
கெண்யாவில் இருந்து இலங்கை ஊடாக டுபாய்க்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட யானைத் தந்தங்கள் இன்று (26) அழிக்கப்படவுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் இன்று (26) காலை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார் .2012 ஆம் ஆண்டு சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 359 யாணைத்ததந்தங்கள் எரித்து அழிக்கப்படவுள்ளன.
அதன் மொத்த பெறுமதி 368 மில்லியன் ரூபாவாகும் .
யானைத் தந்தங்களை எரித்து அழிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளை துன்புறுத்தி பெற்றுக் கொள்ளப்பட்ட தந்தங்களை கடத்தும் முயற்சி இலங்கை சுங்கப் பிரிவினரால் முறியடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டிருந்த தந்தங்கள், இதுவரையில் அரசுடமையாக்கப்பட்டிருந்தது.
துண்டுகளாக உடைக்கப்பட்டும், முறையற்ற விதத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாலும் குறித்த தந்தங்களை வழிப்பாட்டு தளங்களுக்கு வழங்காது சுங்க சட்டத்திற்கு அமைய எரித்து அழிக்கப்படவுள்ளதாகவும் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை மற்றும் ஆய்வின் நிமித்தம் மூன்று தந்தங்கள் மாத்திரம் இலங்கை சுங்கப் பிரிவின் நூதனசாலையில் வைக்கப்படவுள்ளதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
