Showing posts with label Eastern Sri Lanka. Show all posts


 நூருல் ஹுதா உமர்


பாலின அடிப்படையிலான வன்முறையின் (GBV) அழுத்தமான பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொது சுகாதார மருத்துவச்சிகளுக்கான விரிவான பயிற்சித் திட்டத்தை அண்மையில் ஏற்பாடு செய்தது. சமூகத்தில் பாலின அடிப்படையிலான வன்முறையின் வழக்குகளுக்கு திறம்பட பதிலளிப்பதற்கு தேவையான அறிவு மற்றும் திறன்களுடன் மருத்துவச்சிகளை தயார்படுத்துவதற்காக இந்த பயிற்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பிராந்திய மனநலப் பிரிவின் நிபுணரான டாக்டர் எம்.ஜே.நௌஃபல் நிகழ்ச்சியின் வளவாளராகக் கலந்து கொண்டார். பயிற்சி அமர்வுகளில் வன்முறை வகைகள், ஆபத்து காரணிகள், உயிர் பிழைத்தவர்களுக்கான ஆதரவு, சட்ட அம்சங்கள் மற்றும் பரிந்துரை அமைப்புகள் உட்பட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய விடயங்கள் ஆராயப்பட்டது. மேலும் அமர்வுகளில் விவாதங்கள், வழக்கு ஆய்வுகள் மற்றும் கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான பங்கு நாடகங்கள் என்பன இடம்பெற்றன.

 


நூருல் ஹுதா உமர்


காரைதீவு பிரதேசத்தில் டெங்கு அபாயத்தை தடுத்தல் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லல் எனும் கருப்பொருளிலான அவசர கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பீ. இராஜகுலேந்திரன், நிருவாக கிராம உத்தியோகத்தர், காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ். ஜெகத், காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் டீ. மோகனகுமார், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.பைசால் முஸ்தபா , கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  மற்றும் உத்தியோகத்தர்,ஆகியோர்கள் பங்குபற்றினர்.

இதன் போது டெங்கு தொடர்பான சமகால நிலவரங்கள் குறித்தும், அவற்றினை கட்டுப் படுத்துவது தொடர்பில் தொடர்புபட்ட நிறுவனங்களின் வகிபாகங்கள் மற்றும் காத்திரமான திட்டங்கள் குறித்தும் தொடர்ச்சியாக டெங்கு அபாயத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள குழுக்களின் செயற்பாடுகளை உயிரோட்டமானதாக்குவதற்கான பொறிமுறைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் இனந்தெரியாத நபர்களால் குப்பை கூழங்கள் கொட்டப்படும் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளான  தோணாவினை அண்டிய பகுதிகள், பொது இடங்கள், களப்பு வீதிகள் மற்றும் மூடிய பாதைகள் குறித்தும் விஷேட கவனம் செலுத்தப்பட்டதோடு குறித்த இடங்களினை மக்கள் பாவனைக்குகந்ததாக மாற்றுவதற்கான சாத்தியமான பொறிமுறைகள்  தொடர்பாகவும் முடிவுகள் எட்டப்பட்டன.

 


( வி.ரி.சகாதேவராஜா)

வளிமாசாக்கல் மற்றும் அதன் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துவிச்சக்கர வண்டி சவாரி களுவாஞ்சிக்குடியில் நேற்று இடம் பெற்றது.

தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமாக
" பிளாஸ்டிக் மூலம் ஏற்படக்கூடிய மாசைத் தடுப்போம்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் துவிச்சக்கர வண்டி சவாரி  களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் வழிகாட்டுதலில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படுகின்றது. 

அந்த வகையில்  "வளி மாசாக்கம் மற்றும் அதன் பாதகமான தாக்கங்களை குறைக்கும் தினம் "என்ற தொனிப் பொருளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் துவிச்சக்கரவண்டி சவாரி நேற்று புதன்கிழமை (31/05/2023) முற்பகல்  9.00 மணியளவில் பிரதேச செயலக முன்றலிலிருந்து  ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன்  மற்றும் கணக்காளர்  சா. விக்னராஜா ஆகியோர் கலந்துகொண்டு இந் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

அத்துடன் நேற்றைய தினம் பல கிராம சேவகர் பிரிவுகளில் மர நடுகை நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டுதலில் சுகாதார சேவைகள் பணிமனையின் MCH பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியினால் ஒருங்கிணைக்கப்பட்ட தீகவாபி பிரதேச தாய் ஆதரவு குழு தேர்ந்தெடுக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவர்களது கணவர்களுக்கான போஷாக்கு உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது.

ஊட்டச்சத்து உணவுத் திட்டத்தின் முதன்மை நோக்கம் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதை உறுதி செய்வதாகும். மொத்தம் 21 கர்ப்பிணித் தாய்மார்கள் தங்கள் குறிப்பிட்ட ஊட்டச்சத்து தேவைகளின் அடிப்படையில் நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். கர்ப்ப காலத்தில் தங்கள் மனைவிகளை ஆதரிப்பதில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரித்து, அவர்களின் கணவர்களும் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அவர்களது கணவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டன. அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் உட்பட கர்ப்பிணிப் பெண்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உணவுப் பொருட்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும், பிரசவத்திற்குத் தேவையான கருவிகள் மற்றும் பொருட்களும் பங்கேற்ற தாய்மார்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன.

இந்த முன்முயற்சி ஆரோக்கியமான கர்ப்பத்தை ஊக்குவிப்பதும், பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களின் அபாயத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சரியான ஊட்டச்சத்து மற்றும் தேவையான கருவிகள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், தீகவாபி பிரிவில் தாய் மற்றும் குழந்தை சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

 


பாறுக் ஷிஹான்


வீதியால் சென்றவர் மீது வெட்டு-சந்தேக நபர் ஒருவர் காயம் மற்றுமொருவர்  தலைமறைவு -பொலிஸ் விசாரணை முன்னெடுப்பு 

மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கைது  செய்ய  கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இன்று காலை  மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர்   மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன் போது இச்சம்பவத்தில் 41 வயது மதிக்கத்தக்க  இஸ்மாலெப்பை சிறாஜ்டீன் என்ற மேசன் வேலை செய்யும்   குடும்பஸ்தரே  காயமடைந்துள்ள நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பதில்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்   குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியுமான  பிரதம பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பின்னணி

இரண்டாவது திருமணத்தில் இணைந்த ஒருவர் அவரது மனைவிக்கு தினம் தோறும் தொந்தரவு செய்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து இத்தொந்தரவு செயற்பாடு தொடர்பில் பாதிக்கப்பட்டவர்  தனது சகோதர்களிடம் முறையிட்டிருந்தார்.இந்நிலையில் சகோதரிக்கு தொந்தரவு செய்து வந்த மச்சானை இரு சகோதரர்களும் வீதியில் இடைமறித்து  தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பில் மனைவி தரப்பிலும் கல்முனை தலைமையக பொலிஸ்  நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கானவரும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டு தலைமைறைவான மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய கல்முனை தலைமையக  பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 


கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிபுரைக்கமைவாகவும் கிழக்கு உள்ளுராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் நேற்று(27) சனிக்கிழமை காரைதீவு கடற்கரை சுத்திகரிப்பு நிகழ்ச்சித் திட்டம் பிரதேச சபை செயலாளர் அ. சுந்தர குமார் தலைமையில் நடைபெற்ற போது...


 


( வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவின் இளங்கவிஞர் விபுலசசியின் நிலவின் கர்ப்பங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா இன்று (27) சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காரைதீவில் நடைபெற உள்ளது.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் தலைமையில் நடைபெற உள்ள விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்   கலந்து சிறப்பிக்கிறார்.
தாதிய உத்தியோகத்தரான மனோகரன் சசிப்பிரியனின் கன்னி கவிதை நூல் என்பது குறிப்பிடத்தக்கது.


நூருல் ஹுதா உமர்


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக நுழைந்த கல்முனை உப பிரதேச செயலக வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 07ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.


கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வரும் சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மேன்முறையீட்டு நீதிமன்றில் கல்முனை விவகாரம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த  அறிவிப்பு நீதிபதிகள் குழாமினால்  விடுக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்திருந்த வழக்கின் இடையீட்டு மனுதாரர்களாக கல்முனையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் நீதிமன்றுக்கு தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்ற குழாமுக்கு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்த போது வழக்காளியான பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அந்த கோரிக்கைக்கு எதிராக தனது கடுமையான ஆட்சபனையை வெளியிட்டார்.


இன்றைய தினம் இடைக்கால  தீர்வை நீதிமன்றம் வழங்க இருந்த நிலையில் இவ்வாறான இடையீட்டு மனுவை நீதிமன்றம் ஏற்க  கூடாது என்றும் இடைக்கால தீர்வை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது வாதத்தில் நீதிமன்றுக்கு முன்வைத்தார். எதிர்தரப்பினரிடமும், சட்டமா அதிபர் திணைக்களத்திடமும் இந்த இடையீட்டு மனு தொடர்பில் வினவிய நீதிபதிகள் குழாம் இந்த இடையீட்டு மனுவை ஏற்பது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தரப்பினது ஆட்சபனையை வழங்க ஒரு வார கால அவகாசமும் இடையீட்டு மனுதாரர்களின் ஆட்சபனைக்கான பதிலை நீதிமன்றுக்கு வழங்க ஒருவாரம் அவகாசம் வழங்கியுள்ளது.


இதனடிப்படையில் எதிர்வரும் ஜூன் 07ம் திகதிவரை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்த இடையீட்டு மனுவை ஏற்பதா இல்லையா என்பது தொடர்பிலான விவாதம் நடைபெற உள்ளது. அந்த விவாதத்தின் பின்னரே இடைக்கால தீர்வுகள் வழங்குவது தொடர்பில் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


குறித்த வழக்கு தொடர்பில் தமிழ் மக்களிடமும், முஸ்லிம் மக்களிடமும் பலத்த வாதபிரதி வாதங்கள் சில தினங்களாக இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பை மக்கள் எதிர்பார்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


 ( வி.ரி.சகாதேவராஜா)


முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் ஓய்வு பெறுவதையொட்டி பரவலாக பிரியாவிடை நிகழ்வுகள் முல்லைத்தீவில் இடம் பெற்று வருகின்றது.

36 வருடகால அரச சேவையில் இருந்து இந்த மாதம் 20 ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில் அவரின் சேவையினைப் பாராட்டியும் வாழ்த்தியும் அவருக்கான பிரிவு உபசார நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான இவர் மட்டக்களப்பு கல்லடியைச்சேர்ந்தவர். சிறந்த விளையாட்டு வீரரான இவர் சிவானந்த வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

இலங்கை நிர்வாக சேவையில் 32 வருடகாலம் சேவையாற்றிய இவர் முந்திய 04 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றியிருந்தார்.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஆறு வருட காலமாக சேவையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் தோறும் பிரியாவிடை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மகத்தான பிரியாவிடை வைபவம் கடந்த வாரம் நடாத்நப்பட்டது.

இந்த நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி தலைமையில் இடம்பெற்றது. தமிழரின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கோலாட்டம் நிகழ்வுடன் அரசாங்க அதிபர் மற்றும் அவரின் பாரியார் திருமதி மதிலதா இருவரும் வரேவேற்று அழைத்துவரப்பட்டனர்.

மாவட்ட அரசாங்க அதிபரின் சேவை தொடர்பில் பிரதேச செயலாளரால் பாராட்டுக் கருத்துரை வழங்கப்பட்டது. அரசாங்க அதிபரை கௌரவப்படுத்தும் நோக்கில்  வாழ்துப்பாவும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கலை நிகழ்வுகளும் ஆற்றுகை செய்து மகிழ்விக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர்,  ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச  செயலாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் வாரம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இறுதியான மாபெரும் பிரியாவிடை வைபவம் நடைபெறுகிறது.

 


( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் கடற்கரைப் பிரதேசம் மிகவும் மோசமாக கடல் அரிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

 கடந்த சில நாட்களாக கடலுக்கு அருகே உள்ள தென்னை மரங்களை காவு கொண்டும் கட்டிடங்களை உடைத்தும் சேதம் விளைவித்து வருகிறது .

நிறைய தென்னை மரங்களை உள்வாங்கிய கடல் அருகிலுள்ள மீனவர் கட்டடம் ,கிணறு என்பவற்றையும் உள்வாங்கி வருகிறது என ஆலய தலைவர் த.கோபாலன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 


(கல்முனை நிருபர்)


புனித ரமழான் மாத பாடசாலை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள முறையில் கழிக்க வேண்டும் என்றநோக்கில் கல்முனை முஹம்மதிய்யா இஸ்லாமிய நூலகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படுகின்ற மாணவர்களுக்கான ரமழான் கால இலவச செயலமர்வு இவ்வருடமும் கல்முனையில் இடம்பெற்றது


இத் செயலமர்வில் இஸ்லாமிய அகீதா,பிக்ஹ்ஹதீஸ் மற்றும் துஆ மனனம் ஆகிய வகுப்புகள்நடைபெற்றதுடன்வுழு மற்றும் தொழுகை முறைகள் செய்முறை மூலமாகவும் பயிற்றுவிக்கப்பட்டன.



செயலமர்வில் முதலாம்,இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பண பரிசில்கள்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுஅத்துடன் செயலமர்வு வகுப்பில் கலந்து கொண்ட அனைத்துமாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் காணப்படுகின்ற ஆயுர்வேத வைத்தியசாலைகளின் பங்களிப்பினை மேம்படுத்தும் முகமாக பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல். எம்.றிபாஸ் அவர்களின் வழிகாட்டலில் ஆயுர்வேத வைத்தியசாலைகளின் பணிகள் மற்றும் மருந்து விநியோக சேவைகள் சிறந்த முறையில் ஆய்வுகள் உற்பத்திகள் என்று பல நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.


இந்நிலையில் இதன் அங்கமாக சாய்ந்தமருது மத்திய ஆயுர்வேத வைத்தியசாலைக்கு காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வைத்தியசாலையின் இதர சேவைகள் தொடர்பிலான கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் தலைமையில் பணிமனையில் இன்று(06)இடம்பெற்றது

இதன் போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம்.எம்.ஆசிக்,கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.நபீல்,திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம் மாஹிர்,சாய்ந்தமருது மத்திய ஆயுர்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி எஸ்.எம். ரிசாத் மற்றும்  பிரதேச செயலக காணி அதிகாரி எம்.ஏ.எம்.ராபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் சாய்ந்தமருது ஆயுர்வேத வைத்தியசாலைக்கு விரைவில் காணியினைப் பெற்றுக் கொடுப்பதற்கும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் தற்போது காணப்படும் மத்திய ஆயுர்வேத வைத்தியசாலையினை கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையாக எதிர்காலத்தில் 
தரமுயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த சந்திப்பு தொடர்பாக சாய்ந்தமருது மத்திய ஆயுர்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் எஸ்.எம்.ரிசாத் தெரிவித்தார்.

 



நூருல் ஹுதா உமர்

இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான போசனை உணவுத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலக கொடுப்பனவுகளை வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம் பீ ஏ வாஜித், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி என் ரமேஷ் உட்பட ஏனைய உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

தாய் சேய் நலப்பிரிவின் மேற்பார்வையின் கீழ் சுகாதார வைத்திய அதிகாரிகளினால் இது தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்த பிரதேச செயலகங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


பாறுக் ஷிஹான்

கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில் புதிய  சட்ட நூலகம்  இன்று  சட்டத்தரணிகளின் பாவனைக்காக  திறந்து வைக்கப்ப்பட்டுள்ளது.

 கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி  தலைமையில்  சட்டத்தரணிகளின் பாவனைக்காக சட்ட நூலகம் திறப்பு  வைபவம் நடைபெற்றதுடன் பிரதம அதிதியாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி கௌரவ அதிதிகளாக    கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அடிப்படையில்  இயங்கி கொண்டே இருக்க வேண்டும்.கற்பவனாக இரு அல்லது கற்று கொடுப்பவனாக இரு என்று சொல்வார்கள்.குறைந்தது கற்பவனுக்கு உதவி செய்த ஆளாகவாவது இரு சோம்பேறியாக இருந்து விடாதே என்பார்கள்.கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதியை பாரக்கின்ற போது இவ்வாறான விடயங்கள் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றன.அடுத்து வருகின்ற தலைமுறையான இளம் சட்டத்தரணிகளுக்கு இந்நூலகம் உந்துசக்தியை வழங்கும் .நீதி வரம்பிற்குள் நின்று  இளம் சட்டத்தரணிகள் தங்களது சேவைகளை செய்ய வேண்டும்.இல்லாவிடின் குறித்த சட்டத்தரணியை அவரது கட்சிக்காரரே விமர்சிக்கின்ற சூழ்நிலை வரும்.எனவே தான் சட்டத்தரணிக்கும் அவரது கட்சிக்காரருக்கும் தகுந்த இடைவெளியை பேணுவதன் ஊடாக உரிய மரியாதையை சட்டத்தரணிகள் பெற்றுக்கொள்ள முடியும்.இந்த இடைவெளியை தொடர்ச்சியாக பராமரிப்பதன் ஊடாக நிலையான ஒரு உறவினை கட்டியெழுப்ப முடியும் .என்றார்.
சட்டத்தரணிகள் தங்களது சேவைகளை செய்ய வேண்டும்.இல்லாவிடின் குறித்த சட்டத்தரணியை அவரது கட்சிக்காரரே விமர்சிக்கின்ற சூழ்நிலை வரும்.எனவே தான் சட்டத்தரணிக்கும் அவரது கட்சிக்காரருக்கும் தகுந்த இடைவெளியை பேணுவதன் ஊடாக உரிய மரியாதையை சட்டத்தரணிகள் பெற்றுக்கொள்ள முடியும்.இந்த இடைவெளியை தொடர்ச்சியாக பராமரிப்பதன் ஊடாக நிலையான ஒரு உறவினை கட்டியெழுப்ப முடியும் .என்றார்.

இறுதியாக சிரேஸ்ட சட்டத்தரணிகள் பலரது பங்களிப்பில் கிடைக்கப்பெற்ற பெறுமதியான சட்டப்புத்தகங்கள் உத்தியோகபூர்வமாக புதிய சட்ட நூலகத்திற்கு வழங்கப்பட்டு நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.



 

 


தொடர்ந்தும் தலைமுறை தலைமுறையாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இலங்கையை வைத்திருக்க முடியாது - அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ். 


நூருல் ஹுதா உமர் 


சமூர்த்தி பயனாளிகள் தொடர்ந்தும் சமூர்த்தி பெறுபவர்களாக இருக்காமல் தொழில் முயற்சியாளர்களாக மாறவேண்டும். எங்களின் பயனாளிகள் நாங்கள் வழங்கியவற்றை கொண்டு முன்னேறுகின்ற போது எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். எல்லா விடயங்களுக்கும் அரசாங்கம் வழங்கும் இலவசத்தை நோக்கி காத்திராமல் நாங்கள் சுயமாக முன்னேற வேண்டும். எமது நாட்டு மக்களை பராமரிக்க இலவச மருத்துவம், இலவச கல்வி, சமூர்த்தி போன்ற பல்வேறு விடயங்களை அரசாங்கம் வழங்கி வருகிறது. இப்படியான நாட்டுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம். தொடர்ந்தும் தலைமுறை தலைமுறையாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இலங்கையை வைத்திருக்க முடியாது. இதனை மாற்றியமைக்க நாங்கள் எங்களிலிருந்து மாற்றத்தை உருவாக்கி சொந்தக்காலில் நிற்கும் வகையில் மாற வேண்டும் என அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தெரிவித்தார். 


புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு சாய்ந்தமருது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப். றிகாஸா ஷர்பீனின் முயற்சியினால் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு மலேசியா மற்றும் உள்நாட்டு தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் (14) செவ்வாய்க் கிழமை மாலை சமுர்த்தி வங்கிச் சங்க கூட்ட மண்டபத்தில் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில், 


நாட்டில் பொருளாதார நெருக்கடி இருக்கிறது. அரசாங்கத்தினால் எல்லா விடயங்களையும் சமாளிக்க முடியாது. எரிபொருள், மருந்து கொள்வனவு போன்றவற்றுக்கு அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவழிக்கிறது. இதனிடையே தான் வருமானம் குறைந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. நாட்டில் கொரோனா அலை வீசிய போது சமூர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் தமது உயிரையும் மதியாமல் களத்தில் நின்று பணியாற்றி பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்தார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடுமையாக உழைத்தார்கள். இதனால் நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் திறமையான மூன்று உத்தியோகத்தர்களை கொரோனாவில் இழந்தோம். சமூர்த்தியினால் மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதன் ஒரு கட்டமாகவே தனவந்தர்களின் உதவியுடனான இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். வேலைத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுப்பதில் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது முதன்மையான செயலகமாக திகழ்கிறது என்றார். 


இந்நிகழ்வில் விசேட அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷீக், கௌரவ அதிதிகளாக சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ.மஜீத், கருத்திட்ட உதவியாளர் எம்.எம்.எம்.முபாறக், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.சர்பீன், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன், செயலாளர் எம்.முபீதா, முன்னாள் தலைவர் ஏ.அலாவுதீன், கணனி உத்தியோகத்தர் எஸ்.சாபித் அக்மல்  உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இதன்போது பயனாளிகளுக்கு அதிதிகளினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் செயலாளர் எம்.முபீதாவின் உதவியுடன் சாய்ந்தமருது - 05 ஆம் பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


 (சர்ஜுன் லாபீர்)


கல்முனை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட Sun Gloaming 2023ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு இன்று(11) காலை 9.30  மணியளவில்  கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் மருதமுனை கலாசார மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் ஓய்வு பெற்று சென்ற  மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவித்து நினைவு சின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அத்தோடு கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளரும், கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாருமான ஏ.எச்.அன்சார் கலந்து கொண்டு சிறப்பித்தார்

மேலும்  விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ்,அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.எல் ஆதம்பாவா, நிந்தவூர் பிரதேச செயலாளரும் முன்னாள் அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளருமான சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்தீப்,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆசீக்,இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம் ரஷ்ஷான்(நளிமி), பொத்துவில் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்
எஸ் சகுதுல்.நஜீம்,கல்முனை மாநகர பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம் அசீம், நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர் ஜெசான் ஆசீக்,,மகா ஓயா உதவி பிரதேச செயலாளர் ஐமா நிஹ்மத்துல்லாஹ், உட்பட இன்னும் பல உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

 


(மாளிகைக்காடு நிருபர்)


நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம், ஐக்கியம் ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக அனைவருக்குமான உரிமைகளும் சேவைகளும் உறுதிப்படுத்தப்பட்டு மதிக்கப்படுதல் வேண்டும். என்ற அடிப்படையில் ACTED நிறுவனத்தின் அணுசரனையில்  இறக்காமம் ஹிக்மா சகவாழ்வு மன்றம் இணைந்து செயற்படுத்தும் "சகவாழ்வை கட்டியெழுப்புவதில்  இளைஞர்களின் பங்களிப்பு" எனும் செயலமர்வு அம்மன்றத்தின் தலைவர் எம்.ஐ. பாயிஸ் தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இறக்காமம் உதவி பிரதேச செயலாளர்  எம்.ஏ.சி. அஹமட் நஸீல் கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக கணக்காளர் றிம்ஷியா அர்சாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், கிராம நிலதாரி நிருவாக உத்தியோகத்தர் இந்திரசிறி யசரட்ன பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்ற இனவெறுப்பு செயற்பாடுகளின் பின்னர் தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம் உணரப்பட்டாலும், நமது நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையும் புரிந்துணர்வும் இதுவரையில் சரியான முறையில் ஏற்படுத்தப்படவில்லை.  நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்கான வேலைத் திட்டம் முதலில் மக்களின் நேரடி பங்கேற்பின் ஊடாகவே சகவாழ்வை உறுதிப்படுத்க முடியும். இந்நிகழ்விற்கு, வடக்கு மாகாண இளைஞர் சேவைகள் பணிப்பாளர் ஏ.அமீர் சிறப்பு வளவாளராக கலந்து கொண்டார். மேலும், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப், கிராம சேவை உத்தியோகத்தர்களான பீ.சாமிலா, எம்.எல். கிஷோர் ஜஹான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பீ.எம். சபானா உட்பட சகவாழ்வு மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்

