ஆலையடிவேம்பு பிரதேசம் ஓரளவு பாதுகாப்பான நிலையில்




 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  ஆலையடிவேம்பு பிரதேசம் ஓரளவு பாதுகாப்பான நிலையில் உள்ளது. மக்கள் ஒத்துழைத்தால் ஒரு வாரத்தின் பின்னர் தனிமைப்படுத்தலை நீக்க வாய்ப்புள்ளது என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் தெரிவி;த்தார்.
கொரோனா நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் தொடர்ந்து பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று(03) தொற்றுடன் தொடர்புபட்டிருக்காலம் என சந்தேகிக்கப்படும் 105 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பரிசோதனைகள் பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்திலும் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்திலும் நடைபெற்றன.
இதேநரம் அட்டாளைச்சேனையில் இன்று 100 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் ஒருவர் தொற்றாளராக இனங்காணப்பட்டார். இவரும் அக்கரைப்பற்று சந்தையுடன் தொடர்புபட்டவர் என்றும் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க பிசிஆர் பரிசோதனை தொடர்பில் ஆரம்பத்தில் அச்சம் கொண்ட ஆலையடிவேம்பு மக்கள் தற்போது தாமாக முன்வந்து பரிசோதனை செய்யுமாறு கேட்கும் நிலை உருவாகியுள்ளது. ஆலையடிவேம்பு பிரதே சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்னெடுத்துவரும் விழிப்புணர்வு காரணமாகவே இவ்வாறு மக்கள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் ஒரு நாளில் குறிப்பிட்ட மக்களுக்கு மாத்திரமே பரிசோதனை மேற்கொள்ள முடியும் எனும் நிலையில் பலர் பரிசோதனைக்காக காத்திருக்கின்றனர்.