Showing posts with label criminal. Show all posts

 


காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


சிறைக்குள் இருந்த இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


இதில் காயமடைந்த கைதி கராப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 


அர்ச்சுனா எம்.பியால் மிரட்டலுக்கு உள்ளான பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவரது ஒரு வயது குழந்தையும் அவருடனேயே இருக்கவும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


நேற்றையதினம் பெரியளான் பகுதியில் உள்ள காணியை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுத்தம் செய்ய முற்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் தமது காணியும் இருப்பதாக தெரிவித்து சிலர் அவருடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.


குறித்த காணி எல்லை பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நடைபெற்று வருகின்றது.


அந்தவகையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண்ணின் உறவினரான இளைஞர் ஒருவரும் அந்த இடத்திற்கு சென்ற நிலையில் அர்ச்சுனா எம்.பி. அந்த இளைஞனை எட்டி காலால் உதைத்ததாக அந்த இளைஞரின் உறவினர்கள் கூறுகின்றனர்.


இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டி உன்னை கொலை செய்வேன் என அந்த பெண்ணுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


இதன்போது சட்டத்தரணி கௌசல்யாவும் அந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை காணொளியும் பதிவு செய்துள்ளார்.


பின்னர் அர்ச்சுனா இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் குறித்த பெண்ணை கைதுசெய்த பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் அவரை இன்று முற்படுத்தியுள்ளனர்.


இவ்வாறான சூழ்நிலையிலேயே அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


இருப்பினும் பகிரங்க கொலை மிரட்டல் மற்றும் இளைஞரை தாக்கிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


(பு.கஜிந்தன்)

 


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பில் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


உளவுத் தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சனிக்கிழமை இரவு நடத்திய சோதனையின்போது இந்தக் கைது நிகழ்ந்தது .


பாடசாலை பொருட்கள் மற்றும் பலவகையான இனிப்புகள் நிரப்பப்பட்ட போலி அடிப்பாகம் கொண்ட சூட்கேஸ்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமுக்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருள் இவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஒவ்வொரு பிக்குவும் தங்களது பயணப் பைகளில் ஐந்து கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளை எடுத்துவந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.


ஒரு அனுசரணையாளர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி, இந்தக் குழுவினர் ஏப்ரல் 22 அன்று பாங்காக்கிற்குப் பயணம் செய்ததையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். சந்தேக நபர்கள் வெளிநாட்டில் இருந்தபோது சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கைபேசி ஆதாரங்கள் காட்டியதாகக் கூறப்படுகிறது.


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை என்றும், அங்கு துறவிகள் பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கு இது என்றும் விவரிக்கப்படுகிறது.


நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் இளம் துறவிகள் எனக் கூறப்படும் சந்தேக நபர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


 


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இன்று (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை கையளித்துள்ளனர்.


நிலக்கரிக்கான விலை மனு கோரலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


குறித்த விலை மனுவை ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விதம் தொடர்பான குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரிவித்து, இந்த முறைப்பாட்டை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். 

 


நூருல் ஹுதா உமர்


பெண்பிள்ளையின் வாட்சப் சமூக வலைத்தள பதிவுகள் (ஸ்டேட்டஸ்) பதிவிறக்கம் செய்து செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக மாற்றப்பட்டு தவறான நோக்கங்களுக்காக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிற சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணை இன்று (30) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்று இன்னுமொரு சந்தேக நபர் கௌரவ நீதவான் நூர்தீன் சர்ஜுன் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது. இந்நிலையில் இன்றிலிருந்து இரு வாரங்களுக்கு விளக்கமறியலுக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் சில சந்தேக நபர்களை கைதுசெய்ய பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நீதிமன்றுக்கு தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஷாமிலா மன்சூர், எம்.வை. அன்வர் ஸியாத், எம்.ஏ.நஸீல், முஹம்மட் பிர்னாஸ் போன்ற சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

இது விடயம் தொடர்பில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கையில், இவ்வாறானவர்கள் பற்றி இளைஞர் யுவதிகள் விழிப்புடன் இருக்குமாறும், சமூக வலைத்தளங்களில் பெண்கள், சிறுமிகளின் புகைப்படங்களை பதிவேற்றுவதை தவிர்ந்து கொள்ளுமாறும் சமூக வலைத்தள பதிவுகளை தவறாக மாற்றி பயன்படுத்துவது சட்டவிரோதமாகும், தனிப்பட்ட மக்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்கும்போது உடனடியாக பொலிஸைத் தொடர்பு கொள்ளுமாறும்  பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.


 ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று (30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 


ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இன்று அதிகாலை 4.27 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சலாம் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 என்ற விமானம் மூலம் சந்தேகநபர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். 

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஓமான் பாதுகாப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். 

அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஓமானுக்குச் சென்ற நிலையில் சந்தேகநபரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 882 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்


கல்பிட்டியின் ஆனவாசல் மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.


இதன்படி ஆனவாசல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சுமார் முந்நூற்று ஆறு கிலோகிராம் பீடி இலைகளும், முகத்துவாரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சுமார் ஐநூற்று எழுபத்தாறு கிலோகிராம் பீடி இலைகளும் கைப்பற்றப்படடன.


கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளும் கெப் வண்டியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்கள சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.




அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடையில் வைத்து நேற்று (21) கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரியை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதற்கான உத்தரவு நீதிமன்றத்தால் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

 


கடந்ந 2025.11.28 முதல் 12.06 ந் திகதி வரை , தான் பயன்படுத்தி வந்த செல்பேசிகள் மற்றும் (இணைய வசதிகள்) டயலொக் தொலைக்காட்சி போன்றவை செயலிழந்தன. 

குறிப்பிட்ட  இந்த செயலிழப்புக்கான. காரணங்களோ அல்லது அது பற்றிய முன்னறிவித்தல்களோ  DialogPLC  குழுமத்தினால், தமக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.

 குறித்த இந்த செயலிழந்த காலப்பகுதியில்,  தனக்கான கட்டணங்களும் குறிப்பிட்ட டயலொக் நிறுவனத்தினால், அறவீடு செய்யப்பட்டுள்ளாக, சட்டத்தரணி இயாஸ்டீன்  தனக்கு ஏற்பட்டிருந்த இழப்புக்களுக்கு எதிராக, கோரிக்கை கடிதம் வரைந்துள்ளார்.

இவற்றினால் தனக்கு ஏற்பட்ட உளவியல் ரீதியிலான பாதிப்புக்கள், வருமான இழப்பு, மற்றும் அசௌகரியங்களும் குறித்த டயலொக் நிறுவனத்தினால் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்தன எ்ன்பதாகவும் குறித்துரைத்துள்ளார்.

தனக்கு ஏற்றபட்ட பாதிப்புக்களுக்குரிய இழப்பீட்டினை வழங்குமாறும், இக் கோரிக்கை கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் டயலாக் நிறுவனம் உரிய பதிலை வழங்காவிடின்  கல்முனை நீதிமன்றில் சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் என்பதாகவும் குறித்த கோரிக்கை கடித்தில், சட்டத்தரணி இயாஸ்டீன் தெரிவித்துள்ளார்.




 ஹங்கம, ரன்ன, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்த இரண்டு பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன.


கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவரும் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் 28 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில்

குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது சிறையில் உள்ளார், மேலும் அந்த தம்பதியினர் தற்காலிகமாக அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் இன்று குறித்த உடல்களின் பிரேத பரிசோதனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் குறித்து ஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.


இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



 

முல்லைத்தீவில் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி 

முல்லைத்தீவு, முத்தையன்கட்டுப் பகுதியில் அண்மையில் இராணுவ முகாம் ஒன்று விடுவிக்கப்படவிருந்த நிலையில், அங்கிருந்த தகரங்களை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்த முகாமில் இருந்து தகரங்கள் தருவதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இராணுவ வீரர் ஒருவர் தொலைபேசியில் அழைத்துள்ளார்.

