Showing posts with label Eastren. Show all posts

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்           

 அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் மயானத்தின் முன்பாக கண்டக்குழி பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய பொருட்களை சேகரிக்கும் நாடார் நிலையமொன்றில் இன்று (09) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இத்தீப்பரவால் அப்பகுதி கரும்புகை நிரம்பி காட்சியளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று மாநாகர சபையின் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.
இதேநேரம் சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று இராணுவம் மற்றும் பொலிசாரும் சென்றிருந்ததுடன் தீப்பரவலுக்கான காரணத்தை கண்டறியும் விசாரணைகளையும் பொலிசார் முன்னெடுத்திருந்தனர்.
தீப்பரவல் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமை எரிவாயு மொத்த வியாபார நிலையம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 ( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள களப்பு மற்றும் மயானவீதி பகுதிகள் காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று (8) திங்கள் கிழமை துப்பரவாக்கப்பட்டன.

பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரனின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இத்துப்பரவு நடவடிக்கையில் கனரக வாகன உதவியுடன் சபை ஊழியர்கள் பங்கேற்று வீதியின் இருமருங்கிலும் காடுபற்றிக் கிடந்த மரங்கள் செடி கொடிகள்  அகற்றப்பட்டதுடன், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்கள் சுகாதாரமான சூழலில் வாழ்வதையும் இலகுவாக பயணிப்பதையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான துப்பரவு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக பிரதேச சபை தவிசாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.


மேலும், பொதுமக்களும் தமது சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


சர்வதேச சூழல்   தினமான ஜூன் -05 தினை அனுஷ்டிக்கும் முகமாக    கல்முனை  அஸ்-ஸுஹறா  வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால்  பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.


அந்த வகையில் முதலில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலையில்  சிரமதான நிகழ்வுகள் முதலில்  இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து  இன்று(05)அப்பாடசாலை அதிபர்   தலைமையில்   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள்    இடம்பெற்றதுடன் அவர்   பல்வேறு சூழல் சார் கருத்துக்களை வழங்கினார்.

இதன் போது இயற்கை ஒரு மடல் எனும் தொனிப்பொருளில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் அடங்கிய விடயங்களை   மாணவர்களின் சுற்றுச்சூழல் தொடர்பான ஆற்றுகைகள் ஊடாக  இடம்பெற்றன.நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள்  எதிர் காலத்தில் பிளாஸ்டிக் பாவனையை இழிவாக்குவதில் தம்மால் இயன்ற  பங்களிப்பை வழங்க உறுதி பூண்டுமிருந்தனர்.


இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்  ஆசிரியர்கள்  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 


( வி.ரி.சகாதேவராஜா)


மாகாண நன்கொடை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி - 01 இல் அமையப்பெறவுள்ள இயற்கை உர தயாரிப்பு இடத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு  இன்று 2026.06.05 ம் திகதி வெள்ளிக்கிழமை தவிசாளர் இ. ரூபசாந்தன்   தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உபதவிசாளர் கே.புவனரூபன்,  உறுப்பினர் கே.உதயகுமார் ஆகியோருடன் எஸ்.ரஞ்சித்குமார் (தொழிநுட்ப உத்தியோகத்தர்) மற்றும் எம். நிப்றாஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 மேற்குறிப்பிட்ட இயற்கை  உர தயாரிப்பு இடத்திற்கான சுற்று மதில்  பகுதி அளவில் நிறைவுற்றிருந்தது  அதனை முழுமை படுத்தி நிறைவுற வைபவத்திற்கு  மூன்று மில்லியன் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

நூருல் ஹுதா உமர்


இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் (FSLGA) ஏற்பாட்டில் நடைபெற்ற மாகாண மட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் காரைதீவு பிரதேச சபை சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இப்போட்டியில் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்களும், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களும் பங்கேற்று தமது கருத்துக்கள் மற்றும் வாதங்களை முன்வைத்தனர். போட்டியின் இறுதியில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் 299 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகித்ததுடன், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் 254 புள்ளிகளைப் பெற்றனர்.

