Showing posts with label Culture. Show all posts


 ( காரைதீவு  வேதசகா)

கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில், இலக்கியச் சந்திப்பொன்று கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில்  நேற்று நடைபெற்றது.

இந்த இலக்கியச்சந்திப்பில், கல்முனைப் பிராந்தியத்தைச் சேர்ந்த கலைஞர்களான வைரமுத்து கணேசன் ( சேனைக்குடியிருப்பு), சதானந்தம் ரகுவரன் (கோட்டைக்கல்லாறு), சண்முகம் சுந்தரராஜன் (சேனைக்குடியிருப்பு) ஆகியோர் தத்தமது காத்திரமான இலக்கிய அனுபவப் பகிர்வுகளை  பகிர்ந்தனர்.

இலக்கியச் சந்திப்பிற்கு சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா  தலைமை வகித்தார்.

எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மைய ஸ்தாபகர் புவி.கேதீஸ்ஸின் வழிகாட்டலில், செயலாளர் கே.சாந்தகுமார், பொருளாளர் என்.அருளானந்தம், திட்டமிடல் பணிப்பாளர் ப.சந்திரமோகன் ஆகியோர் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள, இளம் ஊடகவியலாளர் ரிஷி வீடியோ படப்பிடிப்பை மேற்கொண்டார்.


 (  வி.ரி. சகாதேவராஜா)


உலக அமைதி மக்களின் நன்மைக்காக,
பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு மட்டக்களப்பு சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலையில்  ஏழாவது நாளாக சர்வ வல்லமை வாய்ந்த 210 நாட்கள் 210 சித்தர்கள் மகா யாகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கடந்த 1 ஆம் திகதி சித்ரா பௌர்ணமி தினத்தில் தொடங்கி 210 நாட்கள் தொடர்ச்சியாக காலையும் மாலையும் நடைபெற உள்ள சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வியை, சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜீ  தலைமை தாங்கி நடாத்தி வருகிறார்.

சித்தர்களின் ஆதி இருப்பிடமுமான போகர் பெருமான் சிகண்டி முனிவர் ரூபத்தில் இன்றும் சித்தர்களோடு வாழும் இலங்கையில் சித்தாண்டி வேலோடும் மலையில் காகபுஜண்டர் அருளாணைப்படி இந்த உலகை ஆளுகின்ற 210 சித்தர்களின் அருளாசியை வேண்டி, உலக மக்களின் நன்மைக்காக 
இம் மகா யாகம் நடைபெற்று வருகிறது.


நூறு கோடி சிவ பஞ்சாட்சர ஜெபத்துடன் எதிர்வரும் (26/11/2026) வியாழக்கிழமை வரை தொடர்ந்து  210 நாட்கள் காலையும் மாலையும் இதுவரை உலகில் எங்குமே நடந்திராத அளவுக்கு அபூர்வ சஞ்சீவினி மூலிகைகளை கொண்டு அதி சக்தி வாய்த்த சித்தர்கள் வேள்வி நடைபெற உள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சித்தர்களுக்காக குருபூஜை செய்து அந்தந்த சித்தர்களை பூஜித்து அவர்களுக்குரிய வழிபாட்டை செய்து வேள்வி நடைபெற்று வருகிறது.

 


நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் இன்று (06) உற்சாகமான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை மழலைகள் நான்கு இனங்களின் (தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ) பாரம்பரிய கலாசார உடைகளை அணிந்து கலந்து கொண்டது சிறப்பம்சமாக அமைந்தது. பல்வகை கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வண்ணம் மாணவர்கள் அணிந்திருந்த ஆடைகள் நிகழ்விற்கு வண்ணமயமான தோற்றத்தையும் ஒற்றுமையின் செய்தியையும் எடுத்துரைத்தன.

புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டுகள், பாடல்கள், நடனங்கள் மற்றும் சிறுவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று, பங்கேற்ற பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றன. சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிகழ்வு மூலம் சிறுவர்களுக்கு நாட்டின் பல்வேறு இனங்களின் கலாச்சாரங்களை அறிமுகப்படுத்துவதோடு, இன ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை வளர்க்கும் நோக்கம் வலியுறுத்தப்பட்டது.

பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இந்த நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தனர். இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களின் சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 ( வி.ரி. சகாதேவராஜா)

தமிழமுதம் வெளியிடும் 46 ஆயிரம்  தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு  தமிழ்ச்சங்கம் மற்றும் திருகோணமலை கல்முனை தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைப்பில் குறித்த தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” எனும் முக்கிய நூல் வெளியீட்டு நிகழ்வு  10.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு
மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது.

மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாநகர சபை  முதல்வர் சிவம் பாக்கியநாதன் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

முன்னிலை அதிதியாக
கிழக்கு பல்கலைக்கழக தமிழ்க் கற்கைகள் துறை கலை கலாசார பீடத் தலைவர் திருமதி விஜிதா திவாகரன்  பங்கேற்கிறார்.

சிறப்பு விருந்தினர்களாக
ஓய்வுநிலை தமிழ் மொழி உதவிக் கல்விப் பணிப்பாளர் த.யுவராஜன்,   
 ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா  ஆகியோர் கலந்து சிறப்பிக்கஉள்ளனர்.

இந்த நிகழ்வில் சுலக்ஷினி புவனேந்திரராஜா தமிழ் மொழி வாழ்த்து பா பாட , வரவேற்புரையை மட்டக்களப்பு தமிழ் சங்க செயலாளர் சட்டத்தரணி மு. கனேசராசா வழங்குகிறார்.

சிறப்புரைகளை திருகோணமலை தமிழ் சங்க தலைவர் திருமலை நவம் மற்றும் கல்முனை தமிழ் சங்க தலைவர் சஞ்சீவி சிவகுமார் ஆகியோர் வழங்குகின்றனர்.

 நிகழ்வில் வெளியீட்டு உரையை தமிழமுதம் தலைவர் சொ. வெற்றியரசன்,
நூல் நயவுரையை தேசிய கல்வி நிறுவக தமிழ் மொழித்துறைப் பணிப்பாளர் கலாநிதி முருகு தயாநிதி ஆகியோர் நிகழ்த்துகின்றனர்.


வாழ்த்துக்கவியை கதிரவன் க. இன்பராசா வழங்குகிறார்.

 ஏற்புரையை க.கனகசிங்கம் வழங்க நன்றியுரையை  ச. கணேசமூர்த்தி வழங்கவுள்ளார்.

 


நூருல் ஹுதா உமர்


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மாளிகைக்காடு- சாய்ந்தமருது கிளையும், மாளிகைக்காடு சாய்ந்தமருது கதீப்–முஅத்தின் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த இஜாஸாவுடன் இணைந்த அதான் பயிற்சிப் பாடநெறி (03.05.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை மாளிகைக்காடு -சாய்ந்தமருது ஜம்இய்யதுல் உலமா கிளை காரியாலயத்தில் நடைபெற்றது.

ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷேய்க் எம். எம். மீராஸாஹிப் சலீம் (ஷர்க்கி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, சாய்ந்தமருது மாளிகைக்காடு கதீப்–முஅத்தின் சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷேய்க் நப்றாஸ் ஹனிபா ரஹ்மானி அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்களும் முஅத்தின்களும் பங்கேற்ற இப்பயிற்சியில், அதானின் சரியான உச்சரிப்பு முறைகள், தஜ்வீத் விதிகள், குரல் ஒலியமைப்பு மற்றும் இஜாஸா தொடர்பான வழிகாட்டல்கள் விரிவாக விளக்கப்பட்டன.

வளவாளராக அப்துர் ரஹ்மான் இஸ்லாமிய எகடமியின் அதிபரும், நூருல் ஹுதா அரபுக் கல்லூரியின் பிரதி அதிபருமான அஷ்ஷேய்க் அல் காரி எம்.பி.எம்.முர்ஷித் (ரஷாதி) அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியை முன்னெடுத்தார்.

இந்நிகழ்வு, பள்ளிவாசல்களில் அதான் வழங்கும் தரத்தை மேம்படுத்துவதற்கான முக்கியமான முயற்சியாகக் கருதப்படுவதுடன், பங்கேற்றவர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது.


 (  வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,
இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை மண்ணில், உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் இராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபகர் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறப்பு விழா  இன்று (3) ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

இறக்குவானை  ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், டெல்வின் பி பிரிவு, ஆலய முன்றலில் நடைபெற்றது.

