Showing posts with label Eastren. Show all posts

 நூருல் ஹுதா உமர்


கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட  எம்.எஸ்.ஹலால்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது, ஐக்கிய தேசிய கட்சி, சுயேற்சை உறுப்பினர், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரவுகளை வழங்கி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஏலவே,  தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து தவிசாளர் பதவிக்கான வெற்றிடத்திற்கான தெரிவு இன்று (20) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது.

 


( வி.ரி. சகாதேவராஜா)


"மக்கள் வரிப்பணம் மக்களின்     அபிவிருத்திக்கு"
 என்ற அரசின் கோட்பாட்டிற்கமைவாக
நாவிதன்வெளி பழைய உஹன வீதி அபிவிருத்திக்கு முதற்கட்ட  பணிகள் இன்ட (20) வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. 

ஏலவே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ  அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன்   நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் நடாத்திய நேரடி சந்திப்பின் பயனாக இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 அதன் போது கடந்த முப்பது வருடங்களாக போக்குவரத்துக்கு சிரமமாக இருந்த பழைய உஹன வீதியை செப்பனிட்டுவதற்கான திட்ட வரைவுகள் கையளிக்கப்பட்டது.

.இதன் பலனாக நேற்று அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்டத்திற்கான 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பழைய உஹன வீதிக்கு 10369413.50 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார் 

நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மீள்குடியேற்ற திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 50 பயனாளிகளுக்கான இலவச குடிநீர் வழங்கும் திட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இத்திட்டத்திற்கு 15 இலட்சத்து 34 ஆயிரத்து 354 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் குடிநீர் இணைப்பை பெறுவதற்கான நிதி ஏற்பாட்டு கடிதங்களும் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிதியின் ஊடாக குறித்த குடும்பங்கள் இலவசமாக குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளும் நிலையில் அரசாங்கத்திற்கும் அமைச்சுக்கும் பிரதேச செயலகத்திற்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் அரசாங்கம் மக்களது நலனின் அதிக அக்கறை செலுத்தி வருவதுடன் குறித்த ஒரு வருட காலப்பகுதிக்குள் 50 இற்கும் மேற்பட்ட வீடமைப்பு திட்டங்கள் என பல அபிவிருத்திகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றுவருவதாக தெரிவி;த்தார்.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை மாநகர சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் விரிவான டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் இன்று (17) முன்னெடுக்கப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு உதவியாளர்களின் பிரசன்னத்துடன் பல வீடுகள் பார்வையிடப்பட்டு, நீர் தேங்க கூடிய இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் அதேவேளையில் நிவர்த்தி செய்யப்பட்டது.
 
மேலும், டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு, சுத்தமான சூழலை பேணுவதின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

 


சமகாலத்தில் நிலவும் அசாதாரண காலநிலை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக காரைதீவு ஆழ்கடல் இயந்திரப் படகுகள் இரண்டு கடலில் விபத்துக்குள்ளானது.

இப் படகுகள் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலினுடையது எனத் தெரிகிறது.

இச் சம்பவம் நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் சவுக்கடி கடல் பகுதியில் சம்பவித்துள்ளது.

காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த இரு படகுகளே இவ்விதம் விபத்துக்குள்ளானது.

இதன்போது இரண்டு படகிலும் காரைதீவைச் சேர்ந்த  ஐந்து பேர் பயணித்துள்ளதுடன் அவர்கள் தெய்வாதீனமாக பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளளனர்.
எனினும் அவர்களில்  ஒருவருக்கு காலில் பலத்த வலி மற்றும் காயம் ஏற்பட்டிருந்தது 
 
அவர்கள்  சவுக்கடி மீனவர்களால் நள்ளிரவு 1.10 மணியளவில் பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் மீட்கப்பட்டதோடு காயமுற்ற படகோட்டி அதிகாலை 1.35 மணியளவில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 விபத்துக்குள்ளாகிய படகுகளை மீட்க உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்ட போதிலும்,  பலத்த அலை நீரோட்டம் கொந்தளிப்பு காரணமாக அவை கரைதட்டின.

