பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை


 




பூவெலிகடயில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அவற்றின் தரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.



 

இதனடிப்படையில், இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் கொங்கிறீட் உள்ளிட்டவற்றின் மாதிரிகள் பரிசோதனைகளுக்காக கொழும்பிலுள்ள பிரதான காரியாலயத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.


பரிசோதனை தொடர்பான அறிக்கை, எதிர்வரும் சில தினங்களில் மத்திய மாகாண ஆளுநருக்கும் மாவட்ட செயலாளருக்கும் வழங்கப்படவுள்ளது.



 

குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட போது, உரிய நிறுவனங்களிடம் பெற்றுக்கொண்ட அனுமதியை மீறியே கட்டடத்தின் உடைந்த பகுதி நிர்மாணிக்கப்பட்டமையினால் அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளினூடாக தெரியவந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.


இதனிடையே, குறித்த கட்டடத்தை நிர்மாணித்த மாத்தளையிலுள்ள ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதற்காக பொலிஸ் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.


வீடு தாழிறங்கியமை தொடர்பிலான தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் அறிக்கை வௌிடப்பட்ட பின்னர், அனர்த்தம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுமென பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.