முன்னதாக மாபெரும் இந்து எழுச்சி ஊர்வலம் இடம்பெற்றது.



மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர்  சுவாமி நீலமதானந்த ஜீ மகராஜ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

 சுவாமி பிரம்மானந்த ஜீ மகராஜின்  விசேட ஆசீர்வாத உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில், சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டதோடு, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

இதில் இரத்தினபுரி மாவட்ட அரசியல் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆயா பிரிவின் பொதுமக்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

“சுவாமிகளின் வருகை என்பது மண்ணிற்குப் பெருமையும், எமது மனத்திற்கு மகிழ்ச்சியும் அளித்தது” என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விழா பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளை உயர்த்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்நதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


 மகத்துவமிக்க சித்ரா பௌர்ணமி இன்று 01/05/2026 வெள்ளிக்கிழமை இரவு  வருகிறது .


இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்றாக சித்ரா பெளர்ணமி கருதப்படுகிறது. சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும் சித்திரை நட்சத்திரமும் இணையும் நாளையே சித்ரா பெளர்ணமியாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகளால் நம்முடைய கர்மவினைகள் குறைந்து, தலையெழுத்தே மாறும் என சொல்லப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தன் பிறந்த நாள் ஆகும். அத்தோடு அவர் திருமணம் செய்த நாள் எனவும் கூறப்படுகிறது.


உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள் துறவறம் பூண்ட தினம்.அவர் 1924 இல்  இதே போன்றதொரு முழு பூரணை தினமான சித்ரா பௌர்ணமியில்தான் துறவறம் பூண்டார். அதாவது பண்டிதர் மயில்வாகனன் , அவரது இராமகிருஷ்ண மிஷன் குரு சுவாமி சிவானந்த மகராஜ் முன்னிலையில், சுவாமி விபுலாநந்தர் ஆகிறார்.இவ்வருடம் 102 வது துறவற தினமாக அது அனுஷ்டிக்கப்படுகிறது.

தாயை இழந்தவர்கள் தாய்மார்களுக்கு பிதிர்க்கடன் செலுத்த மிகவும் உகந்த தினம் என்றும் கூறுவார்கள்.

ஆனால் சித்தர்கள் பார்வையில் சித்ரா பௌர்ணமி எவ்வாறு இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.

         
நம்முடைய மரபில் ஆதியில் இந்த நாள் "சித்தர் பௌர்ணமி" என்றே அழைக்கப்பட்டது. பின்னாளிலே தான் மருவி சித்ரா பௌர்ணமியானது என காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் கூறுவார் என்று  சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ கூறுகிறார்.

இந்த சித்ரா பௌர்ணமியன்றுதான்  இறையருளை  வழங்குவதற்காக  சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து பூமிக்கு வருவதாக கோரக்கர் தனது "மலை வாடகம்" நூலில் கூறுகிறார். ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியிலும் இன்றுவரை இலங்கையில் சித்தர்களின் ஆதி இருப்பிடம் வேலோடுமலையில் இரவு முழுவதும் பதினெண் சித்தர்கள் சன்னிதியில் இன்றுவரை மாபெரும் சித்தர்கள் வழிபாடு, அபூர்வ காயகல்ப மூலிகைகளினால் அற்புதமான வேள்விகள் நடைபெறுகின்றன.

நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு சித்ரா பௌர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.

பௌர்ணமியன்று தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. அன்றைய தினம் புனித மலைகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தப்படி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும். 

குறிப்பாக சித்தர்களின் அருளை நாம் தியானத்தால் அல்லது ஆழ்ந்த தவத்தால் பெற முடியும். சித்ரா பௌர்ணமி வழிபாட்டின் மிக முக்கிய அம்சமாக சித்தர்களின் அருளை பெறுவது முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

