உடனடியாக நியமானத்தில் உள்வாங்க வேண்டும்


பாறுக் ஷிஹான் 
 
இலங்கை உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறியை முடித்தவர்கள் வேறு வேலைகள் செய்து கொண்டு படிக்கும் வெளிவாரியன பட்டதாரிகள் போன்றவர்கள் அல்ல. நாங்கள் நான்கு வருடங்கள் கற்பதுடன், உரிய முறையில் பயிற்சியையும் பெற்றவர்கள்.உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடு இல்லாமல் உடனடியாக நியமானத்தில் உள்வாங்க வேண்டும்  என தொழில் ரீதியான தகுதி வாய்ந்த இலங்கை உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்க பொது செயலாளர் எம்.ஹுசைன் முபாரக் தெரிவித்தார்.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம், ஸ்ரீலங்கா அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை தொழிற் சங்க  சம்மேளனம், இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கம், இணைந்து ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

கடந்த கால ஆட்சி எல்லாம் மாற்றியமைப்போம் என்ற எண்ணத்தில் தான் இந்த நாட்டில் நல்லாட்சி உருவாக்கப்பட்டது ஆனால் இன்று மற்றய விடையங்களில  அபிவிருத்திகளும் முன்னேற்றங்களும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று இருந்தாலும் பட்டதாரிகள் மிகவும் மந்தகதியில் தான் இந்த நாட்டில் இருக்கும் அரசாங்கம் பட்டதாரிகளை பார்க்கின்றது நடத்துகின்றது என்றால் அது மிகையாகாது.

 கடந்த காலங்களில் 9000 க்கும் மேற்பட்ட HND பட்டதாரிகள் துறைசார்ந்த நியமனம் வழங்கப்பட்டது. எங்களுடைய கல்வி நிலையானது  வர்த்தக இளமானி பட்டத்துக்கு சமனானது என இந்த அரசாங்கம் தெரிவித்திருந்தும் தொழில் வழங்குவதில் பாராபட்சம் இருக்கிறது. இந்த நாட்டின் சகல சேவை வழங்கும் திட்டத்துக்கும் நாங்கள் பொருத்தமானவர்களாக இருக்கிறோம்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாண சபை மற்றும் பிரதமர் காரியாலயத்தில் எங்களின் பிரச்சினைகளை தெளிவாக விளக்கி பேச்சுவார்த்தை நடத்தியும் உள்ளோம். எங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய பல மகஜர்களை ஜனாதிபதி, பிரதமர், உரிய அமைச்சர்களுக்கு வழங்கியிருந்தும் பயன் எதுவுமில்லை.

உரிமைக்காக்க போராடும் போது எங்களின் மீது தண்ணீரை பீச்சி அடித்தது அவமானப்படுத்துகிறார்கள், இந்நாட்டின் அபிவிருத்தியில் பங்காளர்களாக மாற இருக்கும் குறித்த பட்டாதாரிகளாகிய எங்களையும் உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடு இல்லாமல் உடனடியாக நியமானத்தில் உள்வாங்க வேண்டும் என்பதே எமது அழுத்தமான கோரிக்கையாகும் என்றார்.