வழங்கு முகமாக


இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு ஆதரவு வழங்கு முகமாக, குருநாகல் மாவட்ட முஸ்லிம் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (08) குருநாகல் 'புளூ ஸ்கை' ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய பட்டியல் வேட்பாளர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி ஸப்ரி, பிரபல வர்த்தகரும், தேசிய பட்டியல் வேட்பாளருமான மர்ஜான் ஹாஜியார், வடமேல் மாகாண பிரதான நீதித்துறை பிக்கு ரெகவ ஜினரத்ன தேரர், கொலம்பகம விகாராதிபதி பிரேம ரத்ன தேரர், ஜம்மியத்துல் உலமா சபையின் குருநாகல் மாவட்ட தலைவர், செயலாளர் உள்ளிட்ட உலமாக்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது 'காந்தா சவிய' பெண்கள் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட பொதுஜன பெரமுன தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரம், 'காந்தா சவிய' பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் அவர்களினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட வருகைதந்திருந்த அதிதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் வடமேல் மாகாண உறுப்பினர் முஹம்மட் தஸ்லீம் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.