Showing posts with label Eastren. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் 2026 இரண்டாம் தவணைக்கான சிறுவர் பாதுகாப்புக் குழு மீளாய்வுக் குழு கூட்டம் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

குழுவின் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம்.றிபாஸின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த மீளாய்வுக் குழு கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீ. குகராஜ் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்டு கடந்த கால மற்றும் எதிர்கால திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கேட்டு தெரிந்து கொண்டதுடன்  சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலும் விளக்கமளித்தார்.

மேலும், பெற்றோர் பிரதிநிதியாக கலந்து கொண்ட பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் நூருல் ஹுதா உமர்  சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கருத்துரை வழங்கினார். இக்கூட்டத்தில் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் ஆசிரியர், மாணவர் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



 நூருல் ஹுதா உமர்


பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படும் நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திலும் பிரதேச அபிவிருத்தியிலும், சமூக நல்லிணக்கத்திலும் அதீத அக்கரையுடன் செயற்பட்டு வரும் நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர் பிரதேச சபை உறுப்பினருக்கென கிடைத்த நான்காம் மாத கொடுப்பனவையும் தான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய வீரத்திடல் பிரதேசத்தில் சொந்த வீடு வசதி அற்ற ஒரு குடும்பத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்ட நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர்; தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த கொடுப்பனவை மக்களுக்கே வழங்கும் நான் எனது பதவிக்கால சகல மாத கொடுப்பனவுகளையும் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கு இணங்க பொதுமக்களுக்கே வழங்குவதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.


 

வி.சுகிர்தகுமார் 


 தமிழ்மொழிக்கு சம அந்தஸ்த்து வழங்குவதாக சுற்றுநிருபத்தில் கூறப்பட்டிருந்தும் கூட செயற்பாட்டில் இல்லை என இலங்கை ஜனநாயக முன்னணியின் தலைவர் அல்ஹாஜ் A.B. கமால்தீன் தெரிவித்தார்.

தற்போது பதவியில் இருக்கும் அரசாங்கம் நாட்டில் பிறந்த சகல மக்களும் சம அந்தஸ்த்து உடையவர்கள். எல்லா பிரதேசங்களிலும் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். அடிப்படை உரிமைகள் எவருக்கும் மறுக்கப்படல் கூடாது என அடிக்கடி கூறுகின்றது. அப்படி கூறியும் ஏன் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்த்து வழங்க முன்வரவில்லை என இலங்கை ஜனநாயக முன்னணி வினவுகின்றது எனவும் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

2026ம் ஆண்டு அரசாங்கம் அமுல்படுத்தவிருக்கும் கல்விக் கொள்கையின் சீர்திருத்தம் சம்பந்தமாக கல்வி அமைச்சரின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் அமைச்சின் கீழ் அமையப்பெற்றுள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கல்வி அமைச்சின் செயலாளர், தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர், ஏனைய உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு 2025ம் ஆண்டு ஆரம்பம் முதல் செப்டம்பர் மாதம் 10ம் திகதி வரையிலும் சீர்திருத்தம் சம்பந்தமாக அமர்வுகள் சிங்கள மொழியில் மாத்திரம் நடைபெற்றது.
சில தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சிங்கள மொழியில் பரீட்சயம் இல்லாத காரணத்தினால் இக்கலந்துரையாடலின் சிறு விளக்கத்தையாவது ஏக நேரத்தில் தமிழில் மொழிபெயர்க்குமாறு வேண்டினார்கள்.

இதனை செவிமடுத்த அதிகாரிகள் இறுதியில் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்புச் செய்வதாகக் கூறி கலந்துரையாடலைத் தொடர்ந்தார்கள். இறுதியில் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு நடைபெறவில்லை. இவ்வாறுதான் ஒவ்வொரு அமர்வுகளிலும் சிங்கள மொழியில் அமர்வுகள் நடைபெற்றது. சில தொழிற்சங்க பிரதிநிதிகள் எழுந்து நின்று ஆங்கிலத்திலாவது மொழிபெயர்ப்பு செய்யுங்கள் என வேண்டியும் எதுவும் நடைபெறவில்லை.

