பதுளை மாவட்டத்தில் 70% பகுதிகளில் மண்சரிவு அபாயம்





எம்.செல்வராஜா                             
பதுளை மாவட்டத்தில், 70 சதவீதமான பகுதிகள் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறங்கும் நிலையிலுள்ளதெனவும் எனவே, இவ்வாறான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அனர்த் நிலைமைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறம், பதுளை மாவட்டச் செயலாளர் நிமால் அபயசிறி கோரிக்கை விடுத்துள்ளார்.
பதுளை மாவட்ட பிரதேச செயலகத்தில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
“பதுளை மாவட்டத்தின் பெரும்பகுதி, அனர்த்தம் ஏற்படும் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், எழுபது சதவீதமான பகுதிகள், மண்சரிவு மற்றும் நிலம் தாழிறங்கும் நிலையிலுள்ளமைக் கண்டறியப்பட்டுள்ளன.
“பதுளை மாவட்டத்தின் 310 கிராம சேவையாளர் பிரிவுகளில், 6,188 குடும்பங்கள், அனர்த்தம் ஏற்படும் பகுதிகளில் தொடர்ந்தும் வசித்து வருகின்றனர். இக்குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியேறுமாறு, அனர்த்த அறிவிப்புகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
“இவ் அறிவுறுத்தலுக்கு அமைய இடம்பெயரும் குடும்பமொன்றுக்கு, 12 இலட்சம் ரூபாய் வரை,  இழப்பீடுகளை  வழங்குவதற்கும் ஏற்பாடுகளையும், மேற்கொண்டு வருகின்றோம்.
“தற்போது, பதுளை மாவட்டத்தில் மழை வானிலை நீடித்து வருவதால், மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படியும், மேட்டுநிலங்களில் வாழ்பவர்கள் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறங்கும் விடயங்களிலும், தாழ் நிலங்களில் இருப்பவர்கள் வெள்ள அபாயங்களிலிருந்தும் மிகுந்த எச்சரிக்கைகளுடன் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
“அனர்த்த முன்னெச்சரிக்கை விடுவிக்கப்பட்ட பகுதி மக்கள், மாவட்டச் செயலகத்தால் விடுவிக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்”  என்று அவர் மேலும் கூறினார்.