இந்தி நடிகைகளுக்கும் போதைப் பொருளுடன் தொடர்பு


 



இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் அடைந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய போதைப் பொருள் தடுப்பு கட்டுப்பாட்டு வாரியம், விசாரணைக்கு ஆஜராக இந்தி நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங், ஷ்ரதா கபூர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில்,  ரகுல் பிரீத் சிங் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார். 


நடிகை தீபிகா படுகோன் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் நேற்று கோவாவில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். இதேபோல சாரா அலிகானும் கோவாவில் இருந்து தனது தாய் உடன் மும்பை திரும்பியுள்ளார். இவர்கள் இருவரும் நாளை விசாரணைக்காக ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  நடிகை ​ரியா சக்கரவர்த்தி மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் மேலாளர் ஜெயா அளித்த தகவலின் பேரில் 4 நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 


சோதனையின் போது 59 கிராம் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கு தொடர்பாக ரியா சக்கரவர்த்தி சகோதரர், ரியா சக்கரவர்த்தி உள்பட 15 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில் முன்னணி நடிகைகளிடம் நடைபெற உள்ள விசாரணை பாலிவுட் உலகையே அதிர வைத்துள்ளது.