 இரண்டு படகில் ஒரு படகின் இயந்திரம் ஏற்கனவே பழுதான நிலையிலையே அந்த படகை கட்டி இழுத்து சென்று கொண்டிருந்தது.
 அடுத்த படகும் சவுக்கடி கடற்பிரதேசத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு காற்றில் அடித்து சவுக்கடியில் தரை தட்டியது.

குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் போலீசாருக்கு ஏறாவூர் மீனவர் அமைப்பின் தலைவர் தெரிவித்ததை அடுத்து உடனடியாக நள்ளிரவே இடத்திற்கு வருகை தந்திருந்த போலீசார் விடயத்தை கேட்டறிந்தனர்.

விபத்திற்கான காரணம் இயந்திரக்கோளாறு மற்றும் கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் சூழ்ந்திருந்த காலநிலை மாற்றம் என தற்போது வரை அறிய முடிகிறது.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் 2026 இரண்டாம் தவணைக்கான சிறுவர் பாதுகாப்புக் குழு மீளாய்வுக் குழு கூட்டம் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

குழுவின் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம்.றிபாஸின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த மீளாய்வுக் குழு கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீ. குகராஜ் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்டு கடந்த கால மற்றும் எதிர்கால திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கேட்டு தெரிந்து கொண்டதுடன்  சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலும் விளக்கமளித்தார்.

மேலும், பெற்றோர் பிரதிநிதியாக கலந்து கொண்ட பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் நூருல் ஹுதா உமர்  சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கருத்துரை வழங்கினார். இக்கூட்டத்தில் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் ஆசிரியர், மாணவர் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



 நூருல் ஹுதா உமர்


பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படும் நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திலும் பிரதேச அபிவிருத்தியிலும், சமூக நல்லிணக்கத்திலும் அதீத அக்கரையுடன் செயற்பட்டு வரும் நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர் பிரதேச சபை உறுப்பினருக்கென கிடைத்த நான்காம் மாத கொடுப்பனவையும் தான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய வீரத்திடல் பிரதேசத்தில் சொந்த வீடு வசதி அற்ற ஒரு குடும்பத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்ட நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர்; தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த கொடுப்பனவை மக்களுக்கே வழங்கும் நான் எனது பதவிக்கால சகல மாத கொடுப்பனவுகளையும் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கு இணங்க பொதுமக்களுக்கே வழங்குவதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.


 

வி.சுகிர்தகுமார் 


 தமிழ்மொழிக்கு சம அந்தஸ்த்து வழங்குவதாக சுற்றுநிருபத்தில் கூறப்பட்டிருந்தும் கூட செயற்பாட்டில் இல்லை என இலங்கை ஜனநாயக முன்னணியின் தலைவர் அல்ஹாஜ் A.B. கமால்தீன் தெரிவித்தார்.

தற்போது பதவியில் இருக்கும் அரசாங்கம் நாட்டில் பிறந்த சகல மக்களும் சம அந்தஸ்த்து உடையவர்கள். எல்லா பிரதேசங்களிலும் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். அடிப்படை உரிமைகள் எவருக்கும் மறுக்கப்படல் கூடாது என அடிக்கடி கூறுகின்றது. அப்படி கூறியும் ஏன் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்த்து வழங்க முன்வரவில்லை என இலங்கை ஜனநாயக முன்னணி வினவுகின்றது எனவும் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

2026ம் ஆண்டு அரசாங்கம் அமுல்படுத்தவிருக்கும் கல்விக் கொள்கையின் சீர்திருத்தம் சம்பந்தமாக கல்வி அமைச்சரின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் அமைச்சின் கீழ் அமையப்பெற்றுள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கல்வி அமைச்சின் செயலாளர், தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர், ஏனைய உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு 2025ம் ஆண்டு ஆரம்பம் முதல் செப்டம்பர் மாதம் 10ம் திகதி வரையிலும் சீர்திருத்தம் சம்பந்தமாக அமர்வுகள் சிங்கள மொழியில் மாத்திரம் நடைபெற்றது.
சில தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சிங்கள மொழியில் பரீட்சயம் இல்லாத காரணத்தினால் இக்கலந்துரையாடலின் சிறு விளக்கத்தையாவது ஏக நேரத்தில் தமிழில் மொழிபெயர்க்குமாறு வேண்டினார்கள்.