இதன்மூலம் 45 புள்ளிகள் வித்தியாசத்தில் காரைதீவு பிரதேச சபை வெற்றியீட்டியுள்ளது

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அறிவாற்றல், பகுப்பாய்வுத் திறன், பொதுக் கொள்கைகள் தொடர்பான புரிதல் மற்றும் மேடைப் பேச்சுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இவ்விவாதப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களின் இந்த வெற்றி, சபையின் செயற்பாட்டுத் திறன் மற்றும் உறுப்பினர்களின் விவாத ஆற்றலை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதேச மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றிக்காக காரைதீவு பிரதேச சபையின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்ற குழுவினருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

 பாறுக் ஷிஹான்



எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது.சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின்  பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும்  என்பதன்  ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என அம்பாறை  மாவட்ட இலங்கை தமிழரசு  கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பில் புதன்கிழமை(03) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் பங்கேற்புடன்   இரவு   கல்முனை பகுதியில்   விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது


அம்பாறை மாவட்டம் மூன்று இனங்கள் வாழும் சமூகமாக இருக்கின்றோம்.இந்த நாட்டில் இனரீதியான பிரச்சினைகள் இருந்தாலும் நாங்கள் வாழ வேண்டும் என்பதற்காக நாட்டில் உள்ள இரு இனங்களுடன் இணைந்து வாழ்கின்றோம்.இலங்கை தமிழரசுக் கட்சியானது சிறுபான்மை இன விடுதலைக்காக நீண்ட காலம் பயணித்த ஒரு கட்சியாகும்.இதே வேளை கல்முனை பிரதேசம் சம்பந்தமாக இங்கு கூற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.கல்முனை பிரதேசம் என்பது முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாகவும்  தமிழ் மக்கள் சிறுபான்மையாகவும் வாழுகின்ற இடமாகும்.ஆனால் 1989 ஆண்டு முதல்  கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் யாவரும் அறிவீர்கள்.இப்பிரதேச செயலகம் குறித்து எமது தமிழ் தேசிய தலைவர்களும் முஸ்லீம் தலைவர்களும் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம்.

இந்த முயற்சி எமக்கு கை கூடாத  சூழ்நிலையில் தான் நீதிமன்றத்தை நாடி இருந்தோம்.அந்த அடிப்படையில் தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக எமது பயணத்தை மேற்கொண்டிருக்கின்றோம்.இன்று இம்மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் பல கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.அவரது அக்கருத்துக்களை பார்க்கின்றபோது இனவாதமாக கூறிவிட்டு அவர் தான் ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை முன்வைத்திருக்கின்றார்.உண்மையில் நாங்கள் அதை மறுக்கின்றோம்.

நிச்சயமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பொறுத்தவரை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.அவர்களும் ஒரு நிர்வாக கட்டமைப்பினுள் சகல உரிமைகளையும் சகல சலுகைகளையும் பெற்று வாழ வேண்டும் என விரும்புகின்றார்கள்.அண்மைக்காலத்தில் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்திருப்பீர்கள்.தற்போது நீதிமன்ற தீர்ப்பின் படி தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.அந்த மக்களும் சகல உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும்.அதே போன்று தான் இப்பிரதேச செயலகத்திற்கும் ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும்.அண்மைக்காலங்களில் இச்செயலகத்திற்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் அத்துமீறல்கள் இடம்பெறுவதை சகலரும் அறிவீர்கள்.

சில அரசியல்வாதிகள் அமைப்புகளினால் ஏற்பட்டுள்ள இவ்வாறான அச்சுறுத்தல்களுக்காக நீதிமன்றத்தை நாங்கள் தற்போது நாடி இருக்கின்றோம்.அந்த நீதிமன்ற தீர்ப்பு கூட எவ்வாறு அமையப்போகின்றது என தெரியவில்லை.அதே போன்று இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்களும் பல கருத்துக்களை இவ்விடயம் தொடர்பில் தெரிவித்ததாக அறிகின்றோம்.அதன் அடிப்படையில் இவ்விடயத்தில் எமது நியாயபூர்வமான உரிமைகளை முன்வைத்திருக்கின்றோம்.கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் சிலர் அரசாங்கங்களுடன் பேரம் பேசி சில விடயங்களை சாதித்திருக்கின்றார்கள்.நாங்கள் தொடர்ச்சியாக கொள்கையுடன் பயணித்ததன் காரணமாக எமது மக்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்திருக்கின்றார்கள்.

அந்த துன்பங்களில் இருந்து மீண்டு வருவதற்காகவே நீதிமன்றத்தை நாங்கள் நாடி இருக்கின்றோம்.நாங்கள் நீதிமன்ற தீரப்பினை நம்பி இருக்கின்றோம்.அதன் அடிப்படையில் நாங்கள் செயற்படுவோம்.அத்துடன் எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது.சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின்  பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும்  என்பதன்  ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.


