற்று நிலைமை காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உணவுப்பொதிகளே இவ்வாறு வழங்கப்படவுள்ளது. அதற்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் விபரங்களை உடனடியாக சேகரித்து எதிர்வரும் நான்கு தினங்களுக்குள் குறித்த உணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கை முன்னெடுக்குமாறு ஆளுநர் மாவட்ட செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் சுகாதார அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய பதுளை மாவட்டத்தில் காணப்படும் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்பதிவுகளை உடனடியாக இரத்துச் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை எந்த வித அவசர நிலைமைகளின் போதும் முகங்கொடுக்கத் தேவையான வைத்தியசாலை வசதிகள், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் கடைபிடிக்கவேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டல், வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீட்டுத் தோட்ட விவசாய வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள், ஊரடங்கு அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் தேனுக விதானகமகே, பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷன டெனிபிடிய, ஷாமர சம்பத் தசநாயக, பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், ஊவா மாகாண பிரதான செயலாளர், ஆளுநரின் செயலாளர், சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர், சுகாதார சேவை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 


(க.கிஷாந்தன்)

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஷாமில் உத்தியோகபூர்வமாக ஊவா மாகாண ஆளுநர் காரியாலயத்தில் தனது கடமைகளை 07.09.2020 அன்று மத வழிபாடுகளுடன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த அரசாங்க காலத்தில் வட மேல் மாகாண ஆளுநராக இருந்த இவர் ஊவா மாகாணத்தின் ஆளுநராக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

சிறிது காலம் மேல் மாகாண ஆளுநராக இருந்த இவர், கொழும்பு மாநகர சபையின் மேயராகவும் செயற்பட்டு வந்தார், சிறு காலம் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும் சேவையாற்றிருந்தார்.

07.09.2020 அன்று இடம்பெற்ற கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர் நிமல் ஸ்ரீபாலத சில்வா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷன தெனிபிட்டிய, சாமர சம்பத் தஸநாயக்க, டிலான் பெரேரா, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பொதுமக்கள், சர்வமத தலைவர்கள், மற்றும் இராணுவம், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

(க.கிஷாந்தன்)
பதுளையில் கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்படும் அறிகுறிகளுடன் யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் 05.02.2020 அன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் யுன்ஹாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த யுவதி சில தினங்களுக்கு முன்பே இலங்கையை வந்தடைந்துள்ளார்.
22 வயதுடைய மொனாராகலையைச் சேர்ந்த இவர், பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் செய்த மருத்துவ பரிசோதனையின்படி, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகித்தனர்.
அதன்படி, யுவதி பதுளை பொது வைத்தியசாலைக்கு சுகாதார மருத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (ஜி.எம்.ஓ.ஏ) ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலிதா ராஜபக்ஷ, ஒரு வசதியான அம்புலண்ஸில் சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றார்.