தமிழ்மொழிக்கு சம அந்தஸ்த்து வழங்குவதாக சுற்றுநிருபத்தில் கூறப்பட்டிருந்தும் கூட செயற்பாட்டில் தமிழ் மொழிக்கு எதுவிதமான அந்தஸ்த்தும் வழங்கப்படாமல் இருப்பதை இலங்கை ஜனநாயக முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

மேற்கூறப்பட்ட விடயங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க இவ்வரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் முன்னணியின் தலைவர் அல்ஹாஜ் யு.டீ. கமால்தீன் வேண்டிக் கொள்வதுடன் சிங்கள மொழிக்கு நிகராக தமிழ் மொழிக்கும் அந்தஸ்த்து வழங்கி தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட மக்களின் கனவுகளை நினைவுக்கு கொண்டு வருமாறு வேண்டுகின்றேன்.

 


நூருல் ஹுதா உமர் 


சாய்ந்தமருதில் உடனடி நூடுல்ஸ் விற்பனை வாகனம் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் இன்று (24) சுற்றிவளைப்புக்குட்படுத்தப்பட்டது

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது மாளிகா வீதியில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தின் மூலம் உடனடி நூடுல்ஸ் தயாரித்து விற்பனை செய்த நிறுவனத்தின் வாகனம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் சுற்றிவளைப்புக்குட்படுத்தப்பட்டது.

இச்சுற்றிவளைப்பின்போது, அந்த உணவு வாகனத்தில் பணியாற்றிய உணவு கையாளுபவர்களின் மருத்துவநலச் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்டன. மேலும், அவர்கள் சுகாதாரமான உணவு தயாரிப்பு மற்றும் பரிமாற்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையின் முடிவில், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் அவ்வூர்தி பொதுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால், அது உடனடியாக அப்பாதையில் இருந்து அகற்றுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்தினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

இச்சுற்றிவளைப்பில் சுகாதார வைத்திய அதிகாரி, மற்றும் சாய்ந்தமருது பிரிவின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


 


காரைதீவு ராமகிருஷ்ண மிஷன்  ஆண்கள் பாடசாலைக்கு

மின் விசிறி தொகுதிகள் வழங்கி வைத்த றிஸ்லி முஸ்தபா..!

நூருல் ஹுதா உமர் 

காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் கேட்போர் கூடத்துக்கு முக்கிய தேவையாக இருந்த மின்விசிறி தொகுதிகள் மயோன் குழும தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான எம். றிஸ்லி முஸ்தபா அவர்களினால் இன்று (24) காலை வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை கல்வி வலய காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் அதிபர் துரையப்பா ஜோகனாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் திடீர் மரண விசாரணை அதிகாரி எ.எச்.அல் ஜவாஹிர், மயோன் சமூக சேவை அமைப்பு சார்பாக சிப்னாஸ் அஸீஸ், றிஸ்லி முஸ்தபா அவர்களின் காரைதீவு செயற்பாட்டாளர்களான ரகு நமசிவாயம், நவனீதன் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


 

( வி.ரி. சகாதேவராஜா)


 ஒட்டுமொத்த ஊரே உறங்கிக் கொண்டிருந்த நடுநிசி வேளையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை அந்த பிரதேசத்தை துவம்சம் செய்து வெளியேறியது . மக்கள் விடிய விடிய பீதியுடன் அல்லோல கல்லோலப்பட்டனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவுக் கிராமத்தில் நேற்று(19) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.17 மணி அளவில் இடம் பெற்றது. 

காரைதீவு மேற்கே உள்ள வயல் பகுதியில் இருந்து திடீரென உள் நுழைந்த தனியன் யானை  ஒன்று கண்ணகி அம்மன் ஆலய கவடா வளவிற்குள் புகுந்து பின் மதிலை உடைத்துக் கொண்டு ஊர்மனைக்குள் புகுந்தது.

