Showing posts with label Sri lanka. Show all posts

 



பாறுக் ஷிஹான்


கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணுக்குள் இருந்து  மீட்கப்பட்ட   கைக்குண்டை செயலிழக்கச் செய்ய  விசேட அதிரடி படையினரால்  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   வீடு ஒன்றில் திங்கட்கிழமை (21) மாலை  கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட   மண்ணில் புதையுண்ட நிலையில்  குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

அத்தடன் குறித்த  கட்டட வேலையில் ஈடுபட்டவர்கள்   119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டுடை பார்வையிட்டதுடன்  குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் குற்றவியல் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்கம் செய்வதற்காக இன்று  சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற கட்டளையை பெற்று  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 



( வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவிலிருந்து இம்முறை பல்கலைக்கழகம் செல்லும் 33 கல்விச் சாதனையாளர்கள்  கௌரவிக்கப்பட்டனர்.

 காரைதீவு TRAKS & ASCO அமைப்பின் ஏற்பாட்டில் காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(19)  அமைப்பின் செயலாளர் எஸ்.நந்தகுமார் தலைமையில் இவ் விழா சிறப்பாக இடம்பெற்றது.

லண்டனில் வாழும் காரைதீவைச் சேர்ந்த வைத்திய நிபுணர் வைத்தியர் அருளானந்தம் வரதராசன் தனது பெற்றோர் சார்பில் ஸ்தாபித்த இவ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் நான்காவது அரங்கு விழா இதுவாகும்.

இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை 
பொது சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் நடேசன் அகிலன்
 கலந்து சிறப்பித்தார்.

நட்சத்திர அதிதிகளாக சிவ.ஜெகராஜன் (மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம்,அம்பாரை) , கோ. அருணன்(பிரதேச செயலாளர், காரைதீவு ஏ. சுந்தரகுமார்(செயலாளர், பிரதேச சபை காரைதீவு)  ஆ. பார்த்தீபன் (உதவிக் கல்விப் பணிப்பாளர், மகாணக் கல்வித் திணைக்களம்) ,  வி.ரி. சகாதேவராஜா (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், காரைதீவு) ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

விழாவில் மண்ணுக்கு மகிமை சேர்த்தவர்கள் வரிசையில் பொது சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் நடேசன் அகிலன்,
சிவ.ஜெகராஜன் (மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம்,) ,
வி.ரி. சகாதேவராஜா (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், காரைதீவு) ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும்,
விஞ்சைமிகு அதிதிகளாக வைத்தியர் மஞ்சுரேகா பிரசாந்தன் (ஆதார வைத்தியசாலை,கல்முனை வடக்கு) , வைத்தியர் கீர்த்திகா ரகுமதன்
(அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை,கல்முனை).
ஏ.மகேந்திரராஜா (ஓய்வுநிலை BOC - முகாமையாளர் காரைதீவு) வைத்திய அதிகாரிகளான மைத்ரி தினேஸ்காந்த் (ஆதார வைத்தியசாலை,கல்முனை வடக்கு)  வி. றேணுபிரியக்ஷன் (ஆதார வைத்தியசாலை,திருக்கோவில்) . கே. ஆதர்ஷன் (ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை) மற்றும், எஸ். மணிமாறன் (அதிபர், சண்முகா மகா வித்தியாலயம் காரைதீவு) ஆசிரியர் ஆர்.இரட்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன்,
 வித்திய அதிதிகளாக ரி.தெய்வீகன் B.Sc. , கே.ருத்திரமூர்த்தி B.Sc., எஸ். தேவகுமார் M.Sc, R.Sc.,இ.சங்கீத் B.Sc.
திருமதி. J. சந்திரசேகரம் B.A. ,  எஸ் பத்மநாதன் M.Ed. , திருமதி. சி. றுசிகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இத்துடன் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் சிறப்பு கௌரவிப்புக்களும் பணப்பரிசில்களும் பதக்கங்களும் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பி.கேதீஸ் நன்றியுரையாற்ற நிகழ்ச்சிகளை வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா தொகுத்தளித்தார்.

 



பாறுக் ஷிஹான்


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தலில் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அருள்ஞானமூர்த்தி நிதான்சனின் உத்தியோகபூர்வ கட்சிக் காரியாலம் திங்கட்கிழமை(இரவு) திறந்து வைக்கப்பட்டது.

நிதான்சன் ஆதரவணி குறித்த கட்சி அலுவலகத்தை கல்முனை உடையார் வீதியில் திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளரும் வீட்டுச் சின்னம் இலக்கம் 1 இல் போட்டியிடும் வேட்பாளருமான அருள்ஞானமூர்த்தி நிதான்சன் மற்றும் சக வேட்பாளரான பாக்கியம் மஞ்சுளா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

 இதன் போது தற்போதைய பாராளுமன்ற தேர்தலின் முக்கியத்துவம் வாக்களிப்பதன் ஊடாக தமிழ் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது கடந்த கால தேர்தல் தவறுகள் பருவ கால தேர்தல் வியாபாரிகளின் செயற்பாடுகள்  எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள  தேர்தல்கள்  உட்பட அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் அங்கு பேசப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.



 “அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்ப உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகளை கைமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் பேசி, அரசியல்வாதிகள் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தை வைத்து வீரர்களாவதில் பயனில்லை என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். 

 

நேற்று ஞாயிறு ஆராதனை ஒன்றில் உரையாற்றிய பேராயர், முன்னாள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட புதிய குழுவொன்று தற்போது விசாரணை தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்த செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இவ்வளவு காலமும் அமைதியான இருந்த, எங்களின் கோரிக்கைகளை பொருட்படுத்தாமல், எங்களின் கோரிக்கைகளுக்கு அவர்களின் ஆட்சியில் பதில் வழங்காமல், எங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது புதிதான அக்கறையுடன் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பேசுகிறார்கள்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டு அறிக்கைகள் தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் அந்த அறிக்கைகளில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதே பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன என்று கூறிய அவர், அதே பரந்துரைகளை மீண்டும் எழுதுவதற்கு இன்னுமொரு குழுவை நியமிக்க வேண்டிய அவசியமில்லை.

 

தற்போதைய அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் இரண்டு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைகள் சுட்டிக்காட்டுவதாக கூறிய பேராயர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகள் ஒவ்வொரு அரசாங்கத்தின் அரசியல் இலாபத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

அதில் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தற்போதைய ஜனாதிபதி இது தொடர்பில் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணையை மேற்கொள்வார் எனவும் அதற்காக கண்களை திறந்து காத்திருப்பதாகவும் பேராயர் மேலும் தெரிவித்தார். 

 

இந்த இரண்டு செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று அம்பலப்படுத்திய உதய கம்மன்பில, முன்னாள் பொலிஸ் அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கிறார்.

 

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் அண்மையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்னவையும், மத்திய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஷானி அபேசேகரவையும் நியமித்தது.

 



( கல்முனை நிருபர்)


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் மக்கள் சந்திப்பில் நேற்றைய தினம் (20) இடுபட்டார்.

இதன் போது பொது மக்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடலை மேற்கொண்டார்

 



நூருல் ஹுதா உமர்


தோப்பூர் ஷாக்கிர் கிலுறுதீன் எழுதிய "மழைச்சாரல் தொடர்கிறது" என்ற கவிதை நூலானது கடந்த ஞாயிற்றுக்கிழமை தோப்பூர், தி/மு/ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தோப்பூர் கலை இலக்கியப் பேரவையின் அனுசரணையோடு விமர்சையாக நடைபெற்றது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், முன்னாள் பீடாதிபதியுமான எம்.எல்.பௌசுல் அமீர் தலைமையில் இடம்பெற்ற இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ.ஹாஜா முகைதீன் கலந்து கொண்டு முதல் பிரதியை பிரபல தொழிலதிபரும், அல் - மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவருமான எஸ்.எச்.ஜெஸாஹீர் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மூத்த கல்விமான்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், கலை இலக்கியப் பேரவை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், , இலக்கியவாதிகள், நலன்விரும்பிகள், ஊர் பிரமுகர்கள், நூலாசிரியரின் நண்பர்கள் மற்றும் நளீமிய்யா நண்பர்கள் போன்ற பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டதாரியான ஷாக்கிர் கிலுறுதீன் எழுதிய இந்நூலானது தோப்பூர் கலை இலக்கியப் பேரவையின் மூன்றாவது வெளியீடாகும்.



மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.




தென் மாகாணத்தில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகலாம் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.


