இலங்கையின் கிரிக்கெட் பாதாளத்தில்


 


இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு பாதாளத்தில் வீழ்ந்துள்ளதாக முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார குறிப்பிட்டார்.


வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக Sky தொலைக்காட்சியுடன் நடைபெற்ற நேர்காணலில் அவர் இதனை தெரிவித்தார்.


இலங்கையில் முதற்தர கிரிக்கெட் ஊடாக சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் உருவாக்கப்படாததால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதென குமார் சங்கக்கார சுட்டிக்காட்டினார்.


இந்த நேர்காணலில் இங்கிலாந்து முன்னாள் அணித்தலைவரான நசார் ஹூசைனும் கருத்து வெளியிட்டார்.


இலங்கையிலிருந்து உருவான அதிசிறந்த கிரிக்கெட் வீரர்களான சிதத் வெத்தமுனி, அர்ஜூன ரணதுங்க, மாவன் அத்தபத்து, சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன போன்ற வீரர்களுக்கு இந்த மோசமான துடுப்பாட்டத்தை பார்த்த போது எவ்வாறான உணர்வு ஏற்பட்டிருக்கும் என்று நசார் ஹூசைன் விமர்சித்தார்.


டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்தளவிற்கு மோசமான ஆட்டத்தை முதல் தடவையாக தாம் கண்டதாகவும், டெஸ்ட் போட்டி ஒன்றில் முதல் நாளில் வெற்றி பெற முடியாவிட்டாலும் போட்டியொன்றில் தோல்வியடைவதற்கான காரணியாக அது அமையும் என்றும் நசார் ஹூசைன் சுட்டிக்காட்டினார்.