ஊர் குடிமனைப்பகுதியில்  மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வேளையில்  ஐந்து வீடுகளின் எல்லை மதில்களை உடைத்து சந்திரகுமார் என்பவரின் களஞ்சிய அறையிலிருந்த நெல்லை உறிஞ்சிக் குடித்தது.
அப்பகுதியில் இருந்த வாழை தென்னை மரவள்ளி போன்றவற்றை சரித்து உண்டு துவம்சம் செய்தது .
மக்கள் செய்வதறியாது  உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடுநிசியில் ஓட்டம் பிடித்தனர் .

அந்தப் பிரதேசமே நடுநிசியில் அல்லோல கல்லோலப்பட்டது. நாய்களும் குரைக்க யானை மதம் பிடித்து ஓடத் தொடங்கியது.
நிலைமை மோசமாகியது. அந்த யானை தொடர்ந்து வளவுகளுக்குள்ளால் மதிலை உடைத்துக் கொண்டு சென்று மீண்டும் வயலை சென்றடைந்தது .
மக்கள் விடிய விடிய பீதியுடன் பொழுதைக் கழிக்க நேர்ந்தது.

தெய்வாதீனமாக உயிரிழப்பு ஏற்பட்டதில்லை.

பெரும் சேதத்தை எதிர்கொண்ட சந்திரகுமார் என்ற குடிமகன் கூறுகையில்.. நாம் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபொழுது திடீரென பாரிய சத்தம் கேட்டது. புயல் அடிக்குதோ என் நினைத்து எழுந்து பார்த்த போது பெரும் கரிய உருவத்துடன் யானை ஒன்று நின்றது. ஒரு கணம் ஈரற்குலை நடுங்கியது.
இப்படி அது சேதம் விளைவிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பீதி கொண்டு ஓடினோம். இந்த சேதத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மற்றும் யானை வராமல் மக்களை பாதுகாக்க வேண்டும். உரிய  அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் பல உயிர்களையும் இழக்க வேண்டி நேரிடும்.என்றார்.

 


( வி.ரி.சகாதேவராஜா)


உலக வங்கியின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன .  அதேவேளை சாய்ந்தமருதுக்கு தனியான 
அபிவிருத்தித் திட்டம் அமுலாகும்.

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (18) சனிக்கிழமை இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் கூறினார்.

வித்தியாலய அதிபர் எம் .ஐ.எம். இல்யாஸ்  தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,

2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எங்களது பிராந்தியத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. 

சாய்ந்தமருது பிரதேசத்திற்கென தனியான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொலிவேரியனுக்கான இரும்புப் பாலம், பழைய வைத்தியசாலை வீதிப் பாலம் மற்றும் கடற்கரைப் பாலம் என்பன மீள் நிர்மாணம் செய்யப்படும். கரைவாகு வட்டை வடிச்சல் நீர் வடிந்து ஓடக்கூடிய வகையில் திட்டம் வகுத்து அபிவிருத்தி செய்யப்படும். கரைவாகு வட்டை தரிசு நிலங்களை நிரப்பி குடியிருப்புக்களை அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படும். என்றார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்எஸ்.சஹதுல் நஜீம் உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற சகல மாணவர்களுக்குமான பரிசில்களை ஆதம்பாவா எம்.பி. வழங்கி மாணவர்களை கெளரவப்படுத்தினார்.

 


நூருல் ஹுதா உமர் 

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய எம்.ஏ.கிதிர் முஹம்மட் அவர்கள் தனது 34வருட கால அரச சேவையில் இருந்து நேற்று (2025.10.16) ஓய்வு பெற்றுள்ளார்.

இதனை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சேவை நலன் பாராட்டு விழா சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (16), பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் வீ. வினோகாந்த், உறுப்பினர்கள், அம்பாரை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், தொழில்நூட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், நூலகர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கெளரவ தவிசாளர், கெளரவ உப தவிசாளர், கெளரவ உறுப்பினர்கள், மற்றும் உத்தியோகத்தர்களினால் எம்.ஏ.கிதிர் முஹம்மட் அவர்களின் 34 வருட கால அரச பணியின் உன்னத சேவைகளை சிலாகித்து உரையாற்றியதுடன், பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் வழங்கி, கெளரவிக்கப்பட்டதுடன், வாழ்த்துப்பாவும் கையளிக்கப்பட்டன.

