முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை


முஸ்லிம்கள் எவரும் இல்லாத அமைச்சரவை ஒன்று இன்று உருவாகியிருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் இது முதல்தடவையாக இருக்கலாம். 1930 களில் "தனிச் சிங்கள அரசாங்கம்" ஒன்று அமைக்கப்பட்டது. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தேர்தலைப் பகிஷ்கரித்த போது இந்த நிலை ஏற்பட்டது. அதேபோல, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட போது, இரு துருவங்களாகச் செயற்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகமும், ஜீ.ஜீ.பொன்னம்பலமும் இணைந்து 1976இல் தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைத்தார்கள். அதேபோல, தனித்தனித் துருவங்களாகச் செயற்பட்ட முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் இப்போது ஒன்றாக இணைந்திருக்கின்றார்கள்.
பௌத்த பேரினவாத அழுத்தம் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் ஒன்றை அவர்களுக்கு ஏற்படுத்திவிட்டிருக்கின்றது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது முக்கியமான ஒரு திருப்பம்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்ட இனவாதம் கடந்த ஒன்றரை மாத காலத்தில் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றது. பெருமளவு சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
முஸ்லிம்படத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA
கடந்த மாதம் இடம்பெற்ற இந்த வன்முறைகளில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டன. அதனைவிட முஸ்லிம் மருத்துவர்கள், உணவகங்களுக்கு எதிரான பரப்புரைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட சில ஊடகங்களும் இவ்வாறான பிரச்சாரங்களின் பின்னணியில் செயற்பட்டன.
இந்தப் பரப்புரைகளில் பெரும்பாலானவை ஆதாரங்களற்றவை. ஆனால், நன்கு திட்டமிடப்பட்ட முறையில், முஸ்லிம்களுடைய பொருளாதாரத்தை இலக்கு வைத்தவையாக இருந்துள்ளன. இந்தப் பிரச்சாரங்கள் முஸ்லிம்களுடைய பொருளாதாரம், சுதந்திரமான நடமாட்டம் என்பவற்றில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இவை அனைத்துக்கும் உச்சகட்டமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னின்று நடத்திய ஞானசார தேரர் பொது மன்னிப்பு கொடுக்கப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 6 வருட சிறைத் தண்டனையைப் பெற்றிருந்த தேரர், ஒன்பது மாத காலம் பூர்த்தியாவதற்கு முன்னதாகவே பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டமைக்கான நியாயமான காரணங்கள் எதுவும் ஜனாதிபதி தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.
கண்டியில் வெடித்தது போராட்டம்: முஸ்லிம் அமைச்சர், ஆளுநர்களை நீக்கக்கோரிக்கை
ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் அவரது சொந்த அரசியல் உபாயங்களுக்கு ஞானசாரரை விடுவிக்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம். ஆனால், அவர் விடுவிக்கப்பட்ட கால கட்டம் மிகவும் மோசமானது. முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகள் பௌத்த சிங்களவர்கள் மத்தியில் கடுமையாகத் தூண்டிவிடப்பட்டிருந்த ஒரு கால கட்டத்தில்தான் தேரர் வெளியே வந்தார்.
விடுவிக்கப்பட்ட தேரர், தியானத்தைச் செய்துகொண்டிருப்பார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த முஸ்லிம் விரோத உணர்வுகளுக்கு அவரும் தனது பங்கிற்கு பெற்றோல் ஊற்றினார்.
தன்னிடம் பல உண்மைகளும், தகவல்களும் இருப்பதாகக் கூறிய ஞானசாரர் அவற்றை ஊடகங்களுக்கு வெளியிட ஆரம்பித்தார். ஈஸ்டர் தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகள் குறித்த தகவல்கள் அவரிடம் இருந்திருக்கலாம். இவ்வாறான தகவல்கள் இலங்கையின் புலனாய்வுத்துறையினரிடம் கூட இருந்துள்ளதை உறுதிப்படுத்தும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகிக்கொண்டுள்ளன.
இந்த நிலையில், ஞானசாரர் வெளிப்படுத்திய தகவல்கள் வெறுமனே முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கு மட்டுமே உதவியதாக முஸ்லிம் தலைவர் ஒருவர் குறிப்பிடுகின்றார். அத்துடன், தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி அவர் சில தகவல்களை வெளியிட்டிருந்தாலும் கூட, அந்த ஆதாரங்களை அவர் வெளிப்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

