அடை மழை வெள்ளத்திற்கு மத்தியிலும் பட்டிப் பொங்கல் நிகழ்வுகள்


 


சுகிர்தகுமார் 0777113659


அடை மழை வெள்ளத்திற்கு மத்தியிலும் அம்பாரை மாவட்ட மக்கள் இயற்கை தெய்வங்களுக்கு நன்றி செலுத்தியதுடன் உழவருக்கும் மனிதர்களுக்கும் உதவி செய்யும் பசுக்களுக்கும் நன்றி செலுத்த மறக்கவில்லை.

அந்த வகையில் உழவருக்கும் மனிதர்களுக்கும் பல்வேறு வகையில் வாழ்வாதார நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் பசுக்களுக்கு நன்றி கூறும் இன்றைய பட்டிப் பொங்கல் நிகழ்வுகள் இன்று சிறப்பாக இடம்பெற்றன.

கால்நடை உரிமையாளர்கள் மற்றும் வீடுகளில் பசுக்களை வளர்க்கும் மக்களும் இணைந்து இப்பண்டிகையினை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு வாச்சிக்குடா பிரதேசத்தில் உள்ள கால்நடை உரிமையாளர் ஆர்.சிவகுமார் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள மாட்டுக்கொட்டகை அலங்கரிக்கப்பட்டதுடன் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
 
பொங்கல் நிகழ்வோடு ஆரம்பமான வழிபாட்டு நிகழ்வுகளில் பசுக்களை நீராட்டி மாலை அணிவிக்கப்பட்டதுடன் விபூதி சந்தனம் சாத்தப்பட்டு தீபாராதனை நிகழ்த்தப்பட்டது.

பின்னர் சிறுவர்களும் பெரியோர்களும் இணைந்து பொங்கல் மற்றும் பழங்களை கொடுத்து பசுக்களை  மகிழ்ச்சிப்படுத்தியதுடன் அவற்றை போற்றி வழிபட்டனர்.

இடம்பெற்ற நிகழ்வில் அயலவர்களும் உறவினர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்