 



அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஹால் விஜயதுங்க அவர்களுக்கு  இடமாற்றம் வழங்குவதற்கான அனுமதியினை தேசிய பொலிஸ் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது என்பதாக #NewsFirst செய்திகள் தெரிவிக்கின்றன.

 



(பாறுக் ஷிஹான்)


கறவை மாடுகளின் பால்கள் கூட எம்மை தாண்டி கொழும்பை செல்கின்றது.எனவே பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு உண்மையான தலைமைத்துவம் எமக்கு வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி இணையமைப்பாளரும் டெலிபோன் சின்னம் இலக்கம் 7 இல் போட்டியிடும்  வேட்பாளருமான  வெள்ளையன் வினோகாந் தெரிவித்தார்.

2024 ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில்  அம்பாறை மாவட்டம்   டெலிபோன் சின்னம் இலக்கம் 7 இல் போட்டியிடும் அவர் அம்பாறை ஊடக அமையத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது


இந்த பாராளுமன்ற தேர்தலானது அனைத்து கட்சிகளுக்கும் சவாலான தேர்தலாக அமைந்திருக்கின்றது.கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் முகமாக ஒரு கட்சியை ஆதரித்திருந்தார்கள்.ஆனால் அவர்கள் ஆதரித்த கட்சியானது இன்று ஏட்டுச்சுரக்காய் போன்று இருப்பதை எம்மால் உணர முடிகின்றது.இந்த நாட்டில் அனைத்து மக்களும் வாழ வேண்டும்.கல்வி சுகாதாரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் முன்னிறுத்தி உள்ள எங்கள் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள சகல மக்களுக்கும் இலங்கையில் இருந்த எந்தவொரு எதிர்கட்சி தலைவரும் செய்யாத உதவிகளை செய்து கொண்டிருக்கின்றார்.

எனவே நாங்கள் இத்தேர்தலில் களமிறங்கி இருக்கின்றோம்.அவரை ஒரு பிரதமராக்குவதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.அந்த அடிப்படையில் நானும் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கி இருக்கின்றேன்.இந்த தேர்தல் காலத்தில் அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் அதிகளவான கட்சிகள் களமிறக்கப்பட்டிருக்கின்றன.இந்த காலகட்டத்தில் தான் இக்கட்சிகளுக்கு மக்கள் மீதான அன்பு அதிகரிக்கின்றது.மக்கள் மீதான பாசம் அதிகமாகின்றது.உரிமை அதிகமாகின்றது.ஆனால் கொரோனா மற்றும் வெள்ளப் பாதிப்புகளையும் மக்கள் எதிர் கொண்டிருந்தனர்.அம்மக்கள் இவ்வாறு அநாதைகளாக நிர்க்கதிக்குள்ளான போது எவரும் உதவி செய்யவில்லை.எனவே நாங்கள் அவ்வாறில்லை.வீடு இல்லாதவர்களுக்கு வீடுகளை வழங்கி இருந்தோம்.இன்று அந்த வீடுகள் குறையாக கிடக்கின்றன.கோட்டபாய அவர்களுக்கு 69 இலட்சம் வாக்குகளை அன்று மக்கள் வழங்கி இருந்தார்கள்.இதனால் அவ்வீடுகள் பூரணமாக நிறைவு செய்யப்பட்டிருக்கவில்லை.அதன் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க கூட இவ்வீடுகளை பூரணமாக்கவில்லை.தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் கூட இந்த வீடுகளை பூரணமாக நிர்மாணித்துக் கொடுக்கப்போவதில்லை.எனவே மக்களுக்கு ஒரு விடயத்தை தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.இவ்வாறான வீடுகளை பூரணப்படுத்துவதற்கும் புதிய வீடுகளை இன்னும் நிர்மாணிப்பதற்கும் காணி இல்லாதவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கும் சஜித் பிரேமதாச மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.

எனவே அவர்களுக்காக நாங்கள் இத்தேர்தலில் களமிறங்கி இருக்கின்றோம்.தேர்தல் காலங்களில் மக்களுக்கு அதிகமான இலவசங்களை வழங்குவார்கள்.இவ்வாறான நலத்திட்டங்கள் இலவசங்களை கண்டு நீங்கள் (மக்கள்) ஏமாறுவீர்களாயின் எதிர்வரும் 5 வருடங்கள் உங்களுக்கு சூனிய காலமாக  மாறி வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.எனவே மக்கள் அனைவரும் சிந்தியுங்கள்.இலவசங்களுக்கு ஒரு போதும் சோரம் போய் விடாதீர்கள்.இவ்வாறு சோரம் போய் தான் கிட்டத்தட்ட 65 வருட அரசியல் வறிதாக போய் விட்டது.இன்று பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரையிலான சில பகுதிகளுக்கு குடிநீர் மக்களுக்கு இல்லை.இது தான் அரசியல்.ஆனால் இன்று ஆண்களுக்கு மதுபானமும் சீமெந்து பைக்கற்றுக்கள் உலருணவு பொருட்களும் தற்போது விநியோகித்து வருவதாக அறிகின்றோம்.இதுவா அரசியல்? இதுவா தேர்தல்? அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் என்பது இல்லை .இது தான் திட்டவட்டமான உண்மை.கடந்த தேர்தலிலும் இவ்விடயம் இல்லாமல் செய்யப்பட்டிருந்தது.ஆனால் இம்முறை சஜித் அணி சார்பாக களமிறங்கி இருக்கின்றோம்.

எனவே தமிழ் மக்களுக்கு சஜித் பிரேமதாசவுடன் இணைந்து தலைமைத்துவத்தை தருவதற்கும் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.எமது கறவை மாடுகளின் பால்கள் கூட எம்மை தாண்டி கொழும்பை செல்கின்றது.எனவே பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு உண்மையான தலைமைத்துவம் எமக்கு வேண்டும்.வீடுகளில் வேலையற்றுள்ளவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.எனவே இந்த தேர்தலில் உங்களை நோக்கி வருகின்றவர்கள் இனம் என்பார்கள் மொழி என்பார்கள்.எமது இரத்தத்தை சூடாக்கின்ற மாதிரி பேசுவார்கள்.இலவசங்களை தருவார்கள்.அவர்களை தேர்தல் முடிந்த மறுநாள் இருந்து 5 வருடங்களுக்கு உங்களால் காண முடியாது.அவர்களுக்காக பரிந்து பேசுவதற்கு கூட உங்கள் பகுதியில் உள்ள தலைவர்கள் வருவார்கள்.அவர்களிடம் கூறுங்கள்.

சஜித் பிரேமதாச சார்பாக அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கியுள்ள தமிழனுக்கே எமது வாக்கு என்று கூறுங்கள்.எனவே அம்பாறை மாவட்ட மக்கள் அனைவரும் தெளிவடைய வேண்டும் சந்தர்ப்பமாக இத்தேர்தல் அமைந்துள்ளது.இன்று சஜித் பிரேமதாச அவர்கள் பிரதமராக வருவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.இந்த கட்சிக்குள் ஊழல் இருக்கின்றது மோசடி நடைபெறுகின்றது என  அபாண்டமாக விமர்சித்து கொண்டிருக்கின்றார்கள்.இந்த கட்சியை கூட ரணிலால் அசைக்க முடியாதுள்ளது.கிருணிக்கா கூட எம்முடன் இருக்கின்றார்.எம்முடன் அவர் மிக மகிழ்ச்சியாக தேர்தலில் களமிறங்கியுள்ளார்.சில வதந்திகளை பரப்பி எமது கட்சியின் கட்டமைப்பை ஒரு சிலர் குழப்ப முயல்கின்றார்கள்.இதில் எதுவித உண்மையும் இல்லை.அத்துடன் சஜித் பிரேமதாசவின் கட்சியில் குடும்ப ஆதிக்கம் இல்லை என்பதையும் கூற விரும்புகின்றேன் என்றார்.

 



மாளிகைக்காடு செய்தியாளர்


இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் ஸ்கை தமிழ் விருது -2024 நிகழ்வு ஸ்கை தமிழ், துணிந்தெழு பிரதம நிறைவேற்று பணிப்பாளர் ஜெ.எம். பாசித் தலைமையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் ஸ்கை தமிழ் விருது -2024 நிகழ்வில் ஊடகத்துறைக்கு சுமார் 15 வருடங்களாக ஊடகத்துறையில் களமாடி வரும், துணிச்சல் மிக்க இரண்டு ஊடகவியலாளர்கள் கௌரவம் பெற்றுள்ளனர். அதில் சிறந்த பிராந்திய நிருபராக எமது செய்தியாளர் நூருல் ஹுதா உமரும், புலனாய்வு அறிக்கையிடலுக்காக எமது செய்தியாளர் பாறூக் ஷிஹானும் விருது பெற்றனர்.