இதையடுத்து, தகரங்களை எடுப்பதற்காக ஐந்து இளைஞர்கள் அந்த இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்ற இளைஞர்களை இராணுவத்தினர் தடிகள் மற்றும் கம்பிகளால் தாக்கி விரட்டியதாகவும், அதனால் பயந்து ஓடியதாகவும் தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்பு மற்றும் விசாரணை

இராணுவ முகாமுக்குச் சென்ற ஐந்து பேரில் நான்கு பேர் திரும்பிய நிலையில், ஒரு இளைஞர் காணாமல் போயிருந்தார். காணாமல் போன இளைஞன் ஓடும்போது முகாமுக்குப் பின்னால் உள்ள முத்தையன்கட்டு குளத்தில் விழுந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது. இதனால் கிராம மக்கள் குளத்தில் இறங்கித் தேடியபோது, அந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து இறந்த இளைஞரின் சகோதரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தனது தம்பியை இராணுவத்தினர் அடித்துக் கொலை செய்து குளத்தில் போட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இறந்த இளைஞரின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்த மற்றொரு இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 


கவர்ச்சிகரமான பெண்களின் பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்களுடன் ஆபாசக் கதைகளையும் இடம்பெற்ற யூடியூப் சேனலை நடத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு, கொழும்பு தலைமை நீதிபதி தனுஜா லக்மாலி ஜெயதுங்க நேற்று ஐந்து ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தார். 

குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கணினி குற்றப்பிரிவு தாக்கல் செய்த வழக்கில் சந்தேக நபரான "டோபியா" என்றும் அழைக்கப்படும் திமுத்து சாமர. 


கொழும்பு பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடங்கப்பட்டது. பாலியல் ரீதியாக வெளிப்படையான கதைகளை ஒளிபரப்பும் யூடியூப் சேனலில் தனது புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக ஆசிரியை குற்றம் சாட்டினார். 


வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜரானார். 


சந்தேக நபரின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே ஆபாச ஒளிபரப்புகளை நிறுத்திவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது வாடிக்கையாளர் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதற்கு அனுமதிக்கும் வகையில் மறுவாழ்வு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார். 


புகார்தாரர் சந்தேக நபரிடமிருந்து ஏதேனும் இழப்பீடு எதிர்பார்க்கிறாரா என்று நீதிபதி விசாரித்தார். ஆசிரியை இழப்பீடு கோரவில்லை என்று பதிலளித்தார். 


சந்தேக நபர் முன்கூட்டியே குற்றத்தை ஒப்புக்கொண்டது மற்றும் ஆபாச உள்ளடக்கத்தை நிறுத்துவதற்கான அவரது முடிவு உள்ளிட்ட உண்மைகளை பரிசீலித்த பிறகு, தலைமை நீதிபதி ஐந்து ஆண்டுகளுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையையும், ரூ. 2,500 அபராதத்தையும் விதித்தார்.



கனகராசா சரவணன்


இனிய பாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து இன்று (29) மாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு சிஐடியினர் கைது செய்துள்ளனர்.

ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ஆம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு.சந்திவெளி பகுதிகளில் வைத்து சி.ஐ.டியினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்த இனிய பாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனையை வதைமுகாமில் இருந்து செயற்பட்டுவந்தவரும் இனிய பாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பா.சபாபதியை கிரான் வைரவர் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சம்பவதினமான இன்று மாலை 4.00 மணியளவில் சி.ஐ.டியினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை சிஐடியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இனியபாரதியை கைது செய்து விசாரணையின் பின்னர் இனிய பாரதியின் முன்னாள் சாரதி செந்தூரன், அவரது சகாவான சந்திவெளியைச் சேர்ந்த சசீந்திரன் தவசீலன் மற்றும் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டவர் உட்பட இனிய பாரதியின் சகாக்கள் ஆகிய 4 பேரை சி.ஐ.டியினர் தொடர்ச்சியாக கைது செய்துவருவதையிட்டு இனிய பாரதி மற்றும் பிள்ளையானுடன் தொடர்புபட்டவர்கள் பயப் பீதியில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது .

 

 

கனகராசா சரவணன்


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.