நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது




 


துருக்கி, சிரியாவில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கட்டட இடிபாடுகளில் இருந்து 3 நாட்களுக்குப் பிறகு பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதால், காணாமல் போன மேலும் பலர் உயிருடன் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள இஸ்கேண்டிருன் நகரத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், அங்கே நிலநடுக்கத்தால் சரிந்து கிடந்த அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் இடிபாடுகளுக்கு அடியில் ஒருவர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளை உணர்ந்தனர். இதையடுத்து, அங்கு சுற்றிலும் குழுமியிருந்த மக்களை அமைதி காக்குமாறு அறிவுறுத்திய அவர்கள், கிரேன் போன்ற தங்களது இயந்திரங்களின் இயக்கத்தையும் நிறுத்தினர்.

சில நிமிட அமைதிக்குப் பின்னர், அங்கு பெண் ஒருவர் உயிருடன் இருப்பதை கண்ட மீட்புக் குழுவினர், ஆம்புலன்சை வரவழைத்தனர்.

நிலநடுக்கம் தாக்கிய 3 நாட்களுக்குப் பிறகு பெண் உயிருடன் மீட்கப்பட்டதைக் கண்டதும் சுற்றிலும் கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதே கட்டடத்தில் வசித்த தனது உறவினர்களின் கதி என்னவென்று இன்னும் தெரியாத ஒரு பெண், அங்கிருந்த காரின் முன்பகுதியில் முகம் புதைத்து அழுததைக் காண முடிந்தது.