இதனை செவிமடுத்த அதிகாரிகள் இறுதியில் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்புச் செய்வதாகக் கூறி கலந்துரையாடலைத் தொடர்ந்தார்கள். இறுதியில் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு நடைபெறவில்லை. இவ்வாறுதான் ஒவ்வொரு அமர்வுகளிலும் சிங்கள மொழியில் அமர்வுகள் நடைபெற்றது. சில தொழிற்சங்க பிரதிநிதிகள் எழுந்து நின்று ஆங்கிலத்திலாவது மொழிபெயர்ப்பு செய்யுங்கள் என வேண்டியும் எதுவும் நடைபெறவில்லை.

தமிழ்மொழிக்கு சம அந்தஸ்த்து வழங்குவதாக சுற்றுநிருபத்தில் கூறப்பட்டிருந்தும் கூட செயற்பாட்டில் தமிழ் மொழிக்கு எதுவிதமான அந்தஸ்த்தும் வழங்கப்படாமல் இருப்பதை இலங்கை ஜனநாயக முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

மேற்கூறப்பட்ட விடயங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க இவ்வரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் முன்னணியின் தலைவர் அல்ஹாஜ் யு.டீ. கமால்தீன் வேண்டிக் கொள்வதுடன் சிங்கள மொழிக்கு நிகராக தமிழ் மொழிக்கும் அந்தஸ்த்து வழங்கி தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட மக்களின் கனவுகளை நினைவுக்கு கொண்டு வருமாறு வேண்டுகின்றேன்.

 


நூருல் ஹுதா உமர் 


சாய்ந்தமருதில் உடனடி நூடுல்ஸ் விற்பனை வாகனம் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் இன்று (24) சுற்றிவளைப்புக்குட்படுத்தப்பட்டது

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது மாளிகா வீதியில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தின் மூலம் உடனடி நூடுல்ஸ் தயாரித்து விற்பனை செய்த நிறுவனத்தின் வாகனம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் சுற்றிவளைப்புக்குட்படுத்தப்பட்டது.

இச்சுற்றிவளைப்பின்போது, அந்த உணவு வாகனத்தில் பணியாற்றிய உணவு கையாளுபவர்களின் மருத்துவநலச் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்டன. மேலும், அவர்கள் சுகாதாரமான உணவு தயாரிப்பு மற்றும் பரிமாற்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையின் முடிவில், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் அவ்வூர்தி பொதுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால், அது உடனடியாக அப்பாதையில் இருந்து அகற்றுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்தினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

இச்சுற்றிவளைப்பில் சுகாதார வைத்திய அதிகாரி, மற்றும் சாய்ந்தமருது பிரிவின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


 


காரைதீவு ராமகிருஷ்ண மிஷன்  ஆண்கள் பாடசாலைக்கு

மின் விசிறி தொகுதிகள் வழங்கி வைத்த றிஸ்லி முஸ்தபா..!

நூருல் ஹுதா உமர் 

காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் கேட்போர் கூடத்துக்கு முக்கிய தேவையாக இருந்த மின்விசிறி தொகுதிகள் மயோன் குழும தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான எம். றிஸ்லி முஸ்தபா அவர்களினால் இன்று (24) காலை வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை கல்வி வலய காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் அதிபர் துரையப்பா ஜோகனாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் திடீர் மரண விசாரணை அதிகாரி எ.எச்.அல் ஜவாஹிர், மயோன் சமூக சேவை அமைப்பு சார்பாக சிப்னாஸ் அஸீஸ், றிஸ்லி முஸ்தபா அவர்களின் காரைதீவு செயற்பாட்டாளர்களான ரகு நமசிவாயம், நவனீதன் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


 

( வி.ரி. சகாதேவராஜா)


 ஒட்டுமொத்த ஊரே உறங்கிக் கொண்டிருந்த நடுநிசி வேளையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை அந்த பிரதேசத்தை துவம்சம் செய்து வெளியேறியது . மக்கள் விடிய விடிய பீதியுடன் அல்லோல கல்லோலப்பட்டனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவுக் கிராமத்தில் நேற்று(19) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.17 மணி அளவில் இடம் பெற்றது. 

