நடிகரொருவர் முகக் கவசம் அணியாமையால் காவல் துறையால் கண்டிக்கப்பட்டார்



 இலங்கை சிங்களத் திரைப்படத் துறையில் பிரபலமாக இருந்த வில்லன் நடிகரான வில்சன் கரு அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் பணத்தை பெறுவதற்காக சென்றபோது, முகக் கவசம் அணியாமை, பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்னிந்திய பழைய தமிழ் திரைப்படங்களில் நம்பியார் எப்படி பேசப்படுவாரோ, அவ்வாறு சிங்களத் திரைப்படங்களில் வில்சன் கரு பெயர் பெற்ற வில்லன் நடிகராக திகழ்ந்தார்.

கிருலப்பனை பிரதேசத்தில் சிறிய வீடொன்றில் வசித்து வரும் இவர், பொருளாதார கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாக நமது சிங்கள சகோதரர்கள் சிலர் முகப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர்.
முதலாவது கொரோனா அலையின்போது நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க அவரது வீடு தேடி சென்று உலர் உணவுப் பொருட்களையும் ஒரு தொகைப் பணத்தையும் அவருக்கு வழங்கியதை சமூக ஊடங்களில் அப்போது காணக்கிடைத்தது.

பொருளாதார கஷ்டத்தின் மத்தியில் கடும் மன அழுத்தத்துடன் பலரும் வாழ்ந்து வருகின்றனர். நடிகர் கருவும் அதற்கு விதிவிலக்கல்ல.
மறைந்த நடிகர்களான நடிகர் காமினி பொன்சேக்கா, நடிகர் விஜய குமாரதுங்க போன்றோர்களுடன் நடித்த இந்த புகழ்பெற்ற நடிகரின் நிலை பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நிர்க்கதி நிலையில் உள்ள இந்த நடிகரின் நிலையை பார்க்கும் போது, மக்களின் பணத்தை கொள்ளையிட்ட பலரும் சுதந்திரமாக இருப்பது ஞாபகத்துக்கு வருவதாக சிங்கள சகோதரர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.