படைப்புழுக்களின் தாக்கம்: விரைவில் நட்டஈடு


அம்பாறை மாவட்டத்தில், 2018 பெரும் போகத்தில் படைப்புழுக்களின் தாக்கத்தால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட சோளச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.ஸ்.ஏ. கலீஸ், இன்று (26) தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் விவசாயிகள் இவ்வாறு பகுதியளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.
முழுமையாக படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 102 விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 10 மில்லியன் 64 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இதில் பகுதியளவில் பாதிக்கப்பட்ட சுமார் 14 ஆயிரத்தி 700 விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு கமநல சேவைகள் காப்புறுதிச் சபைக்கு சுமார் 334 மில்லியன் ரூபாய் நிதி கிடைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இவர்களுக்கான நட்டஈடு மிக விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.