வெள்ள அனர்த்தத்தினால் 10561 குடும்பத்தினர் பாதிப்பு!



எம் .ஜே பஸ்லின்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வந்த அடைமழை காரணமாக 10 ஆயிரத்து 561 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவுக்கு தகவல்கள் தெரிவித்தார். 


கடந்த 2 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தின் 9 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 3576 குடும்பங்களைச் சேர்ந்த 12304 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1965 குடும்பங்களைச் சேர்ந்த 5841 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



மேலும் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 1698 குடும்பங்களைச் சேர்ந்த 5283 நபர்களும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 73 குடும்பங்களைச் சேர்ந்த 217 நபர்களும், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 878 குடும்பங்களைச் சேர்ந்த 2670 நபர்களும், போரதீவுப்பற்று வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 482 நபர்களும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 933 குடும்பங்களைச் சேர்ந்த 2975 நபர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 1260 குடும்பங்களைச் சேர்ந்த 4584 நபர்களும், கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 16 குடும்பங்களைச்சேர்ந்த 59 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இது தவிர கிரான், செங்கலடி, மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, பட்டிப்பளை, போரதீவுப்பற்று பிரதேசங்களில் தலா ஒரு வீடுமாக மொத்தம் 7 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 


இவ் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சுகாதார விதிகளுக்கமைவாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.