புபுரஸ்ஸயில் தீ விபத்து: 5 வீடுகள் தீக்கிரை; 28பேர் நிர்க்கதி



-பா.திருஞானம்- 
கலஹா, புபுரஸ்ஸ கிராம சேவகர் பிரிவு, டேசன் தோட்டம்  7ஆம் இலக்க பிரிவில், இன்று (25) முற்பகல் ஏற்பட்ட தீ விபத்தினால், 5 வீடுகளைக் கொண்ட குடியிருப்புத் தொகுதியொன்று, முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவத்தினால், பாதிக்கப்பட்ட 28 பேரும்,  தோட்ட சனசமூக நிலையத்தில், தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரக் கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், சம்பவத்தை கேள்வியுற்று ஸ்தலத்துக்கு விரைந்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இ.தொ. காவின்  உப தலைவர் எம்.எஸ்.எஸ் செல்லமுத்து¸ தொழிலாளர் தேசிய சங்க அமைப்பாளர் கே.சன்முகராஜ் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர், நிவாரண உதவிகளை வழங்கினர். பாதிப்புக்குள்ளான மக்களின் குடியிருப்புகளை உடனடியாக அமைத்து கொடுப்பதற்கு, மலைநாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்  நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.