Showing posts with label Eastren. Show all posts

 


(ஸப்பான் மௌலவி)
அக்கரைப்பற்றில் வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு  ஊர்வலம் இன்று இடம் பெற்றது. அக்கரைப்பற்று தக்காவடியில்  ஆரம்பித்து மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் வந்து சேர்ந்தது.

 


ஹிஸ்புல்லா அமைப்பினரால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் இருக்கும் இலங்கையர்கள், தமது பாதுகாப்பு குறித்து அதிக அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.


ஹைஃபா, நஹாரியா, அர்கோ, கலிலி, அஃபுலா, கர்மெல் மலைத்தொடர், நாசரேத் மற்றும் திபெரியா உள்ளிட்ட வடக்கு பிராந்திய நகரங்களில் வசிப்பவர்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவும் பட்சத்தில், தூதரகத்தினால் வழங்கப்படும் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 ( வி.ரி. சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைகின்ற சமகாலத்தில் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றது.

இன்றைய தினம் (4) புதன்கிழமை பட்டப்பகலில் காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் வளத்தாப்பிட்டி பிரதான வீதி ஊடாக யானைகள் பட்டாளமாக பயணித்தது.
 
பிரதான வீதியில் பயணித்தவர்கள் சிலமணிநேரம் தாமதித்து பயணிக்க வேண்டி இருந்தது.

எதிர்வரும் விதைப்பு காலத்துக்கு முன்பதாக இந்த யானைகளின் அட்டகாசம் மேலும் தொடரலாம் என்று மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

 


நூருல் ஹுதா உமர்


மனிதநேயம், ஒற்றுமை மற்றும் சேவை உணர்வை உயர்த்திப் பேசும் புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு, களப் பணிகளை மேலும் செயல்திறன் மிக்கதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் மாற்றும் நோக்கில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக புதிய மேலங்கி வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போது புதிய மேலங்கிகள் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

நோன்பு மாதம் கருணை, பகிர்வு மற்றும் சமூகப் பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் காலமாக இருப்பதை குறிப்பிட்ட டாக்டர் ஜே. மதன் அவர்கள், இந்த காலப்பகுதியில் சமூக நல சேவைகளை அதிக அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் மேற்கொள்ளுமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

புதிய மேலங்கிகள் களப்பணிகளில் ஒருமைப்பாட்டையும் ஒழுங்கையும் பிரதிபலிப்பதுடன், பொதுமக்களுக்கு தரமான மற்றும் நம்பகமான சேவைகளை வழங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பகுதியில் மனித குடியேற்றத்திற்கு பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகள் வளர்க்கப்பட்டதால் அயல் வீட்டாருக்கு கடும் அசௌகரியங்களும் சுகாதாரத் தொந்தரவுகளும் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்க்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அயல் வசிப்பிடத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே. மதன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுற்றுச்சூழல் பிரிவிற்கு பொறுப்பான சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் அதிகாரிகள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட இடத்தில் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.

பரிசோதனையின் போது, குடியிருப்பு பகுதியின் மத்தியில் எருமை மாடுகள் வளர்க்கப்பட்டு, கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படாததன் காரணமாக துர்நாற்றம் மற்றும் கொசு பெருக்கம் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக பொதுமக்கள் தொல்லை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பொதுச் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் வளர்ப்பதை தவிர்க்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் எதிர்காலத்திலும் கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


 


( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா)


  அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் கடலரிப்பின் உக்கிரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும் அவதியிலும் வாழ்ந்து வருகின்றனர். 

பல ஆண்டுகளாக இடம்பெற்று வரும் கடலரிப்பு சமீப காலங்களில் மிகவும் வேகமடைந்துள்ளதாகவும், இதனால் குடியிருப்புகள் மற்றும் நிலப்பரப்புகள் கடலுக்குள் இழுக்கப்பட்டுள்ளது.


கடந்த சில வாரங்களில் பல வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. சில குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு உறவினர்களின் இல்லங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்களின் படகு நிறுத்தும் இடங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கியிருந்த போதிலும், இதுவரை நிலையான தீர்வு எதுவும் அமுல்படுத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். 

தற்காலிக கற்கள் அடைப்போ அல்லது கடற்கரை பாதுகாப்புச் சுவர் அமைப்பதற்கான நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என மக்கள் குறைபடுகின்றனர்.

