இலங்கை - அரையிறுதிக்கு செல்லுமா?


இங்கிலாந்து அணியைக் காட்டிலும் 2 புள்ளிகள் குறைவாக எடுத்து ஐந்தாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி அரை இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது.
புள்ளி வரிசைப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகளே அரை இறுதி போட்டிக்கு செல்லும். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. அதே போல் ஆறு போட்டிகளில் விளையாட வேண்டிய இலங்கை அணியின் இரண்டு போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டு புள்ளிகள் சம்மாக பிரித்தளிக்கப்பட்டன.
இருப்பினும் அந்த அணி தற்போது 6 புள்ளிகளை பெற்றுள்ளது.
இந்தப் போட்டிக்கு முன்பு வரை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் எந்த ஆரவாரமும் இன்றி அரை இறுதிக்கு சென்றுவிடும் என்ற சூழல் காணப்பட்டது. ஆனால் முழு உத்வேகத்துடன் விளையாடிய இலங்கை அணி இங்கிலாந்து அணியின் அரை இறுதி கனவை அசைத்துப் பார்த்துள்ளது.
போட்டி முடிவில் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயோன் மார்கன், "இலக்கை சேஸ் செய்ய தொடங்கியபோது அடிப்படையான ஒரு விஷயத்தை செய்ய நாங்கள் தவறிவிட்டோம். உடைக்க முடியாத பார்ட்னர்ஷிப்பை உருவாக்க நாங்கள் தவறவிட்டோம்" என்று தெரிவித்தார்.
"சிலர் சிறப்பாக விளையாடியிருந்தாலும், இலங்கை அணி வெற்றிப் பெற தகுதியான ஒரு அணி"
"போட்டியில் வெற்றிப் பெற போதுமான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடவில்லை" என தெரிவித்தார்.
இலங்கை கேப்டன் திமுத் கருநரத்ன பேசுகையில், "நாங்கள் பெரும் நெருக்கடியில் இருந்தோம். இது முழுவதுமான ஒரு கூட்டு முயற்சி, பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே சிறப்பாக அமைந்தது" என்று தெரிவித்தார்.
"இந்த பிட்ச்சில் 300 ரன்கள் வரை எடுக்க முடியும் என நாங்கள் நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்ததுபோல் இல்லை. எங்களால் 300 ரன்களை எடுக்க முடியாது என்று எங்களுக்கு தெரிந்துவிட்டது. ஆனால் 250-275 ரன்கள் வரை எடுக்க நாங்கள் முயற்சி செய்தோம். மாத்யூஸ் சிறப்பாக விளையாடினார்" என்று தெரிவித்தார்.
"ரூட்டின் விக்கெட்டை எடுத்தது முக்கியமான ஒரு தருணம். எங்களுக்கு அப்போது நம்பிக்கையில்லை. இருப்பினும் ரெவ்யூ கேட்பது என நாங்கள் முடிவுசெய்தோம்" என்றும் தெரிவித்தார்.
அடுத்த போட்டியில் இலங்கை அணி தென் ஆப்ரிக்காவையும், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது.