Showing posts with label Eastern. Show all posts

 


ஆசிரிய இடமாற்றத்திற்கு எதிராக இடைக்காலத் தடை - கிழக்குமாகாண மேல் நீதிமன்றம் 


கடந்த பெப்ரவரி மாதம் கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரினால் 509 ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டன. அவ்விடமாற்றத்தில் அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில் நுட்ப பாடத்தைக் கற்பித்து வந்த ஆசிரியையான பாத்திமா ருகையா அவர்கள் பொத்துவில் - ஊரணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்தார்.


ஆசிரியை பாத்திமா றுகையா தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் சட்டரீதியானது அல்ல என்ற அடிப்படையில் எழுத்தானை (Writ) மனுவொன்றை சட்டத்தரணி ஆதம் லெப்பை ஆஸாத் அவர்களின் ஆலோசனையில் கல்முனையில் அமையப்பெற்றுள்ள கிழக்குமாகாண மேல் மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில் பிரதிவாதிகளாக மாகாணக் கல்விப்பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளார், ஆசிரியர் இடமாற்ற சபை, ஆசிரியர் இடமாற்ற மேன் முறையீட்டு சபை என 27 பேர் பெயரிடப்பட்டிருந்தனர்.


ஆசிரியை பாத்திமா ருகையா சார்பாக சட்டத்தரணி றாஸி முஹம்மத் மற்றும் அறிவுத்தல் சட்டத்தரணியாக சட்டத்தரணி அம்ஜாட் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.


ஆசிரியை சார்பில் தோன்றிய சட்டத்தரணிகள் மாகாணக் கல்விப்பணிப்பாளரினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் பல வழிகளில் தவறானது என வாதிட்டனர். கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் ஆளணி காலாவதியான 1/2016 ம் ஆண்டைய ஆளணி முறையை வைத்துச் செய்யப்பட்டது என்றும், இடமாற்ற மேன்முறையீட்டு சபையின் அங்கத்தவர்கள் கிழக்கு மாகாண இடமாற்றக் கொள்கைக்கு முரணாக அமைக்கப்பட்டிருந்தது என்றும் ஒரு பாடசாலையில் வெற்றிடம் இருக்கும் போது இன்னொரு வலயத்திற்கு அனுப்பப்படுவது தவறானது எனவும் கடுமையாக வாதாடியிருந்தனர்.


இரு தரப்பினரினதும் சமர்ப்பணங்களை செவியுற்ற நீதிமன்றம் காலாவதியான ஆளணியை அடிப்படையாக வைத்து இடமாற்றங்களை மேற்கொண்டமை சட்ட ரீதியானது அல்ல என்ற அடிப்படையில் குறித்த ஆசிரியரின் இடமாற்றத்திற்கு எதிராக அடுத்த திகதி வரைக்கும் இடைக்காலத்தடையை விதித்து குறித்த ஆசிரியரை தனது பழைய பாடசாலையிலேயை கற்பிக்குமாறு, நேற்று கட்டளையிட்டது


கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளரினால் செய்யப்பட்ட இடமாற்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளதோடு றுகையா அவர்களுக்கு வழங்கப்பட்ட இடைக்காலத்தடையைத் தொடர்ந்து பல ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை நீதி மன்றில் சவாலுக்குட்படுத்தத் தயாராகி வருகின்றனர்.


 (எஸ்.அஷ்ரப்கான்)                               

சம்மாந்துறை சமூர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் ஹுதா வங்கிப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட சௌபாக்கியா வீடுகள் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனிபா  தலைமையில் இன்று (02) இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் எம்.ஏ.சி.அஹமது ஷாபீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடுகளை திறந்து கையளித்தார்.            
இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக  உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் யூ.எல்.எம்  சலீம்,மாவட்ட சமூக அபிவிருத்தி முகாமையாளர்,அபிவிருத்தி உதவியாளர்,வங்கிச் சங்க முகாமையாளர்,திட்ட முகாமையாளர்,வலய முகாமையாளர்,சமூக அபிவிருத்தி உதவியாளர்,வலய உதவி முகாமையாளர்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச மட்டத் தலைவர்,வங்கி கட்டுப் பாட்டுச் சபைத் தலைவர் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 



நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 150 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் 150 விவசாயிகளுக்கு நீர் பம்பிகள் மற்றும் கிருமி நாசினி தெளிப்பான் போன்ற விவசாய உபகரணங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால்  திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி அபிவிருத்தி, திறன் விருத்தி, மகளிர் அபிவிருத்தி, நீர் விநியோகத் துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ.கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


#SukirthaKumar


இலங்கை வங்கியின் ஒலுவில் கிளையின் முகாமையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் த.பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துகள். 


பாண்டிருப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் அக்கரைப்பற்று மண்ணை புகுந்த இடமாக கொண்டுள்ளதுடன் அக்கரைப்பற்று தம்பிலுவில் அட்டாளைச்சேனை போன்ற இடங்களில் கடமையாற்றியுள்ளதுடன் சமூக சேவையிலும் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இவரது சேவை தொடரவும் இன்னும் பல பதவி உயர்வுகளை பெறவும் பிரதேச மக்கள் சார்பில் வாழ்த்துகின்றேன்.


கடந்த 11 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த திருக்கோவில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் நாளை (28) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த 11  ஆம் திகதி அம்பாறை - திருக்கோவிலிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் சுகவீனமடைந்த நிலையில், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குறித்த மாணவன் உயிரிழந்தார்.

இதனையடுத்து, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை அண்மித்து இடம்பெற்ற எதிர்ப்பினையடுத்து வைத்தியசாலை மூடப்பட்டது. 

வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்தவர்களும் வைத்தியருக்கு  அச்சுறுத்தல் விடுத்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை  முன்வைத்து கல்முனை சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில்  பணிப்பகிஷ்கரிப்பு நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது,  திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

 


நூருல் ஹுதா உமர் 


சம்மாந்துறை சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் ஸ்தாபகரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான அஸ்மி யாஸீன் அவர்கள் பிராந்தியத்தில் பல்வேறு சமூக நல உதவிகளை செய்து வருகின்றார். அதன் அடிப்படையில் புனித ரமழானை முன்னிட்டு இன்று 2024.03.26 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்விசாரா ஊழியர்களின் அமைப்பான நவ்ஸ் எனும் அமைப்புக்கு ஒரு தொகுதி ஈத்தம் பழங்கள் அன்பளிப்புச் செய்தார்.

சமூக செயற்பாட்டாளர் அஸ்மி யாஸீன் அவர்களது சார்பில் அமைப்பின் முக்கியஸ்தர்களான சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பிரதி அதிபரும் அமைப்பின் ஆலோசகருமான எம்.சி. பர்ஷான் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் அமைப்பாளர் ஏ. அபூபக்கர் ஆகியோர் குறித்த ஈத்தம் பழங்களை நவ்ஸ் அமைப்பின் தலைவர் எம்.ஏ. றிபாயிஸ் முகம்மட் ஊடாக ஊழியர்களுக்கு வழங்கி வைத்தனர்.


 நூருல் ஹுதா உமர் 


வரட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்தார்.

8 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இக்குளம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துபண்டா, கடற்தொழில் மற்றும் நீரியல் வள மீன்பிடி திணைக்கள பணிப்பாளர் சுதாகரன் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.


நூருல் ஹுதா உமர்

சமூகமாக முன்னேற வேண்டும் என்றால் இளைஞர்கள் தொடர்ச்சியாக அறிவைப்  பெருக்கிக் கொள்வதோடு ஒருமைப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்படுவதிலே தான் நாம் சமூகமாக முன்னேற முடியும் என அக்கரைப்பற்று அனைத்து  பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்

பாலமுனை பிரதேசத்தில் இருந்து கிழக்கின் கேடயத்தில் புதிய அங்கத்தவராக இணைந்து கொண்ட இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்துரைத்த அவர்,

புத்தாக்க கல்வி அறிவை அடித்தளமாக கொண்ட சமூகமாக நாம் வளர வேண்டும். அத்துடன் ஒருமைப்பாட்டுடன் எல்லோரும் சேர்ந்து இயங்கும் முறைமைக்குள் நாம் உள்வாங்கப்படுகின்றபோது நமது சமூகம் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தினை பிரசவித்துக்கொள்ளும். அந்த முறையை கொண்டு வருவதே எங்களது முதல் பணியாகும் என்றார்.

இந்நிகழ்வில் உலமாக்கள், கிழக்கின் கேடயம் பொருளாளர் ஏ.எல்.ருஸ்தி அஹ்மத், கிழக்கின் கேடயத்தின் இணைப்பாளர் சட்டக்கல்லூரி மாணவன் முஹம்மட் அசாம், ஏ.கே. அமீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், கிழக்கின் கேடயத்தின் ஆலோசகருமான சட்டமானி எஸ்.எம்.எம். ஹனீபா, செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.எம்.அர்சாத் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

 


வி.சுகிர்தகுமார் 0777113659 


   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பல வைத்தியசாலைகளில் இன்று (26) வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைவாக அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு;ள்ளதுடன் இதனால் அவசர சேவை சிகிச்சை பிரிவு தவிர்ந்த ஏனைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதுடன் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அன்மையில் ஏற்பட்ட மாணவனின் மரணித்தின் பின்னராக இடம்பெற்ற மக்களது ஆர்ப்பாட்டம் மற்றும் வைத்தியசாலையின் உடமைகள் சில தாக்கப்பட்டதை கண்டித்தோ இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் அடையாளப்படுத்தப்பட்டும் பொலிசாரால் உரியவர்கள் கைது செய்யப்படவி;ல்லை என்பதை தெரிவித்தே இப்பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் பல்வேறு பேச்சுவார்த்தைகள் மேற்கொண்ட நிலையிலும் வைத்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட சில விடயங்கள் உறுதிப்படுத்தப்படுவதுடன் சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னரே வைத்திய சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதேநேரம் 15 நாட்களுக்கும் மேலாக திருக்கோவில் வைத்தியசாலை மூடப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் பாம்பு கடியினால் தீண்டப்பட்ட ஒருவர் மரணித்துள்ள நிலையில் இன்னுமொருவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.
அத்தோடு சுமார் 30 ஆயித்திற்கும் மேற்பட்ட மக்களின் தேவையினை பூர்த்தி செய்து வந்த வைத்தியசாலையின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வயோதிபர்கள் சிறுவர்கள் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்ற வந்தவர்கள் என அனைவரும் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பெரும் தொகை பணதத்pனை செலவு செலவு செய்து தொடர்ச்சியாக தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாதுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளதுடன் ஏழை நோயாளிகள் மீது கருணை கொண்டு வைத்திய சேவையை மீள ஆரம்பிக்குமாறு பொது மக்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மக்களின் உயிர்களை கேடயமாக பயன்படுத்தாது சம்பந்தப்பட்ட தரப்பினர் துரிதமாக நடவடிக்கைகளைக் முன்னெடுத்து  வைத்திய சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவவுமாறு நோயாளிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் திருகோணமலையில் மரணம்! 


பிரான்ஸில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த நபரொருவர் (57) இன்று அதிகாலை திடீரென மரணமானார்

 


(எஸ்.அஷ்ரப்கான்)


கல்முனைத் தொகுதியின் கல்முனை 12ம் வட்டாரம் தொடக்கம் 17ம் வட்டாரம் வரைக்குமான ஐக்கிய தேசியக் கட்சியின்  அமைப்பாளராக எஸ்.எல்.எஸ்.முஹீஸ் 
கட்சியின் தலைமையகத்தினால்  நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட ஐ.தே.க. தலைவியும் முன்னாள் பிரதியமைச்சருமான அனோமா கமகேவினால் இதற்கான நியமன கடிதம் நேற்று (22) வழங்கி வைக்கப்பட்டது.

முஹீஸ் மிக நீண்ட காலமாக கல்முனை பிரதேசத்தில் மிக நீண்ட காலம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளராக செயற்பட்டுவரும் இவர், 
கடந்த கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும் ஆவார்.