“ஒவ்வொரு நாளும் கடல் மேலும் மேலும் கரையை உடைத்து வருகிறது. எங்கள் வாழ்வாதாரமும், வீடுகளும் ஆபத்தில் உள்ளன. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை கட்டுக்கட்டுப்பாடுகளை மீறிவிடும்” என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


சமூக அமைப்புகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் அவசரமாக சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், நிரந்தர கடற்கரை பாதுகாப்புத் திட்டம் ஒன்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


அட்டப்பள்ளம் கடலரிப்பு பிரச்சினை தற்போது அவசர தீர்வு தேவைப்படும் சூழ்நிலையாக மாறியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட துறைகள் எப்போது செயல்படுகின்றன என்பது மக்கள் மத்தியில் கேள்வியாக உள்ளது.

அங்குள்ள கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில்..

 


நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர் தெரிவித்துள்ளார்.

அவரின் ஊடக அறிக்கையில் மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் மழையால் உரிய முறையில் உலர்த்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக நெல் முலை விடத் தொடங்கியுள்ளதுடன், பெருமளவிலான விளைச்சல் பயன்பாடற்றதாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வேளாண்மை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“கடந்த அரசாங்கங்கள் செய்தது போல, ஈர நெல்லை கிலோ 100 ரூபாய்க்கு அரசாங்கம் உடனடியாக கொள்வனவு செய்திருந்தால் இவ்வாறான இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும். தற்போதைய அரசாங்கம் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்யத் தவறியதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்” என அவர் குற்றம் சாட்டினார். மேலும் தற்போதைய அரசாங்கம் ஈர நெல்லை விவசாயிகளிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தனார்.

தற்போதைய அவசரநிலையை கருத்தில் கொண்டு, அனுர குமார திசாநாயக்க மற்றும் கே.டி. லால் காந்த ஆகியோர் நேரடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எம்.ஏ. நளீர் வலியுறுத்தினார்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், அரசாங்கம் அவசர நிவாரண திட்டம் ஒன்றை அறிவித்து, ஈர நெல் கொள்வனவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 


நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மனார் பள்ளிவாசலில் பெண்கள் தராவீஹ் தொழுகைக்காக மேல் தளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டிட நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான சீமெந்து பைகளை வழங்குமாறு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்கள் உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் வேண்டுகோளை ஏற்று, தனது சொந்த நிதியில் குறித்த 20 சீமெந்து பைகளையும் அவர் வழங்கியுள்ளார். இவ்வுதவி பெண்கள் தொழுகை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு முக்கிய ஆதரவாக அமையும் என பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் கெளரவ பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் அஹமட் அவர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான முஹம்மட் லாபீர், முஹம்மட் இக்றாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசியலைத் தாண்டி, மக்கள் நலன் சார்ந்த பணிகளில் தொடர்ந்து அக்கறையுடன் செயல்படுவோம் என்பதையும், மத மற்றும் சமூக தேவைகளுக்கு ஆதரவு வழங்குவது சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாகும் என்பதையும் அமீர் அப்னான் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


இன்று பேசுபொருளாக இருக்கக் கூடிய கிவுலோயா திட்டத்தின்  பிரதான நோக்கம் மகாவலியினூடான  நீர்ப்பாசனமே. மாறாக அங்கு எந்த குடியேற்றமும் ஒருபோதும் இடம்பெறாது .

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு கந்தசாமி தெரிவித்தார்.
 
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் எமது செய்தியாளர் சகா நேற்று கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மக்கள் உட்பட நாடுபூராக தேசிய மக்கள் சக்தி மீதும், எமது ஜனாதிபதி மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்து  இருக்கின்றார்கள் .அது ஒருபோதும் வீணாகாது. குறிப்பாக வடகிழக்கு மக்களை எமது அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது என்றார் .

அவர், எமது செய்தியாளரின் கேள்விகளுக்கு மேலும்  பதிலளிக்கையில்..
 
எதிர்க்கட்சியினர் கிவுல்ஓயாத் திட்டம் மற்றும் பிரஜா சக்தி போன்றவற்றை தமது அரசியல் எதிர்காலம் கருதி எதிர்த்து வருகிறார்கள். அது மக்களை பாதிக்கலாம். 

எனது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் உள்ள 3000 ஏக்கரில் 1400 ஏக்கர் நிலம் மகாவலிக்கும்,  மீதி 1600 ஏக்கர் வனவள திணைக்களத்திற்கும் சொந்தமானது.
நான் அந்த பண்ணையாளர்களை கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர்கள் சகிதம் சென்று சந்தித்தேன். அவர்களது தேவைகள் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினோம்.
அவர்கள் நலன் கருதி முதற்கட்டமாக மகாவலிக்குச் சொந்தமான 1400 ஏக்கரை விடுவிக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

நான் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுதும்,  இனமத பேதமின்றி மட்டக்களப்பு மாவட்டத்திலே  கடந்த ஒரு வருடத்தில் 100 மில்லியன் ரூபாவுக்கு  மேலதிகமான அபிவிருத்தியை செய்திருக்கின்றேன்.

பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டங்களில் மக்கள் பிரச்சனைகளை தேவைகளை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் தான் அது வேடிக்கையாக கேலியாக மாறி வருகிறது.
 உறுப்பினர்கள் சிலர் அதனை தேர்தல் களமாக மாற்ற முயற்சிப்பதால் வேடிக்கையாக இருக்கின்றது. இனி அதற்கு இடமளிக்க முடியாது.அதனை மாற்ற சுற்று நிருபமும் வந்துள்ளது.

கடந்த ஆட்சியாளர்கள் போல் இனவாதத்தை ஆயுதமாக வைத்து நாங்கள் செயல்பட போவதில்லை .எம்மில் இனவாதப் போக்கு இல்லை .நாம் அதற்கு எதிரானவர்கள். ஜனாதிபதி திறமையாக எவ்வித பேதமின்றி செயல்பட்டு வருகின்றார். அவரிடமும் இனவாத போக்கு இடமில்லை. எனவே எமது அரசாங்கம் மக்களது பிரச்சினைகளை இனமதபேதம் கடந்து பொதுவாகவே தீர்த்து வைக்கும். யாரும் அஞ்சத்தேவையில்லை என்றார்

 


நூருல் ஹுதா உமர்


இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் தலைவராக திருமதி ஆரிக்கா காரியப்பர் அவர்கள் மீண்டும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று (18) கல்முனையில் நடைபெற்றது. அதில் 2026ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தலைவராக போட்டியின்றி மீண்டும் திருமதி ஆரிக்கா காரியப்பர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் முன்னதாகவும் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டு, சட்டத்துறையில் தொழில்முறை தரநிலைகளை உயர்த்தும் முயற்சிகள், சட்டத்தரணிகளின் நலன், இளம் சட்டத்தரணிகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் சமூக நீதிக்கான செயற்பாடுகள் போன்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.

அவரது மீண்டும் தெரிவு, கல்முனை சட்டத்தரணிகள் மத்தியில் அவருக்கு உள்ள நம்பிக்கையையும் மதிப்பையும் வெளிப்படுத்துவதாக சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

புதிய நிர்வாக சபை விரைவில் தனது பணிகளைத் தொடங்கவுள்ளது என்றும், சட்டத்துறையின் மேம்பாடு மற்றும் நீதித்துறையுடன் இணைந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் மேலும், இவ்வருட செயலாளராக சட்டத்தரணி ஏ.ஜி. பிரேம் நவாத் அவர்களும் பொருளாளராக சீ.ஐ. சஞ்சித் அஹமட் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

  


பாறுக் ஷிஹான்



பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளின் ஓய்வூதிய‌ம் ர‌த்து செய்யப்பட்டமையானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிறந்த முன்னெடுப்பாகும் என ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் தலைவர் முஸ்னத் முபாறக் தெரிவித்தார்.


சம கால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில்  மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.


பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளின் ஓய்வூதிய‌த்தை நீக்கும் ச‌ட்ட‌ம் 152 மேல‌திக‌ வாக்குக‌ளால் நிறைவேற‌ப்ப‌ட்டுள்ள‌மையான‌து  தேசிய மக்கள் சத்தி அர‌சாங்க‌த்தின் மிக‌ச்சிற‌ந்த‌ ந‌ட‌வ‌டிக்கையாகும்.இத‌ன் மூல‌ம் ம‌க்க‌ளின் பெரும் ப‌ண‌ம் மிச்ச‌மாகும் ந‌ல்ல‌ நிலை வ‌ந்துள்ள‌து.

இந்த‌ ஓய்வூதிய‌ நீக்க‌த்துக்காக‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் தொட‌ர்ந்து குர‌ல் கொடுத்து வ‌ந்த‌து.பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ப‌த‌வி என்ப‌து  ஒரு தொழில் அல்ல‌.அது ம‌க்க‌ள் ந‌ல‌ன்புரி சேவையாகும். அச்சேவையை செய்ய‌ வ‌ருப‌வ‌ர் ச‌ம்ப‌ள‌மோ  ஓய்வூதிய‌மோ எதிர்பார்க்க‌ கூடாது.

