ஸ்தாபக உபவேந்தரை செங்கம்பளமிட்டு வரவேற்றது!





(எஸ்.அஷ்ரப்கான்) 

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 27 வருட காலத்தில் பல குணாதிசயங்களை கொண்ட உபவேந்தர்களை தன்னகத்தே உள்வாங்கி அதன் கல்வி, ஆய்வு மற்றும் அபிவிருத்தி பாதையில் வீறு நடை போட்டு முன்னேறிச் செல்கின்றது.

அந்தவகையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சேவையாற்றிச் சென்ற உபவேந்தர்களில் பல்கலைக்கழகத்தின் ஆயுள் உள்ளமட்டும் என்றுமே நினைவு கூறத்தக்க பெயர் நாமம் என்றால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிற்பி முன்னாள் உப வேந்தர் பேராசிரியர். எம்.எல்.ஏ. காதர் அவர்களாவார்.

பேராசிரியர். எம்.எல். ஏ. காதர் அவர்கள் சுகயீனமுற்ற நிலையிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை தனது உயிருடன் சுமப்பவர். அவரை செங்கமளமிட்டு வரவேற்று அவரைக் கண்டு அளவளாவும் அரிய நிகழ்வு இன்று 2024.02.21 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரது தலைமையில் இடம்பெற்றது.

பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடாதிபதிகள், நூலகர், பதில் நிதியாளர் மற்றும்  பேராசிரியர்கள்  உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகம் திரண்டிருந்தது.

நிகழ்வின்போது உபவேந்தர் றமீஸ் அபூபக்கர், கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம் மற்றும் கலை கலாச்சார பீட அரசியல்துறையின், துறைத்தலைவர் கலாநிதி எம்.அப்துல் ஜப்பார் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். அத்துடன் சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், பேராசிரியர் எம்.எம். பாஸில், நூலகர் எம்.எம். றிபாஉடீன், கலாநிதி எம்.அப்துல் ஜப்பார், பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் கல்விசார ஊழியர் சங்கத்தின் செயலாளர்  எம்.எம்.எம். காமில் உள்ளிட்டோர் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர். எம்.எல். ஏ. காதர் தொடர்பான தங்களது உள்ளக்கிடக்கைகளை வெளியிட்டனர்.

மறைந்த தலைவர் எம். எச். எம். அஷ்ரப் அவர்கள், கிழக்கில் யுத்த மேகம் சூழ்ந்த நிலையில்; கிழக்கு மண் மாணவர்கள் கண்ட அவலங்களை களைவதற்காக தனது எண்ணக் கருவில் தோன்றிய தென்கிழக்கிற்கான பல்கலைக்கழக உருவாக்கம் எனப்படுவது செயற்பாட்டு வடிவமாக ஆரம்பிக்கப்பட்டு; அது பின்னாடி தென்கிழக்கு பல்கலைக்கழகமாக உருவாக்கம் பெற்ற போது அதன் முன்னோடியாக அதன் கல்வி அதன் ஆளணி அதன் உருவாக்கம் போன்றவற்றில் தன்னை முதன்மைப்படுத்தி தன்னை ஒரு கடை நிலை ஊழியனாக அர்ப்பணித்து; இன்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உத்தியோகத்தர்கள் கடமையாற்றும் கிழக்கின் ஒரு கேந்திர நிலையமாக ஒரு சர்வதேச தர பல்கலைக்கழகமாக உருவாவதற்கு அதன் முதுகெலும்பாக செய்யப்பட்டவர்தான் என்றும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பேராசிரியர் எம்.எல்.ஏ காதர் அவர்கள்,

மறைந்த தலைவர் எம். எச். எம்.அஷ்ரப் அவர்களின் கனவுக்கு உருவம் கொடுத்து சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் முன் நின்றதுடன் தனது சேவைகாலத்தில் கலை கலாச்சார பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம் போன்றவற்றின் உருவாக்கங்களில் தன்னை முழு நேர ஊழியனாக அர்ப்பணித்து சேவையாற்றிய ஒரு செம்மல் பேராசிரியர். எம்.எல்.ஏ. காதர் அவர்கள்.

