12 மணி நேரம் வேலை… மாத சம்பளத்திலும் மாற்றம்…! ஒக்டோபர் முதல் புதிய சட்டம் அமுல்…!


 

இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ள புதிய Wage Code கொள்கையின் பிரகாரம், தொழில் துறை உறவுகள், ஊதியம், சமூக பாதுகாப்பு - தொழில்சார் சுகாதார பாதுகாப்பு, பணி நிலவரம், ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. 

இந்த புதிய ஊதிய விதிகளை வருகிற ஒக்டோபர் மாதம் முதல் இந்தியா அரசு அமுலுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன்படி, 

புதிய ஊதியக் குறியீடு சட்டம் 2019 

*ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கவுள்ளது. தற்போது ஒரு நாளுக்கு 8 மணி நேர வீதம் 6 நாள்களுக்கு 48 மணி நேரமாக தொழில் நிறுவனங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. 

புதிய மாற்றங்களில் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதி அப்படியே இருக்கும். மாறாக ஒரு நாளுக்கான வேலை நேரம் அதிகரிக்கப்படவுள்ளது. 

ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். மீதமிருக்கும் 3 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இது ஒவ்வொரு தொழிலாளியின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும். ஏனெனில் அனைவராலும் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது. 

*உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 240 வரை விடுமுறை எடுக்கலாம் என்றிருந்தது. அது தற்போது 300 நாட்களாக உயர்த்தப்படவுள்ளது. 

*புதிய விதிகளின்படி ஊழியர்களுக்குக் கொடுக்கும் அடிப்படை ஊதியம் (Basic Salary) குறைந்தபட்சம் 50 சதவீதம் இருக்க வேண்டும். இதுதவிர்த்து வழங்கப்படும் வீட்டு வாடகை படி, அகவிலைப் படி, பயண படி உள்ளிட்டபடி தொகை 50 சதவீதத்துக்கு மேல் செல்லக் கூடாது. 

அடிப்படை ஊதியம் அதிகமானால் PF பிடித்தமும் அதிகரிக்கும். இதனால் மாத சம்பளம் இனி குறையும். ஆனால் ஓய்வுபெற்ற பின் கிடைக்கும் தொகை உயரும்.

- Kayal