ப‌ல‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பாராளும‌ன்றுக்கும் ஒழுங்காக செல்வ‌தில்லை.போனாலும் தூக்க‌ம்தான் பெரிது. இன்னும் சில‌ர் 25 ம‌ற்றும் 30 வ‌ருட‌ங்க‌ளாக‌ பாராளும‌ன்ற‌த்தில் இருந்தும் அவ‌ர்க‌ளால் ச‌மூக‌ம் உருப்ப‌டியாக‌ எதையும் பெற‌வில்லை.ஐந்து வ‌ருட‌ம் பாராளும‌ன்ற‌த்தில் கால‌த்தை க‌ட‌த்திவிட்டால் ஓய்வூதிய‌ம் என்ப‌து ந‌ம‌து நாட்டுக்கு கொஞ்ச‌மும் பொருத்த‌ம‌ற்ற‌ம‌தாகும்.

உண்மையில் இந்த‌ ஓய்வூதிய‌ம் என்ப‌து பொது ம‌க்க‌ளின் ப‌ண‌த்துக்கு செய்து வ‌ந்த‌ அநியாய‌மாகும்.எம்பீக்க‌ளின் சொகுசு வாழ்க்கைக்காக‌ ம‌க்க‌ள் ப‌லியாக‌ வேண்டுமா?என்ற‌ நிலை இருந்த‌து.எந்த‌ அர‌சும் முன்னெடுக்க‌ முடியாம‌ல் இருந்த‌ இந்த‌ ஓய்வூதிய‌ ஒழிப்பை மிக‌வும் தைரிய‌மாக‌ செய்து காட்டிய‌ ஜ‌னாதிப‌தி அனுர‌குமார‌ அர‌சுக்கு வாழ்த்துக்க‌ள்.

இது போல் எம்பீக்க‌ளின் ச‌ம்ப‌ள‌மும் நிறுத்த‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌ அம‌ர்வுக‌ளில் க‌ல‌ந்து கொள்ளும் ஒவ்வொரு அம‌ர்வுக‌ளுக்கு ம‌ட்டும் கொடுப்ப‌ண‌வு கொடுக்கும் சிஸ்ட‌ம்  வேண்டும் என்ப‌தும் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் கோரிக்கையாகும் என அவர் மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நூருல் ஹுதா உமர்


ஒலுவில் ஷஹ்வா அரபுக் கல்லூரியின் நீண்ட நாள் தேவையாக இருந்த நவீன தொழில்நுட்ப பாடத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான கணிணிகளின் தேவை குறித்து கல்லூரி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால், கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஊடாக பெறுமதியான கணிணிகள் (02) கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினரும் கட்சியின் பிரதி செயலாளருமான எம்.ஏ. அன்சில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.சிறாஜ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா, கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


ஒந்தாச்சிமட. கடற்கரைப் பகுதியில்.ரொக்கற்றின் பாகங்கள்  என்று நம்பக்கதாக, சிதைந்த பாகமொன்று நேற்று மாலை கரை ஒதுங்கியுள்ளது.

இது சம்மந்தமாக,  களுவாஞ்சிக்குடி, பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி, கபில அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.

இதேவேளை, களுவாஞ்சிகுடி கௌரவ நீதிவான் பிரதீபன் அவர்கள் ஒந்தாச்சிமடப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.


 


கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழை வெள்ளப் பெருக்கினால் 45,387 குடும்பங்களைச் சேர்ந்த 144,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். 



திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 153 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேர் இடம்பெயர்ந்து தொடர்ந்தும் 05 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்ததுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (07) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


இதுரை 122 வீடுகள் முழுமையாகவும் 2,156 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் இருவர் உயிரிழந்ததுடன் 12,469 குடும்பங்களைச் சேர்ந்த 34,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்றினால் இதுரை 11 வீடுகள் முழுமையாகவும் 946 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.

 

 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டடு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொருட்களை அரசாங்கம் மற்றும் பொது அமைப்புகள் வழங்கிக்கொண்டிருக்கின்றன.

 

 நூருல் ஹுதா உமர்


கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட  எம்.எஸ்.ஹலால்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது, ஐக்கிய தேசிய கட்சி, சுயேற்சை உறுப்பினர், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரவுகளை வழங்கி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஏலவே,  தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து தவிசாளர் பதவிக்கான வெற்றிடத்திற்கான தெரிவு இன்று (20) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது.

 


( வி.ரி. சகாதேவராஜா)


"மக்கள் வரிப்பணம் மக்களின்     அபிவிருத்திக்கு"
 என்ற அரசின் கோட்பாட்டிற்கமைவாக
நாவிதன்வெளி பழைய உஹன வீதி அபிவிருத்திக்கு முதற்கட்ட  பணிகள் இன்ட (20) வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. 

ஏலவே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ  அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன்   நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் நடாத்திய நேரடி சந்திப்பின் பயனாக இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 அதன் போது கடந்த முப்பது வருடங்களாக போக்குவரத்துக்கு சிரமமாக இருந்த பழைய உஹன வீதியை செப்பனிட்டுவதற்கான திட்ட வரைவுகள் கையளிக்கப்பட்டது.

