Showing posts with label Eastren. Show all posts

 



மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி நகரில்  களுவாஞ்சிகுடி எரிபொருள் வர்த்தக சங்கத்தினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

 

இந்த போராட்டமானது இன்று (22 )பிற்பகல் களுவாஞ்சிகுடி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக, இடம்பெற்றது.


இந்த எரிபொருள் நிலையத்தை குத்தகைக்கு எடுத்து நடத்துபவர் மேல் சில குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  


வருடத்தில் சுமார் 200 நாட்கள் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை என்றும், பெற்றோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதோடு நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இந்நிலையில்,விவசாயிகளும் கடற்றொழிலாளர்களும் அதிகம் வாழும் இப்பகுதியில், நீண்டகாலமாக நிலவும் இந்த எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.


எனவே, தற்போதைய குத்தகைதாரரிடமிருந்து இந்த எரிபொருள் நிலையத்தை அரசாங்கம் மீளப்பெற்று, வருடம் முழுவதும் 24 மணி நேரமும் முறையாக நடத்தக்கூடிய தகுதியான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோசம் எழுப்பினர்.


இந்நிலையில் குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


 


நூருல் ஹுதா உமர்


யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித என்புகள், எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையின் மனச்சாட்சியையே உலுக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.

இந்தக் கண்டுபிடிப்பு, எமது நாட்டின் கடந்தகால வன்முறை மற்றும் காணாமற்போனோர் தொடர்பான தீர்க்கப்படாத கேள்விகளை மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. பல தசாப்தங்களாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து பதில் தேடி அலைந்து வரும் குடும்பங்களின் வலியையும் வேதனையையும் இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும்,

மனித உயிர்களின் மதிப்பை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மதிக்க வேண்டியது ஒவ்வொரு நாகரிக சமூகத்தினதும் கடமையாகும். எனவே செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக சுயாதீனமான, வெளிப்படையான, நியாயமான மற்றும் நீதியான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

காலம் தாழ்த்தப்படும் ஒவ்வொரு நாளும், உண்மையை எதிர்நோக்கி காத்திருக்கும் குடும்பங்களின் வேதனையை மேலும் அதிகரிக்கின்றது. ஆகவே சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும், நீதித்துறை அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும், மனித உரிமை அமைப்புகளும் ஒருங்கிணைந்து அறிவியல் ரீதியான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

இந்த மனித எச்சங்கள் யாருடையவை? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? அவர்களது குடும்பங்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்க வேண்டும். உண்மையை மறைப்பதும், காலம் தாழ்த்துவதும் அல்லது விசாரணையை பலவீனப்படுத்துவதும் எந்தவொரு சமூகத்திற்கும் நீதியை வழங்காது.

போராலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பது நிலையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் அடிப்படையாகும். உண்மையை அறியும் உரிமையும், நீதியைப் பெறும் உரிமையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அடிப்படை மனித உரிமைகளாகும்.

எனவே செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும், எந்தவித அரசியல் அல்லது நிர்வாக தலையீடுகளுமின்றியும் முன்னெடுக்கப்பட்டு, காலம் தாழ்த்தாது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன். உண்மையை வெளிக்கொணர்வதே நல்லிணக்கத்தின் முதல் படியாகும்; நீதியை நிலைநாட்டுவதே நிலையான சமாதானத்தின் அடித்தளமாகும் என்று தெரிவித்துள்ளார்

 

