உள்நாட்டலுவல்கள் அமைச்சு, கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தை, மீண்டும் திருத்தி வெளியிடுவதில் காலம் தாழ்த்தப்படுவதால், முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனரெனத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளார்.
இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க, முஸ்லிம்களின் கலாசார உடையில் அபாயா அணிவதை அனுமதித்து, புதிய சுற்று நிருபத்தை விரைவில் வெளியிடுமாறு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்ட அரச ஊழியர்களின் ஆடை தொடர்பிலான சுற்று நிருபத்தில், முஸ்லிம் பெண்கள் பாரம்பரியமாக அணிந்து வந்த அபாயாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், அலுவலகங்களுக்குச் செல்வதில் முஸ்லிம் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். தேசிய உடை என்ற போர்வையில் பாரம்பரிய முஸ்லிம்களின் கலாசார ஆடைகள் மீது கட்டுப்பாடு விதிப்பதும், இஸ்லாமிய கலாசார விடயங்களில் தேவையற்ற நெருக்குதல்களை ஏற்படுத்துவதும் சமூகங்களுக்கிடையில் வீண் விமர்சனங்களை ஏற்படுத்துவதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment