Showing posts with label Eastern Sri லங்கா. Show all posts


 ( வி.ரி.சகாதேவராஜா)

சிட்னி சிலோன் ஆஸ்திரேலியா லயன்ஸ் கழகத்தினால் கல்முனை  ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில்,  எலும்பியல் அறுவைச் சிகிச்சை தொடர்பான உபகரணங்கள், இலங்கை 306 D10 மாவட்டத்தின் மட்டக்களப்பு நியூ செஞ்சுரி MJF லயன்ஸ் கழகத்தின் ஊடாக அண்மையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம்  மற்றும் என்பு பேரறிவு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ப. கலாவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 அன்பளிப்பு செய்யப்பட்ட உபகரணங்கள், மட்டக்களப்பு நியூ செஞ்சுரி MJF லயன்ஸ் கழகத்தின் சாசனத் தலைவர் லயன் என். புஷ்பஹரன் MJF/MAF மற்றும் கழகத்தின் முன்னாள் தலைவர் லயன் எம். சுதாகரன் MJF/MAF ஆகியோரால் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டன.

இவ்வாறான பெறுமதிமிக்க அன்பளிப்பின் மூலம் வைத்தியசாலையின் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இவ்வன்பளிப்பை வழங்குவதற்கும் அதனை ஒருங்கிணைப்பதற்கும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் வைத்தியசாலையின் சார்பிலும், பணிப்பாளர் அவர்களினாலும் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.


 


காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலில் குறித்த வர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளது.


இந்நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச இளைஞர்களின் ஒத்துழைப்புடன் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 


நூருல் ஹுதா உமர்


கடந்த ரணில் அரசில் நல்ல திட்டங்களை இல்லாதொழிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வஸ்ம திட்டத்தின் மூலம் மக்கள் பல கஷ்டங்களை சந்தித்தார்கள். அதைத்தான் இப்போது இந்த அரசாங்கமும் முன்னெடுக்கிறது. சமுர்த்தி சங்கங்களையும், சமுர்த்தி திட்டங்களையும் இல்லாதொழிக்கும் வேலைத்திட்டங்களை தொடர்ந்தால் சமூர்த்தி பயனாளிகளை ஒன்று திரட்டி நாங்கள் வீதிக்கிறங்கி இந்த அரசுக்கு முடிவு கட்டுவோம் என அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (19) அட்டாளைச்சேனை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்க தேசிய பொது செயலாளர், தேசிய பிரதி தலைவர், தேசிய பொருளாளர் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள்,

கடந்த அரசாங்கங்களில் சமுர்த்தி திட்டங்களை ஒழித்துக்கட்ட அரசாங்கங்கள் முன்வந்தபோது நாங்கள் பயனாளிகளுடன் இணைந்து நாங்களும் வீதிக்கு இறங்கி போராடினோம். தொடர்ந்தும் ஏழை மக்களின் பல மில்லியன் கணக்கான பணத்தையும், உரிமைகளையும் பாதுகாக்க நாங்கள் வீதிக்கு இறங்கி போராட தயாராக இருக்கிறோம். எதிர்காலத்தில் நாட்டிலுள்ள சமுர்த்தி பயனாளிகளை இணைத்து பலமான திட்டமாக சமூர்த்தி திட்டத்தை உருவாக்க தயாராக இருக்கிறோம்

சமுர்த்தி அபிவிருத்தி திட்டம் கடந்த 30 வருடங்களாக ஏழை மக்களின் துயர் துடைப்பதில் முன்னின்றிருக்கிறது. இந்த திட்டம் ஏழைகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை உருவாக்க உண்டாக்கப்பட்ட திட்டமாகும். இப்போது நாட்டை ஆளும் அரசாங்கத்தினர் கூட ஜனாதிபதி தேர்தல் கால தேர்தல் அறிக்கையில் இந்த திட்டத்தை பலப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தனர். இப்போது வாக்குறுதியை மீறி ஏழை மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.

தொழிற்சங்கங்களின் தயவுடன் அதிகாரத்துக்கு வந்த தற்போதைய ஆட்சியாளர்கள் தொழிற்சங்கங்களை முடக்கும் விதமாக செயற்படுகிறார்கள். சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கடந்த வார அறிக்கையின் பிரகாரம் சமூர்த்தி வங்கியை, சமூர்த்தி திணைக்களத்தை மூட அரசாங்கம் திட்டமிடுவதாக நாங்கள் அறிகிறோம். அரசின் இந்த யோசனையை வன்மையாக கண்டிக்கிறோம்.