.இதன் பலனாக நேற்று அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்டத்திற்கான 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பழைய உஹன வீதிக்கு 10369413.50 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார் 

நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மீள்குடியேற்ற திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 50 பயனாளிகளுக்கான இலவச குடிநீர் வழங்கும் திட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இத்திட்டத்திற்கு 15 இலட்சத்து 34 ஆயிரத்து 354 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் குடிநீர் இணைப்பை பெறுவதற்கான நிதி ஏற்பாட்டு கடிதங்களும் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிதியின் ஊடாக குறித்த குடும்பங்கள் இலவசமாக குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளும் நிலையில் அரசாங்கத்திற்கும் அமைச்சுக்கும் பிரதேச செயலகத்திற்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் அரசாங்கம் மக்களது நலனின் அதிக அக்கறை செலுத்தி வருவதுடன் குறித்த ஒரு வருட காலப்பகுதிக்குள் 50 இற்கும் மேற்பட்ட வீடமைப்பு திட்டங்கள் என பல அபிவிருத்திகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றுவருவதாக தெரிவி;த்தார்.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை மாநகர சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் விரிவான டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் இன்று (17) முன்னெடுக்கப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு உதவியாளர்களின் பிரசன்னத்துடன் பல வீடுகள் பார்வையிடப்பட்டு, நீர் தேங்க கூடிய இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் அதேவேளையில் நிவர்த்தி செய்யப்பட்டது.
 
மேலும், டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு, சுத்தமான சூழலை பேணுவதின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

 


சமகாலத்தில் நிலவும் அசாதாரண காலநிலை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக காரைதீவு ஆழ்கடல் இயந்திரப் படகுகள் இரண்டு கடலில் விபத்துக்குள்ளானது.

இப் படகுகள் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலினுடையது எனத் தெரிகிறது.

இச் சம்பவம் நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் சவுக்கடி கடல் பகுதியில் சம்பவித்துள்ளது.

காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த இரு படகுகளே இவ்விதம் விபத்துக்குள்ளானது.

இதன்போது இரண்டு படகிலும் காரைதீவைச் சேர்ந்த  ஐந்து பேர் பயணித்துள்ளதுடன் அவர்கள் தெய்வாதீனமாக பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளளனர்.
எனினும் அவர்களில்  ஒருவருக்கு காலில் பலத்த வலி மற்றும் காயம் ஏற்பட்டிருந்தது 
 
அவர்கள்  சவுக்கடி மீனவர்களால் நள்ளிரவு 1.10 மணியளவில் பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் மீட்கப்பட்டதோடு காயமுற்ற படகோட்டி அதிகாலை 1.35 மணியளவில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 விபத்துக்குள்ளாகிய படகுகளை மீட்க உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்ட போதிலும்,  பலத்த அலை நீரோட்டம் கொந்தளிப்பு காரணமாக அவை கரைதட்டின.

 இரண்டு படகில் ஒரு படகின் இயந்திரம் ஏற்கனவே பழுதான நிலையிலையே அந்த படகை கட்டி இழுத்து சென்று கொண்டிருந்தது.
 அடுத்த படகும் சவுக்கடி கடற்பிரதேசத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு காற்றில் அடித்து சவுக்கடியில் தரை தட்டியது.

குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் போலீசாருக்கு ஏறாவூர் மீனவர் அமைப்பின் தலைவர் தெரிவித்ததை அடுத்து உடனடியாக நள்ளிரவே இடத்திற்கு வருகை தந்திருந்த போலீசார் விடயத்தை கேட்டறிந்தனர்.

விபத்திற்கான காரணம் இயந்திரக்கோளாறு மற்றும் கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் சூழ்ந்திருந்த காலநிலை மாற்றம் என தற்போது வரை அறிய முடிகிறது.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் 2026 இரண்டாம் தவணைக்கான சிறுவர் பாதுகாப்புக் குழு மீளாய்வுக் குழு கூட்டம் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

குழுவின் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம்.றிபாஸின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த மீளாய்வுக் குழு கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீ. குகராஜ் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்டு கடந்த கால மற்றும் எதிர்கால திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கேட்டு தெரிந்து கொண்டதுடன்  சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலும் விளக்கமளித்தார்.

மேலும், பெற்றோர் பிரதிநிதியாக கலந்து கொண்ட பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் நூருல் ஹுதா உமர்  சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கருத்துரை வழங்கினார். இக்கூட்டத்தில் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் ஆசிரியர், மாணவர் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.