காரைதீவு மேற்கே உள்ள வயல் பகுதியில் இருந்து திடீரென உள் நுழைந்த தனியன் யானை  ஒன்று கண்ணகி அம்மன் ஆலய கவடா வளவிற்குள் புகுந்து பின் மதிலை உடைத்துக் கொண்டு ஊர்மனைக்குள் புகுந்தது.

ஊர் குடிமனைப்பகுதியில்  மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வேளையில்  ஐந்து வீடுகளின் எல்லை மதில்களை உடைத்து சந்திரகுமார் என்பவரின் களஞ்சிய அறையிலிருந்த நெல்லை உறிஞ்சிக் குடித்தது.
அப்பகுதியில் இருந்த வாழை தென்னை மரவள்ளி போன்றவற்றை சரித்து உண்டு துவம்சம் செய்தது .
மக்கள் செய்வதறியாது  உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடுநிசியில் ஓட்டம் பிடித்தனர் .

அந்தப் பிரதேசமே நடுநிசியில் அல்லோல கல்லோலப்பட்டது. நாய்களும் குரைக்க யானை மதம் பிடித்து ஓடத் தொடங்கியது.
நிலைமை மோசமாகியது. அந்த யானை தொடர்ந்து வளவுகளுக்குள்ளால் மதிலை உடைத்துக் கொண்டு சென்று மீண்டும் வயலை சென்றடைந்தது .
மக்கள் விடிய விடிய பீதியுடன் பொழுதைக் கழிக்க நேர்ந்தது.

தெய்வாதீனமாக உயிரிழப்பு ஏற்பட்டதில்லை.

பெரும் சேதத்தை எதிர்கொண்ட சந்திரகுமார் என்ற குடிமகன் கூறுகையில்.. நாம் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபொழுது திடீரென பாரிய சத்தம் கேட்டது. புயல் அடிக்குதோ என் நினைத்து எழுந்து பார்த்த போது பெரும் கரிய உருவத்துடன் யானை ஒன்று நின்றது. ஒரு கணம் ஈரற்குலை நடுங்கியது.
இப்படி அது சேதம் விளைவிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பீதி கொண்டு ஓடினோம். இந்த சேதத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மற்றும் யானை வராமல் மக்களை பாதுகாக்க வேண்டும். உரிய  அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் பல உயிர்களையும் இழக்க வேண்டி நேரிடும்.என்றார்.

 


( வி.ரி.சகாதேவராஜா)


உலக வங்கியின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன .  அதேவேளை சாய்ந்தமருதுக்கு தனியான 
அபிவிருத்தித் திட்டம் அமுலாகும்.

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (18) சனிக்கிழமை இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் கூறினார்.

வித்தியாலய அதிபர் எம் .ஐ.எம். இல்யாஸ்  தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,

2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எங்களது பிராந்தியத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. 

சாய்ந்தமருது பிரதேசத்திற்கென தனியான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொலிவேரியனுக்கான இரும்புப் பாலம், பழைய வைத்தியசாலை வீதிப் பாலம் மற்றும் கடற்கரைப் பாலம் என்பன மீள் நிர்மாணம் செய்யப்படும். கரைவாகு வட்டை வடிச்சல் நீர் வடிந்து ஓடக்கூடிய வகையில் திட்டம் வகுத்து அபிவிருத்தி செய்யப்படும். கரைவாகு வட்டை தரிசு நிலங்களை நிரப்பி குடியிருப்புக்களை அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படும். என்றார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்எஸ்.சஹதுல் நஜீம் உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற சகல மாணவர்களுக்குமான பரிசில்களை ஆதம்பாவா எம்.பி. வழங்கி மாணவர்களை கெளரவப்படுத்தினார்.