நமக்கு மட்டுமல்ல சித்தர்களுக்கும் சித்ரா பௌர்ணமி முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். பொதுவாக சித்ரா பௌர்ணமி தினத்தன்று பூமியில் இருந்து ஒருவித உப்பு கிளம்பும். அந்த உப்புக்கு பூமிநாதன் (பூநீறு) என்று பெயர். இந்த உப்பு அதிக சக்தி தரக்கூடியதாகும். இதை சித்தர்கள்தான் கண்டுபிடித்து உலகத்துக்கு தெரிவித்தனர்.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று அந்த உப்பின் சக்தியை பெறுவதற்காகவே சித்தர்கள் பல இடங்களில் தோன்றுவது உண்டு. மேலும் பல முக்கிய தலங்களில் உள்ள இறைமூர்த்தங்களை வழிபடுவதற்காக சித்தர்களும் வருவார்கள். அந்த வகையில் நம்பிமலை, கொல்லிமலை, பொதிகை மலை, தீர்த்த மலை, திருவண்ணாமலை, சதுரகிரி மலை, இலங்கையில் கதிர்காமம், கபிலவத்தை, வேலோடு மலை உள்பட பல்வேறு மலைகளில் சித்தர்களும் வலம் வருவார்கள்.

இறைவனின்  அருளை பெறுவதற்காக சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து  வருவதாக நம்பப்படுகிறது. வண்ணத்துப்பூச்சியாக, நாகங்களாக ஏதோ விலங்காக அல்லது மனிதர்கள் போலவே சித்தர்கள் வலம் வருவார்கள். அந்த சமயத்தில் நாமும்  சென்றால் நமக்கு இறையருளும் சித்தர்களின் அருள் ஆசியும் கிடைக்கும்.

எனவேதான் கிரிவல தலங்களில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை சித்ரா பவுர்ணமி தினத்தன்று தவறாமல் வழிபட வேண்டும் என்று நமது மூதாதையர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.  சித்த மலைகளில்  ஏற்கனவே நிறைய சித்தர்களின் அருள் உள்ளது. சித்ரா பௌர்ணமி தினத்தன்று மற்ற இடங்களில் உள்ள சித்தர்களும் நம்பிமலைக்கு வந்து பூத நாராயண சித்தர் தலைமையில் ஒன்று கூடி உலக மாற்றங்களை பற்றி முடிவெடுப்பார்கள் என கோரக்கர் மலை வாடகம் என்ற நூலில் கோரக்கர் பெருமான் சொல்கிறார்.  ஆகையால்  செல்பவர்கள் ஈசன் பெயருடன் சித்தர்களையும் நினைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

 மதுரையில் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி தினத்தன்றும் இந்திரனே நேரில் வந்து சொக்கநாதரை பூஜித்து வழிபடுவதாக சொல்வார்கள். அந்த சமயத்தில் மதுரை சொக்கநாதரை நாமும் வழிபட்டால் இந்திரனின் அருள்ஆசி பெற முடியும்.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேர்வதால் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கணித்து உள்ளனர்.  கடலில் நீராடினால் இதுவரை சம்பாதித்த பாவங்கள் அனைத்தையும் கரைத்து விடலாம் என்பது ஐதீகம். அன்றைய  தினம் கடலில் புனித நீராட வருபவர்களுக்காக சித்தர்கள், ரிஷிகள் தயாராக காத்து இருப்பார்கள் என புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே கடலில் புனித நீராடினால் சித்தர்களின் ஆசி பரிபூரண மாக நமக்கு கிடைக்கும். அன்றைய தினம் "மூலிகை குளியல்" செய்வதால் அனைத்து வித தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறுவதாக போகர் சொல்கிறார்.

தஞ்சை பெரிய கோவிலில் பௌர்ணமி  தினம் சித்ரா பௌர்ணமி விழாவை "சித்தர் பெருவிழா" என்றே நடத்துவார்கள். இதையட்டி நந்தி எம்பெருமானுக்கும், கருவூராருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்னதானமும் செய்வார்கள். இதில் பங்கேற்றால் சித்தர் பெருமான் கருவூராரின் அருளை பெறலாம்.