ஊழியர்கள் இடத்தில் வேலை வாங்குவதில் முகாமையாளராக இருப்பவர்கள் ஒவ்வொரு விதம் ஆனால் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்கள் ஒரு வித்தியாசம் என்பது உண்மையானது.

முற்போக்கு சிந்தனை, நேர்மை, கடமை தவறாமை போன்ற உயரிய குணங்களை தன்னகத்தே கொண்டதுடன் பெறாமை, வஞ்சகம், சூழ்ச்சி எதிர்வினை சார் குணங்கள் அறவே அற்றவர்.

பல்கலைக்கழகத்தின் கடைநிலை ஊழியர் தொடங்கி உயர்நிலை உத்தியோகத்தர் வரையும் தட்டிக் கொடுத்து அரவணைத்து அவர்களின் சேவைகளை பாராட்டி தோள் மீது தோள் கொடுக்கும் தோழனாகவும், வழிகாட்டும் வழிகாட்டியாகவும், ஆலோசனை செய்யும் ஆலோசராகவும், சுக துக்கங்களில் பங்கெடுக்கும் சகோதரனாகவும், தலைமை தாங்கும் தலைவனாகவும் செயற்பட்டு; இந்த பல்கலைக்கழக உருவாக்கத்தின் ஒவ்வொரு படித்தரங்களிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 

இதன் காரணங்களாலயே அனைத்து தரப்பு ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள் என அனைவராலும் என்றுமே நினைவு கூரத்தக்க ஒருவராக பேராசிரியர் எம்.எல்.ஏ காதர் அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்துகளுக்கும் இடமில்லை.

கிழக்கு மண்ணின் கல்வியின் தாகம் நிறைவேற வேண்டும் என்று ஒவ்வொரு கனப்பொழுதிலும் தனது ஒவ்வொரு சிந்தனைகளிலும் தனது மனம், என்ன ஓட்டங்களிலும் இருந்ததுடன் தான் சேவையாற்றிய தென்கிழக்கு பல்கலைக்கழகம் திறம்பட தாபிக்கப்பட்டு அதன் வெளியீடுகளில் எமது சமூகம், எமது பிராந்தியம், எமது நாடு போன்றவற்றிற்கு அங்கு பயின்றவர்கள் முதன்மையான நபர்களாக உள்வாங்கப்பட்டு சேவை ஆற்ற வேண்டும் அதேபோல பல்கலைக்கழகத்திலிருந்து வெளியாகும் மாணவச் செல்வங்கள் நாட்டின் சிறந்த கல்வியலாளர்களாக சேவையாற்ற வேண்டும் என்ற அவரது உயரிய அவா தற்பொழுது நிறைவேறி வருகின்றமை சிறப்பாகும்.

இன்று அவர் ஒரு நோயாளியாக தனது வீட்டில் முடங்கி இருந்த போதிலும் அவரது முற்போக்கு சிந்தனைகள், எண்ணங்களோ என்றுமே சமூகத்தின்பாலும் தனது பல்கலைக்கழகத்தின் எதிர்கால செயற்பாடுகளின்பாலும் தங்கியுள்ளது எமக்கான பெரும் வரப்பிரசாதமாகும்.

பல்கலைக்கழக சூழலில் இன்று நாம் எவ்வளவு உயரிய அடைவுகளை கண்டிருந்தாலும் அதன் அர்ப்பணிப்பு மிக்க உருவாக்கங்களுக்கு முதுகெலும்பாக தன்னை அர்ப்பணித்து செயலாற்றிய ஒரு செம்மல் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்கள் என்றும் எமது சமூகத்தாலும் எமது கல்வியலாளர்களாலும் நினைவு கூரத்தக்கவர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.