வி.சுகிர்தகுமார்          


 15 வருடங்களின் பின்னர் அக்கரைப்பற்று 241 ஆம் படைப்பிரிவு இராணுவத்தினரின் வசமிருந்த ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கு உரிமையான அரிசி குற்றும் ஆலை அமைந்திருந்த சுமார் 2 ஏக்கர் காணி இன்று (22)விடுவிக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்க அவர்களின் உத்தரவின்பேரில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இக்காணி விடுவிக்கப்பட்டது.
கடந்த 15 வருடங்களாக இக்காணியை வழங்கக்கோரி பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் நடவடிக்கை எடுத்து வந்தது. இருப்பினும் அச்செயற்பாடு வெற்றியளிக்கவில்லை.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஊடாக அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் இது தொடர்பான மகஜர்கள் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து இக்காணி விடுவிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் நா.ஏரம்பமூர்த்தி தெரிவித்தார்.
காணி விடுவிப்பு கடித ஒப்பந்தமானது இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்றதுடன் விடுவிப்பு ஒப்பந்தத்தில் அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் டபிள்யு இ.டி.எச்.ஆர்.கே. வெலிக்கண்ணா மற்றும் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி இராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன் கேர்ணல் திலீப ஆகியோர் கையொப்பமிட்டனர்.
தொடர்ந்து காணி விடுவிப்பிற்கான ஒப்பந்த கடித்தினை பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்தன் பிற்பாடு களவிஜயமொன்றினை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட இடத்தினையும் பார்வையிட்டனர்.
இதேநேரம் இக்காணி விடுவிப்பிற்காக உத்தரவிட்ட ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு அக்கரைப்பற்று 241 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உள்ளிட்டோருக்கும் இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.
காணி கையளிப்பு நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் ஆர்.ரதீசன் மற்றும் பலநோக்கு கூட்டுறவுச்சங்க நிருவாகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


உள்ளுராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜூனைடீன் ஆகியோருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தைச் சேர்ந்த குழுவினர் சம்மாந்துறை பிரதேச சபைக்கு கள விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கலாநிதி முனீப் எம்.முஸ்தபா, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஐ.எம்.கலித் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கள விஜயத்தின் போது, தெரு மின் விளக்கு முகாமைத்துவம் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவம் போன்ற சேவைகளை நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக எவ்வாறு மேலும் மேம்படுத்தலாம் என்பது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களுடன் கலந்துரையாடியதுடன், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம்.காலித், எம்.ஆர்.ஆஷிக் முஹம்மட், எம்.ஜ.எம்.றிஸ்விக்கான் ஏ.சீ.எம்.நயீம் ஆகியோருடன் சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.எம்.எம்.முஸ்தபா, ரீ.ஸங்கீதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்         

 மனிதவலு வேலைவாய்ப்புத்திணைக்களம் மற்றும் தொழில் அமைச்சு ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த தொழில் சந்தை 2026 இன் நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று(17) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் மனிதவள அபிவிருத்தி உத்;தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ்லீன் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மாவட்;ட செயலக இணைப்பாளர் என்.அருளானந்தம் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்; ரி.பரமானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதிதிகள் ஜதீஸ்வரா நடனாலய மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் வரவேற்க்கப்பட்டனர்.
தொழில்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் வழங்கும் நிறுவனங்களுடன் தொழில் தேடுநர்களை இணைக்கும் ஒரு பாலமாக இந்நிகழ்வு நடைபெற்றதுடன் தொழில் சந்தையில் 20 இற்கும் மேற்பட்ட துறைசார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொழில் வெற்றிடங்கள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
நிகழ்வில் மூன்றாம் நிலைக்கல்வி ஆணைக்குழுவினால் அதிகாரமளிக்கப்பட்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரும் அக்கரைப்பற்று தொழில் நுட்ப கல்லூரியின் வளவாளருமான எம்.எஸ்.எம்.பிஸ்ரின் தொழில் வழிகாட்டல் தொடர்பில் சிறப்பு விளக்கமளித்தார்.
இதேநேரம் 25 வயதிற்கு மேற்பட்டோருக்கான இலவச மருத்தவ பரிசோதனையினை தாதியர் உதவியாளர் பயிற்சி நெறியை வழங்கிவரும் ஐ என் பி எஸ் கல்லூரி நடாத்தியதுடன் தொழில் முயற்சியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்கள் பயன்படுத்தக்கூடிய நவீன தொழில் நுட்ப உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இத்தொழில் சந்தையில் பெருந்திரளான தொழில் தேடுநர்களான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்ளை சமர்ப்பித்துள்ளதுடன் நன்மையடைந்தனர்.


 நூருல் ஹுதா உமர்


சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வெறும் மேடைப் பேச்சுகளிலும் விளம்பர நிகழ்வுகளிலும் மட்டுப்படாமல் நடைமுறையிலும் வெளிப்பட வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சபூர் ஆதம் வலியுறுத்தியுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் அண்மைய அமர்வில் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நிர்வாகத்தின் கீழ் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத நிலை தொடர்வது கவலைக்குரிய விடயமாகும் என தெரிவித்தார்.

அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரிமியர் லீக் போட்டித் தொடரை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இதுவரை கழிவறை வசதி ஏற்படுத்தப்படாதிருப்பதை சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகக் கூறினார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினை குறித்து சபையில் சுட்டிக்காட்டியிருந்த போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக இளைஞர்கள் மைதான மதில்கள் மற்றும் புல்வெளிப் பகுதிகளைப் பயன்படுத்தும் நிலை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அக்கரைப்பற்று பொதுச் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்குத் தேவையான கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்ததையும் அவர் நினைவூட்டினார்.

“மக்கள் பயன்படுத்தும் பொது இடங்களில் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவது என்பது வெறும் கட்டுமானப் பணியல்ல. அது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் மனித கண்ணியத்துடன் தொடர்புடைய அடிப்படை பொறுப்பாகும். எனவே மற்றவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உபதேசம் செய்வதற்கு முன் தமது நிர்வாகத்தின் கீழ் உள்ள இடங்களின் நிலைமைகளை முதலில் சீரமைக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

தனது கோரிக்கைகளைத் தொடர்ந்து, பொது விளையாட்டு மைதானத்திற்கும் பொதுச் சந்தை பள்ளிவாசலிற்கும் தேவையான கழிவறை வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகர முதல்வர் சபையில் உறுதியளித்துள்ளதாகவும் சபூர் ஆதம் தெரிவித்தார்.

மக்களின் அன்றாட தேவைகளை அடையாளம் கண்டு அவற்றை சபையின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தப் பொறுப்பை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 ( வி.ரி.சகாதேவராஜா)


தேசிய இளைஞர்  சேவைகள் மன்றத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்படும் பத்து லட்சம் தொண்டர்கள் "1 million Volunteers" வேலைத்திட்டத்திற்காக இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகதேர்வானது. மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச  செயலாளர்  உ. உதயஸ்ரீதர்  தலைமையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இதன் போது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிலிருந்து Online முறைமை ஊடாக விண்ணப்பித்திருந்த 30இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் இந்த நேர்முகத்தேர்வில் பங்குபற்றியிருந்ததுடன், இளைஞர் சேவை உத்தியோகத்தர்  த. சபியதாஸ் ஒழுங்குசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச இளைஞர் மன்ற தலைவர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகப் பணியாற்றி வந்த ஏ.ரி.எம். றாபி அவர்கள் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனக் கடிதம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களினால் இன்று (15) வழங்கி வைக்கப்பட்டது.

உள்ளூராட்சி நிர்வாகத் துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட அதிகாரியான ஏ.ரி.எம். றாபி அவர்கள் பல்வேறு உள்ளூராட்சி நிறுவனங்களில் பொறுப்பான பதவிகளை வகித்து திறமையான நிர்வாகியாகத் திகழ்ந்து வந்துள்ளார். அண்மைக் காலமாக கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகச் செயல்பட்டு, மாநகர சபையின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார்.

அவரது சேவைகள் மற்றும் நிர்வாகத் திறமைகளை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பதவிக்கான இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நியமனத்தின் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்கள் சேவைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ஏ.ரி.எம். றாபி அவர்களுக்கு அரசியல், நிர்வாக மற்றும் சமூக மட்டங்களில் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


 ( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 28 வது  புதிய தலைவராக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் எந்திரி நடராஜா கதீஷன் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை மாலை பதவிப் பிரமாணம் செய்தார்.


கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் (Lions Club of Kalmunai Town) 2026/2027 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவும்  கல்முனை ஆர்.கே.எம். சந்தியில் அமைந்துள்ள வைட் லோட்டஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் சர்வதேச லயன்ஸ்  மாவட்டம் 306 D10 இன் மாவட்ட ஆளுநர் லயன் ஜி. ஷாஹிர் அஹமட் PMJF/PMAF  பிரதம அதிதியாகவும் பதவியேற்பு அதிகாரியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


நிகழ்வின் போது 2025/2026 ஆண்டுக்கான தலைவராகப் பணியாற்றிய லயன் ஏஎல்எம்
 பாயிஸ் MAF அவர்களிடமிருந்து, 2026/2027 ஆண்டுக்கான தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள லயன் பொறியியலாளர் என். கதீஷன்  பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

“Service Beyond the Limit” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்த விழாவில்,  புதிய தலைவரின் அறிமுகத்தை  கழக நிர்வாகியும், உபதலைவருமான லயன் எந்திரி.எம்.சுதர்சன் நிகழ்த்தினார்.