 


நூருல் ஹுதா உமர் 

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய எம்.ஏ.கிதிர் முஹம்மட் அவர்கள் தனது 34வருட கால அரச சேவையில் இருந்து நேற்று (2025.10.16) ஓய்வு பெற்றுள்ளார்.

இதனை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சேவை நலன் பாராட்டு விழா சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (16), பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் வீ. வினோகாந்த், உறுப்பினர்கள், அம்பாரை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், தொழில்நூட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், நூலகர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கெளரவ தவிசாளர், கெளரவ உப தவிசாளர், கெளரவ உறுப்பினர்கள், மற்றும் உத்தியோகத்தர்களினால் எம்.ஏ.கிதிர் முஹம்மட் அவர்களின் 34 வருட கால அரச பணியின் உன்னத சேவைகளை சிலாகித்து உரையாற்றியதுடன், பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் வழங்கி, கெளரவிக்கப்பட்டதுடன், வாழ்த்துப்பாவும் கையளிக்கப்பட்டன.

1991இல் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக சம்மாந்துறை கோட்டக் கல்வி அலுவலகத்தில் முதல் நியமனம்பெற்று தனது சேவையை ஆரம்பித்தார். அங்கு O5 வருடங்கள் பணியாற்றியதன் பின்னர், 1996ஆம் ஆண்டு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு (MSO Supra) தேர்ச்சி பெற்றார்.

பின்னர், 1997ஆம் ஆண்டு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு, அங்கு 14 வருடங்கள் சேவை புரிந்தார்.

2011ஆம் ஆண்டு, இடமாற்றத்தின் மூலம் நாவிதன்வெளி, இறக்காமம், நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளின் செயலாளராக கடமையாற்றினார்.
அதையடுத்து, 2017ஆம் ஆண்டு, தனது சொந்த பிரதேசமான சம்மாந்துறை பிரதேச சபையில் செயலாளராக நியமிக்கப்பட்டு, அங்கு 8 வருடங்கள் சிறப்பாக கடமையாற்றி 34 வருட அரச சேவையிலிருந்து தனது 60ஆவது வயதில் ஒய்வுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 ( வி.ரி.சகாதேவராஜா)


சர்வதேச சிறுவர் தினத்தினை கொண்டாடும் முகமாக கல்முனை  ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன்  தலைமையில் நிகழ்வுகள் நேற்று இடம் பெற்றன. 

 வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறார்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர்.

 நிகழ்வின்போது வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் மருத்துவர். ரொசாந்த், பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் தாஹிரா சபியுதீன் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தன

 


( வி.ரி.சகாதேவராஜா)


நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை வடக்கில் செம்மணியிலும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக நேற்று (27) சனிக்கிழமை ஆரம்பித்திருக்கிறார்கள் .

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன் இப் போராட்டம் ஆரம்பித்தது.

இப் போராட்டத்தில் அதிகளவிலான பொதுமக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளும் கலந்து கொண்டிருந்தனர்.

 அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, மட்டக்களப்பு மாவட்ட  அமல்ராஜ் அமலநாயகீ    செல்லையா திலகவதி மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உட்பட நூற்றுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



 ( வி.ரி. சகாதேவராஜா)

உலக மருந்தாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பான நிகழ்வொன்று 
கல்முனை ஆதர வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் ஜி.சுகுணன் தலைமையில்  முன்தினம் 25.09.2025 வியாழக்கிழமை நடைபெற்றது .

இந்நிகழ்வில் தலைமயுரையாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி சுகுணன்.. மருந்தாளர்களுக்கான வாழ்த்துகளை தெரிவித்ததுடன் வைத்தியசாலையின் பிரதான மருந்தாளர் செல்வி.பி.சுதர்ஜினி மற்றும் மருந்தாளர்களின் சிறப்பான சேவை பற்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தார். 

வைத்தியசாலையில் சுற்றாடலை மெருகூட்டுவதற்காக ரூபாய் 10000/- பெறுமதி மிக்க பூ கன்றுகள் பிரதான மருந்தாளரால் வைத்தியசாலைக்கு பரிசளிக்கப்பட்டது.