1991இல் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக சம்மாந்துறை கோட்டக் கல்வி அலுவலகத்தில் முதல் நியமனம்பெற்று தனது சேவையை ஆரம்பித்தார். அங்கு O5 வருடங்கள் பணியாற்றியதன் பின்னர், 1996ஆம் ஆண்டு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு (MSO Supra) தேர்ச்சி பெற்றார்.

பின்னர், 1997ஆம் ஆண்டு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு, அங்கு 14 வருடங்கள் சேவை புரிந்தார்.

2011ஆம் ஆண்டு, இடமாற்றத்தின் மூலம் நாவிதன்வெளி, இறக்காமம், நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளின் செயலாளராக கடமையாற்றினார்.
அதையடுத்து, 2017ஆம் ஆண்டு, தனது சொந்த பிரதேசமான சம்மாந்துறை பிரதேச சபையில் செயலாளராக நியமிக்கப்பட்டு, அங்கு 8 வருடங்கள் சிறப்பாக கடமையாற்றி 34 வருட அரச சேவையிலிருந்து தனது 60ஆவது வயதில் ஒய்வுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 ( வி.ரி.சகாதேவராஜா)


சர்வதேச சிறுவர் தினத்தினை கொண்டாடும் முகமாக கல்முனை  ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன்  தலைமையில் நிகழ்வுகள் நேற்று இடம் பெற்றன. 

 வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறார்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர்.

 நிகழ்வின்போது வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் மருத்துவர். ரொசாந்த், பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் தாஹிரா சபியுதீன் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தன

 


( வி.ரி.சகாதேவராஜா)


நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை வடக்கில் செம்மணியிலும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக நேற்று (27) சனிக்கிழமை ஆரம்பித்திருக்கிறார்கள் .

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன் இப் போராட்டம் ஆரம்பித்தது.

இப் போராட்டத்தில் அதிகளவிலான பொதுமக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளும் கலந்து கொண்டிருந்தனர்.

 அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, மட்டக்களப்பு மாவட்ட  அமல்ராஜ் அமலநாயகீ    செல்லையா திலகவதி மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உட்பட நூற்றுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



 ( வி.ரி. சகாதேவராஜா)

உலக மருந்தாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பான நிகழ்வொன்று 
கல்முனை ஆதர வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் ஜி.சுகுணன் தலைமையில்  முன்தினம் 25.09.2025 வியாழக்கிழமை நடைபெற்றது .

இந்நிகழ்வில் தலைமயுரையாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி சுகுணன்.. மருந்தாளர்களுக்கான வாழ்த்துகளை தெரிவித்ததுடன் வைத்தியசாலையின் பிரதான மருந்தாளர் செல்வி.பி.சுதர்ஜினி மற்றும் மருந்தாளர்களின் சிறப்பான சேவை பற்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தார். 

வைத்தியசாலையில் சுற்றாடலை மெருகூட்டுவதற்காக ரூபாய் 10000/- பெறுமதி மிக்க பூ கன்றுகள் பிரதான மருந்தாளரால் வைத்தியசாலைக்கு பரிசளிக்கப்பட்டது.

மேலும் நிகழ்வில் வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் ரொஷாந்த், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிரா சபியுதீன், வைத்தியசாலையின் கணக்காளர் எம் . கேந்திர மூர்த்தி மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். 



 (வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு விவசாய போதனாசிரியர்  பிரிவிக்குட்பட்ட பகுதிகளில் காளான் பயிர்ச் செய்கை மற்றும் உணவு தயாரித்தல் தொடர்பான கூட்டு விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது .

காரைதீவு பிரதேச விவசாயப்போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் இன்று (19) வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில்  உதவி
விவசாயப்பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் மற்றும் 
தொழில்நுட்ப உதவியாளர் ஏரி.தஸ்னிம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அங்கு காளான் செய்கை உற்பத்தி தொடர்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
 அத்துடன் காளான் உணவைஎவ்வாறு சமைப்பது எவ்வாறு உட்கொளுவது என்பது தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

அங்கு காளான் சூப் தயாரித்தல் தொடர்பாக செய்முறையுடன் கூடிய விளக்கம் அளிக்கப்பட்டது.

 காளான் செய்கைக்கான உள்ளீடுகள் உபகரணங்கள் வழங்கப்பட்டு பெண்களின் சுயதொழிலை ஊக்குவித்து வாழ்வாதாரத்தை உயர்த்துதல் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

 


( வி.ரி.சகாதேவராஜா)

 ஆலையடிவேம்பு  பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர்  ரெட்னம் சுவாகர் இன்று (10) புதன்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிரந்தர உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் முன்னிலையில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

பதவியேற்பு விழாவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் எஸ். திரவியராசாவும் கலந்து கொண்டார்.

 


நூருல் ஹுதா உமர் 

கல்முனை கடற்கரைப் பகுதியில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு கல்லணை வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர், சமூக வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நம்பிக்கையாளர் சபையின் அழைப்பின் பேரில், கடலரிப்பு அபாயத்தை நேரில் பார்வையிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, இன்று (12) செவ்வாய்க்கிழமை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்னாயக்க ஆகியோர், கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர் திரு. துளசிதாசன் சகிதம் கல்முனை கடற்கரைப்பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தனர்.

விஜயத்தின் போது, அசமந்தமாக செயற்பட்டிருந்த சம்பந்தப்பட்ட கொந்தராத்துகாரர் பணிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொறியியலாளர் தெரிவித்தார். மேலும், காலத்தை வீணாக்காமல் மாற்று வழிமுறைகள் மூலம் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவை வழங்கினர்.

இந்நிகழ்வில், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுடன் பிரதேச மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்துகொண்டு, கடலரிப்பு அபாயத்தின் தற்போதைய களநிலவரங்களை விளக்கினர்.

 


நூருல் ஹுதா உமர்


கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான்  மற்றும் முஹம்மத் ஆஷிக் ஆகியோர்களால் தங்களின் சபை அமர்வில்  கிடைக்கப் பெறுகின்ற மாதாந்த கொடுப்பனவை கல்வி நிலையத்திற்கு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக (10) சம்மாந்துறையில் இயங்கி வரும்  மிரர் கல்வி நிலையத்திற்கு வழங்கி வைத்தனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது கல்வி மேம்பாட்டிற்காக சம்பளத்தை ஒதுக்குவதாக உறுதியளித்திருந்த இவர்கள், அந்த உறுதியை இன்று நடைமுறைப்படுத்தினர். வழங்கப்பட்ட நிதியை கல்வி நிலையத்தின் பெளதீக  வசதிகளை மேம்படுத்தவும் ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் இந் நிதி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்  கல்வி நிலைய பொறுப்பாசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து எங்களின் அதிகார காலத்தில் கிடைக்கும் பிரதேச சபை கொடுப்பனவுகளை கல்வி மேம்பாட்டுக்காக கையளிக்க உள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் இதன்போது கருத்து தெரிவித்தார்.

 


பாறுக் ஷிஹான்)


அம்பாறை மாவட்டம் கல்முனை   பிராந்தியத்தில்    விசேட   போக்குவரத்து பொலிஸாரின்   திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  93 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை   இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது   பெரிய நீலாவணைக்கட்பட்ட மருதமுனை  மற்றும்  கடற்கரை வீதி  போன்ற இடங்களில்  மேற்கொள்ளப்பட்டது.

இத் திடீர் சோதனையில்  மோட்டார் சைக்கிள் ஆவணம், காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது   தலைக்கவசம் அணியாது செல்வது     ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது   அதிவேகமாக செல்வது  மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள்  தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள்  பொலிஸாரினால் வழங்கப்பட்டன.
 