புதிய செயலாளராக லயன் சட்டத்தரணி அருள்.நிதான்சன்,  பொருளாளராக லயன் ஏ.கிஷோக் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்தனர்.

 


( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவு மக்கள் வங்கி முகாமையாராக மீண்டும்  திருநா.உமாசங்கரன் இன்று(15) திங்கட்கிழமை பதவியேற்றார்.

பதவியேற்பு நிகழ்வில் கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன்  குருக்கள் சமய ஆராதனை நடத்தினார்.

இந்த நிகழ்வில் மக்கள் வங்கியின் அம்பாறை மாவட்ட உதவி பிராந்திய முகாமையாளர் ஜி.பம்பரதெனிய  கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
அவர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு உத்தியோக பூர்வமாக நடைபெற்றது.

காரைதீவில் முகாமையாளராக பணியாற்றிய எஸ். கரிகாலன் கல்முனை மக்கள் வங்கி முகாமையாளராக இடமாற்றலாகி செல்கிறார்.

காரைதீவைச்
சேர்ந்த திருநா.  உமாசங்கரன் முன்னர் ஆறரை வருட காலம் காரைதீவிலும் இறுதியாக திருக்கோவிலில் மூன்றரை வருட காலமும்  முகாமையாளராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


இலங்கை ஊடகவியலாளர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில், சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு வருட கால ஒப்பந்த அடிப்படையில் தொழில் வாய்ப்புக்களை வழங்குமாறு சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வால்ட்யிடம் (Dr. Siri Walt) உத்தியோகபூர்வ கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.


பாதுகாப்பான மற்றும் சட்ட ரீதியான புலம்பெயர்வு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட சந்திப்பொன்று  சனிக்கிழமை   (13) அம்பாறை மாவட்டம் மருதமுனை தனியார் விடுதியில்  நடைபெற்ற போது  இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம் (ICMPD) ஆகியன இணைந்து இந்த முக்கிய கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன.

இலங்கைக்கான ICMPD நிறுவனத்தின் இணைப்பாளர் சாமிர் ஸாலிஹ் தலைமையேற்று நடத்திய இச்செயலமர்வில், சுவிஸ் தூதுவர் கலாநிதி சிரி வால்ட் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இச்சந்திப்பில் தூதுவரிடம் நேரடியாகக் கோரிக்கை விடுத்த சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

"இலங்கை ஊடகவியலாளர்கள் தற்காலத்தில் பல்வேறு பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், ஊடகப் பணியினை ஒரு சேவையாகவே அர்ப்பணிப்புடன் வழங்கி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவது காலத்தின் தேவையாகும்."

இதனைக் கருத்திற்கொண்டு, தகுதியான ஊடகவியலாளர்களுக்கு சுவிட்சர்லாந்தில் இரண்டு வருட கால ஒப்பந்த அடிப்படையில் சட்டபூர்வமான வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர தூதரகம் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்

நூருல் ஹுதா உமர்


“விளையாட்டை காப்போம் – பிள்ளைப் பருவத்தை காப்போம்” (Protect Play – Protect Childhood) என்ற தொனிப்பொருளின் கீழ் சர்வதேச விளையாட்டு தினம் நேற்று (11) நாடு முழுவதும் உள்ள முன்பள்ளிகளில் அனுஷ்டிக்கப்பட்டது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் வழிகாட்டலின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, இறக்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனைத்து முன்பள்ளிகளிலும் சிறப்பாக நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, இறக்காமம் 03ஆம் பிரிவில் அமைந்துள்ள பிரில்லியன்ட் பாலர் பாடசாலையில் விளையாட்டு மற்றும் சுற்றாடல் தின நிகழ்வு நடைபெற்றது. இதில் இறக்காமம் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும், அல்-மதீனா பாடசாலையின் அதிபர் கே. றஸ்மி, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். எம். இம்டாட் மற்றும் மகளிர், சிறுவர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றனர்.

