பஸ்சுடன், மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் மரணம்


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மிகிந்தபுற பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸூடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்றிரவு (25) இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை, அன்புவளிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆரை. ஸ்ரீகாந்த் (23 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை உயிரிழந்தவருடன் பயணித்த அதே இடத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (17 வயது) படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது கன்னியா பகுதியிலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனுடைய சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.