சித்தர்கள் பெரும்பாலும் ஏழை எளியவர்களின் பசியை போக்க அன்னதானம் செய்யுங்கள் என்பதையே வலியுறுத்தி உள்ளனர். எனவே முடிந்தால் சித்ரா பௌர்ணமி அன்று  அன்னதானம் செய்யுங்கள். இல்லையெனில் எங்காவது அன்னதானத்துக்கு உதவி செய்யுங்கள். இதை கருத்தில் கொண்டே 24 மணி நேரமும் இலங்கையில் சித்தர்கள் வாசம் செய்யும் வேலோடு மலையில் திருப்பணி செம்மல் தியாகராஜா சந்திரா குடும்பத்தினர் எப்போது யார் வந்தாலும் அன்னதானம் கொடுக்கிறார்கள்.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் கணக்கில் அடங்காத சித்தர்களை தரிசனம் செய்ய முடியும். குறிப்பாக கோரக்கர் சித்தரை நினைத்து தியானம் செய்தால் நிச்சயமாக அவரது தரிசனத்தை சதுரகிரியில் பெற முடியும். சதுரகிரியில் சித்தர்களின் முக்கிய ஆசியாக நமக்கு நல்ல உடல்நலம் கிடைக்கும்.  16 வகை பேறுகளில் ஒன்று நோயின்மை. சித்ரா பௌர்ணமி வழிபாட்டுக்கும் நோயின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சித்தர்கள் கண்டுபிடித்து கூறி உள்ளனர்.

எனவே எந்த அளவுக்கு நாம் முழு மனதுடன் சித்தர்களை வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு நன்மைகள் கிடைக்கும். இலங்கையில் வேலோடு மலையில் போகர் பெருமான் பூஜித்த வேலுக்கு பின்புறம்  18 சித்தர்களின் சன்னதி உள்ளது. அந்த பகுதியில் பௌர்ணமி தினம் அமர்ந்து தியானம் செய்தாலே போதும், சித்தர்கள் உங்களுக்குள் ஊடுருவுவார்கள்.


 சித்ரா பௌர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் பங்கேற்றால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆலயங்களில் மட்டுமின்றி சித்ரா பௌர்ணமி  தினம் ஜீவ சமாதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
 உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு சித்தரின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபாடு செய்தால் சித்ரா பௌர்ணமி வழிபாட்டுக்குரிய அனைத்து பலன்களையும் நிச்சயம் பெற முடியும்.

 சித்தரை வழிபட்டால் நாம் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சித்தர்களை வழிபடச் செல்லும் முன்பு சித்ரா பௌர்ணமி அன்றுகாலை வீட்டில் குளித்து முடித்து விட்டு உங்களது குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். முடிந்தவர்கள் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது. மாலையில் சந்திரனை பார்த்து விட்டு ஜீவ சமாதிக்கு சென்று வழிபடுங்கள் அல்லது சித்தர்களை நினைத்தப்படி கிரிவலம் வாருங்கள்.

உங்களது தேடல் உண்மையாக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு அவர்கள் ஏதோ வடிவத்தில் தரிசனம் தந்து உணர்த்துவார்கள்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா 
காரைதீவு நிருபர் 


 ( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று (28) செவ்வாய்க்கிழமை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் முன்னிலையில் உதவிக்குரு பிரம்மஸ்ரீ பிரபாத் சர்மா உதவியுடன் முதற் தடவையாக அம்மனின் திருக்கல்யாணம் நடைபெற்றது.

ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அம்மனின் திருமாங்கல்ய தாரணம் நடைபெறமுன்பு மாங்கல்யம் அனைத்து பக்தர்களிடம் ஆசீர்வாதத்திற்கு வழங்கப்பட்டது.

ஆலய பரிபாலன சபை தலைவர் கி.ஜெயசிறில்,  ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட நிருவாக சபையினர் மற்றும் பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு மேளதாளம் மற்றும் பட்டாசு வெடிகளுக்கு மத்தியில் குரவை ஒலியுடன் அம்மனின் கழுத்தில் தாலி ஏறியது.

இறுதியில் திருமாங்கல்ய இனிப்புகள் பலகாரங்கள் பகிரப்பட்டன.

 


வக்ஃபு சபையின் புதிய உறுப்பினராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிரேஷ்ட குடிவரவு அதிகாரியும், காதி நீதிபதியுமான சட்டத்தரணி M.I.அமினுதீன் நியமனம் பெற்றுள்ளார்.


இவருக்கு எமது வாழ்த்துக்கள்

 


( வி.ரி. சகாதேவராஜா)

பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில்  எதிர்வரும் 1ம் திகதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தில் தொடங்கி 210 நாட்கள் தொடர்ச்சியாக காலையும் மாலையும் நடைபெற உள்ள சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜீ இதற்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.

