#WorldDeafDay
பல விஷயங்களில் ஏராளமான இன்னல்களைச் சந்தித்து வரும் அவர்களுக்குச் சமூகத்தில் உரிய வசதிகள் செய்துதர வலியுறுத்தி ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிறன்று 'உலக காது கேளாதோர் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.
காது
வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு சூழல் ஏற்படும். ஆம்... இந்த உலகத்திலிருந்து தனித்து விடப்பட்டதைப்போன்று உணர்வீர்கள். ஆனால், உலகில் 44.6 கோடி பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு குறைபாட்டால் தங்களின் கேட்கும் திறனை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறி இருக்கிறார்கள். அவர்களில் பலர் உபகரணங்கள் உதவியுடன் கேட்கலாம். ஆனால், ஒரு பாடலை நாம் கேட்டு ரசித்துக் கொண்டாடும் அளவுக்கு அவர்களால் கேட்க முடியாது.
பல விஷயங்களில் ஏராளமான இன்னல்களைச் சந்தித்து வரும் அவர்களுக்குச் சமூகத்தில் உரிய வசதிகள் செய்துதர வலியுறுத்தி ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிறன்று 'உலக காது கேளாதோர் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தை உலக காது கேளாதோர் அமைப்பு, 1958-ல் உருவாக்கியது. அந்த வகையில் இந்த வருடம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. செவித்திறன் பாதிப்பு இன்னும் முப்பது ஆண்டுகளில் இரண்டு மடங்காகும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. உலக அளவில் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 44.6 கோடி பேரில், 3.4 கோடி பேர் குழந்தைகள்.
பாதிப்பு
"பிறந்த குழந்தைகளுக்கு செவித்திறன் பாதிப்பு ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நெருங்கிய உறவில் திருமணம், கர்ப்பகாலத்தில் தாய்க்கு வைரஸ் பாதிப்பு, பிறந்தவுடன் குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு, மூச்சுத்திணறல் பாதிப்பு போன்ற காரணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு செவித்திறன் பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது. அப்படி ஏதாவது பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக `ஓடோகோஸ்டிக் எமிஷன் டெஸ்ட்' (Otoacoustic Emissions Test) செய்யவேண்டியது அவசியம். அதில் குழந்தைக்கு கேட்கும் திறனில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், மூன்று மாதம் கழித்து மீண்டும் பேரா டெஸ்ட் (Bera test - Brainstem evoked response audiometry) செய்து அறுவை சிகிச்சை அல்லது மருந்துகளின் மூலம் பாதிப்பைச் சரிசெய்வோம். உடல்நலக் குறையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனைகளிலேயே இந்தச் சோதனைகளைச் செய்வார்கள். அதைத்தாண்டிப் பெற்றோரும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்" என்கிறார் முத்து சித்ரா.
காதுகேளாமை பாதிப்பை குழந்தைப் பருவத்திலேயே கண்டறிந்தால் 60 சதவிகித பாதிப்பைச் சரிசெய்துவிட முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
"ஒரு வயதுக்கு மேலாகியும் குழந்தைக்குப் பேச்சு வராமல் இருந்தால் ஏதாவது சத்தம் கேட்டுத் திரும்பாமல் இருந்தால் அவர்களுக்குக் காது கேட்பதில் பிரச்னை இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்து கொள்ளும் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
காதுகேளாமை
பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி காது அடைத்துக்கொள்வது, காதில் சீழ் வடிதல், உதட்டுப்பிளவு போன்ற பாதிப்புகள் இருந்தால் செவித்திறன் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, பெற்றோர்தான் குழந்தைகளுக்கு கேட்கும் திறன் குறைகிறதா, சீழ் வடிகிறதா என்பதைக் கண்காணித்து மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லவேண்டும்.
பெண்களைப் பாதிக்கும் Osteosclerosis என்ற காது எலும்பு பாதிப்பு நோயாலும் செவித்திறன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பு முப்பது வயதுக்கு மேலுள்ள பெண்களுக்குத்தான் ஏற்படுகிறது. இது தாயின் மூலம் பிள்ளைகளுக்கு வர வாய்ப்பு உள்ளது. ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் எளிய அறுவை சிகிச்சை மூலம் இதைச் சரிசெய்யலாம்.
டிரைவர்கள், அதிகமாகச் சத்தத்தை எழுப்பும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், காவல்துறையினர், ஹெட்ஃபோனை அதிக சத்தமாக வைத்துக் கேட்பவர்களுக்கு (Noise-induced hearing loss) என்னும் செவித்திறன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. முறையான பாதுகாப்புக் கருவிகளுடன் வேலை செய்தால், சத்தமாக ஹெட்ஃபோன் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
காதில் உள்ள நரம்புத் தேய்மானம் காரணமாகவும் செவித்திறன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. காதில் சத்தம் கேட்பது, அடிக்கடி மயக்கம் ஏற்படுவது போன்றவை நரம்புத் தேய்மானத்தின் அறிகுறி. இப்படி ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
அதிக ஒலி
காது கேட்க உதவும் உபகரணங்களின் உதவியுடன் இந்தப் பாதிப்பை ஓரளவு சரிசெய்யலாம். காது, மூக்கு, தொண்டை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. அவற்றில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவரிடம் சென்றுவிடுவது நல்லது" என்கிறார் முத்து சித்ரா.
Post a Comment
Post a Comment