இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைபற்றி உள்ளது.
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் இன்னிங்சில் நியூசிலாந்து எட்டு விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் எடுத்து.
இந்திய அணிக்காக யுஸ்வேந்திர சஹால் மூன்று விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்திய அணி
இதை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை தொடர்ச்சியாக பறிகொடுத்தது.
தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 3 ரன்னிலும், ப்ரித்வி ஷா 24 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 15 ரன்னில் அவுட்டாகினர்.
சற்று நிலைத்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயரும் 52 ரன்களில் பென்னட் பந்துவீச்சில் அவுட்டானார்.
இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் இறுதியில் ரவீந்திர ஜடேஜா தனிஒருவராக வெற்றிக்கு போராடினார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
முதல் போட்டி
இந்தத் தொடரின் முதல் போட்டியில் 347 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற முடியாமல் போன இந்திய அணி இன்று வெற்றிபெற்றால் மட்டுமே தொடர் சமநிலை ஆகும் என்ற நிலையில் இந்த போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது இந்தியா.
புதனன்று நடந்த முதல் போட்டியில் 48.1 ஓவரிலேயே 348 ரன்கள் எடுத்த நியூசிலாந்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முன்னதாக நடந்த டி20 தொடரின் ஐந்து போட்டிகளிலும் இந்தியா வென்றிருந்த நிலையில் இந்தத் தோல்வி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
சரி. டி 20 தொடரை 5-0 வென்ற இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இழந்தது ஏன்?
1.டி 20 தொடர் போல இந்த தொடரில் அனுபவம் வாய்ந்த தொடக்க வீரர்கள் இல்லை. மயங்க் அகர்வால், ப்ரித்விஷா ஆகிய தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறினர்.
2. இந்த போட்டியில் பும்ரா அதிகளவில் ரன்கள் கொடுத்ததும் தோல்விக்கு காரணமானது.
3.நியூசிலாந்துக்கும் ரவீந்திர ஜடேஜாவுக்குமான பந்தம் இந்த போட்டியிலும் தொடர்கிறது. உலகக் கோப்பை அரையிறுதியில் ஜடேஜா போராடி அரை சதம் எடுத்தாலும் இந்தியா தோல்வி அடைந்தது.
4.நியூசிலாந்து அணி தரப்பில் ராஸ் டெய்லர் இரண்டு போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடினர். முதல் போட்டியில் சதம், இந்த போட்டியில் எழுபது ரன்களுக்கு மேல்.
5.இன்றைய போட்டியில் முக்கிய தருணங்களில் அதிக பந்துகளை ஜடேஜா சந்திக்காமல் மற்ற பேட்ஸ்மேன்களை சந்திக்க விட்டது தோல்விக்கு ஒரு காரணம்.
ஆறு ஆண்டுகளாக வெல்லாத நியூசிலாந்து
ஜனவரி 2014க்கு பிறகு நியூசிலாந்து இதுவரை இந்தியாவுடனான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதையும் வெல்லவில்லை.
அந்த ஆண்டு 4-0 என்ற கணக்கில் வென்றது நியூசிலாந்து. அதன் பின்னர் நடந்த மூன்று ஒரு நாள் தொடர்களிலும், 3-2, 2-1, 4-1 என்ற கணக்கில் இந்திய அணியே வென்றது.
இன்று வென்று ஆறு ஆண்டுகால வரலாற்றை மாற்றி உள்ளது நியூசிலாந்து.
Post a Comment
Post a Comment