நிகழ்வின் போது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம். எச். வஹாப் மற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். எம். இம்டாட் ஆகியோர் சிறுவர் பாதுகாப்பு மற்றும் ஆரம்பக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தனர்.

அதேவேளை, உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா, “இலட்சிய தாய்” கொண்டிருக்க வேண்டிய அடிப்படை பண்புகள் மற்றும் குடும்பத்தில் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கான பெற்றோரின் பொறுப்புகள் தொடர்பிலும் உரையாற்றினார்.

நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள், அபிநயங்கள் மற்றும் மகிழ்ச்சியான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சிகள் பாலர் பாடசாலை ஆசிரியர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததுடன், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் பாராட்டையும் பெற்றன.


 காரைதீவு பிரதேச மீன்வாடி முறைமையை ஒழுங்குபடுத்த விசேட கலந்துரையாடல்


நூருல் ஹுதா உமர்

இலங்கையின் மிகப் பெரிய மீன் மொத்த விற்பனை நிலையங்களுள் ஒன்றாக விளங்கும் காரைதீவு பிரதேசத்தின் மாளிகைக்காடு மற்றும் காரைதீவு மீன் சந்தைகளில் நிலவும் மீன்வாடி முறைமையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் வியாழக்கிழமை விபுலானந்த கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வஸீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் ஹில்மி, பொது சுகாதார பரிசோதகர்கள், காரைதீவு பொலிஸார், பல்வேறு திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை அதிகாரிகள், மாளிகைக்காடு மற்றும் காரைதீவு பிரதேச மீன் மொத்த விற்பனை நிலைய உரிமையாளர்கள், மீன் வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான கிலோகிராம் மீன்கள் விநியோகிக்கப்படும் மையமாக மாளிகைக்காடு மற்றும் காரைதீவு மீன் சந்தை விளங்கிவருகிறது. இதனால் அப்பகுதி மீன்பிடித் தொழிலும் மீன் வணிகமும் பிராந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றன. எனினும், மீன்வாடி நிர்வாகம், சுகாதார நடைமுறைகள், கழிவு முகாமைத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு சவால்கள் எழுந்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு மீன் வியாபார நடவடிக்கைகளை முறையாக ஒழுங்குபடுத்துவதுடன், சுகாதார தரங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

கூட்டத்தில் கருத்து வெளியிட்ட மீன் மொத்த விற்பனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள், மீன்வாடி தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள், போக்குவரத்து வசதிகள், கழிவுகளை அகற்றுதல், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் தங்களது துறைகளின் பொறுப்புக்கள் மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகள் குறித்து விளக்கமளித்ததுடன், மீன்வாடி நடவடிக்கைகள் சட்டபூர்வமாகவும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகவும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் உரையாற்றிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன், மாளிகைக்காடு மற்றும் காரைதீவு மீன் சந்தைகள் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் முக்கிய வர்த்தக மையங்களாக இருப்பதாகக் குறிப்பிட்டார். எனவே மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையிலும், பொதுச் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையிலும் அனைவரின் ஒத்துழைப்புடன் ஒரு ஒழுங்குமுறைத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், மீன்வாடி முறைமையை நவீனமயப்படுத்துவதற்கும், சுத்தமான மற்றும் நிலையான மீன் சந்தை சூழலை உருவாக்குவதற்கும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கலந்துரையாடலின் இறுதியில், மீன் சந்தைகளின் நிர்வாகம் மற்றும் செயற்பாடுகளை மேலும் ஒழுங்குபடுத்துவதற்காக அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பரிந்துரைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்           

 அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் மயானத்தின் முன்பாக கண்டக்குழி பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய பொருட்களை சேகரிக்கும் நாடார் நிலையமொன்றில் இன்று (09) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இத்தீப்பரவால் அப்பகுதி கரும்புகை நிரம்பி காட்சியளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று மாநாகர சபையின் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.
இதேநேரம் சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று இராணுவம் மற்றும் பொலிசாரும் சென்றிருந்ததுடன் தீப்பரவலுக்கான காரணத்தை கண்டறியும் விசாரணைகளையும் பொலிசார் முன்னெடுத்திருந்தனர்.
தீப்பரவல் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமை எரிவாயு மொத்த வியாபார நிலையம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 ( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள களப்பு மற்றும் மயானவீதி பகுதிகள் காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று (8) திங்கள் கிழமை துப்பரவாக்கப்பட்டன.

பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரனின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இத்துப்பரவு நடவடிக்கையில் கனரக வாகன உதவியுடன் சபை ஊழியர்கள் பங்கேற்று வீதியின் இருமருங்கிலும் காடுபற்றிக் கிடந்த மரங்கள் செடி கொடிகள்  அகற்றப்பட்டதுடன், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்கள் சுகாதாரமான சூழலில் வாழ்வதையும் இலகுவாக பயணிப்பதையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான துப்பரவு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக பிரதேச சபை தவிசாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.


மேலும், பொதுமக்களும் தமது சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


சர்வதேச சூழல்   தினமான ஜூன் -05 தினை அனுஷ்டிக்கும் முகமாக    கல்முனை  அஸ்-ஸுஹறா  வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால்  பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.


அந்த வகையில் முதலில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலையில்  சிரமதான நிகழ்வுகள் முதலில்  இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து  இன்று(05)அப்பாடசாலை அதிபர்   தலைமையில்   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள்    இடம்பெற்றதுடன் அவர்   பல்வேறு சூழல் சார் கருத்துக்களை வழங்கினார்.

இதன் போது இயற்கை ஒரு மடல் எனும் தொனிப்பொருளில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் அடங்கிய விடயங்களை   மாணவர்களின் சுற்றுச்சூழல் தொடர்பான ஆற்றுகைகள் ஊடாக  இடம்பெற்றன.நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள்  எதிர் காலத்தில் பிளாஸ்டிக் பாவனையை இழிவாக்குவதில் தம்மால் இயன்ற  பங்களிப்பை வழங்க உறுதி பூண்டுமிருந்தனர்.


இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்  ஆசிரியர்கள்  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 


( வி.ரி.சகாதேவராஜா)


மாகாண நன்கொடை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி - 01 இல் அமையப்பெறவுள்ள இயற்கை உர தயாரிப்பு இடத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு  இன்று 2026.06.05 ம் திகதி வெள்ளிக்கிழமை தவிசாளர் இ. ரூபசாந்தன்   தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உபதவிசாளர் கே.புவனரூபன்,  உறுப்பினர் கே.உதயகுமார் ஆகியோருடன் எஸ்.ரஞ்சித்குமார் (தொழிநுட்ப உத்தியோகத்தர்) மற்றும் எம். நிப்றாஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 மேற்குறிப்பிட்ட இயற்கை  உர தயாரிப்பு இடத்திற்கான சுற்று மதில்  பகுதி அளவில் நிறைவுற்றிருந்தது  அதனை முழுமை படுத்தி நிறைவுற வைபவத்திற்கு  மூன்று மில்லியன் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

நூருல் ஹுதா உமர்


இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் (FSLGA) ஏற்பாட்டில் நடைபெற்ற மாகாண மட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் காரைதீவு பிரதேச சபை சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இப்போட்டியில் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்களும், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களும் பங்கேற்று தமது கருத்துக்கள் மற்றும் வாதங்களை முன்வைத்தனர். போட்டியின் இறுதியில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் 299 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகித்ததுடன், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் 254 புள்ளிகளைப் பெற்றனர்.

இதன்மூலம் 45 புள்ளிகள் வித்தியாசத்தில் காரைதீவு பிரதேச சபை வெற்றியீட்டியுள்ளது

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அறிவாற்றல், பகுப்பாய்வுத் திறன், பொதுக் கொள்கைகள் தொடர்பான புரிதல் மற்றும் மேடைப் பேச்சுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இவ்விவாதப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களின் இந்த வெற்றி, சபையின் செயற்பாட்டுத் திறன் மற்றும் உறுப்பினர்களின் விவாத ஆற்றலை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதேச மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றிக்காக காரைதீவு பிரதேச சபையின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்ற குழுவினருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