சித்தர்களின் ஆதி இருப்பிடமுமான போகர் பெருமான் சிகண்டி முனிவர் ரூபத்தில் இன்றும் சித்தர்களோடு வாழும் இலங்கையில் சித்தாண்டி வேலோடும் மலையில் காகபுஜண்டர் அருளாணைப்படி இந்த உலகை ஆளுகின்ற 210 சித்தர்களின் அருளாசியை வேண்டி, வரும் சித்ரா பௌர்ணமியன்று (01/05/2026) வெள்ளிக்கிழமை தொடங்கி நூறு கோடி சிவ பஞ்சாட்சர ஜெபத்துடன் (26/11/2026) வியாழக்கிழமை வரை தொடர்ந்து  210 நாட்கள் காலையும் மாலையும் இதுவரை உலகில் எங்குமே நடந்திராத அளவுக்கு அபூர்வ சஞ்சீவினி மூலிகைகளை கொண்டு அதி சக்தி வாய்த்த சித்தர்கள் வேள்வி நடைபெற உள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சித்தர்களுக்காக குருபூஜை செய்து அந்தந்த சித்தர்களை பூஜித்து அவர்களுக்குரிய வழிபாட்டை செய்து வேள்வி நடைபெறும்.

 நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகப் பதவியேற்றுள்ள திரு. அனுபம மங்கள விக்ரமாராச்சி அவர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு கல்முனையில் சிறப்பாக நடைபெற்றது.

கல்முனை முஹ்யித்தீன் ஜுமுஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வு, நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கல்முனை பிரதேச செயலாளர் அஷ்-ஷேக் டி. எம். எம். அன்சார், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ. டி. எம். ராபி, ஓய்வுபெற்ற முன்னாள் பிரதேச செயலாளர் ஏ. எம். நஸீர் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீத் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் முஹம்மது சமத், அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத் தலைவர் மௌலவி பி. எம். எம். ஜலீல் பாகவி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கல்முனைக் கிளைத் தலைவர் மௌலவி ஏ. எல். எம். முர்ஸித் முப்தி உள்ளிட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, கல்முனை மக்களின் சார்பில் அரசாங்க அதிபருக்கு கௌரவப் பொன்னாடை அணிவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

உரையாற்றிய அரசாங்க அதிப


  வரலாற்று பிரசித்தி பெற்ற மரத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் பாற்குடபவனி இன்று (25)ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.


மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் முன்னிலையில் பாற்குட பவனி கிரியைகள் நடைபெற்றன.

நூற்றுக்கணக்கான மகளிர் பால்குடம் ஏந்தி வலம்வந்தார்கள்.

 முன்னதாக இப் பாற்குடபவனி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி மீனாட்சி அம்பாள் ஆலயத்தை அடைந்து அங்கு பால் சொரியப்பட்டது.

ஆலய பரிபாலன சபை தலைவர் கி.ஜெயசிறில்,  ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட நிருவாக சபையினர் மற்றும் பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 


2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.


இதற்கமைய, முன்னதாக மே மாதம் 2ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறையைத் திருத்தம் செய்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்க, இம்முறை வெசாக் வாரம் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


( வி.ரி.சகாதேவராஜா)


 தம்பலகாமத்தில் மூவின மக்களும் கலந்து கொண்ட சிங்கள தமிழ் சித்திரை புத்தாண்டு விழா பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் தலைமையில் நேற்று  (22) புதன்கிழமை இடம்பெற்றது.


இதில் செயலக உத்தியோகத்தர்களுக்கிடையில் பல பாரம்பரிய முறையிலான போட்டிகளும் இடம்பெற்றதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. 

குறித்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


 ( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை  மடத்தடி  ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின்  வருடாந்த அலங்கார உற்சவம் நாளை (22) புதன்கிழமை ஆரம்பமாகிறது .

உற்சவகால பிரதம குரு வித்யா பிரவீணா சிவஸ்ரீ  அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில் , ஆலய குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் சமுகத்தில் வருஷாபிஷேக கிரியைகள் நடைபெறவுள்ளன.

 தொடர்ச்சியாக ஒன்பது தினங்கள் பகல்  அலங்கார உற்சவ திருவிழாக்கள் இடம் பெற்று எதிர்வரும் 01ஆம் தேதி  வெள்ளிக்கிழமை  சித்ரா பௌர்ணமி அன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது .

26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி இடம் பெற ஏற்பாடாகி உள்ளது.

இந்த பத்து நாள் அலங்கார உற்சவ திருவிழாக்காலங்களில் காலை 10 மணிக்கு கும்ப பூஜையுடன் ஆரம்பமாகி பகல் ஒரு மணிக்கு அலங்கார உற்சவ பிரதான பூஜை, அம்பாளின்  வீதியுலா இடம் பெறும். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தினமும்  அன்னதானம் வழங்கப்படும்  என ஆலய பரிபாலன சபை தலைவர் கி.ஜெயசிறில் தெரிவித்தார்.

பத்து தினங்களுக்கான உற்சவகால திருவிழாக்களையும் அன்னதானத்தையும்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பிரதேசங்களான சம்மாந்துறை திருக்கோவில் பொத்துவில் ஆலையடிவேம்பு நாவிதன்வெளி கல்முனை காரைதீவு நிந்தவூர் அட்டப்பள்ளம் ஆகிய கிராமங்கள் பொறுப்பேற்று நடாத்துகின்றன.

 மேற்கூறிய உற்சவ காலங்களில் ஆலயத்திற்கு வருகைதந்து உற்சவத்தில் கலந்து கொண்டு திருவருள் பெற்றுய்யுமாறு பரிபாலன சபையினர் வேண்டுகோள்  விடுத்துள்ளனர்.

 


பெண்களினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புச் சேவைகளுக்கு வழங்கப்படும் கவனம் குறைவடைந்து செல்வதென்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல என்றும், இது உலகவாழ் பெண்ணியப் பொருளாதார நிபுணர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய பிரச்சினையாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 


கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாகக் காணப்படும் பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்கு முறையான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


கொழும்பில் நடைபெறும் “South-4-Care Learning Hub: Advancing Decent Work in the Care Economy in South Asia” மாநாட்டின் ஆரம்ப அமர்வில், ஏப்ரல் 21ஆம் திகதி உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


பராமரிப்புச் சேவைகள் பொருளாதார மற்றும் சமூகச் செயற்பாடுகளுக்குப் பங்களிக்கும் அடிப்படை அம்சங்களாகும் என்றும், அதனை இனிமேலும் புறக்கணிக்க இயலாது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். தெற்காசிய நாடுகளின் பங்கேற்புடன் ஏப்ரல் 21 முதல் 24 வரை நடைபெறும் இந்தப் பிராந்திய நிகழ்ச்சியானது, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), உலக வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சர்வதேச பயிற்சி மையம் (ITCILO) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிகழ்ச்சி, நாடுகளுக்கிடையிலான அனுபவப் பகிர்வு, ஆற்றல் அபிவிருத்தி மற்றும் பாலின ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம், நிலையான பொருளாதாரத்திற்கான வழிகளைக் கண்டறியும் ஒரு பிராந்திய மேடையாகச் செயற்படுகின்றது.


நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,


பெண்கள் மேற்கொள்ளும் பராமரிப்புச் சேவைகள் மற்றும் அவர்களின் பொருளாதார நிலைமை குறித்த பிரச்சினைகளை இதற்கு மேலும் புறக்கணிக்க இயலாது. இது பொருளாதாரச் செயற்பாடுகளையும் சமூகத்தையும் நிலைநிறுத்துவதற்கு அவசியமான ஒரு அங்கமாகும். வீட்டுப் பணி, சிறுவர் மற்றும் முதியோர் பராமரிப்பு அல்லது சமூக ஒத்துழைப்பு என எதுவாக இருப்பினும், அவை முறைசார்ந்த மற்றும் முறைசாரா பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கின்றன. 


பராமரிப்புச் சேவை என்பது வெறும் பராமரிப்போடு மாத்திரம் நின்றுவிடுவதில்லை. குறிப்பாக, ஊதியமற்ற பராமரிப்புச் சேவைகள் மூலமாக பொருளாதாரத்திற்குக் கிடைக்கும் பங்களிப்பை நாம் இனங்காண வேண்டும்.


ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளானது பெண்கள் தொழில் சந்தையில் நுழைவதற்குப் பெரும் தடையாக இருக்கின்றது. உற்பத்தித்திறன் மிக்க உழைப்பு என்பதை ஊதியம் பெறும் பணிகளாக மாத்திரம் வரையறுத்தலாகாது. அதேநேரம், பெண்கள் தொழில் சந்தையில் இணைவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். 


குடும்பத்தையும் சமூகத்தையும் கொண்டு நடத்துவதற்காக அவர்கள் ஊதியமின்றி மேற்கொள்ளும் பணிகள் மூலம் பொருளாதாரத்திற்குக் கிடைக்கும் பங்களிப்பை நாம் கட்டாயம் அங்கீகரிக்க வேண்டும். அது பொருளாதாரத்தின் மிக முக்கியமான, அதேநேரம் இதுவரை உரிய மதிப்பு வழங்கப்படாத ஒரு துறையாகும்.


இலங்கையின் பராமரிப்புச் சேவைகள் குறித்துக் கவனம் செலுத்துகையில், பெண் பிள்ளைகள் கல்வியில் உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்ற போதிலும், குடும்பப் பொறுப்புகள் மற்றும் ஏனைய காரணிகளால் அவர்கள் தொழில் சந்தையிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். 


முறைசாரா மற்றும் ஊதியமற்ற உழைப்பு ஆகிய இரண்டு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு, உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு ஆகியவற்றை வரையறுக்கும் விதம் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.


தொழில் சந்தைப் பங்களிப்பு என்பது வெறும் உற்பத்தித்திறனை மதிப்பிடுவது மாத்திரமல்ல அது வாய்ப்புகள், கௌரவம் மற்றும் உள்வாங்கப்படுதல் பற்றிய விடயமாகும். ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ உழைப்பை வழங்குதல், முறைசார்ந்த அல்லது முறைசாரா உழைப்பு என எதுவாக இருந்தாலும் அதனை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிடலாகாது. 


பராமரிப்புச் சேவை என்பது பொருளாதார ரீதியான பிரச்சினை மட்டுமல்ல, அது மனித மூலதனத்தைக் கட்டியெழுப்பும் கல்வி, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தனித்துவமான துறையாகும்.


பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடாக, ஊதியமற்ற பராமரிப்புச் சேவைகள் தொடர்பான தேசியக் கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. 


இச்செயற்பாட்டின் மூலம், ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளை தேசிய வளர்ச்சிக்கான அத்தியாவசிய அங்கமாக அங்கீகரித்தல், பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுமையைக் குறைத்தல், சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சேவைகளை மேம்படுத்தல், பராமரிப்புப் பொறுப்புகளை நியாயமான முறையில் பகிர்ந்தளித்தல் மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளோம், என, குறிப்பிட்டார்.


ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்புச் சேவைகள், சமூக மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகளின் இன்றியமையாத பிரிவுகளாகும் என்றும், அவை தொழிலாளர் சந்தைப் பங்கேற்பைச் சாத்தியமாக்கி, குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவளித்து, உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வலியுறுத்தியுள்ளது.


தெற்காசியா முழுவதிலும் இப்பராமரிப்புச் சேவைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், தரமான பராமரிப்புச் சேவைகளுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதே பாலின சமத்துவமின்மைக்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.


இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, 'கௌரவமான பணியும் பராமரிப்புப் பொருளாதாரமும்' தொடர்பான முன்மொழிவு ஒன்றினை ILO அங்கீகரித்துள்ளது. பராமரிப்பைத் தொழில் சந்தையின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதியாக இனங்கண்டு, உயர்ந்த தரத்திலான சேவைகளை வழங்குவதற்கும், பராமரிப்புப் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.


இந்த உரையாடல்கள் மூலமாக தெற்காசியா முழுவதிலும் பராமரிப்புச் சேவை அமைப்புகளைப் பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் பெறுபேறுகளையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனத் தாம் நம்புவதாகவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.


 


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.


2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் முக்கியமாக கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 


இதனைமுன்னிட்டு இன்று குறித்த ஆலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனைகளின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


இன்று காலை 8:43 முதல் 08.45 வரையிலான இரண்டு நிமிட மௌனம் அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ள இன்று காலை 7 மணி முதல் நினைவேந்தல் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.