(க.கிஷாந்தன்)
பண்டாரவளை தந்திரியா பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளது.
பண்டாரவளை பதுளை பிரதான வீதியில் தந்திரியா பகுதியில் அமைந்துள்ள மோட்டர் சைக்கிள் பழுது பார்க்கும் கடையின் மீது இன்று (05.12.2019) அதிகாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடையின் பின் புறத்தில் உள்ள மண்மேடே இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக கடையில் இருந்த புதிய மோட்டர் சைக்கிளில்கள் 12ம், பழுது பார்க்க வந்த மோட்டர் சைக்கிளில்கள் 6ம் சேதமடைந்துள்ளது.
அத்தோடு, மோட்டர் சைக்கில்களின் திருத்த பணிகளை மேற்கொள்ளும் உபகரணங்களும் முற்றிலும் சேதமமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அனர்த்தம் காரணமாக எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கும் கடை உரிமையாளர் பொருட்களுக்கே பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் மண்மேடை அகற்றும் பணியில் பிரதேசவாசிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, புர்க்கா அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஊவா மாகாணத்தில் அந்த தடையுத்தரவை தொடர்ந்தும் அமுலில் வைக்குமாறு தான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவிக்கின்றார்.
ஊவா மாகாணத்தில் ஏதேனும் ஒரு பிரதேசத்தில் புர்க்கா அணிந்து யாரேனும் நடமாடுவார்களாயினும், அவர்களை கைது செய்து விசாரணைகளை நடத்துமாறு தான் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
ஊவா மாகாண வானொலி சேவையொன்றில் இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமயத்திற்காக, நாட்டையும், இனத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் ஒருபோம் இனவாதி கிடையாது என கூறிய அவர், முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளான தருணத்தில் தான் ஞானசார தேரருக்கு எதிரான செயற்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊவா மாகாண டிப்ளோமா தாரிகளின் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக தீர்வு காணப்படும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், அமைச்சின் செயலாளர் ரணசிங்க ஆகியோருடன் இன்று பிற்பகல் கலந்துரையாடிய போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மேன்முறையீட்டு குழு தற்போது உக்கிரமடைந்துள்ள இந்த பிரச்சினையை தீர்க்க விரைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெறுமனே பதுளை மாவட்டத்தில் மாத்திரம் இந்த பிரச்சினை காணப்படவில்லை எனவும் ஏனைய பகுதிகளிலும் இந்த பிரச்சினை எழுந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இந்த குழுவினர் நாளையும், நாளை மறுதினமும் கூடி ஆராய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவற்றை கருத்திற்கொண்டு இன்றைய தினத்திற்குள் கல்வியமைச்சின் தீர்மானங்களை ஊவா தமிழ் கல்வி அமைச்சு உள்ளிட்ட ஏனைய மாகாண கல்வி அமைச்சுக்களுக்கும் எழுத்து மூலம் அறிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கான உத்தரவாதத்தை கல்வி அமைச்சரும், அதன் செயலளரும் தனக்கு வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளி மாவட்டங்களில் நியமனம் பெற்றுள்ள ஊவா மாகாண டிப்ளோமா தாரிகளை அவர்களது சொந்த மாகாணங்களிலேயே பணியில் அமர்த்துமாறு அண்மையில் மத்திய கல்வி அமைச்சரிடம் அரவிந்தகுமார் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனடிப்படையில் அவரின் கோரிக்கையை பரிசீலிப்பதற்காக மத்திய கல்வி அமைச்சில் தற்போது மேன்முறையீட்டு குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
எனவே, அந்த மேன்முறையிட்டு குழுவின் இறுதி முடிவு வெளியாகும் வரையில் ஊவா மாகாண டிப்ளோமா தாரிகள் பிறமாவட்ட பாடசாலைகளுக்கு சமூகம் அளிக்கும் கால எல்லை மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளமை நினைவு கூறிப்பிடத்தக்கது

(க.கிஷாந்தன்)

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய 09.03.2019 அன்று சனிக்கிழமை காலை பதுளை வேவெஸ்ஸ தோட்டத்தில் 50 வீடுகளும், தெல்பெத்த தோட்டத்தில் 50 வீடுகளும் அடங்களாக 100 தனி வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இந்த வைபவத்தில் 100 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், ஊவா மாகாண சபை உறுப்பினர் ருத்தரதீபன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் எஸ்.ராஜமாணிக்கம், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

மலையக மக்களின் 200 வருட தொடர்வீட்டு வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இந்தியாவில் இருந்து கடைசியாக வரவழைக்கப்பட்ட மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்திய நிதி உதவியின் கீழ் இந்த புதிய வீடுகள் ஏழு பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)
தற்போது நாட்டில் போதை வஸ்த்து காரணமாக  பல்வேறு பிரச்சனைகள் நாளாந்தம் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் பாடசாலை மாணவர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இந்த பாவணை மலையக பாடசாலைகளிலும் பரவி வருவதாக தெரிய வருகின்றது.
இந் நிலையில் மலையக மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் சமூகத்தின் கடமையாக இருக்கின்றது. இருந்தும் அனைத்தும் அவர்களிடம் பொறுப்பளித்து விட்டு பெற்றோர்கள் ஒதுங்கி நிற்க முடியாது. அவர்களும் தங்கள் பிள்ளைகனின் நடிவடிக்கைகள் தொடர்பில் கவனமாக இருந்து செயற்பட வேண்டியது கட்டாயமானதுடன் இதற்கு அதிபர் ஆசிரியர்களுடள் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறுகின்றார் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்.
பதுளை பாராதி தழிழ் மகா வித்தியாலயத்தின் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிக்கு அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஊவா மாகாண முதல் அமைச்சர் சாமர சம்பந் தசநாயக்க ஊவா மாகாண சபை உறுப்பினர் வே.ருத்திரதீபன் உட்பட கல்வி அதிகாரிகள் அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றௌர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
தற்போது மலையகத்தில் மாணவர்களில் கல்வி வளர்ச்சியை நோக்கி செல்கின்றது. இதற்கு அதிபர்களினதும், ஆசிரியர்களினதும் பங்களிப்பு பாராட்டுக்குறியது. எமது சழூகம் முன்னேர வேண்டுமானால் அது கல்வியிலேயே தங்கியுள்ளது. அதற்காக அரசியல்வாதிகள் என்ற ரீதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அரசாங்கமும் பல்வேறு திட்டகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. இதனை பயன்படுத்தி மலையக மாணவர்களின் கல்வி நிலையை அபிவிருத்தி செய்ய வேண்டியது எம் அணைவரினதும் கடமையாக இருகின்றது. இதற்கு நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவோம்
இது இவ்வாறு இருக்க தற்போது இந்த நாட்டில் போதைவஸ்து பாவனையால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளன. இதனால் பாடசாலை மாணவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இவர்களை பாதுகாக்க பாடசாலை நிர்வாகத்துடன் பெற்றௌர்களும் இணைந்து செயற்பட வேண்டும். மாணர்கள் பாடசாலையில் ஆசிரியர்ளுடன் இருக்கும் நேரத்தை விட அதிகமான நேரம் பெற்றோர்களிடையே இருக்கின்றனர். அந் நேரத்தில் அவர்களின் செயற்பாடுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். எமது மாணவர்களுக்கு இந்த விடங்கள் ஒரு புதியவையாகும். ஆரம்பத்திலேயே இதனை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் அதனை விரும்பி செய்வதில்லை விற்பனை செய்பவர்களே பழக்கி வருகின்றார்கள். அது அவர்களின் வியாபார உக்தி. உங்களது பிரதேசங்களில் இவ்வாறான வியாபாரங்கள் நடைபெற்றாலோ அல்லது சந்தேகத்திற்கு இடமாக பாரும் செயற்பட்டாலோ  அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இரகசிய இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள். இதனை நாம் அனைவரும் செய்தாலே மாணவர்களை காப்பாற்ற முடியம். இதற்கு மலையக கல்வி சமூகத்துடன் நாம் அனைவரும் ஒன்றினைவோம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.  

(க.கிஷாந்தன்)
ஊவா மாகாணம் அப்புத்தளை தம்பேதன்ன மவுசாகல தோட்டத்தில் 2014ல் மண்சரிவில் பாதிப்புக்குள்ளாகியிருந்து வாழ்ந்து வந்த 68 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க  26.02.2019 அன்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் பொது செயலாளரும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ் மற்றும் அதிகாரிகள் இணங்காணப்பட்ட இடங்களை பார்வையிட்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் 26.02.2019 அன்று மதியம் மேற்படி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 68 குடும்பங்களுக்கு தம்பேதன்ன பெருந்தோட்ட பகுதியில் குடியிருப்புகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.  குறித்த ஒரு வீட்டிற்கு 12 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது.
இந்நிகழ்வின் போது பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி.விஜயலட்சுமி, பசறை பிரதேச சபையின் செயலாளர், தோட்ட முகாமையாளர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகள், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் அதிகாரிகள், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸின் கவனத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் கொண்டு வந்ததையடுத்து, இராஜாங்க அமைச்சர் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் 26.02.2019 அன்று அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடதக்கது.

பெண் சட்டத்தரணியின் வீடு இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் வெள்ளவாயா திமன்றத்துக்கு முன்பாக நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பெண் சட்டத்தரணியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி வெளிநாடொன்றுக்கச் சென்றிருந்த வேளையிலேயே, அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணியின் வீட்டுக்குள் ஏற்கனவே புகுந்த சாரதி, சட்டத்தரணியின் பெருமளவிலான தங்க நகைகளைத் திருடி, தனது மனைவியிடம் கொடுத்துள்ளார். இதனை மறைப்பதற்காக வீட்டுக்குத் தீ வைத்ததாகவும் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சாரதியின் மனைவியிடமிருந்து, தங்க நகைகள் சிலவும், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

(க.கிஷாந்தன்)

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களின் வீடுகளில் மாற்றம் செய்ததன் காரணமாகவும் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் மலசலகூடம் அமைத்தல் தொடர்பாகவும், மரக்கிறி பயிர் செய்கை மேற்கொண்டதற்காகவும் அதற்கு எதிராக தோட்ட அதிகாரிகளால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் மூலம் தொடுக்கப்பட்ட 1842 வழக்குகளை உடனடியாக வாபஸ் செய்ய நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் என இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பதுளை, அப்புத்தளை தொட்லாகல தோட்டத்தில்  "நீவ் டைகர்ஸ்" விளையாட்டு கழகத்தின் நடைபெற்ற இரவு பகலாக நடைபெற்ற கரபந்தாட்ட போட்டியை  இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்

இந் நிகழ்வில் ஏற்பாட்டு கழக உறுப்பினர்கள்  உட்பட பொது மக்கள்  கலந்துக் கொண்டனர்.

இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,

இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்களுக்கு வழக்கு தொடரப்பட மாட்டாது. இருந்தாலும் தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து தங்களுக்கான தேவையான வளங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

தோட்டங்களுக்கு காணிகள் வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கும் சக்தியாக நாம் இன்று மாறியுள்ளோம். காணிகள் பிரித்து கொடுப்பது தொடர்பாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சே நடவடிக்கை எடுக்கும்.

வீடுகள் கட்டுவதற்கு காணிகள் கொடுக்கப்படும். அத்தோடு, விளையாட்டு மைதானங்கள், ஆலயங்கள் அமைப்பதற்கும் மற்றும் பொது தேவைகளுக்காக காணி பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்காக தற்போது பெருந்தோட்ட பகுதிகளில் காடாக காணப்படும் தேயிலை மலைகளை மரக்கறி பயிர்செய்கை செய்வதற்கு பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

இந்த குறுகிய கால பகுதியில் மக்களின் தேவைகளை உணர்ந்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளேன் என்றார்.

(க.கிஷாந்தன்)
எல்ல கல்வி வலயத்திற்குட்பட்ட எல்ல - பல்லேகெட்டுவ சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 80 பேர் 17.01.2019  அன்று குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் சிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலையின் மைதானத்தில் குறித்த மாணவர்கள் உடற்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது, அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தரம் 1,2,3,4,5 ஆகிய வகுப்பறைகளை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் தெமோதர மற்றும் பதுளை  வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

49 வயதுடைய தனியார் பஸ் சாரதி ஒருவர் வெலிமட பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற கை கலப்பில் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

(க.கிஷாந்தன்)
வடக்கு, கிழக்கு பகுதிகளில் 30 வருட கால யுத்தத்திற்கு பின்னர் அதிகளவு கேரளா கஞ்சாவின் பாவனை அந்த மக்களை ஆதிக்கம் செலுத்துவதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆதங்கத்தை தெரிவித்தார்.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின நிகழ்வு 06.10.2018 அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் பவானி ரகுநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அதிதியாக கலந்து கொண்டு, பாடசாலையின் கட்டிடத்திற்கு நிதி தொகையினையும், ஆசிரியர்களுக்கான நினைவு பரிசில்களையும் வழங்கி வைத்தார். இதன்போது கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கும், தடுப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண சபைகளின் உறுப்பினர்களும் சபை கூட்டங்களில் தடுமாறுகின்றனர்.
இந்த பாவனை வடக்கில் அத்தியவசிய உணவு போல் பழகிவிட்டது. மலையக மக்கள் எவ்வாறு கோதுமை மாவில் ரொட்டியை ஆரம்ப உணவாக உட்கொள்கிறார்களோ அதேபோல் வடக்கில் கஞ்சாவின் பாவனை அதிகரித்துள்ளது.
இதேபோல் மலையகத்திலும் இவ்வாறான நிலை உருவாகும் என அச்சமாக உள்ளது. போதைபொருளின் பாவனை மலையகத்தில் அதிகரித்து விட்டால் போதைபொருள் பழக்கத்திலிருந்து மலையகத்தை மீட்டெடுப்பது பாரிய கஷ்டமாகும்.
இதேபோன்று பதுளையில் போதைபொருள் பாவனை ஆரம்பமாகியுள்ளது. இதில் ஆண் பிள்ளைகள் மட்டுமில்லாமல் பெண் பிள்ளைகளும் போதைபொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
பதுளையில் உள்ள பிரபல பாடசாலைகளில் இவ்வாறான போதைபொருள் பாவனை காணப்படுவதாக நான் அறிந்தேன்.
இதனால் பாடசாலையில் அதிபர், ஆசிரியர்களும் சரி, வீட்டில் பெற்றோர்களும் சரி பிள்ளைகளின் கல்வி தொடர்பிலும், அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதற்கு நாம் ஒருபோதும் துணையாக இருக்க கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)
#DeathofWPC
பதுளை - ஹாலிஎல கெட்டவெல ஜகுல்ல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் 01.09.2018 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் பணிபுரியும் 23 வயதுடைய ஹாலிஎல கெட்டவெல ஜகுல்ல பகுதியை சேர்ந்த சந்திமா பியதர்ஷனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விடுமுறையில் வீட்டுக்கு வந்த இவர் 01.09.2018 அன்று பகல் நேரத்தில் சாப்பாடு பார்சல் ஒன்றையும் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அதன்பின்னே இவ்வாறு அவரது வீட்டில் தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளதோடு, பெரும் முயற்சிக்கு மத்தியில் பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும், குறித்த பெண் கான்ஸ்டபிள் குறித்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.



மேற்படி பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால், இந்த சம்பவத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்த ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபர் ஆர். பவானியை முழங்காலில் இடப்பட்டமை தொடர்பில், ஊவா மாகாண ஆளுனரின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என, இலங்கை ஆசிரிய சேவை சங்கம் தெரிவித்துள்ளது. 

குறித்த விசாரணை அறிக்கையில் அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆசிரிய சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபருக்கு நிகழ்ந்த அநீதி தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த அறிக்கை வௌியிடப்பட்ட பின்னர் முறையான விசாரணை ஒன்று இடம்பெறும் எனவும் ஆசிரிய சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.