வைத்தியர்களின் அசமந்தப்போக்கு காரணமாக பொது சுகாதார ஆய்வாளர் மரணம்



மாரடைப்பு காரணமாக ஹிங்குராங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியொருவர் மின்சாரம் இன்மை காரணமாகவும் வைத்தியர்களின் அசமந்தப்போக்கு காரணமாகவும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஹிங்குராங்கொடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி, நேற்று முன்தினம் (13) மாலை மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
எனினும், வைத்தியசாலையில் மின்சாரம் இன்மை மற்றும் வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக அவரை பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்ற குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்தனர்.
இவ்வாறு நோயாளியை பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றும் போது, வழியில் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான எம்.ஜீ. சுனில் கருணாரத்ன என்பவராவார்.
குறித்த நபர் ஹிங்குராங்கொடை சுகாதார வைத்திய பணிமனையின் நிர்வாக பொது சுகாதார ஆய்வாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.