 நூருல் ஹுதா உமர்


நான் பாராளுமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பு வகித்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கல்முனை கடலரிப்பு பிரச்சினையின் அவசரத்தன்மையை எடுத்துரைத்து கோரிக்கை விடுத்ததன் பயனாக, 2024 ஜூலை 18 ஆம் திகதி ரூபா 6 கோடி 26 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் கடலரிப்பை கட்டுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நான் எம்.பியாக இல்லாது போனதன் பின்னர் அந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு கடலரிப்பை கட்டுப்படுத்த இப்போதைய எம்.பிக்கள் தவறியதால் கல்முனை கரையோரம் ஆபத்தில் இருக்கிறது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை கடலரிப்பு விவகாரம் தொடர்பில்  ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

யார் மீதும் எனக்கு தனிப்பட்ட கோபமில்லை. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனாலும் மக்களின் பிரச்சினை தலைக்கு மேலால் போகும்போது உண்மைகளை வெளியிடாமல் மௌனமாக இருக்க முடியாது. பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஆதம்பாவா எம்.பி இருந்தும் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமாக எதையும் செய்யாமல், இந்த விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்க வேண்டிய கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களையும் கூட கடந்த ஒன்றரை வருடங்களாக முறையாக நடத்தப்படாதிருப்பதும் கவலைக்குரிய விடயமாகும்.

ஒலுவில் துறைமுக பிழையான கட்டுமானத்தினால் கல்முனை தொகுதியின் கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் கடலரிப்பு தற்போது உக்கிரமடைந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதுடன், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பில் மீனவ அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு தரப்புகளில் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், இதுவரை உரிய மற்றும் நிரந்தரமான தீர்வுகள் எட்டப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். கடலரிப்பு அடுத்த கட்ட பேரழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

நான் பாராளுமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பு வகித்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் இந்த பிரச்சினையின் அவசரத்தன்மையை எடுத்துரைத்து கோரிக்கை விடுத்ததன் பயனாக, 2024 ஜூலை 18 ஆம் திகதி ரூபா 6 கோடி 26 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் கடலரிப்பை கட்டுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் கீழ் கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதியிலிருந்து மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் வரையிலான பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டன.

எனினும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிலரின் சதியினால் நான் தேர்தல் கேட்கவில்லை. அதன் பின்னர் வந்த எம்.பிக்களினால் இத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாத காரணத்தால், பலாஹ் பள்ளிவாசல் தொடக்கம் கடற்கரை பள்ளிவாசல் வரையிலான பகுதிகள் மீண்டும் கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகி, மீனவர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்து வருகின்றன. அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட மரபுரிமை சொத்தமான கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் முன்னாள் அழகுக்காக நிர்மாணிக்கப்பட்ட சகல வேலைத்திட்டங்களும் கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளது.

கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், இந்த அவசர பிரச்சினைக்கு தேவையான முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக, ஏற்கனவே எனது கோரிக்கைக்கு இணங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையிலும், சுமார் 250 மீற்றர் தூரத்தை பாதுகாக்கும் பணிகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

எனது காலத்தில் மாளிகைக்காடு மையவாடிக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ஊடாகவும், சாய்ந்தமருதில் கடலரிப்பு தடுப்பு அணைகள் நிர்மாணிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் ஊடாகவும் நிதி ஒதுக்கீட்டை பெற்று குறுகிய காலத்திற்குள் தடுப்பணை அமைக்கப்பட்டதுடன், கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதியிலிருந்து பலாஹ் பள்ளிவாசல் வரையிலான பணிகளும் சில மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டிருந்தன. ஆனால் தற்போதைய நிலையில் மிகவும் குறுகிய தூரப் பகுதியை கூட பாதுகாக்க முடியாத நிலை காணப்படுவது வேதனைக்குரியது.

கல்முனை கடலரிப்பிற்கான அடிப்படை காரணமாக ஒலுவில் துறைமுக பிழையான கட்டுமானமே இருப்பதாக ஜனாதிபதி முதல் பல அதிகாரிகள் வரை சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, கல்முனை மக்களின் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை நோக்கி அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, கல்முனை நகரத்தையும் அதன் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஒன்றிணைந்து அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் என்றார்.

 


ஹுதா உமர்


அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் அவர்கள், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதம், இன்று (01) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் பீ. வாகீசன், கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே. குணநாதன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் சுமார் 45 கலாசார உத்தியோகத்தர்களில், விண்ணப்பிக்கத் தகுதியுடைய தரம் I கலாசார உத்தியோகத்தர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது.

அதன் முடிவில், கிழக்கு மாகாணத்தில் இருந்து இரு அதிகாரிகள் மட்டுமே சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் பதவிக்கு தெரிவு

 


வி.ரி.சகாதேவராஜா)


அக்கரைப்பற்று வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 1ஐச் சேர்ந்த சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பிஎம்.யாசீர் அரபாத் உத்தியோகபூர்வமாக இன்று (1) திங்கள் கிழமை கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் செயலாளரினால் நியமனம் செய்யப்பட்டிருந்த
சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளரான இவர் நேர்முக தேர்வு மூலம் பதவி உயர்வு பெற்று இப்புதிய நியமனத்தை பெற்றுள்ளார்.

அக்கறைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பௌஸ் தலைமையில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார், கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் சஹதுல் நஜீம் உட்பட கல்வி அதிகாரிகள், அவரது மனைவி குடும்பத்தினர் என பெருமளவானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மருதமுனை பிறப்பிடமாகக் கொண்ட இவர் அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்         

நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்படவுள்ள 20 இலட்சம் பெறுமதியான 11 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (31) நடைபெற்றது.
கடந்த காலத்தில் இடம்பெயர்ந்து மீள்குடியேறி வீடுகள் இன்றி சிறிய கொட்டகைகளினுள் வாழ்ந்து வரும் அலிக்கம்பை கிராமத்தில் இவ்வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் அங்கு இவ்வருடம் 43 வீடுகள் நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடும் அரசினால் வழங்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் அலிக்கம்பை தேவகிராமத்தின் புனித சபேரியார் திருத்தலத்தின் பங்குத்தந்தை ஆன்ரோய் உதவிப்பங்குத்தந்தை சுஜீவன் ஆகியோரின் விசேட ஆராதனைகளுடன் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரஜா சக்தி தலைவர் ஜெபநேசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோ கிராம உத்தியோகத்தர் நிதர்சன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயபால உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
நீண்டகாலமாக வீடுகள் இன்றி மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் அக்கிராம மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.


 ( வி.ரி.சகாதேவராஜா)

சிட்னி சிலோன் ஆஸ்திரேலியா லயன்ஸ் கழகத்தினால் கல்முனை  ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில்,  எலும்பியல் அறுவைச் சிகிச்சை தொடர்பான உபகரணங்கள், இலங்கை 306 D10 மாவட்டத்தின் மட்டக்களப்பு நியூ செஞ்சுரி MJF லயன்ஸ் கழகத்தின் ஊடாக அண்மையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம்  மற்றும் என்பு பேரறிவு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ப. கலாவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 அன்பளிப்பு செய்யப்பட்ட உபகரணங்கள், மட்டக்களப்பு நியூ செஞ்சுரி MJF லயன்ஸ் கழகத்தின் சாசனத் தலைவர் லயன் என். புஷ்பஹரன் MJF/MAF மற்றும் கழகத்தின் முன்னாள் தலைவர் லயன் எம். சுதாகரன் MJF/MAF ஆகியோரால் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டன.

இவ்வாறான பெறுமதிமிக்க அன்பளிப்பின் மூலம் வைத்தியசாலையின் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இவ்வன்பளிப்பை வழங்குவதற்கும் அதனை ஒருங்கிணைப்பதற்கும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் வைத்தியசாலையின் சார்பிலும், பணிப்பாளர் அவர்களினாலும் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.



 நூருல் ஹுதா உமர்


இலங்கை இன்று பொருளாதார மீட்சி, அரசியல் ஸ்திரத்தன்மை, சமூக நல்லிணக்கம் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட புதிய கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நீண்டகாலமாக செயலிழந்து காணப்படும் மாகாண சபை முறைமையை மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி வலியுறுத்துகிறது.

ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி தலைவர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தனது அறிக்கையில்,

கடந்த பல ஆண்டுகளாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிர்வாக அமைப்புகளாக இயங்கி வருகின்றன. இதன் காரணமாக மாகாண மக்களின் தேவைகள், அபிவிருத்தித் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி மற்றும் அடிப்படை சேவைகள் தொடர்பான பல தீர்மானங்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் பங்களிப்பின்றி மேற்கொள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு பாரபட்சங்களும், முறைகேடுகளும் நடைபெறுகிறது.

