ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில், போலீசார் மாணவர்களின் மீது தாக்குதல்


#India.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டதுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நாட்டின் தலைநகர் டெல்லியிலும் எதிரொலித்தது.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு அருகாமை பகுதிகளான சராய் ஜுலேனா பகுதி மற்றும் மதுரா சாலையில் பல பேருந்துகள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டன.

பேருந்துகளுக்கு தீவைப்புபடத்தின் காப்புரிமைANI

இது வரை நடந்தது என்ன?

  • டெல்லியின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அங்குள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் பங்கெடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்தியதாக செய்திகள் கூறுகி7ன்றன.
  • ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் வலுக்கட்டாயமாக போலீசார் நுழைந்ததாகவும், மாணவர்களின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பல்கலைக்கழகத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

ஜாமியா பல்கலை. மாணவர்கள்

  • இந்த போராட்டங்களின் எதிரொலியாக அருகாமை பகுதிகளான ஓக்லா, ஆர்.கே. புரம், முனிர்கா உள்ளிட்ட பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Presentational grey line

  • மாணவர்கள் போராட்டம் குறித்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர் கூறுகையில், ''போராட்டக்காரர்கள் யார்? நூலகத்தில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் யார் என போலீசாரால் இனம்காண முடியவில்லை. ஏராளமான மாணவர்கள் மற்றும் பல்கலைகழக பணியாளர்கள் போலீசாரின் நடவடிக்கையில் காயமடைந்துள்ளனர். இந்த நடவடிக்கைள் தொடர்பாக போலீசார் அனுமதிகூட வாங்கவில்லை என கொந்தளிப்பு நிலவுகிறது'' என்று கூறியுள்ளார்.

Presentational grey line

  • தீவைப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை ஜாமியா பல்கலை. மாணவர்கள் கண்டித்துள்ளனர்.
  • போலீஸார் மாணவர்களை அடிப்பது போன்றும், மாணவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் போன்றும் சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
  • போலீசாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே மாணவர்கள் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்படத்தின் காப்புரிமைANI
Image captionடெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

  • போராட்டம் தொடர்பாக காவலில் வைக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
  • காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஹோலி மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர், "ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 26 மாணவர்கள் காயங்களுக்காக இங்கு அனுமதிக்கப்பட்டனர்; அதில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையை சேர்ந்த இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்," என தெரிவித்தார்

நடந்தது என்ன?

  • இரவில் இந்த சம்பவம் குறித்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.
  • இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், "டெல்லியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுமாறு துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளேன். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர எங்களால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
  • இதேபோல், டேராடூன், அசாம், மேற்குவங்காளம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.
  • இதனிடையே ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கையை கண்டிப்பதாக தெரிவித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

மாணவர்கள் போராட்டம்படத்தின் காப்புரிமைSAMIRATMAJ MISHRA / BBC

  • குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோஷங்கள் எழுப்பிவந்த அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
  • இதனை தொடர்ந்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பதிவாளர் அப்துல் ஹமித் விடுத்துள்ள செய்தியில், 'தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு குளிர்கால விடுமுறையை உடனடியாக அறிவிக்கிறோம். ஜனவரி 5-ஆம் தேதி மீண்டும் பல்கலைக்கழகம் திறக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
  • உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் யோகி விடுத்த செய்தியில், குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக எந்த ஒரு வதந்தியையும் மக்கள் நம்ப வேண்டாம் என்றும், மக்கள் அமைதி காக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிற செய்திகள்: