இணைய சேவை முடக்கம்: இந்தியாவில் 134 முறை - பாகிஸ்தானில் 12 முறை


"குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிய பிறகு எது குறித்தும் கவலைப்பட வேண்டாம் என்று நான் அசாமிலுள்ள சகோதர, சகோதரிகளிடம் உறுதியளிக்க விரும்புகிறேன். உங்களது உரிமைகள், தனித்துவமான அடையாளம், அழகான கலாசாரம் உள்ளிட்ட எதையும், யாராலும் உங்களிடமிருந்து பறிக்க முடியாது என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன். அவை தொடர்ந்து செழித்து வளரும்" என்று டிசம்பர் மாதம் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
ஆனால், அப்போது நிலவிய பிரச்சனை என்ன தெரியுமா? மேற்கண்ட பதிவின் மூலம் தனது கருத்தை அசாம் மக்களிடம் தெரிவிக்க பிரதமர் விரும்பினார்; ஆனால், அப்போது அசாம் மக்களால் இணையத்தையே பயன்படுத்த முடியவில்லை.
கடந்த புதன்கிழமை, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், அதற்கு எதிரான போராட்டங்கள் அசாம், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
GETTY
தகவல்களை அணுகுவதில் எவ்வித தடையும் இல்லாத 'டிஜிட்டல் இந்தியா' குறித்து நான் கனவு காண்கிறேன்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, 2014இல் நடந்த 'இந்தியா டிஜிட்டல் சம்மிட்' நிகழ்வில் பேசியது.
வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமல்ல, உத்தரப் பிரதேசத்திலுள்ள அலிகார் உள்ளிட்ட இடங்களிலும் கடந்த 13ஆம் தேதி மாலை 5 மணிவரை இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 91 முறை இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டிருப்பதாக 'இன்டர்நெட் ஷட்டவுன்ஸ்' என்ற இணையத்தின் தரவு கூறுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவில் வெறும் 15 இணைய சேவை முடக்கங்களே பதிவாகியுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை படிப்படியாக, 2016இல் 31, 2017இல் 79, 2018இல் 134 என அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 134 இணைய சேவை முடக்கங்களில் 65 சம்பவங்கள் ஜம்மு & காஷ்மீரில் மட்டும் நிகழ்ந்தன. இந்த ஆண்டு இதுவரை நடைபெற்றுள்ள 91 இணைய சேவை முடக்க சம்பவங்களில் 55 ஜம்மு & காஷ்மீரில் நிகழ்ந்துள்ளன.
2018ல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் 134 முறை இணைய சேவை முடக்கப்பட்டிருந்தது; இதுதான் அந்த ஆண்டில், உலகளவில் பதிவான அதிக எண்ணிக்கை ஆகும். இரண்டாமிடத்தை பிடித்துள்ள பாகிஸ்தானில் வெறும் 12 இணைய சேவை முடக்க சம்பவங்களே அதே காலகட்டத்தில் பதிவாகியுள்ளன. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக வெளிவந்த அயோத்தி வழக்கு தீர்ப்பின்போதும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டிருந்தது.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து இணைய சேவை முடக்கத்தில் இராக் (7), யேமன் (7), எத்தியோப்பியா (6), வங்கதேசம் (5), ரஷ்யா (2) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

நீண்டகால முடக்கம்

அதிகரித்து வரும் இணைய சேவை முடக்கம் - எங்கே செல்கிறது இந்தியா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
'இன்டர்நெட் ஷட்டவுன்ஸ்' இணையதளத்தின் தரவுகளை பார்க்கும்போது, இணைய சேவை முடக்கங்கள் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலம் வரை, அதிகபட்சமாக ஜம்மு & காஷ்மீரில் புர்கான் வாணி இறப்பை தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களின் காரணமாக அங்கு கடந்த 2016ஆம் ஆண்டு தொடர்ந்து 133 நாட்கள் இணைய சேவை முடக்கப்பட்டது. அப்போது, மூன்றரை மாதங்களில் போஸ்ட்பெய்டு பயன்பாட்டாளர்களுக்கு இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்ட நிலையில், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் சுமார் ஆறு மாத காலம் இணைய சேவைக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
ஜம்மு & காஷ்மீரில் மற்றொரு இணைய முடக்கம் கடந்த ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதி விதிக்கப்பட்டது, அப்போதுதான் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சி அளித்த இந்திய அரசமைப்பின் 370வது பிரிவு இந்திய நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. இதுவரை நூறுக்கும் மேற்பட்ட நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அங்கு இணைய சேவை முடக்கம் திரும்ப பெறப்படவில்லை.
ஜம்மு & காஷ்மீர் தவிர்த்து பார்த்தோமானால், நாட்டிலேயே மூன்றாவது மிக நீண்ட இணைய சேவை முடக்கம் 2017 ஜூன் 18 முதல் 2017 செப்டம்பர் 25க்கு இடைப்பட்ட காலத்தில், மேற்குவங்கத்தில் அமலில் இருந்தது. கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, டார்ஜிலிங்கில் நடைபெற்ற போராட்டத்தை ஒட்டி விதிக்கப்பட்ட இந்த தடை சுமார் 100 நாட்கள் நீடித்தன.

அதிக இணைய சேவை முடக்கங்களை கண்ட பகுதி

அதிகரித்து வரும் இணைய சேவை முடக்கம் - எங்கே செல்கிறது இந்தியா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
2012ஆம் ஆண்டு முதல் இதுவரையில், இந்தியாவிலுள்ள பல்வேறு இடங்களில் 363 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது; இதில் ஜம்மு & காஷ்மீரில் மட்டும் 180 சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. 67 இணைய சேவை முடக்கங்களுடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும், 18 சம்பவங்களுடன் உத்தரப் பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது?

இந்தியாவில் இணைய சேவையை முடக்குவதற்கு வழிவகை செய்வதற்கு பல்வேறு சட்டப்பிரிவுகள் உள்ளன. குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 (சிஆர்பிசி), இந்திய டெலிகிராஃப் சட்டம் 1885, தொலைத்தொடர்பு சேவைகளின் தற்காலிக இடைநீக்கம் (பொது அவசர நிலை அல்லது பாதுகாப்பு) விதிகள், 2017 ஆகியவை இந்தியாவிலுள்ள மாநிலங்கள், மாவட்டங்கள் ஆகியவற்றில் இணைய சேவையை முடக்குவதற்கான அதிகாரத்தை அரசு முகமைகளுக்கு வழங்குகிறது.
குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவு 144 "பொது அமைதியைப் பேணுவதற்கான தற்காலிக நடவடிக்கைகள்" என்ற அத்தியாயத்தின் கீழ், மாநில அரசுகள் "அவசரகால பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுக்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரத்தை" வழங்குகிறது.