மாகாண சபைத் தேர்தல்களை தொடர்ச்சியாக ஒத்திவைத்து வருவது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணானது மட்டுமல்லாது, அரசியலமைப்பின் கீழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவ உரிமையையும் பாதிக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் பங்கேற்பு ஆகியவற்றை தனது அரசியல் கொள்கைகளின் மையமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்து வந்துள்ளது. எனவே, அந்தக் கொள்கைகளின் நடைமுறை வெளிப்பாடாக மாகாண சபைத் தேர்தலை அறிவித்து நடத்துவது அரசாங்கத்தின் அரசியல் மற்றும் தார்மீகப் பொறுப்பாகும்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் மக்களின் அபிலாஷைகள், பிராந்திய அபிவிருத்தித் தேவைகள் மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்துடன் இணைந்த திட்டங்களை முன்னெடுப்பதற்கு செயற்படும் மாகாண சபைகள் அவசியமாகின்றன. மத்திய அரசின் சுமையைக் குறைத்து, மக்களின் தேவைகளை அவர்களுக்கு நெருக்கமான நிர்வாக மட்டத்திலேயே தீர்க்கக்கூடிய அமைப்பாக மாகாண சபைகள் காணப்படுகின்றன.

நாட்டின் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ளவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும், பிராந்திய அபிவிருத்தியை சமநிலைப்படுத்தவும், மாகாணங்களின் செயற்பாட்டு பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். மக்கள் ஆணையைப் பெற்ற மாகாண நிர்வாகங்களே இந்தப் பணிகளை திறம்பட முன்னெடுக்க முடியும்.

எனவே, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான காலக்கெடுவுடன் கூடிய தெளிவான தேர்தல் அறிவிப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி வலியுறுத்துகிறது. ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவது மட்டுமன்றி, அதனை நடைமுறையில் உறுதிப்படுத்தும் அரசியல் துணிச்சலையும் தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிர்வாக அமைப்புகள் எந்த நிலையிலும் ஜனநாயகத்திற்கு மாற்றாக அமைய முடியாது என்பதை நாம் நினைவூட்ட விரும்புகிறோம்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது ஒரு அரசியல் தேவையாக மட்டுமல்ல; அது நாட்டின் ஜனநாயக எதிர்காலத்திற்கான அவசியமான தேசிய பொறுப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 


காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலில் குறித்த வர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளது.


இந்நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச இளைஞர்களின் ஒத்துழைப்புடன் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


நூருல் ஹுதா உமர்

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலும், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நெறிப்படுத்தலிலும் அம்பாறை மாவட்டத்திற்கான விசேட போதை ஒழிப்பு பேரணி இன்று (23) கல்முனையில் நடைபெற்றது.

“போதைப்பொருளுக்கு எதிராய் – எம் தேசத்திற்காய்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பேரணி, சாய்ந்தமருது எல்லைக்கு முன்பாக காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

பேரணியில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜீ.பீ.எம். றஸாட், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பிரதிப்பணிப்பாளர், இளைஞர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகள் மற்றும் கோஷங்களை ஏந்தியவாறு கல்முனை நகர் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் பேரணி நிறைவடைந்தது.

போதைப்பொருள் பாவனையால் சமூகத்திற்கும் இளைஞர் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைப்பதோடு, போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும். இந்நிகழ்வில் இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் அமைப்புகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்       

 அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு மூலம் 83 வீடுகள் நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான 83 வீடுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தலா 20 இலட்சம் ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்கமைவாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான முதற்கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் உள்;ளிட்ட அரச உயர் அதிகாரிகள் சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வீடமைப்பதற்கான முதற்கட்ட காசோலைகள் பயாளிகளிடம் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
காசோலையினை பெற்றுக்கொண்ட மக்கள் அரசுக்கும் அமைச்சுக்கும் பிரதேச செயலாளர் உள்;ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதேநேரம் பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் வரலாற்றில் முதற்தடவையாக அதிகளவான வீடுகள் ஒரே நேரத்தில் அமைவதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்ட அரசுக்கு நன்றி கூறினார். அதிலும் அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு அதிக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் எனவும் சுட்டிக்காட்டினார்.



 ( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை    ஆதார வைத்தியசாலையின்   பிரதிப் பணிப்பாளராக(DD)  கடந்த வாரம் நியமிக்கப்பட்ட மருத்துவர் பொன்னுச்சாமி ஶ்ரீசங்கர்  நேற்று,   டிஜிட்டல் முறையிலான வெளிநோயாளர் பிரிவின் செயற்பாடுகளை அவதானிக்க கள விஜயத்தை மேற்கொண்டார்.

யாழ் பல்கலைக்கழக  மருத்துவ  பட்டதாரியான  இவர்  தற்போது மருத்துவ நிர்வாக  முதுமானி  பட்டத்தை (MBBS,MSc.Medi.Admin). பெற்றதன் காரணமாக பிரதிப் பணிப்பாளர் பதவி உயர்வு கிடைத்தது.

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு  அவர் நேற்று வருகைதந்த அவர் வெளிநோயாளர்களுடனும், வைத்தியசாலை ஊழியர்களுடனும் கலந்துரையாடினார்.

டிஜிட்டல் வெளி நோயாளி பிரிவு பொறுப்பதிகாரி மருத்துவர்  கே. ஞானரத்தினத்துடனும் கலந்துரையாடினார்.

 


நூருல் ஹுதா உமர்


இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் இரா. சாணக்கியன் ஆகியோரை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை இன்று மேற்கொண்டார்.

இச்சந்திப்பு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் இல்லத்தில் இடம்பெற்றதுடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளைப்புனரமைப்பு நடவடிக்கைகள், தமிழர் உரிமைசார் அரசியல் விடயங்கள், காரைதீவு பிரதேசத்தின் அபிவிருத்தித் தேவைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், காரைதீவு பகுதியில் கல்வி மேம்பாட்டை வலுப்படுத்துதல், மாணவர்களுக்கான வசதிகளை அதிகரித்தல், இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, தற்போதைய அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையில் தமிழர் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரதேச முன்னேற்றம் தொடர்பில் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்காலத்தில் மக்கள் நலனையும் பிரதேச முன்னேற்றத்தையும் மையப்படுத்திய பல்வேறு செயற்பாடுகளை இணைந்து முன்னெடுக்க ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

 


கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி  குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது.


அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  கண்ணகி அம்மன் கோவில் காணியின் போடப்படும் குப்பையினால் வீதியின் இரு மருங்கிலும்     குப்பை கூழங்கள்களால் நிரம்பி வழிகின்றன.

இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியால் உடற்பயிற்சிக்கா  செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.இது தவிர அருகில் உள்ள கடற்கரை பகுதிக்கும் குறித்த குப்பை கூழங்கள் காற்றினால் பரவி விழுகின்றன.

மேலும் குறித்த காணியில் கொட்டப்படும் குப்பைகளில்  பியர் ரின்கள் பிளாஸ்டிக் கலன்கள் உள்ளிட்ட உக்க முடியாத பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் காணியில் தேங்கி நிற்கின்ற குப்பைகளில்  நீர் நிலை தேங்குவதனால்  டெங்கு போன்ற நோய்களும் பரவுவதற்கு காரணமாக அமைகின்றது.

மேலும்  கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் இந்த கண்ணகி அம்மன் கோவில் காணி காணப்படுவதுடன் தொடர்ச்சியாக சட்டவிரோத குப்பை கூழங்கள் தினமும் கொட்டப்பட்டு வருகின்றன.அத்துடன்  இப்பகுதியில் நாய்கள் மாடுகள் காகங்கள் குப்பைகளை உண்பதுடன் இதனால் அயலில் உள்ள கிணறுகள் கால்வாய்கள் அசுத்தமடைகின்றன.

கல்முனை மாநகர சபையினர் எவ்வித நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 


நூருல் ஹுதா உமர்


கடந்த ரணில் அரசில் நல்ல திட்டங்களை இல்லாதொழிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வஸ்ம திட்டத்தின் மூலம் மக்கள் பல கஷ்டங்களை சந்தித்தார்கள். அதைத்தான் இப்போது இந்த அரசாங்கமும் முன்னெடுக்கிறது. சமுர்த்தி சங்கங்களையும், சமுர்த்தி திட்டங்களையும் இல்லாதொழிக்கும் வேலைத்திட்டங்களை தொடர்ந்தால் சமூர்த்தி பயனாளிகளை ஒன்று திரட்டி நாங்கள் வீதிக்கிறங்கி இந்த அரசுக்கு முடிவு கட்டுவோம் என அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (19) அட்டாளைச்சேனை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்க தேசிய பொது செயலாளர், தேசிய பிரதி தலைவர், தேசிய பொருளாளர் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள்,

