நம்பிக்கைக்குரிய தொழில்களுக்கான நுழைவாயில்



 நூருல் ஹுதா உமர்


கிழக்கில்  மிகப்பெரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை மாதிரியாக்க தொழில் கண்காட்சி 2023, இன்று (31-05-2023) இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. பல்கலைக்கழகத்துடன் இணைந்து SLASSCOM ஆல் நடத்தப்படும் இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு, நமது நாட்டில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள திறமையாளர்களை ஒன்றிணைக்கும் வகையில் மிகப்பெரிய தொழில் கண்காட்சியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஏ. ரமீஸ் அவர்களின் பிரதம அதிதி உரையுடனும், SLASSCOM இன் தலைவர் திரு. ஆஷிக் அலி அவர்களின் அறிமுக உரையுடனும் தொழில் கண்காட்சி ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியை பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின் அனுசரணையாளர்களாக நாட்டின் IT மற்றும் BPM துறையின் வளர்ச்சியை ஆதரித்து, சக்தி வழங்கும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வந்துள்ளன. SimCentric Technologies, Axiata Digital Labs, HSenid Axcenze, HCL Tech, Topjobs, Dialog, LSEG, Abans மற்றும் நோர்வே தூதரகத்தின் ஆதரவு உட்பட பிற அனுசரணையாளர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை வழங்கிய நிறுவனங்களாக அமைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். அவர்களின் அர்ப்பணிப்பு இந்த நிகழ்வை சாத்தியமாக்கியுள்ளதுடன் எண்ணற்ற வாய்ப்புகளுக்கான தளத்தை வழங்குகிறது. இது IT மற்றும் BPM துறையில் வேலைவாய்ப்புக்களை பூரணப்படுத்தவதற்கான கதவுகளைத் திறக்கிறது.

நிகழ்வின்போது பல்கலைக்கழக துணைவேந்தர் தனது உரையில் பல முக்கியமான விடயங்களை எடுத்துரைத்தார். கணினி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகம் சார்ந்த மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட இது போன்ற வாய்ப்பு இதற்கு முன் கிடைக்காதவர்களுக்கு இந்த தொழில் கண்காட்சி ஒரு குறிப்பிடத்தக்க தளமாக விளங்குகிறது. வரலாற்று ரீதியாக, இதே போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் கொழும்பு போன்ற பெருநகரங்களில் தனிநபர்களுக்கு அணுகக்கூடியதாக இருந்தது. எவ்வாறாயினும், இந்த தொழில் கண்காட்சியானது கிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த தனிநபர்களுக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் பல துறைகளில் வௌ;வேறு சாத்தியக்கூறுகளை ஆராய அவர்களுக்கு உதவுகிறது.

பல்கலைக்கழகமும் அதன் ஊழியர்களும் மற்றும் மாணவர்களை இங்கு கூடியிருக்கும் அனைத்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், பட்டதாரிகள் மற்றும் இளங்கலை பட்டதாரிகளுக்கு, தங்கள் திறமைகள் மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது. இந்த தொழில் கண்காட்சி மாணவர்களை அவர்களின் கனவு வேலைவாய்ப்பை நோக்கி வழிநடத்தும் ஒரு ஊடகமாக செயல்படுகிறது. இது புதிய வாய்ப்புகளை சந்திக்கும் இடமாகும். இது மாணவர்கள் தொழில்துறை தலைவர்களுடன் இணைவதற்கும், வளர்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்த எதிர்காலத்தை இயலுமையாக்குவதற்கும் அனுமதிக்கிறது.

இந்த நிகழ்வு முழுவதும், மாணவர்கள் பரந்த அளவிலான தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதனூடாக IT மற்றும் BPM தொழிற்துறையின் சமீபத்திய போக்குகள், தொழில்நுட்பங்கள் மற்றும் வாழ்க்கைப் பாதைகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுகின்றனர். இந்த விலைமதிப்பற்ற தளத்தை இணைப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் தங்கள் திறனை வெளிப்படுத்துவதற்கும் அதிகம் பயன்படுத்துமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அத்துடன் மாணவர்களின் திறமைகள் பிரகாசிக்கவும் இவ் எண்ணற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்துமாறும் உபவேந்தர் கேட்டுக்கொண்டார்.

சமகாலத்தில் IT மற்றும் இயந்திர கற்றல் துறையில் மாணவர்களை ஈடுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆய்வுகள் கூட செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சியில் மாணவர்களின் ஈடுபாட்டை முதன்மைப்படுத்துகின்றன. இதற்கேற்ப துணைவேந்தர் அவர்கள் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞானப் பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களையும் பங்கேற்குமாறு ஊக்குவித்தமை எடுத்துக்காட்டத்தக்கதாகும். இந்த தொழில் கண்காட்சி பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நடைமுறை வேலை உலகிற்கான வாய்ப்புகளைத் திறக்கும் என்று நம்பப்படுகிறது.