சிரேஷ்ட ஊடகவியலாளர் நெடுஞ்செழியன் காலமானார்


வீரகேசரி நிறுவனத்தின் வெளியீடான சூரியகாந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான நல்லதம்பி நெடுஞ்செழியன் (65) செவ்வாய்க்கிழமை காலமானார். 

தலவாக்கலையை பிறப்பிடமாகக் கொண்ட அவர் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார். தனது ஊடக பயணத்தை தினபதி மற்றும் சிந்தாமணியின் ஊடாக ஆரம்பித்த அவர் பின்னர் சக்தி ஊடக நிறுவனத்தின் செய்தி ஆசிரியராக ஒரு தசாப்த காலத்துக்கு மேல் பணியாற்றினார். பின்பு வீரகேசரி நிறுவனத்தின் வாரவெளியீட்டுப் பிரிவின் மலையக பகுதிக்கு பொறுப்பாக இருந்தார். அதன் பின்னர் சூரியகாந்தி பத்திரிகைக்கு பொறுப்பாக அட்டன் கிளை காரியாலயத்தில் கடமையாற்றி வந்தார். சில காலங்கள் சுகவீனமுற்று இருந்த அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே காலமானார். இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.