#கிளர்ச்சியாளர்கள் மீது குண்டுவீச்சு: உனக்கும் இதே கதிதான்: ஈரானுக்கு #பைடன் எச்சரிக்கை



 ‘தவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது’ என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சிரியாவிலுள்ள ஈரான் கிளர்ச்சியாளர்கள் முகாம்கள் மீது அமெரிக்கா நேற்று முன்தினம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 2 போர் விமானங்கள், 7 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளை  மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ‘இது ஈரானுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?’ என்ற கேள்விக்கு அதிபர் பைடனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், ‘இல்லை… இது நேரடி எச்சரிக்கை’ என்று பதிலளித்தார். இதுபற்றி வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ``இதன் மூலம் அமெரிக்கர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடியவர் பைடன் என்பது  உலகிற்கு சொல்லப்பட்டிருக்கிறது. 

இந்த தாக்குதலில் ஐநா.வின் சர்வதேச சட்டவிதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது,’’ என்று கூறினார்.  ஈரான் விவகாரத்தில் அரசியல் ரீதியிலான மோதல்களை மட்டுமே டிரம்ப் மேற்கொண்டு வந்த நிலையில், பைடன் நேரடிதாக்குதலில் இறங்கியிருப்பது ஈரானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



ஆச்சரியம்… ஆனால் உண்மை

சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பைடனின் ஜனநாயகக் கட்சியிலுள்ள பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆச்சரியப்படும் வகையில், குடியரசுக் கட்சியினர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


கொரோனா நிவாரணத்துக்கு  148 லட்சம் கோடி

கொரோனாவால் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து மக்கள் மீள்வதற்கு ₹ 148 லட்சம் கோடி நிதியை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை நேற்று வெள்ளை மாளிகை வழங்கியது. தனிநபர்கள், தொழில்நிறுவனங்கள், நகரங்கள்,  மாகாணங்கள் என அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து, இந்த நிதியை அதிபர் ஒதுக்கியுள்ளார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறியுள்ளன.