கடந்த வருடம் கட்டாரில் நடைபெற்ற இந்த விழா இரண்டாவது தடவையாக இலங்கையில் இம்முறை நடைபெற்றது. இந்த விருது விழாவில் பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகரும், தொழிலதிபருமான புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத், கலை கலாச்சார பீடாதி பேராசிரியர் எம்.எம். பாஸில், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலர் உட்பட நிறைய பிரமுகர்கள் பலரும் கௌரவ, விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இடம் பெறும் முறைப்பாடுகளை சுயாதீனமாக தெரிவிக்க அம்பாறைக் கச்சேரியில்  தேர்தல் முறைப்பாட்டு மையம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது .

இவ்வாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார் .

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கையில் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் மேலும் அவர் தெரிவிக்கையில் 

அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 528 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில்  26 ஆயிரம் ஆக இருந்த தபால் மூல வாக்குகள்  இம்முறை முப்பதாயிரம் ஆக அதிகரித்து இருக்கின்றது.

 அதேபோன்று அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கெண்ணும் நிலையங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 56 ஆக இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அது 68 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 21 அரசியல் கட்சிகளினதும் 43 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் ஏற்றுகொள்ளப்பட்டது 

எதிர்வரும் 2024 ஆண்டிற்கான பாராளுமன்ற  தேர்தல் தொடர்பாக அம்பாறை  மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை(110 மாலை  ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில்  2024 பாராளுமன்ற  தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் 555432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.பாராளுமன்றம் கலைக்கப்பட்ட  பின்னர் 2024 ஆண்டிற்கான பொதுத்தேர்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பிரகாரம் 2024.10.04 தொடக்கம் 2024.10.11 வரையான காலப்பகுதியில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 07 ஆசன தெரிவிற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 22 உம் சுயேட்சைக்குழுக்கள் 50 இனதும் நியமனப்பத்திரங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.

அத்துடன் நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்த அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியும்  07 சுயேட்சைக்குழுக்களையும் தேர்தல் சட்ட திட்டங்களுக்கமைய  பல்வேறு குறைபாடுகளை கருத்திற் கொண்டு நிராகரித்துள்ளோம்.இதன்படி தற்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 21 உம் சுயேட்சைக்குழுக்கள் 43  இனது நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொண்டுள்ளோம்.மொத்தமாக 64 அரசியல்  கட்சி உட்பட சுயேட்சைக்குழுக்கள் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்  7 ஆசனங்களுக்காக போட்டியிடுகின்றன.

2024 ஆண்டு பொதுத்தேர்தல் அறிவித்த பின்னர் அம்பாறை மாவட்டத்தில் வன்முறையற்றறும் அமைதியானதுமான தேர்தல் செயற்பாடுகள் நடைபெற்று கொண்டு வருகின்றது.பெரியளவிலான வன்முறைகள் எவையும் இடம்பெறவில்லை.எனினும் சிறு சம்பவங்கள் தேர்தல் கண்காணிப்பு ஊடாக கிடைக்கப்பெற்றிருந்தன.அவற்றுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. வன்முறையற்ற நீதியான தேர்தல் ஒன்றினை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவும் தெரிவத்தாட்சி அலுவலருமான நானும் பொதுமக்களின் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டார்.

 


வி.சுகிர்தகுமார்   



இந்து சமய கலாசார திணைக்களத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டு விழாவும் பாடசாலை மாணவர்களுக்கான பஞ்சபுராண சுடர் விருது வழங்கும் நிகழ்வும் (19) அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற கட்டடத்தில் இடம்பெற்றது.
இந்து இளைஞர் மன்றத்தின் தலைவரும் இறைபணிச்செம்மலுமான த.கயிலாயபிள்ளையின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஜெகராஜன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் கீ.கமலமோகனதாசன் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி உள்ளிட்ட சமய சமூக தலைவர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலமும் சுவாமி விபுலானந்தரின் திருவுருவப்படத்தை தாங்கிய பவனியும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையின் முன்பாக இருந்து ஆரம்பமானது.
சுவாமி விபுலானந்தரின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் நடன கலை நிகழ்வுகளுடன ஊர்வலம் ஆரம்பமாகி இந்து இளைஞர் மன்ற மண்டபத்தை வந்தடைந்தது.
அங்கு சுவாமி விபுலானந்தரின் திருவுருவப்படம் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டு சுவாமியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகளும் சிவஸ்ரீ புண்ணியகிருஸ்ண குமாரக்குருக்களினால் நடாத்தப்பட்டது.
இதன் பின்னராக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பஞ்சபுராணத்தை பண்ணுடன் ஓதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பஞ்சபுராணசுடர் விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்வில் விபுலானந்தரின் சிறப்பு பற்றி மாணவர்கள் உள்ளிட்டவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டதுடன் பஞ்ச புராண போட்டியினை மாணவர்களிடையே அறிமுகப்படுத்திய அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தை அனைவரும் பாராட்டி பேசினர்.
இதேநேரம் த.கயிலாயபிள்ளை தமிழ் இலக்கிய பேரவையினால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

 

அக்கரைப்பறறு நீதிமன்ற நீதிபதியின் தங்குமிட  வளாக பாதுகாப்பு அறையில் நேற்று இரவு கடமை புரிந்து கொண்டிருந்த  சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் , தாரிக்-46 வயது நிரம்பியவர் உயிரிழந்திருக்கின்றார்.

4 பிள்ளைகளின் தந்தையான இவர், அக்கரைப்பற்று நகர் பிரிவு 4ம் பிரில் வசித்துவருகின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

சிறிது காலமாக இவர், சில நோய்களினால், பாதிக்கப்பட்ருந்தார். நேற்று மாலை இவர் அக்கரைப்பற்று நீதிமன்ற வளாக நீதிபதியின் வாசஸ்தல பாதுகாப்பு கடமைக்கூடத்தில் கடமையில் ஈடுபட்டுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாரையிலிருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிசார் தடயவியல் அடையாளங்களைப் பெற்றுக் கொண்டனர். மரண விசாரணைகளை அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி ஏ.சி .றிஸ்வான் அவர்கள் மேற்கொண்டதுடன் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர், ஜனாசாவினை உறவினர்களழடம் ஒப்படைக்குமாறும் பணித்திருந்தார்.




 



இலங்கையின் மலையகத்தில் 1970களில் தான் திருடிய தொகைக்கு ஈடாக, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை திரும்பக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். யார் அவர்? என்ன நடந்தது?


50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது?

இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலிய அருகே அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியினர் தங்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். 1970களின் மத்திய காலம் அது.


வீட்டை காலி செய்யும் போது, வேலைகளை செய்ய உதவியாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த பதின்வயது சிறுவனான ரஞ்சித்தின் உதவியை அந்த தம்பதியினர் நாடியுள்ளனர்.


பொருட்களை பழைய வீட்டிலிருந்து மாற்றி, புதிய வீட்டில் வைக்கும் வேலை பரபரப்பாக நடந்தது. பொருட்களை மாற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ரஞ்சித்.


அப்போது பழைய வீட்டில் இருந்த ஒரு தலையணையைப் புரட்டியபோது, அதற்கு அடியில் ஒரு சிறு தொகை இருந்தது. அந்த தொகை அவருடைய வாழ்க்கையை மாற்றும் என்று அன்று அவர் எதிர்பார்க்கவில்லை.


பழனியாண்டி, கோவை தொழிலதிபர், இலங்கை

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தலையணையின் அடியில் மொத்தமாக ரூ. 37.50 இருந்தது. வேலை ஏதும் இல்லாமல் இருந்த ரஞ்சித், அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டார்.


வீடு மாறும் மும்முரத்தில் இருந்த எழுவாய்க்கு தலையணைக்கு அடியில் பணம் வைத்திருந்தது வெகு நேரத்திற்குப் பிறகே நினைவுக்கு வந்தது.


வீடு மாறிய பிறகு, பணத்தைத் தேடியவர், தயக்கத்துடன் ரஞ்சித்திடம் அந்தப் பணத்தைப் பற்றிக் கேட்டுள்ளார். ஆனால், அப்படி பணம் எதையும் தான் பார்க்கவில்லையென ரஞ்சித் மறுத்துவிட்டார். அந்த காலகட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களின் வறுமைச் சூழலில் 37 ரூபாய் என்பது சற்றுப் பெரிய தொகைதான்.


இதையடுத்து, கோவிலுக்குப் போய் சாமியிடம் முறையிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார் எழுவாய். இதைக் கேட்டு சற்று அதிர்ந்து போனாலும், இவரும் எழுவாயுடன் கோவிலுக்கு சென்றுள்ளார் ரஞ்சித்.


எழுவாய், கடவுளிடம் முறையிட்டுவிட்டுச் சென்றவுடன் இவரும் கடவுள் சிலை முன்பு நின்று, "அந்தப் பணத்தை நான்தான் எடுத்தேன் என்னை ஒன்றும் செய்துவிடாதே" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.



பழனியாண்டி, கோவை தொழிலதிபர், இலங்கை

படக்குறிப்பு,சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதியர் மலையகத்தில், தோட்டத் தொழிலாளர்களாக வேலை பார்த்துவந்தனர்.

வீட்டில் நகைகளை எடுத்துக் கொண்டு தமிழகம் வந்த ரஞ்சித்

ரஞ்சித்தின் தாய் மாரியம்மாள், தந்தை பழனிச்சாமி ஆகிய இருவருமே இலங்கையின் மலையகத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றியவர்கள்.


ரஞ்சித்திற்கு மூன்று அண்ணன்கள், இரண்டு மூத்த சகோதரிகள் என பெரிய குடும்பம். வறுமை காரணமாக, அவரால் இரண்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை.


1977ஆம் ஆண்டில், ரஞ்சித்திற்கு 17 வயதான போது தமிழ்நாட்டிற்குச் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தார். இதையடுத்து வீட்டிலிருந்து கொஞ்சம் நகைகளை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு புறப்பட்டு விட்டார்.


தமிழ்நாட்டிற்கு சென்ற பிறகு ஆரம்பம் அவ்வளவு சிறப்பாக இல்லையென்றாலும் போகப்போக நிலைமை மாறியது என்று நினைவுகூர்கிறார் ரஞ்சித்.


"வீட்டில் திருடிக் கொண்டு வந்த நகையை விற்று, ஒரு பெட்டிக் கடையை வைத்தேன். அதில் நஷ்டம் அடைந்து,தெருவுக்கு வந்து விட்டேன். அதன்பின் உணவகங்களில் டேபிள் துடைக்கும் வேலை, ரூம் பாய் வேலைகளைப் பார்த்தேன். பிறகு, பேருந்து நிலையத்தில் முறுக்கு விற்பது, மூட்டை தூக்குவது போன்ற வேலைகளையும் செய்தேன். நான் செய்யாத வேலையே கிடையாது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எனக்குச் சீக்கிரமே அது கைவந்த கலையாகிவிட்டது. பிறகு சிறிய அளவில் ஒரு கேட்டரிங் நிறுவனத்தை துவங்கினேன். தற்போது அந்த நிறுவனம் 125 பேர் பணியாற்றக் கூடிய பெரிய அளவிலான நிறுவனமாகியிருக்கிறது" என்கிறார் ரஞ்சித்.


இலங்கையில் அரசியல் குடும்ப பின்னணி இல்லாத முதல் பெண் பிரதமர் - இவர் சாதித்தது எப்படி?


படக்குறிப்பு,நுவரெலிய அருகில் சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதி வசித்த அலகொல பகுதி எஸ்டேட்

கடன்களை திருப்பி அளிக்க முடிவு செய்த ரஞ்சித்

ஒரு முறை உடல்நலம் சரியில்லாமல் போன போது ரஞ்சித் பைபிளைப் படித்துள்ளார் . பைபிளில் இருந்த 'துன்மார்க்கர்கன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் போகிறான். நீதிமான் இறங்கிச் சென்று திரும்பக் கொடுக்கிறான்’ என்ற வாசகம் அவரை மிகவும் யோசிக்க வைத்துள்ளது.


"இதற்குப் பிறகு, எங்கெங்கு யார் யாரிடமெல்லாம் சின்னச் சின்னக் கடன்களை வாங்கினேனோ, அவற்றையெல்லாம் தேடித்தேடிப் போய்த் திரும்பக் கொடுத்தேன். வங்கியில் செலுத்தாமல் இருந்த 1500 ரூபாயையும் கூட, பல ஆண்டுகள் கழித்துப்போய்ச் செலுத்திவிட்டேன். ஆனால் அந்த எழுவாய் பாட்டியிடம் திருடிய 37 ரூபாயைத் திருப்பிக் கொடுக்கவில்லையே என்ற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது." என்கிறார் ரஞ்சித்.


மேலும் தொடர்ந்த அவர், "அந்த பாட்டி இறந்திருப்பார் என்று தெரியும். ஆனால், அவருடைய வாரிசுகளைத் தேடிக் கண்டு பிடித்தாவது, அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று நினைத்தேன். இலங்கையிலுள்ள என்னுடைய நண்பர்கள் மூலமாக அவர்களைத் தேட ஆரம்பித்தேன். நீண்ட காலத் தேடுதல்களுக்குப் பின், அந்தப் பாட்டியின் மகன்கள் வசிக்கும் இடத்தை கடந்த ஆண்டில் வாங்கி விட்டேன். அந்தப் பாட்டிக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். மகன்களில் ஒருவர் இறந்து விட்டார். மகள், தமிழ்நாட்டிற்கு வந்து விட்டதாகத் தகவல் கூறினார்கள்" என்று விவரித்தார்.


இலங்கை: கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பற்றி இதுவரை தெரிய வந்த தகவல்கள்

13 செப்டெம்பர் 2024

இலங்கை: கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பற்றி இதுவரை தெரிய வந்த தகவல்கள்


பழனியாண்டி, கோவை தொழிலதிபர், இலங்கை

படக்குறிப்பு,மலையகத்தில் தனது பெற்றோரின் வீடு இருந்த இடத்தில் கிருஷ்ணன். இந்த இடத்தில் இருந்து வீட்டை மாற்றும் போதுதான் ரஞ்சித் பணத்தை எடுத்தார்.

ரூ.37.50-ஐ பன்மடங்காக திருப்பி அளித்த ரஞ்சித்

சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதிக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். முருகையா, பழனியாண்டி, கிருஷ்ணன் என மூன்று ஆண் குழந்தைகளும் வீரம்மாள், அழகம்மாள், செல்லம்மாள் என மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர்.


இதில் முருகையா இறந்துவிட்டார். அவருக்கு மனைவியும் நான்கு மகன்களும் இருந்தனர். பழனியாண்டி கொழும்பு நகரத்திற்கு அருகிலும் கிருஷ்ணன் நுவரேலியாவுக்கு அருகில் உள்ள தலவாக்கலையிலும் வசித்துவந்தனர்.


இவர்களைத் தொடர்புகொண்ட ரஞ்சித், சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதியின் குழந்தைகளுக்கான தனது கடனைத் தீர்க்க விரும்புவதாகக் கூறினார்.


அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதியன்று கொழும்பு நகருக்கு சென்ற ரஞ்சித், சுப்பிரமணியன் குடும்பத்தாரை உணவகம் ஒன்றில் சந்தித்தார்.


அவர்களிடம் 1970களில் நடந்த சம்பவத்தை விவரித்த ரஞ்சித், அவர்களுக்கென எடுத்துவந்த புதிய ஆடைகளைப் பரிசளித்தார். அதற்குப் பிறகு, தான் திருடிய ரூ.37.50-க்குப் பதிலாக முருகையா, பழனியாண்டி, கிருஷ்ணன் ஆகியோரின் குடும்பத்திற்கு இலங்கை மதிப்பில் தலா 70,000 ரூபாயை பரிசளித்தார்.


இந்த நிகழ்வு, சுப்பிரமணியன் - எழுவாய் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்தத் தம்பதியின் இரு மகன்களான பழனியாண்டியும் கிருஷ்ணனும் இன்னமும் ஆச்சரியம் விலகாமல் இருக்கின்றனர்.


'சினிமா பார்த்ததே இல்லை' - விடுதலை புலிகள் கொள்கையை இன்றும் பின்பற்றும் இலங்கை நபர்

23 ஜூன் 2024

இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி என்ன சொன்னார்? மணிசங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்

22 மே 2024

பழனியாண்டி, கோவை தொழிலதிபர், இலங்கை

படக்குறிப்பு,ரஞ்சித் பணத்துடன் சேர்த்து பரிசளித்த பேனாவை மகிழ்ச்சியுடன் காட்டும் பழனியாண்டி.

ஆச்சர்யத்தில் ஆழ்ந்த எழுவாய் - சுப்ரமணியம் தம்பதியின் மகன்கள்

தற்போது கொழும்பு நகரில் வசிக்கும் பழனியாண்டி, "ரஞ்சித் செய்த காரியம் எங்களை நெகிழ வைத்தது. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதர் இருக்கிறாரா என்று தோன்றியது. அறியாப் பருவத்தில் செய்த செயலுக்காக திரும்பவும் வந்து பணத்தைக் கொடுத்தது, சந்தோஷத்தை அளித்தது. இந்த நேரத்தில் இந்தக் காசு வந்தது எல்லோருக்குமே உதவியாகத்தான் இருந்தது. குறிப்பாக என்னுடைய தம்பிக்கும் அண்ணனின் மனைவிக்கும் மிகுந்த உதவியாக இருந்தது. அவர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள்" என்கிறார்.


பழனியாண்டிக்கு இப்படி பணம் திருடுபோனது தெரியாது. "நான் 12 - 13 வயதிலேயே கொழும்பு நகருக்கு வந்துவிட்டேன். அம்மாவும் அப்பாவும் ஊரில் இருந்தார்கள். அந்த நேரத்தில் என்ன நடந்ததென்பது எனக்குத் தெரியாது. அம்மாவுக்கும் இவர்தான் எடுத்தார் என உறுதியாகத் தெரியாது. இப்போது இவர் சொல்லாவிட்டால் யாருக்குமே இதைப் பற்றித் தெரிந்திருக்காது" என்கிறார் பழனியாண்டி.


எழுவாயின் இரண்டாவது மகன் பழனியாண்டியின் மகள் பவானி, கொழும்புக்கு அருகில் உள்ள வத்தலையில் வசிக்கிறார். "எங்கள் பாட்டியை நான் பார்த்ததுகூட கிடையாது. இத்தனை வருடங்கள் கழித்து, எனது பாட்டி வழியில் இப்படியொரு தொகை எங்களுக்கு வரும் என்று துளியும்கூட நாங்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை. இந்தக் காலத்தில் இவ்வளவு நன்றியுடன் இருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது, நேர்மையும், மனிதநேயமும் இன்னும் மரணிக்கவில்லை என்று தெரிகிறது. இலங்கையில் இப்போது விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. பொருளாதாரச் சூழல் மிக மோசமாக இருக்கிறது. இந்த நேரத்தில் கிடைத்த இந்தத் தொகை எங்களுக்கு பெரிய உதவிதான்" என பிபிசியிடம் தெரிவித்தார் பவானி.


பழனியாண்டி, கோவை தொழிலதிபர், இலங்கை

படக்குறிப்பு,கோவை தொழிலதிபர் ரஞ்சித்திடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்ட பவானி மற்றும் குடும்பத்தினர்.

தற்போது இவர்களது குடும்பத்தினர் யாருமே, பழைய ஊரில் வசிக்கவில்லை. கிருஷ்ணனின் குடும்பத்தினர் நுவரேலியா தலவாக்கலை அருகில் உள்ள செயின்ட் கோம்ஸ் என்ற இடத்தில் வசிக்கின்றனர். அலகொல பகுதியில் சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதி வசித்த வீடு இருந்த பகுதி தற்போது தரைமட்டமாகக் காட்சியளிக்கிறது.


அந்த இடத்தில் நின்றபடி பிபிசியிடம் பேசிய கிருஷ்ணன், "எனக்குக் கொடுத்த பணத்தை என் பிள்ளைகள் நான்கு பேருக்கும் பத்தாயிரம், பத்தாயிரம் என கொடுத்துவிட்டேன். சரியான சந்தோஷம். அவ்வளவு கஷ்டத்தில் இருந்தோம். இப்போது அம்மா இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்கள்" என நெகிழ்ந்துபோய் பேசுகிறார்.


எழுவாயின் ஒரு மகளான செல்லம்மாளின் குடும்பம், திருச்சிக்கு அருகில் இருப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில்அந்த குடும்பத்தினருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க முயற்சி செய்து வருவதாக கூறுகிறார் ரஞ்சித்.


"இந்தப் பணத்தைத் திரும்பக் கொடுத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது" என்கிறார் ரஞ்சித்.

 


‘நவம்பர் 14 ஆம் திகதி அத்தகைய பலம்பொருந்திய அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுசேர்வோம். ‘


இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க. தங்காலை பொதுக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய அவர் கூறுகையில்,




இந்த படுமோசமான உக்கிப்போன, அருவருப்பான அரசியலுக்குப் பதிலாக பரிசுத்தமான ஒரு ஆட்சியை அமைத்துக்கொள்வதற்காக ஜனாதிபதித் தேர்தலை வென்றெடுத்து சிறியவொரு காலப்பகுதியின் பின் நாங்கள் பாராளுமன்றத்தைக் கலைத்து எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை பரிசுத்தப்படுத்துகின்ற செயற்பொறுப்பினை இந்த நாட்டு மக்களின் கைகளில் ஒப்படைத்திருக்கிறோம். 


ஆனால், மக்கள் நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கு முன்னர் ஒருசிலர் தன்னிச்சையாகவே சுத்தப்படுத்திக் கொள்கிறார்கள். அப்படித்தானே? குறிப்பாக அம்பாந்தோட்டையில் 88 வருடங்களுக்குப் பின்னர் வாக்குச் சீட்டிலே பெயர் கிடையாது. உண்மையிலேயே சரியாக கணக்கு வழக்குகளை தயாரித்துக்கொள்ள முடியாவிட்டாலும் நாங்கள் குத்துமதிப்பாகப் பார்த்தால் 60 இற்கு மேற்பட்டவர்கள் தன்னிச்சையாகவே தம்மை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எஞ்சிய பணியை நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நாட்டு மக்கள் சரியாகவே ஈடேற்றுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால், நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றியை உறுதியான வெற்றியாக மாற்றிக்கொள்ள வேண்டுமானால் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பலம்பொருந்திய பாராளுமன்றமொன்றை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொள்ள வேண்டும். அம்பாந்தோட்டை நிலைமை எப்படி? தெட்டத்தெளிவாகிறது. சதாகாலமும் எங்களுக்கு பல வெற்றிகளை இந்த அம்பாந்தோட்டை மாவட்டமே கொண்டுவந்தது. மிகவும் சிரம்மான சந்தர்ப்பங்களில் எமது அரசியல் கொடியை உயர்த்திப்பிடித்துக்கொண்டு முன்னோக்கி நகர பாரிய பங்களிப்பைச் செய்தவர்கள் அம்பாந்தோட்டை மக்களே! எனவே, இந்த அம்பாந்தோட்டை மாவட்டத்திலே சந்தேகமேயின்றி நாங்கள் உறுதியான பலத்தை நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பெறுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. 


நாங்கள் ஒவ்வொன்றாக, படிப்படியாக எனினும் உறுதியாக பலம்பொருந்திய வகையில் நிச்சயமாக இந்த நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்வோம். அதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருபுறத்திலே எங்களை பதற்றமடையச் செய்யவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. நாங்கள் பதற்றப்பட மாட்டோம். எமது நாட்டுக்கு முதன்முதலில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் தேவை. அந்தப் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குகையில் பிரதானமான அர்ப்பணிப்பு எங்களிடமே இருக்கிறது. அரசியல்வாதிகள் என்ற வகையில் அரசாங்கத்தின் தலைவர்கள் என்ற வகையில் சாதகமான ஓர் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான எமது அர்ப்பணிப்பை நாங்கள் வெளிக்காட்ட வேண்டும். 


வெற்றி என்றால் என்ன என்பதை ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நாங்கள் மக்களுக்கு நிரூபித்திருக்கிறோம். வெற்றியை எப்படிக் கொண்டாடுவது என்பதை நிரூபித்திருக்கிறோம். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் உங்களுக்கு வழங்கிய தலைமைத்துவத்திற்கு நேரொத்த வகையில் நீங்கள் அந்த வெற்றியை மிகவும் அமைதியாக ஒரு பட்டாசு கூட கொளுத்தாமல் பிறருக்கு எந்தவிதமான இடையூறும் விளைவிக்காமல் வெற்றியை கொண்டாடுகின்ற வித்த்தை இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். 


அதுமாத்திரமல்ல, தற்போது தேர்தல் இயக்கமொன்று சூடுபிடித்துள்ளது. முன்பெல்லாம் பொதுத்தேர்தல் என்றால் எப்படி? ஒருவருக்கொருவர் எதிராக தாக்குதலை நடாத்துகின்ற, அலுவலகங்களில் தீ மூட்டுகின்ற, மோதல்கள் உருவாகின்ற சில வேளைகளில் அச்சத்துடன் தேர்தலில் ஈடுபடுகின்ற நிலையே காணப்பட்டது. குறிப்பாக இந்த மாவட்டத்தில் அப்படித்தான். ஆனால், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தற்போது தேர்தல் இயக்கமொன்றை, தேர்தல் காலமொன்றை ஜனநாயக ரீதியாக அமைதிவழியில் எவ்வாறு முன்னெடுத்துச்செல்வது என்பது பற்றி இந்நாட்டு மக்களுக்கு புதிய அனுபவமொன்றை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இன்று பொதுவான பணிகள் எல்லாமே வழமைபோல் நடைபெற்று வருகின்றன. தேர்தலொன்று நடைபெறப்போகிறதா என்பதை கண்டுபிடிக்க முடியாதளவிற்கு அமைதி நிலையை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். எங்களுக்குத் தேவை அப்படிப்பட்ட ஒரு நாடுதான். இது அரசியல் கலாச்சாரத்தைப் பொறுத்தமட்டில் பாரிய சீரழிவுக்கு உள்ளாகிய ஒரு நாடாகும். நாங்கள் மீண்டும் ஜனநாயகத்தையும் அமைதியையும் பிறருடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையைக் கொடுத்து தாம் விரும்பிய அரசியல் இயக்கத்திற்காக உழைப்பதற்கான உரிமையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதல் தடவையாக இந்த நாட்டில் நிலைநாட்டியிருக்கிறது. மாற்றங்கள் மாத்திரமல்ல, இப்போது நிலவுகின்ற எங்களுடைய அரசாங்கத்தை எடுத்துக்கொண்டால் அது உலக சாதனை படைத்த ஒரு அரசாங்கமாகும். ஏனென்றால், ஒரு ஜனாதிபதி இரண்டு அமைச்சர்களும் மாத்திரமே. சரிதானே. குட்டி அரசாங்கமொன்று. ஆனால், நாட்டின் அன்றாடப் பணிகள் எதுவுமே சீர்குலைய இடமளிக்காமல் எதிர்காலத் திட்டங்களை அமுலாக்குவதற்கான அத்திவாரத்தை அமைத்துக்கொண்டு நாங்கள் உறுதியாக பயணித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் பலம்பொருந்திய துணிச்சல்மிக்க, நம்பிக்கையுள்ள மக்களால் ஆற்றமுடியாத ஒரு பணி இல்லையென்பதை நிரூபித்திருக்கிறோம். அதைப்போலவே அரச செலவினங்கள், வீண்விரயங்கள் என்பவற்றை நாங்கள் எங்களுடைய நடவடிக்கைகள் மூலமாக உறுதி செய்திருக்கிறோம். அவை சாதாரண அரசியல் அல்ல. நாட்டு மக்கள் ஒருபோதுமே அனுபவித்திராத அரசியல் கலாச்சாரமொன்றை நாங்கள் படிப்படியாக கட்டிவளர்த்து வருகிறோம். வெற்றியை எவ்வாறு கொண்டாடுவது? தேர்தல் இயக்கமொன்றை எவ்வாறு முன்னெடுப்பது? அரசாங்கமொன்றை கொண்டு நடாத்துவது எப்படி? ஜனாதிபதியும் அமைச்சர்களும் அரசபொறியமைப்பும் விரயங்களை எவ்வாறு தடுத்து நிறுத்துவது ஆகிய எல்லா விடயங்களையும் நாங்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். எனவே, நாங்கள் கடந்த தேர்தல் காலத்தில் கூறியதைப் போல் இலங்கையை மீண்டும் மறுமலர்ச்சி யுகமொன்றை நோக்கி நாங்கள் நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். 


அடுத்ததாக எம்மெதிரில் இருக்கின்ற மிகவும் பாரதூரமான சவால் நாங்கள் அரசாங்க பொறுப்பினை ஏற்றுக்கொண்டவுடனேயே பொருளாதார உறுதிப்பாட்டினை ஏற்படுத்திக்கொள்வது. ஏனென்றால், உங்களுக்கு ஞாபகம் இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் மேடையில் பேசப்பட்ட விடயங்கள். தேசிய மக்கள் சக்தி வெற்றிப்பெற்றால் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறும், டொலர் 400 ரூபாவிற்குச் செல்லும், கேஸ் தட்டுப்பாடு தோன்றும், எண்ணெய்த் தட்டுப்பாடு தோன்றும், சர்வதேச உறவுகள் இல்லாமல்போய் பொருளாதாரம் பாரிய சீர்குலைவினை சந்திக்கும் என எமது எதிர்த்தரப்பினர் குறைகூறினார்கள். ஆனால், நாங்கள் என்ன செய்தோம், ஆரம்பக் கட்டத்திலேயே நாம் எதிர்நோக்கிய பலம்பொருந்திய சவால் பொருளாதார உறுதிநிலையை ஏற்படுத்துவதாகும். நாங்கள் மிகக் குறுகிய காலத்தில் பங்குச்சந்தையுடன் தொடர்புபட்டுள்ள முதலீட்டாளர்களிடம் எங்கள் மீதான நம்பிக்கையை உறுதிசெய்தோம். எமது நாட்டின் கைத்தொழில்கள், தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கைத்தொழில் முனைவோருக்கு நாங்கள் பொருளாதாரம் பற்றிய நம்பகத்தன்மையை உறுதிசெய்தோம். நாங்கள் சர்வதேச அமைப்புக்களுடன் மிகவும் சிரப்பாக நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு நாடு பற்றிய நம்பிக்கை வைக்கக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்கினோம். இப்போது என்ன நேர்ந்துள்ளது. இப்பொழுது நாங்கள் பொருளாதாரம் பற்றி, தொழில்முனைவோர் பற்றி அதுபற்றி முதலீட்டாளர்களுக்கு, மக்களுக்கு, சர்வதேச சமூகத்தவருக்கு எமது பொருளாதாரம் பற்றி ஏதாவது சந்தேகம் நிலவியிருக்குமாயின் நாங்கள் அந்த சந்தேசகத்தை முற்றாகவே ஒளித்துக்கட்டி மீண்டும் ஒரு நிலையான பொருளாதாரத்திற்கு அவசியமான அத்திவாரத்தை அமைத்திருக்கிறோம். அப்படித்தான், நாட்டை ஆட்சி செய்ய வேண்டும். 


எனவே, நாங்கள் ஏற்கனவே, ரூபா 15000 ஆக நிலவிய ஒரு ஹெக்டேயருக்கான உரமானியத்தை 25,000 ரூபா வரை அதிரிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்றோம். ஓய்வூதியம் பெறுநர்களுக்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவினை இந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து 3000 ரூபாவினால் அதிகரித்திருக்கிறோம். எனவே, அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து 3000 ரூபா மேலதிகமாகக் கிடைக்கிறது. நாங்கள் டிசம்பர் மாதத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிப்போம். பெப்ரவரி, மார்ச் மாதமளவில் வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிக்க திட்டமிட்டிருக்கிறோம். அந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தியிருக்கிறோம். அந்த வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவு பற்றி நாங்கள் கவனம் செலுத்தியிருக்கிறோம். நான் உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறேன், அந்த வரவு செலவுத் திட்டத்தில் வறிய மக்களுக்கு, வலது குறைந்தோருக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவினை நிச்சயமாக அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிப்போம். அதைப்போலவே, புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட அவசியமாகின்ற பொருளாதார அத்திவாரத்தை நாங்கள் அமைப்போம். எமது எதிர்பார்ப்பு உலகத்திலும் நாட்டுக்குள்ளேயும் சுற்றுலாத் தொழில்துறைக்கு பாதிப்பு ஏற்படாத ஏதாவது சம்பவங்கள் இடம்பெறாவிட்டால் இலங்கைக்கு மிக அதிகமான எண்ணிக்கை கொண்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்ற ஆண்டாக 2025 ஆம் ஆண்டினை நாங்கள் மாற்றியமைப்போம். நாங்கள் எமது நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக உறுதி நிலைக்கு கொண்டுவரும் வரை சாதாரண பிரஜைகளை கவனித்துக்கொள்ள வேண்டியது எமது பொறுப்பு என்பதை நாங்கள் கூறியிருக்கிறோம். அந்தப் பொறுப்பினை நாங்கள் ஈடேற்றுவோம்.