 பாறுக் ஷிஹான்



எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது.சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின்  பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும்  என்பதன்  ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என அம்பாறை  மாவட்ட இலங்கை தமிழரசு  கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பில் புதன்கிழமை(03) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் பங்கேற்புடன்   இரவு   கல்முனை பகுதியில்   விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது


அம்பாறை மாவட்டம் மூன்று இனங்கள் வாழும் சமூகமாக இருக்கின்றோம்.இந்த நாட்டில் இனரீதியான பிரச்சினைகள் இருந்தாலும் நாங்கள் வாழ வேண்டும் என்பதற்காக நாட்டில் உள்ள இரு இனங்களுடன் இணைந்து வாழ்கின்றோம்.இலங்கை தமிழரசுக் கட்சியானது சிறுபான்மை இன விடுதலைக்காக நீண்ட காலம் பயணித்த ஒரு கட்சியாகும்.இதே வேளை கல்முனை பிரதேசம் சம்பந்தமாக இங்கு கூற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.கல்முனை பிரதேசம் என்பது முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாகவும்  தமிழ் மக்கள் சிறுபான்மையாகவும் வாழுகின்ற இடமாகும்.ஆனால் 1989 ஆண்டு முதல்  கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் யாவரும் அறிவீர்கள்.இப்பிரதேச செயலகம் குறித்து எமது தமிழ் தேசிய தலைவர்களும் முஸ்லீம் தலைவர்களும் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம்.

இந்த முயற்சி எமக்கு கை கூடாத  சூழ்நிலையில் தான் நீதிமன்றத்தை நாடி இருந்தோம்.அந்த அடிப்படையில் தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக எமது பயணத்தை மேற்கொண்டிருக்கின்றோம்.இன்று இம்மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் பல கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.அவரது அக்கருத்துக்களை பார்க்கின்றபோது இனவாதமாக கூறிவிட்டு அவர் தான் ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை முன்வைத்திருக்கின்றார்.உண்மையில் நாங்கள் அதை மறுக்கின்றோம்.

நிச்சயமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பொறுத்தவரை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.அவர்களும் ஒரு நிர்வாக கட்டமைப்பினுள் சகல உரிமைகளையும் சகல சலுகைகளையும் பெற்று வாழ வேண்டும் என விரும்புகின்றார்கள்.அண்மைக்காலத்தில் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்திருப்பீர்கள்.தற்போது நீதிமன்ற தீர்ப்பின் படி தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.அந்த மக்களும் சகல உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும்.அதே போன்று தான் இப்பிரதேச செயலகத்திற்கும் ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும்.அண்மைக்காலங்களில் இச்செயலகத்திற்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் அத்துமீறல்கள் இடம்பெறுவதை சகலரும் அறிவீர்கள்.

சில அரசியல்வாதிகள் அமைப்புகளினால் ஏற்பட்டுள்ள இவ்வாறான அச்சுறுத்தல்களுக்காக நீதிமன்றத்தை நாங்கள் தற்போது நாடி இருக்கின்றோம்.அந்த நீதிமன்ற தீர்ப்பு கூட எவ்வாறு அமையப்போகின்றது என தெரியவில்லை.அதே போன்று இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்களும் பல கருத்துக்களை இவ்விடயம் தொடர்பில் தெரிவித்ததாக அறிகின்றோம்.அதன் அடிப்படையில் இவ்விடயத்தில் எமது நியாயபூர்வமான உரிமைகளை முன்வைத்திருக்கின்றோம்.கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் சிலர் அரசாங்கங்களுடன் பேரம் பேசி சில விடயங்களை சாதித்திருக்கின்றார்கள்.நாங்கள் தொடர்ச்சியாக கொள்கையுடன் பயணித்ததன் காரணமாக எமது மக்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்திருக்கின்றார்கள்.

அந்த துன்பங்களில் இருந்து மீண்டு வருவதற்காகவே நீதிமன்றத்தை நாங்கள் நாடி இருக்கின்றோம்.நாங்கள் நீதிமன்ற தீரப்பினை நம்பி இருக்கின்றோம்.அதன் அடிப்படையில் நாங்கள் செயற்படுவோம்.அத்துடன் எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது.சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின்  பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும்  என்பதன்  ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.