கு. மாதவன் 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மயக்க மருந்து நிபுணராகப் பணி புரிந்த, Dr. பிரசாந்தன் அவர்களுக்கு பிரியாவிடை இன்று இடம் பெற்றது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr. ரஜாப் அவர்களின்  தலைமையில் இடம் பெற்றது

வைத்தியசாலை படப்பிடிப்பாளர்


 (வி.ரி.சகாதேவராஜா)


உலக வாய்வழி சுகாதார தினம்
கல்முனை  ஆதார வைத்தியசாலையில்
வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

உலக வாய்வழி சுகாதார தினத்தினையொட்டிய இந்நிகழ்வானது நேற்று முன்தினம் வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்தியசாலையின் பற்சிகிச்சை பிரிவினரின் ஏற்பாட்டிலும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரன்  அவர்களின் தலைமையிலும் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வரவேற்புரையினை பல் வைத்தியநிபுணர்  டாக்டர் எஸ்எஸ்யூ.. ஷி(f)பா  வழங்கினார்.

வைத்தியசாலையின் பல் வைத்திய நிபுணர் டாக்டர் ஐஎம்ஐ..முன்ஷிப் அவர்களினால் பற்சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.

அவர் தனதுரையில் பற்களின் முக்கியத்துவம், பற்களில் ஏற்படும் நோய்களின் அறிகுறிகள், வாய் புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பங்கள், பல் துலக்கும் சரியான முறைகள்,  பற்சிகிச்சை முறைகள்,  மருந்துகள் பற்றி விளக்கமாக விவரித்தார். 

பற்சிகிச்சை பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி. வி.சுதானந்தி நன்றியுரையாற்றினார்.

மேலும் நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஜே. மதன், வைத்திய நிபுணர்கள், பல் வைத்திய நிபுணர்கள், தாதிய பரிபாலகர்கள், வைத்திய அதிகாரிகள், நிர்வாக உத்தியோகத்தர், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க உறுப்பினர்கள், கலந்து  சிறப்பித்திருந்தனர்.

 நிகழ்ச்சியினை சுகாதார கல்வி பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி. என்.மனோஜினி தொகுத்து வழங்கியிருந்தார்.


 


( வி.ரி.சகாதேவராஜா)


இலங்கை மது வரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக (மனித வளம்)  கிழக்கு மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் ரோட்டரியன் சண்முகம் தங்கராஜா நியமிக்கப்பட்டார்.

திரு சண்முகம் தங்கராஜா மதுவரித் திணைக்கள வரலாற்றில் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பிரதி ஆணையாளர் என்ற பெருமையை பெறுகிறார். 

அவர்  கொழும்பில் தனது உயர் பதவியை நேற்று  (21) பொறுப்பேற்றுக் கொண்டார் .

இவர் மதுவரி திணைக்கள கிழக்கு மாகாண  உதவி ஆணையாளராக செயற்படும் அதேவேளை, முழு இலங்கைக்கான பிரதி ஆணையாளராக பதில் கடமையையும் ஆற்றுவார்.

சண்முகம் தங்கராஜா பெரியகல்லாற்றை  பிறப்பிடமாகவும், கல்லடியை  வசிப்பிடமாகவும் கொண்டவர். ஆரம்ப கல்வியை பெரிய கல்லாற்றிலும், பின்னர் வந்தாறுமூலை மற்றும் மட்டக்களப்பு இந்து கல்லூரி ஆகியவற்றில் இடைநிலை உயர்நிலைக் கல்வியையும் பெற்று மதுவரி திணைக்களத்தில் மதுவரி பரிசோதகராக இணைந்து கொண்டார் .

32 வருட சேவை காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்து முதன் முதலில் மது வரி பிரதி ஆணையாளராக  நியமனம் பெற்ற ஒரே ஒருவர் தங்கராஜா ஆவார்.

 சிறந்த விளையாட்டு வீரரான தங்கராஜா கல்முனை ரோட்டரி கழக(PHF) தலைவராக இருந்து, தற்போது மட்டக்களப்பு றோட்டரி கழகத்தின் நிருவாகசபை உறுப்பினராக சமூக பணியாற்றி வருகிறார்.