முஸ்லிம் தலைவர்கள் எடுத்த முடிவு

கண்டியில் உண்ணாவிரதமிருந்த அத்துரேலிய ரத்தன தேரரைப் பார்வையிடம் பின்னர் ஞானசாரர் வழங்கிய காலக்கெடு, திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு முடிவுக்கு வந்தபோது கண்டியில் மட்டுமன்றி நாடு முழுவதிலுமே பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கத்துக்கும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில், பதற்றத்தைத் தணிக்கவும் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியைத் தணிக்கவும் முதலில் ஆளுநர்கள் பதவி துறந்தார்கள். பின்னர் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறந்தார்கள்.
ராஜிநாமா செய்தோர் பெயர்களும், அவர்களது அமைச்சகமும்
பதவி துறப்பதென்ற முடிவை எடுத்த பின்னர் அலரி மாளிகை சென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது முடிவை அவர்கள் அறிவித்த போது, அமைச்சர்கள் மங்கள சமரவீரவும், மனோ கணேசனும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிடுகையில், "இது இனவாதிகளுக்குப் பணிந்து இடம் கொடுக்கும் ஒரு பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என நாம் கூறினோம். எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் தம் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள்" எனத் தெரிவித்தார்.
உருவாகியிருந்த பதற்ற நிலையைத் தணிப்பதற்கும், தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் வெறுமனே இனவாத அடிப்படையிலானவை என்பதை உணர்துவதற்காகவும் இவ்வாறான துணிச்சலான முடிவை முஸ்லிம் தலைவர்கள் எடுத்திருக்கின்றார்கள்.
முஸ்லிம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இலங்கை ஆளுநர் ராஜிநாமா
ஆனால், இது அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டிருப்பதைப்போல மிகவும் மோசமான ஒரு முன்னுதாரணம்தான். பௌத்த சிங்கள இனவாதத்துக்கு பணிந்தே எந்தவொரு அரசாங்கமும் செயற்படுவதுதான் இலங்கையின் வரலாறு. இப்போது, அந்த இனவாதத்துக்குப் பணிந்து முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கட்சி அரசியலுக்குப் அப்பாற்பட்ட முறையில் பதவிகளைத் துறந்திருக்கின்றார்கள். இதன்மூலம், அவர்கள் சொல்லும் செய்தி என்ன?
அமைச்சர் பதவிகளைத் துறந்தாலும், அரசாங்கத்துக்கான ஆதரவைத் தாம் விலக்கப்போவதில்லை என்பதையும் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். அதனால், அரசாங்கத்துக்கு உடனடியான ஆபத்துக்கள் எதுவும் இல்லை. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற செய்தியை இதன் மூலம் அவர்கள் சர்வதேசத்துக்குச் சொல்லியிருக்கின்றார்கள்.
முஸ்லிம்படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI
இது ஒட்டுமொத்தமாக இலங்கைக்குப் பாதகமானது. இந்த நிலைமையைத் தொடரவிடுவது முஸ்லிம் மக்களை தனிமைப்படுத்துவதாகவும், சிங்கள இனவாதிகளை உற்சாகப்படுத்துவதாகவும் அமைந்துவிடும். தமிழ் மக்கள் விடயத்தில் கற்றுக்கொண்ட வரலாற்று அனுபவம் அதுதான்.
முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் சிங்கள இனவாதிகளுக்கு முதலாவது வெற்றியாக இருக்கலாம். இனி தமது அடுத்த இலக்கை நோக்கி அவர்கள் காய்நகர்த்த முற்படுவார்கள் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
அதாவது, அமைச்சர்களின் பதவி விலகல் பிரச்சனைக்கான தீர்வாக இருக்காது. மற்றொரு புதிய பிரச்சனைக்கான ஆரம்பமாகவே இருக்கும். இந்தப் பிரச்சனையைக் கையாளக்கூடிய தரிசனமும், அரசியல் முதிர்ச்சியும் உள்ள சிங்களத் தலைவர்கள் யாராவது உள்ளார்களா? ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நடைபெறும் அதிகாரப் போட்டியும், கிடைக்கக்கூடிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தம்மைப் பலப்படுத்திக்கொள்ள முற்படும் எதிர்க்கட்சியும் (பொது ஜன பெரமுன) உள்ள நிலையில், இந்தப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு ஒன்றை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?