அதைப்போலவே, சதாகாலமும் மானியத்தில் கொடுப்பனவுகளில் தங்கியிருக்கின்ற மக்களுக்குப் பதிலாக அவர்களுக்கு பொருளாதார ஆற்றலை அமைத்துக்கொடுக்கின்ற அத்திவாரத்தை நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம். அதனை நாங்கள் படிப்படியாக வரவு செலவுத் திட்டத்திலிருந்து நடவடிக்கைக்கு கொண்டு வருவோம். அதுமாத்திரமல்ல, எமது நாட்டின் கல்வித்துறையிலான மாற்றம் பற்றி அண்மையில் நாங்கள் பேசி வந்தோம் அந்த மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்துவோம். பாடசாலையில் இருந்து அறிவு சார்ந்த தொழில்வாண்மை சார்ந்த தொழில் பயிற்சியின் அடிப்படையில் அனுபவம் பெற்ற கல்வி பயின்றவர்களே வெளியில் வரவேண்டும்.


அதுமாத்திரமல்ல, ஒரு சிலர் இப்பொழுது கேட்கிறார்கள் திருடர்களை பிடித்துவிட்டீர்களா என்று. ஆனால், நான் ஒன்றைக் கூறுகிறேன், பிடிக்கும்போது முனக வேண்டாம். இன்று அதை நான் உறுதியாகக் கூறுகிறேன். 400 மேற்பட்ட கோப்புகள் இருக்கின்றன. அவை மூடப்பட்டு இருக்கின்றன. இன்று நாங்கள் பரிசீலித்துப் பார்த்தோம். ஒருசில கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் முடங்கிபோயுள்ளன. மேலும் சில கோப்புகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இறுகிப்போயுள்ளன. இன்னும் சில கோப்புகள் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் குவிந்து இருக்கின்றன. அனைத்துக் கோப்புக்களையும் மீண்டும் திறந்து படிப்படியாக வழக்கு தொடர அவசியமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறோம். நாங்கள் காட்சிக்காக, பகட்டுக்காக வேலை செய்பவர்கள் அல்ல. 2015 இல் முழுமையாகவே மோசடிப்பேர்வழிகளுக்கும், ஊழல்பேர்வழிகளுக்கும் எதிராக காட்சிக்கான வேலைத்திட்டமொன்று அமுலாக்கப்பட்டது. இலஞ்ச ஆணைக்குழுவுக்கு கோப்புக்களை எடுத்துச் செல்வார்கள். வெளியில் வந்து வொயிஸ் கட் ஒன்று கொடுப்பார்கள். தேசிய மக்கள் சக்தி அப்படியல்ல. மிகவும் திட்டமிட்ட வகையில் எல்லா தரவுகளையும் சேகரித்து முறைப்படி நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கத்தக்க வகையில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அவசியமான அறிவுறுத்தல்களை நாங்கள் வழங்கியிருக்கிறோம். எவருமே பதற்றமடைய வேண்டாம். இந்த நாட்டு மக்களிடம் அதுபற்றிய ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. அதோ அந்த மோசடிப்பேர்வழிகளுக்கும் ஊழல்பேர்வழிகளுக்கும் தண்டனை வழங்குகின்ற எதிர்பார்ப்பினை நிறைவேற்றுகின்ற அரசாங்கம்தான் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். நாங்கள் அதனை சாதிப்போம். அத்தோடு நின்றுவிட மாட்டோம். எமது நாட்டுக்கு பாதகமான ஒருசில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. நாங்கள் இந்த உடன்படிக்கைகளை மீளாய்வு செய்வோமென உடன்படிக்கைகளின் மறுதரப்பினருக்கு நாங்கள் அறிவித்திருக்கிறோம். ஆனால், அந்தப் பணிகளை ஈடேற்ற வேண்டுமானால் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு பலம்பொருந்திய மக்கள் ஆணை இருக்கின்றது என்பதை நாங்கள் மற்றவர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். ஏனென்றால், இந்த உடன்படிக்கைகளை மீளாய்வு செய்து நாட்டுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய வகையில் அந்தக் கருத்திட்டங்களை மாற்றியமைப்பதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். 


எனவே, அத்தகைய பேச்சுவார்த்தைகளில், உடன்படிக்கைகளில், கடப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது எந்த அளவுக்கு மக்கள் தமது மக்கள் ஆணையை பெற்றுக்கொடுக்கிறார்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. அதனை நான் உங்களுக்கு தெளிவாகக் கூற வேண்டும். நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தை சந்தித்த வேளையிலும் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள மக்கள் ஆணையின் தன்மைக்கிணங்க நாங்கள் ஒருசில விடயங்கள் பற்றிய முடிவுகளை எடுக்க நேரிடுமென தெளிவாகக் கூறியிருக்கிறோம். எனவே, அந்த மக்கள் ஆணை தான் எமக்கு திரைமறைவில் இருக்கின்ற சக்தி. எனவே, இந்த மாற்றங்கள் அனைத்தையும் செய்ய எதிர்வரும் 14 ஆம் திகதி பலம்பொருந்திய மக்கள் ஆணையொன்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுங்கள். 


ஒருசிலர் கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். கனவு காண்பதற்கான அவர்களின் உரிமைக்கு நாங்கள் தடையேற்படுத்த மாட்டோம். நீங்கள் கனவு காணுங்கள். ஆனால், இப்போது வீம்புவார்த்தை பேசுகிறார்கள். மூன்றே மாதங்கள், ஆறே மாதங்களில் வீழ்ந்துவிடுமென்று. அவர்கள் பாவம். அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். தேசிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ள இந்தப் பயணத்தை இந்த நாட்டைக் கட்டியெழுப்பி இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த வாழ்க்கையொன்றை உருவாக்கி கொடுக்காமல் நிறுத்திவிட முடியாது என்பதை ஒவ்வொருவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அப்படியெல்லாம் நிறுத்திவிட முடியாது. சீரழிந்துள்ள இந்த நாட்டை நாங்கள் நிச்சயமாக கட்டியெழுப்புவோம். உறுதியாக வறுமையால் வாடித்தவிக்கின்ற மக்களை அதிலிருந்து நாங்கள் மீட்டெடுப்போம். அதன் தொடக்கப்புள்ளியாக நாங்கள் மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்க நடவடிக்கை எடுத்தோம். எல்லாவற்றையும் செய்வோம். பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். மக்களுக்கு உதவிபுரிவோம். ஊழல் மோசடிகளை குறைப்போம். அதுமாத்திரமல்ல, வினைத்திறன்மிக்க அரச சேவையொன்றை நாங்கள் உருவாக்குவோம். எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதிக்குள் நாங்கள் எமது நாட்டுக்கு மிகவும் முக்கியமான ஒரு நிலைமாற்றத்தை நாங்கள் கொண்டுவருவோம். டிஜிட்டல் மயமாக்கலில் உலகப் புகழ்பெற்ற புத்திஜீவியொருவர் அவருடைய எல்லா வேலைகளையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு எமக்கு உதவுவதற்காக இன்னும் ஓரிரு வாரங்களில் எமது நாட்டுக்கு வரவிருக்கிறார். 


எமது ஆட்சியின் முதலாவது காலப்பகுதி நிறைவடைய முன்னர் வினைத்திறன் மிக்க அரச சேவையை நாங்கள் வழங்குவோம். வரி செலுத்துவது எப்படி, வரி சேகரிப்பது எப்படி, பாடசாலை பிள்ளைக்கு உதவி வழங்குவது எப்படி, இவையனைத்தையும் தொழில்நுட்பத்தின் ஊடாக ஈடேற்றுகின்ற பின்னணியை எங்களுடைய முதலாவது ஆட்சிக்காலப் பகுதிக்குள் நாங்கள் ஈடேற்றுவோம். புது யுகத்திற்கு புதிய அடுக்கிற்கு எமது நாட்டைக் கொண்டுவருவோம். கோப்புகளை குவித்துக்கொண்டிருக்கின்ற அரச சேவைக்குப் பதிலாக மக்களை அலைக்கழிக்கின்ற அரச சேவைக்குப் பதிலாக வீட்டிலிருந்தே அரசாங்கத்திடமிருந்து தமது அலுவல்களை ஈடேற்றிக்கொள்ளக் கூடிய அரச சேவையொன்றை நாங்கள் உருவாக்குவோம். வரிசையில் காத்திராமல் உர மானியத்தை பெற்றுக்கொள்ள, அஸ்வெசும பெற்றுக்கொள்ள, தமது பிள்ளைக்குத் தேவையான சாதனங்களைப் பெற்றுக்கொள்ள பலம்பொருந்திய டிஜிட்டல் பொருளாதாரமாகவும் வினைத்திறன் மிக்க அரச சேவையாகவும் இலங்கையை மாற்றியமைப்போம். இந்த ஐந்து வருடங்களும் புதிய நூற்றாண்டுக்கு பொருந்தக் கூடிய இலங்கையை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும். அதற்கான புதியதொரு அமைச்சினை நாங்கள் உருவாக்குவோம். மில்லியன் கணக்கில் வெளிநாடுகளில் வருமானம் பெறுபவர்கள் அவற்றை எல்லாமே கைவிட்டு தன்னிச்சையாக எமது நாட்டைக் கட்டியெழுப்ப முன்வந்திருக்கிறார்கள். 


