நோபல் பரிசு 2020: "ஹெபடைட்டிஸ் சி" வைரஸை கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு


 


2020ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டெர், சார்ல்ஸ் எம். ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானி மிஷெல் ஹோட்டன் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

"ஹெபடைட்டிஸ் சி" வைரஸை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக, பரிசுக்குழு தலைவர் தாமஸ் பெர்ல்மென் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திங்கட்கிழமை தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

சர்வதேச அளவில் பெரும் சுகாதார பிரச்சனையாக இருக்கக்கூடிய ரத்தத்தில் பரவும் ஹெபடைட்டிஸ் என்ற நோய்க்கு எதிராக இவர்கள் ஆற்றிய பங்கே இவர்களுக்கு நோபல் பரிசு கிடைக்கக் காரணம்.

விஞ்ஞானிகள் மூவரும் ஹெபடைட்டிஸ் சி வைரஸை கண்டறியும் முன்புவரை, ஹெபடைட்டிஸ் ஏ, ஹெபடைட்டிஸ் பி ஆகிய வைரஸ்கள் குறித்த கண்டுபிடிப்பே முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது.

இருப்பினும், ஹெபடைட்டிஸ் பாதிப்புக்குள்ளான பலருக்கு அது குறித்த விரிவான விவரங்களை கண்டறிய முடியாமல் இருந்தது.

எனவே இந்த புதிய ஹெபடைட்டிஸ் சி வைரஸ் கண்டறியப்பட்டதன் மூலம் அந்த புதிர் விலகியது.

எனவே அதற்கேற்ப ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பல மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டப்பட்டன.

உலக அளவில் ஹெபடைட்டிஸ் நோய் பாதிப்பால் 70 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. நாள்பட்ட நோயான அது கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் புற்று நோய் பாதிப்புக்கு முக்கிய காரணமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் தன்னிகரற்ற சேவையை வழங்கியோருக்கு வழங்கப்படுகிறது. இதில் முதலாவதாக மருத்தவத்துறையைச் சேர்ந்த மூவரின் பெயர் அக்டோபர் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.