ஐபிஎல் 2020: தொடங்குகிறது திருவிழா


 


கொரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் நடக்கவேண்டிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர், தாமதங்கள் மற்றும் இடர்பாடுகளையும் தாண்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதாலும், கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் களமிறங்கும் முதல் தொடர் என்பதாலும், நடப்பு ஐபிஎல் தொடரின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

அதேவேளையில், இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களுக்கும், 2020 ஐபிஎல் தொடருக்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடப்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் புதியது.

ஐபிஎல் என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது மைதானத்தில் ஒலிக்கும் ஆரவார கோஷங்களும், நடனங்களும் தான். ஆனால், கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளால், இந்த தொடரில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை. இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விளையாட்டு வீரர்களுக்கும் பாதிப்பை தரக்கூடும்.