நேர்முகப்பரீட்சை ஆலையடிவேம்பில் நாளையுடன் நிறைவு


 


வி.சுகிர்தகுமார் 0777113659  

  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெறும்
இலங்கை இராணுவத்தில் காணப்படும் 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கான இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை நாளையுடன்(22)நிறைவுறுகின்றது.

இலங்கை இராணுவத்தில் காணப்படும் இசைக் கருவி வாசிப்பாளர், கனிஷ்ட நிருவாக உதவியாளர், கணினி வன்பொருள் உதவியாளர், வைத்திய உதவியாளர், தாதி மருந்தகர் உள்ளிட்ட 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இரண்டாம் கட்ட  நேர்முகப் பரீட்சை இடம்பெற்று வருகின்றது.

இந்த நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்கின்ற இளைஞர், யுவதிகள் வெற்றிடமாகவுள்ள 77 பதவிகளில் விரும்புகின்ற  பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதற்கான தகுதிகளாக, விண்ணப்பதாரிகள் இலங்கைப் பிரஜைகளாக இருத்தல், திருமணமாகாதவர்களாக இருப்பதுடன், ஆண்கள் 18-26 வயதுக்குள்ளும், பெண்கள் 18-22 வயதுக்குள்ளும் இருத்தல்,  ஆண்கள் குறைந்தது 5'4' உயரமுடையவர்களாகவும், பெண்கள் குறைந்தது 5'2' உயரமுடையவர்களாகவும் இருத்தல் வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவிகள் யாவும் ஓய்வூதிய உரித்துடையதுடன், அரச உத்தியோகத்தர்களுக்கான சகல சலுகைகளும் வழங்கப்படும். மேலும்  குறைந்த பட்ச திரட்டிய சம்பளம் 50000 ரூபாய் வழங்கப்படும்.

தகைமையுடையவர்கள் விண்ணப்ப படிவங்களையும் மேலதிக தகவல்களையும் உங்களது பிரதேச கிராம உத்தியோகத்தரிடம் அல்லது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.