இரணைமடு நன்னீர் மீன்பிடித் தொழிலாளர் கோரிக்கைக்கு தீர்வு




இரணைமடு நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.  
மக்களது தேவைகள் அவர்களது பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வு காண்பது தான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. அதை நான் சரியாகவே முடிந்தளவு செய்து வந்திருந்திருக்கிறேன் என கடல்தொழில் மற்றும் நிரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  
இரணைமடு நன்னீர் மீன்பிடி இறங்குதுறை பகுதிக்கு நேரில் சென்று பார்வைவிட்ட அமைச்சர் நன்னீர் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிதிகளை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –  
மீன்குஞ்சுகள் குளத்தில் விடும் காலம் குறித்த பிரச்சினைக்கு தைமாதம் அல்லது மாசி மாத முற்பகுதியில் தீர்வு காணப்படும்.  
அதுபோல குளம் வான் பாயும்போது மீன் குஞ்சுகள் வெளியேறுவதை தடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.நான் பொய்த்தனமான அரசியல் செய்வது கிடையாது.மக்களை அலையவிடுவதும் எமது நோக்கமல்ல.  
நீங்கள் ஒவ்வொருவரும் நிரந்தரமான பொருளாதாரத்துடன் வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்ள வழிவகைகள் செய்து தரப்படும்.அந்தவகையில் உங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து மற்றவர்களிடம் கையேந்தாத வகையில் கௌரவமான முறையில் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.  
அதை நாம் உருவாக்கித்தர உங்களது ஆதரவுப்பலம் எமக்கு வேண்டும் என்றார்.  
இதனிடையே இப்பகுதியில் சுமார் 138 வள்ளங்கள்  உள்ளதாகவும் இவற்றை பாதுகாப்பாக கட்டுவதற்கு கூட வசதிகள் அற்ற நிலைகள் காணப்படுவதாகவும் கடற்றொழிலாளர்கள் இளைப்பாறுவதற்கு பொதுவான கட்டடம் இன்மை, குளத்தின் நீர்மட்டம் உயரும் காலங்களிலும் வறட்சியான காலப்பகுதியிலும் மீன் பிடிபாடு குறைவாக இருப்பதால் தொழிலாளர்கள் மட்டுமல்லாது அவர்களை நம்பி வாழும் குடும்பங்களினதும் பொருளாதார நிலை பாதிக்கப்படுகின்றது. இதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.