நாங்கள் எமது நாட்டை பரிசுத்தமான இலங்கையாக மாற்றவேண்டும். சுற்றாடலினை நேசிக்கின்ற, சுத்தத்தைப் பேணுகின்ற, குப்பைக்கூளங்களை ஆங்காங்கே வீசியெறியாத, தமது ஊரிலுள்ள நீரோடைகளை பாதுகாக்கின்ற, தமது பொருளாதாரத்தை பலப்படுத்துகின்ற கரையோரப் பட்டியை பாதுகாக்கின்ற, கிளீன் சிறீலங்கா எனும் வேலைத்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்து இலங்கையை உலகின் தூய்மைக்கு முன்னுதாரணமாக திகழுகின்ற நாடாக மாற்றியமைப்போம். நாங்கள் காலடி எடுத்து வைத்திருப்பது இந்த நாட்டின் நிலைமாற்ற யுகத்தை நோக்கியாகும். ஒரு சிலர் கூறுகிறார்கள், நாங்கள் அவர்களை பழிவாங்குகிறோம் என்று. நாங்கள் எவரையுமே பழிவாங்கப் போவதில்லை. ஆனால், மக்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் சூறையாடிய, விரயமாக்கிய அரசியல்வாதிகளை விட்டுவைக்க மாட்டோம். முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கு 16 வாகனங்கள் வீதம் வழங்கப்பட்டிருந்தன. ஒரு அம்பியூலன்ஸ் வண்டியையும் உள்ளிட்டதாக இருந்தது. உடனடியாக அவற்றை கையளிக்குமாறு நாங்கள் கூறினோம். தற்போதைய சுற்றறிக்கையின் படி 3 வாகனங்களை தான் கொடுக்க முடியும். அதனைக் கொடுப்போம். நாங்கள் ஒரு குழுவை நியமித்திருக்கிறோம். சுற்றறிக்கையொன்றை நியமித்து முன்னாள் ஜனாதிபதிமார்களை பராமரிப்பதை நிறுத்தப்போகிறோம். யாருமே முனகிக்கொண்டு இருக்கவேண்டாம். பதற்றமடைய வேண்டாம். பாதுகாப்பு பற்றிய அச்சுறுத்தல் இருக்குமாயின் பாதுகாப்பினை வழங்குவோம். ஆனால், பாதுகாப்பின் திரைமறைவில் இருந்துகொண்டு மக்களின் சொத்துக்களை விரயமாக்க எவருக்குமே இடமளிக்க மாட்டோம். மிக அண்மையில் இருந்த ஒரு ஜனாதிபதி எமக்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார். அவருக்கு 16 கோக்கிமார்கள் தேவையென்று. பாதுகாப்புக்கு 163 பேர். 20 வாகனங்கள். 30 குடைகள். கொடுக்க வேண்டுமா? கொடுக்க மாட்டோம். மக்களின் சொத்துக்களை சூறையாடியவர்கள் இப்போது அவற்றை தமது மரபுரிமையாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது அப்படியல்ல. வீட்டுக்கே அம்பியூலன்ஸ். கொடுக்க மாட்டோம். பாதுகாப்பு அச்சுறுத்தல் என பொய்யான அறிவித்தல்களை வெளியிட வேண்டாம். இதனை நிறுத்துவதற்கான மக்கள் ஆணை எமக்கு கிடைத்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அதனை சாதிக்கும். கைத்துப்பாக்கிகளையும் ஆயுதங்களையும் வைத்துக்கொள்வதற்காக பல உரிமங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் அவற்றை மீள கையளிக்குமாறு அறிவித்திருக்கிறோம். பாதுகாப்பு பற்றி மீளாய்வு செய்து அச்சுறுத்தல் இருந்தால் கொடுப்போம். எமது நாட்டில் பல இடங்களில் படுகொலைகள் இடம்பெறுகின்றன. ஆயுதங்கள் தங்குதடையின்றி சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு 6 ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. யோசித்தவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அவன்ட்கார்ட்டுக்கு 8 ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தையும் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். 


எமது நாட்டில் பாவனையில் உள்ள சட்டவிரோத சுடுகலங்களை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். குற்றச்செயல்கள் இடம்பெறுகின்ற யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். எமது நாட்டிலே போதைப்பொருள் மலிந்துப்போயிருக்கிறது. போதைப்பொருள் அற்ற ஒரு நாட்டை நாங்கள் நிச்சயமாக உருவாக்குவோம். உண்மையைக் கூறப்போனால் எம்மைப் பற்றி எவராலும் அவதூறாக பேசமுடியாது. எம்மீது பொய்யொன்றை கூறுவதற்கு கூட எவராலும் முடியாது. ஜனாதிபதி தேர்தலில் சிலர் இருந்தார்கள் இப்போது அவர்களும் இல்லை. நாங்கள் உங்களிடம் ஒரு விடயத்தை வேண்டி நிற்கிறோம். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு எமக்குத் தேவை. இந்த நாடு என்னுடையது மாத்திரமல்ல. இது உங்களுடைய நாடு. இது எங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பிரச்சினை அல்ல. அனைவரதும் எதிர்காலம் பற்றிய பிரச்சினையாகும். இதனை தீர்க்க வேண்டுமானால் அதற்காக நாங்கள் உழைக்க வேண்டும். நாங்கள் அயறாது உழைப்போம். எங்களை அர்ப்பணிப்போம். எதிர்கால சந்ததியினருக்கு வளமான இலங்கையொன்றை உருவாக்கிக் கொடுப்போம். இதுவே தருணம். சோகக் கவிதைகளுக்கு செவிசாய்க்க வேண்டாம். 88 வருடங்களுக்குப் பின்னர் வேட்பாளர் பெயர் பட்டியலில் பெயர் இல்லையே. கவலைத்தானே? எனவே, இந்தக் கதைகள் எல்லாம் மனவேதனையின் வெளிப்பாடுகள் மாத்திரமே.

 

இறுதியாகக் கோருவது இதற்காக எங்களுக்கு பலம்பொருந்திய பாராளுமன்றம் அவசியம் என்பதாகும். இப்பொழுது 15 அமைச்சுக்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் டிஜிட்டல் அமைச்சு ஒன்றையும் உருவாக்குவோம். நவம்பர் 14 ஆம் திகதிக்குப் பின்னர் அதிகபட்சமாக 25 அமைச்சுக்களை அமைப்போம். அதற்குத் தேவையான பிரதியமைச்சர்களை நியமிப்போம். இந்த நாட்டை மீளத் திசைத்திருப்ப முடியாத வெற்றிப்பாதையில் நாங்கள் நாங்கள் வழிநடத்துவோம். அதற்கு அவசியமானது என்ன? எமது நோக்கங்களை வெற்றியை நோக்கி திசைப்படுத்துவதற்காக பலம்பொருந்திய பாராளுமன்றம் எமக்குத் தேவை. இந்த நிகழ்ச்சி நிரலை, இந்த வேலைத்திட்டத்தை அமுலாக்குவதற்கு பலம்பொருந்திய அரசாங்கமொன்று தேவை. பாராளுமன்றத்தில் எண்ணிக்கையால் பலம்பொருந்தியவர்களாக இருக்க வேண்டும். பலம்பொருந்திய பாராளுமன்றக் குழு இருக்க வேண்டும். பண்புகள் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். நேர்மையில் பலம்பொருந்தியவர்களாக இருக்க வேண்டும். ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற குழு திடசங்கற்பம் கொண்டவர்களாக அமைய வேண்டும். எனவே, நவம்பர் 14 ஆம் திகதி அத்தகைய பலம்பொருந்திய அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுசேர்வோம். அணித்திரள்வோம் என அழைப்புவிடுத்து விடைபெறுகிறேன். உங்கள் அனைவருக்கும் வெற்றி.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.