 நூருல் ஹுதா உமர்


நான் பாராளுமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பு வகித்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கல்முனை கடலரிப்பு பிரச்சினையின் அவசரத்தன்மையை எடுத்துரைத்து கோரிக்கை விடுத்ததன் பயனாக, 2024 ஜூலை 18 ஆம் திகதி ரூபா 6 கோடி 26 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் கடலரிப்பை கட்டுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நான் எம்.பியாக இல்லாது போனதன் பின்னர் அந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு கடலரிப்பை கட்டுப்படுத்த இப்போதைய எம்.பிக்கள் தவறியதால் கல்முனை கரையோரம் ஆபத்தில் இருக்கிறது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை கடலரிப்பு விவகாரம் தொடர்பில்  ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

யார் மீதும் எனக்கு தனிப்பட்ட கோபமில்லை. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனாலும் மக்களின் பிரச்சினை தலைக்கு மேலால் போகும்போது உண்மைகளை வெளியிடாமல் மௌனமாக இருக்க முடியாது. பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஆதம்பாவா எம்.பி இருந்தும் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமாக எதையும் செய்யாமல், இந்த விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்க வேண்டிய கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களையும் கூட கடந்த ஒன்றரை வருடங்களாக முறையாக நடத்தப்படாதிருப்பதும் கவலைக்குரிய விடயமாகும்.

ஒலுவில் துறைமுக பிழையான கட்டுமானத்தினால் கல்முனை தொகுதியின் கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் கடலரிப்பு தற்போது உக்கிரமடைந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதுடன், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பில் மீனவ அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு தரப்புகளில் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், இதுவரை உரிய மற்றும் நிரந்தரமான தீர்வுகள் எட்டப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். கடலரிப்பு அடுத்த கட்ட பேரழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

நான் பாராளுமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பு வகித்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் இந்த பிரச்சினையின் அவசரத்தன்மையை எடுத்துரைத்து கோரிக்கை விடுத்ததன் பயனாக, 2024 ஜூலை 18 ஆம் திகதி ரூபா 6 கோடி 26 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் கடலரிப்பை கட்டுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் கீழ் கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதியிலிருந்து மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் வரையிலான பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டன.

எனினும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிலரின் சதியினால் நான் தேர்தல் கேட்கவில்லை. அதன் பின்னர் வந்த எம்.பிக்களினால் இத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாத காரணத்தால், பலாஹ் பள்ளிவாசல் தொடக்கம் கடற்கரை பள்ளிவாசல் வரையிலான பகுதிகள் மீண்டும் கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகி, மீனவர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்து வருகின்றன. அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட மரபுரிமை சொத்தமான கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் முன்னாள் அழகுக்காக நிர்மாணிக்கப்பட்ட சகல வேலைத்திட்டங்களும் கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளது.

கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், இந்த அவசர பிரச்சினைக்கு தேவையான முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக, ஏற்கனவே எனது கோரிக்கைக்கு இணங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையிலும், சுமார் 250 மீற்றர் தூரத்தை பாதுகாக்கும் பணிகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

எனது காலத்தில் மாளிகைக்காடு மையவாடிக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ஊடாகவும், சாய்ந்தமருதில் கடலரிப்பு தடுப்பு அணைகள் நிர்மாணிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் ஊடாகவும் நிதி ஒதுக்கீட்டை பெற்று குறுகிய காலத்திற்குள் தடுப்பணை அமைக்கப்பட்டதுடன், கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதியிலிருந்து பலாஹ் பள்ளிவாசல் வரையிலான பணிகளும் சில மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டிருந்தன. ஆனால் தற்போதைய நிலையில் மிகவும் குறுகிய தூரப் பகுதியை கூட பாதுகாக்க முடியாத நிலை காணப்படுவது வேதனைக்குரியது.

கல்முனை கடலரிப்பிற்கான அடிப்படை காரணமாக ஒலுவில் துறைமுக பிழையான கட்டுமானமே இருப்பதாக ஜனாதிபதி முதல் பல அதிகாரிகள் வரை சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, கல்முனை மக்களின் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை நோக்கி அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, கல்முனை நகரத்தையும் அதன் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஒன்றிணைந்து அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் என்றார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.