 

பாறுக் ஷிஹான்




அம்பாறை டி.எஸ்.சேனநாயக்கா பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டெனிஸ் விளையாட்டு திடல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை(18) ஆரம்பமான இந்நிகழ்வானது அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டெனிஸ் திடல் பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.அத்துடன் கண்காட்சி போட்டி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டு அதிதிகளாக கலந்து கொண்டோர் அதில் பங்கேற்று விளையாடினர்.


தொடர்ந்து சமய ஆராதனை அதிதிகள் விளக்கேற்றல் வரவேற்புரை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு திடல் தொடர்பிலான பெட்டக காட்சி அத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய டெனிஸ் திடல் அம்பாறை டி.எஸ் சேனநாயக்கா பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

 குறித்த நிகழ்வில் அம்பாறை அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ டக்ளஸ்  கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத் இலங்கை டென்னிஸ் சங்க தலைவர் இக்பால் பின் இஷாக்   அம்பாறை மாவட்ட   பிரதி பொலிஸ் மா அதிபர்  தமயந்த விஜய ஸ்ரீ  இராணுவ டென்னிஸ் சங்க உப தலைவர் பிரிகேடியர் பி.விதானகே  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்க  உள்ளிட்ட கிழக்கு மாகாண  முப்படை உயரதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் பொலிஸார் பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர். 

உருவாக்கப்படுவதன் நோக்கம் அம்பாறை நிர்வாக மாவட்டத்தில் 456 பாடசாலைகள் உள்ளன. ஆனால் அவற்றில் டென்னிஸ் மைதானங்கள் எதுவும் இல்லை. திகாமடுல்ல மாவட்டத்தில் இருந்து டென்னிஸ் வீரர்களை உருவாக்குதல்.இந்த டென்னிஸ் வீரர்களை  தேசிய மட்டத்தில் இருந்து சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் 27.10.2022 அன்று டி.எஸ்.சேனநாயக்கா கல்லூரியில் டென்னிஸ் மைதானம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.


 குறித்த புதிய டென்னிஸ் மைதானம் 02 மாதங்கள் 20 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதுடன்  இந்த டென்னிஸ் மைதானத்தின் செலவு 58 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும்.மேலும் இந்த  டென்னிஸ் மைதானம்  நிர்மாணமானது   டி.எஸ் சேனநாயக்க கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.அத்துடன் இந்த நிர்மாணத்திற்கு அம்பாறை வர்த்தக சங்கம் மற்றும் வர்த்தகர்கள்   சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இது தவிர  டென்னிஸ் மைதானத்தை நிர்மாணிப்பதற்கான பணியாளர்களை  இலங்கை இராணுவம்  இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் பங்களிப்புகளை வழங்கி இருந்தது.இந்த மைதானத்தை நிர்மாணிப்பதற்கான தொழில்நுட்பப் பங்களிப்பை இலங்கை இராணுவ டென்னிஸ் சங்கத்தின் பிரிகேடியர் பிரியங்கர விதானகே வழங்கினார்.அத்துடன் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் மற்றும் அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.என்.கே. திரு. தமயந்த விஜய ஸ்ரீ முன்னின்று வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.