முன்னர், அம்பாரை மாவட்டத்தின் கலால் அத்தியட்சகராக கடமையாற்றிய சண்முகம் தங்கராஜா கிழக்கு மாகாணத்தின் புதிய உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்று 01.01.2023 அன்று தங்கள் கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

 சண்முகம் தங்கராஜா கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் உப தலைவராகவும், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர் சபை பிரதிநிதியாகவும் செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 


மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்து. ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்


(பர்ஹானா பதுறுதீன்)


திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


இன்று வியாழக்கிழமை (21) மாலை இவ்விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது.


மட்டக்களப்பைச் சேர்ந்த இவர்கள் திருகோணமலைக்கு வந்து மீண்டும் மட்டக்களப்பு நோக்கி இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதியதிலேயே விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.


இவ்விபத்து சம்பவத்தில் மட்டக்களப்பு ,செங்கலடி, கணபதிப்பிள்ளை நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மதுசாந் வயது (22) என்ற நபரே உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .

 


நூருல் ஹுதா உமர் 


காஸாவில் இடம்பெற்றுவரும் மோதல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இப்தார் மாதத்தில் நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் 05 இலட்சம் ரூபா நிதியை வழங்கியுள்ளார். 

காஸா குழந்தைகள் நிதியத்துக்கு இதுவரை 57 இலட்சத்து 73 ஆயிரத்து 512 ரூபா நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த நிதி விரைவில் காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலன்புரி தேவைகளுக்காக இலங்கை அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்பட உள்ளது. 

வர்த்தகர்கள், பொது அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்த நிதியத்துக்கு உதவிகளை வழங்கிவரும் நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முதல் அரசியல் தலைமையாக இந்நிதியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


காத்தான்குடி நகர சபையின் புதிய நிருவாக உத்தியோகத்தராக திருமதி றினோஸா முப்லி (முகாமத்துவ சேவை உத்தியோகத்தர் - அதி சிறப்பு) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக  பொறுப்பேற்றுக் கொண்டார்.  


சபையின் செயலாளர் திருமதி றிப்கா சபீனின் முன்னிலையில் இன்றைய தினம் (18) இந்நிகழ்வு இடம்பெற்றது.


ஏற்கனவே இங்கு நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றிய ஜனாப் எம்.ஐ.எம். நியாஸ் காத்தான்குடி தள வைத்திசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வது குறிப்பிடத்தக்கது.


(எம்.ஏ.சீ.எம். ஜலீஸ்)

 

(வி.ரி. சகாதேவராஜா)

 

கடந்த ஒரு வார காலமாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்ப்பினால் மூடி கிடக்கின்றது.

 இதனால் அந்த பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் தமிழ்மக்கள் வைத்திய சேவையின்றி பாதிக்கப்பட்டுள்ளார்கள் . அவசர சிகிச்சைகளுக்காக அப்பிரதேச மக்கள்  காலநேரபணம் செலவுசெய்து அக்கரைப்பற்று வைத்திய சாலைக்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர்.

ஒரு வாரத்துக்கு முன்பு மரதன் ஓடிய ஒரு மாணவனின் இறப்பைத் தொடர்ந்து அங்கு வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது தெரிந்ததே. அதன் போது வைத்தியசாலை கண்ணாடிகள் பெயர் பலகைகள் உடைக்கப்பட்டதும் தெரிந்தததே.

 இதனை அடுத்து தங்களுக்கு பாதுகாப்பின்மை என்று கூறி வைத்தியர்கள் வெளியேறினார்கள்.

 அதனால் அன்றிலிருந்து இன்று(18) திங்கட்கிழமை வரை ஒரு வார காலமாக வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. அங்கே எவ்விதமான வைத்திய சேவைகளும் இடம் பெறவில்லை.

 இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் பாம்புக் கடி தூக்கிட்டு தற்கொலை முயற்சி போன்ற பல நோயாளிகள் வந்தும் அதை நேரடியாக அக்கரைப்பற்று ஆதரவைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது.

மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் கடந்த ஒரு வாரமாக வைத்திய சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

எது எப்படி இருப்பினும் இன்றைய தினம்(18)  ஒரு முழுமையான கலந்துரையாடல் இடம் பெற்று வைத்தியசாலை திறக்கப்படுவதற்கான சாதகமான அறிகுறி தென்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன்  அறிவித்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.