இச்சோதனை நடவடிக்கையானது கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர  ஆலோசனையில்  அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட  பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி நெறிப்படுத்தலில்  அம்பாரை மாவட்ட  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் தலைமையில்  இடம்பெற்றது.இதன் போது     கல்முனை  சம்மாந்துறை சவளைக்கடை சாய்ந்தமருது   பொலிஸ் நிலைய    பொலிஸார்   இணைந்து  முக்கிய சந்திகள்  பிரதான  புற நகர வீதிகளில்  திடீர் சோதனை நடவடிக்கை  மேற்கொண்டனர்.

குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  93   பேர் மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




 (வி.ரி.சகாதேவராஜா)

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மாடித் தோட்டத்தில் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களினால் நடுகை செய்யப்பட்ட புதினாக்கீரைக் கன்றுகளின் அறுவடை நிகழ்வானது  பிரதேச செயலாளர்  உ. உதயஸ்ரீதர்  தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (01.08.2025) இடம்பெற்றது.

இதன்போது  களுவாஞ்சிகுடி விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் ஏ.ஐ. றிஃகியினால் புதினாவின் பயன்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாக அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் உட்பட அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

 


( வி.ரி. சகாதேவராஜா)


"சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை" என்ற தொனிப் பொருளில் ஒன்றுகூடல் நிகழ்வொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (29) கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன்  தலைமையில் நடைபெற்றது.

இதில் முக்கியமான பல விடயங்களை பணிப்பாளர் மருத்துவர் சுகுணன் மிகவும் இறுக்கமாகவும், பொதுமக்கள் சார்பாகவும் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் அங்கு விளக்கமளிக்கையில்..

சில சமூக வலைத்தளங்களில், இவ் வைத்தியசாலை பற்றியும், எமது சேவை பற்றியும் தவறான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது. 
உண்மை, பொய், விளக்கம் என்பதற்கு அப்பால் நாம் சரியாக நடந்து கொள்கிறோமா, என அனைவரும் சிந்திக்க வேண்டும். தவறு எங்கு உள்ளது, என்பதை நாம் உணர்வதன் மூலம் அதற்கான தீர்வையும் காண முடியும். 
எந்தப் பிரச்சினை என்றாலும் முதலில் நாம் தவறுகளை எங்கு உள்ளது என உணர்ந்து கொள்வோமானால், அதன் பின் அதை திருத்துவதற்கான ஒரு பொறிமுறையை தெரிவு செய்ய முடியும். அவ்வாறு நாம் எமது பக்க தவறுகளை திருத்திக் சொல்வதனால் , 
தவறு காண்பவர்களே எம்மை பார்த்து தற்போது மிகவும் சிறப்பாக உள்ளது. என்று கருத்துக்களை முன் வைக்கும் நிலைக்கு நாம் எம்மை மாற்றிக் கொள்ளலாம்.
அதுவே நமது திறமை.
ஒரு குறுகிய தூர பிரயாணத்தில் விபத்துக்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீண்ட தூரப் பிரயாணத்தின் போது விபத்துக்கள் ஏற்படும் நிகழ் தகவு அதிகமாகவே காணப்படும். இங்கு நாம் நீண்ட தூரப் பிரயாணத்தில் பயணிக்கின்றோம். 
கண், மூக்கு தொண்டை காது, எலும்பு முறிவு, சத்திர சிகிச்சை, பொது வைத்திய நிபுணத்துவம், உளவியல் பிரிவு, இருதய நோய் பிரிவு, காச நோய் பிரிவு, பெண் நோயியல் பிரிவு, கதிரியக்க பிரிவு என்பவற்றுடன் இன்னும் பல விஷேட பிரிவுகளும் இயங்குகின்றன. 
வாரத்தில் ஏழு நாட்களும் தொடர்ச்சியாக நாம் பயணிக்கின்றோம். நீங்கள் அனைவரும் ஆற்றும் சேவையால்.
கொழும்பு, கண்டி என அலையாமல்  இங்கு வருபவர்களின் எண்ணிக்கையும் விரைவாக அதிகரித்து, தற்போது கிளினிக் பிரிவு கூடிய நோயாளர்கள் வரும் பிரிவாக மாறி உள்ளது.
நாம் குறைந்த வளங்களை கொண்டிருந்தாலும் அதனைக் கொண்டு சிறந்த நிபுணர்களின் நிபுணத்துவத்துடன் இணைந்த வகைகளின் எமது அர்ப்பணிப்பான சேவைகளை முன்னிறுத்தி சேவை நாடிகள் திருப்பிக் கொள்ளும் நிலைக்கு எம்மை மாற்றிக் கொள்ளுவது அவசியம். 

எந்த ஒரு சேவை நாடிகளும் தங்களுக்கு தேவையான சேவைகளை 
எமது அனைத்து சேவை பிரிவுகளும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டி உள்ளது. 
இங்கு பல குறைபாடுகள் சுட்டிக் காட்டப்படுகின்றது. 
ஆனால் நாம் அவ்வாறான குறைபாடுகள் இல்லாத வகையில் சிறந்த சேவையாற்ற, 
நாமும் எம்மை என்ன செய்ய முடியும் என்பதை நாளுக்கு நாள் நாம் சிந்தித்து மாற்றி அமைக்க வேண்டும். 
"கைசைன்" விதியும் அதையே கூறுகின்றது. 
எமது சேவை சமூகத்திற்கு செய்யும் அர்ப்பணிப்பான சேவையாக அமைய வேண்டும் என்றார். 

இது பற்றி கருத்து கூறிய கண் வைத்திய நிபுணர் மருத்துவர் சுடேஸ் சென்டவிதான கூறுகையில்..

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி, கல்முனை, அக்கரைப்பற்று அம்பாறை பொத்துவில் என பல இட மக்களும் தொலை தூரத்தில் இருந்து வருகின்றனர். 
நாம் அனைவரையும் குறைந்த வளங்களைக் கொண்டு பார்வையிடுகின்றோம். 
எமது சேவையாளர்களின் அர்ப்பணிப்பு மூலம் அனைவரையும் திருப்தி செய்து வருகின்றோம். சிலவேளைகளில் வேலைப்பளு காரணமாக சில தவறுகள், குறைபாடும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்காக நாம் தொழில்நுட்ப  சேவையுடனான மிக நுட்பமாக சேவை செய்ய வேண்டி உள்ளது.
இந்த எமது தரப்பு விடயத்தையும் சேவைநாடிகளுக்கு, ஊழியர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

சிறுபிள்ளை வைத்திய நிபுணர் மருத்துவர் எஸ்ஜே.றொசாந் கூறுகையில்.. இறைவன் எம் மீது அளவற்ற அன்பை வைத்துள்ளார். அதில் கொஞ்சமாவது நாம் ஏனைய உயிர்களிலும் பகிர்ந்து கொண்டு சிறந்த நட்பை தரும், அனைவரும் மகிழ்வுறும் வகையில் அன்பை பகிர்ந்து சேவை ஆற்றுவோம் என்றார். 

பொது வைத்திய நிபுணர் மருத்துவர் எஎஎம்.அன்வாஸ் கூறுகையில்.. அன்பாகவும் சேவையார்கள் விரும்பும் பாணியிலும் அவருடன் நட்பாக பழகுவது அவசியம். எமது சேவை தியாகம் அளப்பெரியது எமது அன்பான வார்த்தைகளால் தான் அதை வெளிக் கொண்டு வர முடியும் என்றார். 

உதவிப் பணிப்பாளர் வைத்திய அதிகாரி மருத்துவர் சா.இராஜேந்திரன் கூறுகையில்..
 தவறுகள் திருத்தப்பட வேண்டும். ஆனால் தேவையற்ற கருத்துக்களால் நாம் தளர்வு கொள்ளக் கூடாது. இன்னும் வேகமாக பயணிக்க வேண்டும்.
பணிப்பாளர் அவர்கள் 500 மில்லியனுக்கு மேலான நிதி ஒதுக்கீட்டை பெற்று தந்துள்ளார். உபகரண குறைபாடுகள் இனிமேல் இருக்க முடியாது. அதற்கு கைமாறாக நாம் எமது சேவைகளை வெளிக்காட்ட வேண்டும். 
யார் பிழை செய்தாலும் அது பணிப்பாளரையே தாக்கும். 
ஆகவே இதை உணர்ந்து நாம் அனைவரும் நடக்க வேண்டும் என்றார். 