கடந்த அரசாங்கங்களில் சமுர்த்தி திட்டங்களை ஒழித்துக்கட்ட அரசாங்கங்கள் முன்வந்தபோது நாங்கள் பயனாளிகளுடன் இணைந்து நாங்களும் வீதிக்கு இறங்கி போராடினோம். தொடர்ந்தும் ஏழை மக்களின் பல மில்லியன் கணக்கான பணத்தையும், உரிமைகளையும் பாதுகாக்க நாங்கள் வீதிக்கு இறங்கி போராட தயாராக இருக்கிறோம். எதிர்காலத்தில் நாட்டிலுள்ள சமுர்த்தி பயனாளிகளை இணைத்து பலமான திட்டமாக சமூர்த்தி திட்டத்தை உருவாக்க தயாராக இருக்கிறோம்

சமுர்த்தி அபிவிருத்தி திட்டம் கடந்த 30 வருடங்களாக ஏழை மக்களின் துயர் துடைப்பதில் முன்னின்றிருக்கிறது. இந்த திட்டம் ஏழைகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை உருவாக்க உண்டாக்கப்பட்ட திட்டமாகும். இப்போது நாட்டை ஆளும் அரசாங்கத்தினர் கூட ஜனாதிபதி தேர்தல் கால தேர்தல் அறிக்கையில் இந்த திட்டத்தை பலப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தனர். இப்போது வாக்குறுதியை மீறி ஏழை மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.

தொழிற்சங்கங்களின் தயவுடன் அதிகாரத்துக்கு வந்த தற்போதைய ஆட்சியாளர்கள் தொழிற்சங்கங்களை முடக்கும் விதமாக செயற்படுகிறார்கள். சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கடந்த வார அறிக்கையின் பிரகாரம் சமூர்த்தி வங்கியை, சமூர்த்தி திணைக்களத்தை மூட அரசாங்கம் திட்டமிடுவதாக நாங்கள் அறிகிறோம். அரசின் இந்த யோசனையை வன்மையாக கண்டிக்கிறோம்.

அமைச்சர்கள் இந்த சமுர்த்தி திட்டத்தை மூட வேண்டும். சமுர்த்தி திணைக்களத்தை மூட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அதற்காகவே புதிதாக பொறுப்பேற்றுள்ள சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வேலை செய்கிறார்கள் இல்லை என்று இப்போது குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளார். ஏழை மக்களின் நலனுக்காக 30 வருடங்களுக்கு மேலாக சிறந்த முறையில் பணியாற்றி 400 பில்லியனுக்கு அதிகமாக சமுர்த்தி வங்கி சங்க இருப்பை நிலை நிறுத்தியுள்ளோம். வீட்டு சீட்டிழுப்பு மூலம் நிறைய பயனாளிகளுக்கு உதவி உள்ளோம். இப்படியான ஒரு திட்டத்தை இழுத்து மூட அரசாங்கம் முயல்கிறது. அதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதியளிக்க ம்,மாட்டோம். மக்களுடன் இணைந்து போராடுவோம் என்றனர்.


(எம்.என்.எம்.அப்ராஸ்) 

உலக உயர் குருதி அழுத்த தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இணைந்து கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.பி .ஜாமல்தீன் உடப்பட சங்கத்தின் உறுப்பினர்களின் உதவியுடன் பொது சந்தையில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு உயர் இரத்த அழுத்த பரிசோதனை முகாம் இன்று (17)இடம் பெற்றது. 

இதன் போது கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன்,கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி என்.ரமேஷ்,கல்முனை தெற்கு மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச். ரிஸ்பின்,கல்முனை வடக்கு பதில் சுகாதார வைத்திய அதிகாரி பே. கேதுஜன்,மேற்ப்பார்வை பொது சுகாதார பரிசோதகர்களான ஜே.எம்.நிஜாமுதீன்,ஜே.எம். நிஸ்தார் பொது சுகாதார பரிசோதகர்களான எம். ஜூனைதீன், கே.எல்.மன்சூர்,எஸ்.ஜோகநாதன்,ஆர்.எம்.முஹ்சீன் ஆகியோர் மேற் குறித்த உயர் குருதி அழுத்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

M.N.M.Afras

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.