அமைச்சர்கள் இந்த சமுர்த்தி திட்டத்தை மூட வேண்டும். சமுர்த்தி திணைக்களத்தை மூட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அதற்காகவே புதிதாக பொறுப்பேற்றுள்ள சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வேலை செய்கிறார்கள் இல்லை என்று இப்போது குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளார். ஏழை மக்களின் நலனுக்காக 30 வருடங்களுக்கு மேலாக சிறந்த முறையில் பணியாற்றி 400 பில்லியனுக்கு அதிகமாக சமுர்த்தி வங்கி சங்க இருப்பை நிலை நிறுத்தியுள்ளோம். வீட்டு சீட்டிழுப்பு மூலம் நிறைய பயனாளிகளுக்கு உதவி உள்ளோம். இப்படியான ஒரு திட்டத்தை இழுத்து மூட அரசாங்கம் முயல்கிறது. அதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதியளிக்க ம்,மாட்டோம். மக்களுடன் இணைந்து போராடுவோம் என்றனர்.

 


வி.சுகிர்தகுமார்
        

 அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் முன்பாக அமைந்துள்ள வெள்ளப்பாதுகாப்பு வீதியின் சில பகுதிகள் உடைந்து விழுந்து நீருக்குள் மூழ்கிவரும் நிலையில் அதனை மீள் புனரமைப்பதற்கான முதற்கட்ட பணியினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசனின் ஒத்துழைப்போடு முன்னெடுத்துள்ளார்.
கிராமப்புற சாலை வலையமைப்பில் உள்ள பாதுகாப்பற்ற இடங்களை சரியான முறையில் சீரமைத்தல் எனும் அரசின் வேலைத்திட்டத்திற்கு அமைய இவ்வீதி புனரமைக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் வீதியின் நிலையினை பார்வையிட்டதுடன் புனரமைக்கப்பட வேண்டிய வீதியின் எல்லையினை அளவீடு செய்தனர்.
குறித்த வீதியானது பல வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டபோதும் வீதியின் இரு புறங்களும் முறையாக செப்பனிடப்படாமை மற்றும் கனரக வாகனங்களில் போக்குவரத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக நாளாந்தம் வீதியின் ஓரங்கள் உடைந்து அருகில் உள்ள வாய்க்காலுக்குள் வீழ்ந்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் பலரது கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இருப்பினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக குறித்த வீதியினை புனரமைப்பதற்கான முன்மொழிவினை பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர் 


பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்தில் கடந்த 30.04.2026 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களின் விவகாரம் தொடர்பில் இன்று (05) மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்ட இளைஞர்களின் நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மௌலவி முஹம்மத் மிப்லால், “இவ்வாறான விவகாரங்களை அரச இயந்திரம் கையாளும் முறை குறித்து ஆளுநர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், பொலிஸார் முறையான விதத்தில் செயல்பட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வழக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக எங்களிடம் தெரிவித்துள்ளார்” என்றார்.

மேலும், சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தனது அறிக்கையை ஆளுநர் பார்வையிட்டதையடுத்து, இவ்விவகாரத்தில் அவர் தனிப்பட்ட கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பிரதியமைச்சர் சுனில் வட்டக்கல ஆகியோருடனும் ஆளுநர் கலந்துரையாடியுள்ளதாகவும், சம்பவம் குறித்து தாமும் கவலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டதாக மிப்லால் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், உழ்ஹிய்யா தொடர்பான விடயங்களும், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


நூருல் ஹுதா உமர்


நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக கடும் எதிர்ப்பும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளன. பிரதேச சபை உறுப்பினர்களின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஜனநாயக நடைமுறைகளை மீறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இன்று நாவிதன்வெளியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர், தவிசாளர் தன்னிச்சையான முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாவிதன்வெளி பிரதேச சபையினதும் உறுப்பினர்களினதும் அனுமதியின்றி, சம்மாந்துறை பிரதேச சபை எல்லைகளுக்குள் சேவையாற்ற மின்னிணைப்பு ஊழியர்கள் அனுப்பப்படுவது மிகக் கவலைக்கிடமானதாகும் என குறிப்பிட்டார். இவ்வாறு அனுப்பப்படும் ஊழியர்களுக்கு ஏதேனும் விபத்து அல்லது சேதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்கப் போகின்றனர் என்ற கேள்வியும் எழுப்பினார்.

மேலும், தவிசாளர் சட்டநெறிகளையும் நிர்வாக ஒழுங்குகளையும் மீறி செயல்பட்டு வருவதாகவும், இது பிரதேச சபையின் ஒழுங்குமுறையைக் கேள்விக்குறியாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபையின் 10வது கூட்டத் தொடரில், தவிசாளரின் இச்செயல்பாடுகளை கண்டித்து, ஐக்கிய மக்கள் முன்னணி சார்பிலான சுயாட்சி குழு உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக அவர் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் தமக்கு, தமது பிரதேசத்தில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அதுவே நல்லாட்சிக்கான அடிப்படை என்றும் அவர் வலியுறுத்தினார். இத்துடன், “மக்களின் குரலாக தொடர்ந்தும் ஒலிப்போம்” என உறுதியளித்த அவர், மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் முன்வைத்த அவர் மக்கள் நலனை தவிசாளர் முன்னிறுத்தி செயற்பட முன்வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.