கலந்து கொண்ட தாதிய பரிபாலகர் ரி.சசிதரன் , உள நல வைத்திய பிரிவு வைத்திய அதிகாரி மருத்துவர் அனிஸ் முகமட் ஆகியோரும் சிறந்த கருத்து பரிமாற்றத்திற்கான கருத்துக்களை முன்வைத்தனர். 

முடிவுரையாக கருத்து தெரிவித்த பணிப்பாளர் மருத்துவர் சுகுணன், 
நாம் அவரவர் தமது சேவையை திறம்பட செய்ய வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை நிச்சயம் என்னால் தர முடியும். ஆனால் தவறுகள் எங்கு நடந்தாலும் அதை மிகுந்த கருத்துடன் ஆராய்ந்து அதற்கான நிவர்த்தி நடவடிக்கை இனிமேல் தொடரும் என்றார். 

அனைத்து பிரிவுகளும் சிறந்த சேவை மூலம் சேவை நாடிகளின் திருப்திகரமான மனநிலையை பெற அர்ப்பணிப்பான சேவையுடன்  ஒன்றிணையுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.


 ( வி.ரி. சகாதேவராஜா)


நாவிதன்வெளி- சம்மாந்துறை பிரதேச எல்லைக் கிராமமான வீரச்சோலை கிராமத்தின் பெயர் பலகை  இனந்தெரியாதோரால் தகர்க்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை - சொறிக்கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த பெயர்ப்பலகை கூரிய ஆயுங்கள் கொண்டு தகர்ப்பட்டுள்ளது.

இதனை நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்  நேற்று ஸ்தலத்திற்கு நேரடியாகச்சென்று பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து அவர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழும் இந்த பிரதேசத்தில் இவ்வாறான விஷமத்தனமான செயற்பாடுகள் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயற்பாடாக அமையும் . இவ்வாறான விசமத்தனமான செயற்பாடுகள் மூலம் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது எனத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தினார்.

இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் கோபாலசிங்கம் உதயகுமார், நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

 


நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை ஆலையடி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தை முறையாக மேம்படுத்தி, ஒரு பரந்த அளவிலான விளையாட்டு மையமாக மாற்றும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மைதானத்தை சுற்றி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த மைதானம், இளைஞர்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த ஒன்றாகும். இளம் தலைமுறையினரின் விளையாட்டு வளர்ச்சிக்காகவும், சமூக நிகழ்வுகளுக்கான இடமாகவும், போதைப் பாவனை அற்ற இளைஞர் சமூகத்தின் உருவாக்கம் தொடர்பாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்றாக இது காணப்படுகிறது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பும், மைதானத்தின் இயற்கை அழகிய அமைப்பும் பேணப்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் ; மிகுந்த அர்ப்பணிப்புடன் இம்மைதான அபிவிருத்திக்காக தொடர்ந்து பாடுபட்டு வருபவர் எனது நெருங்கிய சகோதரர் அனிஸ். அவரது முயற்சி, சமூக நலனுக்காக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் உந்துசக்தியாக அமைகிறது. அவரது பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரதேச சபையின் ஊடாக தேவையான ஒத்துழைப்பை வழங்க முனைவோம் என்றார்.
மேலும், இதே போன்று, சமூக நலனுக்காக செயல்படும் ஒவ்வொரு நபரின் பங்களிப்பும், சம்மாந்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் உறுதியோடு உள்ளேன். அத்தோடு, கெளரவ தவிசாளரின் வழிகாட்டலில், இந்த சபையில் பெரும்பாலான உறுப்பினர்கள் விளையாட்டுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களும் தங்களால் இயலுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு எமதூரின் வளமான இந்த மைதானத்தை முழுமையாக அமைக்க அயராது முயற்சிப்போம் என்றார்.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர் ஆஷிக் அஹமத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.