மேலும் நிகழ்வில் வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் ரொஷாந்த், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிரா சபியுதீன், வைத்தியசாலையின் கணக்காளர் எம் . கேந்திர மூர்த்தி மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். 



 (வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு விவசாய போதனாசிரியர்  பிரிவிக்குட்பட்ட பகுதிகளில் காளான் பயிர்ச் செய்கை மற்றும் உணவு தயாரித்தல் தொடர்பான கூட்டு விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது .

காரைதீவு பிரதேச விவசாயப்போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் இன்று (19) வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில்  உதவி
விவசாயப்பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் மற்றும் 
தொழில்நுட்ப உதவியாளர் ஏரி.தஸ்னிம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அங்கு காளான் செய்கை உற்பத்தி தொடர்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
 அத்துடன் காளான் உணவைஎவ்வாறு சமைப்பது எவ்வாறு உட்கொளுவது என்பது தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

அங்கு காளான் சூப் தயாரித்தல் தொடர்பாக செய்முறையுடன் கூடிய விளக்கம் அளிக்கப்பட்டது.

 காளான் செய்கைக்கான உள்ளீடுகள் உபகரணங்கள் வழங்கப்பட்டு பெண்களின் சுயதொழிலை ஊக்குவித்து வாழ்வாதாரத்தை உயர்த்துதல் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

 


( வி.ரி.சகாதேவராஜா)

 ஆலையடிவேம்பு  பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர்  ரெட்னம் சுவாகர் இன்று (10) புதன்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிரந்தர உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் முன்னிலையில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

பதவியேற்பு விழாவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் எஸ். திரவியராசாவும் கலந்து கொண்டார்.

 


நூருல் ஹுதா உமர் 

கல்முனை கடற்கரைப் பகுதியில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு கல்லணை வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர், சமூக வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நம்பிக்கையாளர் சபையின் அழைப்பின் பேரில், கடலரிப்பு அபாயத்தை நேரில் பார்வையிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, இன்று (12) செவ்வாய்க்கிழமை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்னாயக்க ஆகியோர், கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர் திரு. துளசிதாசன் சகிதம் கல்முனை கடற்கரைப்பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தனர்.

விஜயத்தின் போது, அசமந்தமாக செயற்பட்டிருந்த சம்பந்தப்பட்ட கொந்தராத்துகாரர் பணிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொறியியலாளர் தெரிவித்தார். மேலும், காலத்தை வீணாக்காமல் மாற்று வழிமுறைகள் மூலம் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவை வழங்கினர்.

இந்நிகழ்வில், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுடன் பிரதேச மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்துகொண்டு, கடலரிப்பு அபாயத்தின் தற்போதைய களநிலவரங்களை விளக்கினர்.

 


நூருல் ஹுதா உமர்


கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான்  மற்றும் முஹம்மத் ஆஷிக் ஆகியோர்களால் தங்களின் சபை அமர்வில்  கிடைக்கப் பெறுகின்ற மாதாந்த கொடுப்பனவை கல்வி நிலையத்திற்கு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக (10) சம்மாந்துறையில் இயங்கி வரும்  மிரர் கல்வி நிலையத்திற்கு வழங்கி வைத்தனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது கல்வி மேம்பாட்டிற்காக சம்பளத்தை ஒதுக்குவதாக உறுதியளித்திருந்த இவர்கள், அந்த உறுதியை இன்று நடைமுறைப்படுத்தினர். வழங்கப்பட்ட நிதியை கல்வி நிலையத்தின் பெளதீக  வசதிகளை மேம்படுத்தவும் ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் இந் நிதி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்  கல்வி நிலைய பொறுப்பாசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து எங்களின் அதிகார காலத்தில் கிடைக்கும் பிரதேச சபை கொடுப்பனவுகளை கல்வி மேம்பாட்டுக்காக கையளிக்க உள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் இதன்போது கருத்து தெரிவித்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.