நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பெரும்பாலான பிரதேசங்களில் அனர்த்த நிலமைகள் ஏற்பட்டுள்ளன.
அறுகளில் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளதால் சில பிரதேசங்களில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
காலி மாவட்டம் உள்ளிட்ட மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற மலையப் பிரதேசங்களில் மண் சரிவு அபாயம் தொடர்வதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 58 குடும்பங்களின் 222 பேர் நிலவுகின்ற காலநிலையால் பாதிக்ப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முதின மஞ்சுள கூறினார்.
காலியின் சில பிரதேசங்களில் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.
இது தவிர வவுனியா பிரதேசத்தில் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
இதேவேளை மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழையை எதிர்பார்க்கமுடியும் என்றும், விசேடமாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆங்காங்கே ஓரளவுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தெற்கு பக்கமாக காற்று வீசுவதுடன் காற்றின் வேகம் 30 முதல் 40 கிலோமீற்றரை கொண்டதாக இருக்கும். மன்னாரிலிருந்து கொழும்பு காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசத்தில் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் என்றும் வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது
-சிவாணிஸ்ரீ- இரத்தினபுரி அங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான, ஹிரிணிரத்ன மங்கலிகா (வயது 32) என்பவரை, கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என இரத்தினபுரி பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் கடைசியாக இரத்தினபுரி பஸ்தரிப்பு நிலையத்தில் நின்றுகொண்டிருந்ததாக, பஸ்தரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீவி கமராவின்மூலம் கண்டறியப்பட்டது. அதன் பின்னரே இவர் காணாமல் போயுள்ளார். இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், 071-9186357, 0724904379 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறியத்தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
கூட்டு எதிர்க் கட்சியின் இரத்தினபுரிக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது
போராட்டத்துக்கு உயிர் கொடுக்கும் புதிய மக்கள் சக்தி எனும் தொனிப் பொருளில் இன்றைய கூட்டம் நடைறுகின்றது.
இந்த அரசாங்கத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிறுத்துதல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துவதை நிறுத்துதல் என்பன இக்கூட்டத்தின் செய்தியாக மக்களுக்கு சென்றடையவுள்ளன.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால், இரத்தினபுரி சீவலி மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு கூட்டத்துக்கு, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வந்தடைந்தார்.
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
விடுதி வசதிகளை பெற்றுக் கொண்டுள்ள மாணவர்கள் இன்று விடுதிகளுக்கு திரும்ப வேண்டும் என சப்ரகமுவ பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விடுதி வசதிகளை பெற்றுக் கொண்டுள்ள மாணவர்கள் இன்று மாலை 6 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு திரும்ப வேண்டும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை வைரஸ் காய்ச்சலொன்று மாணவர்களிடையே பரவி வருவதாக தெரிவித்து கடந்த 08 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும் மாணவர்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கே பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
கோகாலை அரநாயக்க பகுதியில் மண்சரிவில் சிக்கி காணாமற்போயுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவில் சிக்கியவர்களின் சடலங்களை மீட்டுத்தருமாறு அவர்களின் உறவினர்கள் வலியுறுத்தி வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
அரநாயக்க மணிசரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 69 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
அவற்றில் 27 பேரின் சடலங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதுடன, 21 பேரின் உடற் பாகங்கள மாத்திரமே மீட்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 21 பேரின் சடலங்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை மண்சரிவில் சிக்கி காணாமற்போயுள்ள 131 பேரை தேடி தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக, மலையகப் பகுதியான கேகாலை மாவட்டத்தில் தொடர் மழையும் அதனை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டன. இச்சூழலில், நிலச்சரிவில் சிக்கி 134 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கை ராணுவத்தின் தளபதி சுதாந்த ரனசிங்க பேசுகையில், அரநாயக்க பிரதேச நிலச்சரிவில் சிக்கி உள்ளோரை உயிருடன் மீட்பதற்கான சாத்திய கூறுகள் குறைவு என கூறியுள்ளார். ''நிலச்சரிவு ஏற்பட்ட போது காணமல் போன 134 பேர் இந்நேரம் இறந்திருக்கலாம் என அஞ்சுகிறேன். இருந்தாலும், எங்களுடைய மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். மீட்கப்படும் சடலங்கள் உடனடியாக உரிய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்'' என்றார்.
மேலும், அரநாயக்க பிரதேசத்தில் இதுவரை எந்த உடல்களையும் கண்டெடுக்கவில்லை எனவும், புலத்கோபிட்டிய பிரதேசத்தில் மேலும் 5 உடல்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புலத்கோபிட்டிய பிரதேசத்தில் 16 பேர் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த பிரதேசத்தில் 10 பேர் வரை மரணமடைந்துள்ளனர்.
இலங்கை கேகாலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற நிலச்சரிவு அனர்த்தங்களின் பின்னர் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், காணாமலும் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை மாலை அரநாயக்க பிரதேசத்திலும், இரவு புலத்கோபிட்டிய பிரதேசத்திலும் இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
அரநாயக்கா பிரதேசத்தில் இடம் பெற்ற நிலச்சரிவு சம்பவத்தின் பின்னர் பாதிப்புக்குள்ளான மூன்று கிராமங்களை சேர்ந்த சுமார் 150 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகின்றது.
காணாமல் போனதாக கூறப்பட்டவர்களில் இதுவரை 17 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் கூறியுள்ளது.
68 ஆண்களும், 57 பெண்களும் என 125 பேர் காணாமல் போயுள்ளதாக அவர்களின் குடும்ப உறவுகளின் தகவல்கள் மூலம் அறிய முடிவதாக அரநாயக்க பிரதேச செயலாளரான இஸற் ஏ.எம்.பைஷால் கூறுகின்றார்.
66 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 1500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலத்கோபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிழந்துள்ளதாக கூறப்படும் 16 பேரில் இதுவரை 5 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்கின்றார் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரான அ. பாஸ்கரன்.
காணாமல் போயுள்ள ஏனையவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலத்கொஹுபிட்டிய, களுபஹனவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் தோட்ட குடியிருப்பு தொகுதி ஒன்று மண்ணில் புதைந்துள்ளது.
இதனால் 06 குடியிருப்புக்கள் இவ்வாறு மண்ணுக்குள் புதைந்துள்ளதுடன், 16 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை அரநாயக்க மற்றும் புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிகளில் இலங்கை விமானப் படையினர் இணைந்துள்ளனர்.
இன்று காலை 6.00 மணி முதல் மண்சரிவு ஏற்பட்ட பிரதேசங்களை கண்கானிக்கும் பணிகளில் பெல் 212 என்ற ஹெலிகப்டர் ஈடுபட்டதாக விமானப் படை கூறியுள்ளது.
இந்தக் கண்கானிப்பின் பின்னர் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் படி இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளின் வழிகாட்டலுடன் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக விமானப் படை கூறியுள்ளது.
அதன்படி மீட்புக் குழுவினர் இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் குழுவினருடன் எம்.ஐ.17 வகை ஹெலிகப்டர் ஊடாக அரநாயக்க பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.