Showing posts with label Eastern Sri லங்கா. Show all posts


  (எம்.என்.எம்.அப்ராஸ்) 


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு "டெங்கற்ற கிழக்கு - பாதுகாப்பான சமூகத்தை நோக்கி "எனும் தொனிப் பொருளில் கட்சியின் இளைஞர் காங்கிரசின் ஏற்ப்பாட்டில் கல்முனையில் நேற்று (11)இடம் பெற்றது. 

 “டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில், 2026 ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 09 வரை கிழக்கு மாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் நல செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன.

இதில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை அதிகாரிகளின் பங்களிப்புடன் டெங்கு கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் சுகாதாரம்,மக்கள் விழிப்புணர்வு மற்றும் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும்,தேசிய பொருளாளரும், உயர்பீட உறுப்பினர்களும்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களும், கல்முனை பிராந்திய சுகாதார அதிகாரிகளும், பிரதேச அமைப்பாளர்களும்,இளைஞர் அமைப்பாளர்களும், கட்சியின் முக்கியஸ்தர்களும் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



(குமுக்கனிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)

 கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களின் நலன்கருதி கல்முனை ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு ரோட்டரி கழகம் இணைந்து நடமாடும் வைத்திய முகாமை கானகத்தின் மத்தியில் உள்ள குமுக்கனில் நடாத்தி வருகின்றது. 

முகாமை வழிநடாத்தும் தலைவரான   கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளரும் மட்டக்களப்பு ரோட்டரி கழகத் தலைவருமான மருத்துவர் குண.சுகுணன் தலைமையிலான  குழுவினர் அர்ப்பணிப்புடன் இந்த சேவையை நடாத்தி வருகின்றனர்.

முதல் நாள் சுமார் 124 அடியார்கள் தமது முகாமிற்கு வந்து சிகிச்சை பெற்றதாக மருத்துவர் சுகுணன் தெரிவித்தார்.

 


நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து காரைதீவு பிரதேச நீதிமன்ற நடவடிக்கைகளை விளக்கி காரைதீவு பொலிஸ் பிரிவின் நீதிமன்ற நடவடிக்கைகளை கல்முனை நீதிமன்றங்களுடன் இணைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க காரைதீவு பிரதேச சபையில் தவிசாளர் எஸ். பாஸ்கரன், உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் ஆகியோரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் 04 வது சபையின் 13வது கூட்டம் இன்று (09) தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இங்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர் எஸ். பாஸ்கரன், உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் ஆகியோர் பொதுமக்களின் வீணான அலைச்சல், நிதி விரயம், போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் நீண்ட தூரம் ஆகியவற்றை தெளிவுபடுத்தி உடனடியாக இது தொடர்பிலான அடுத்த கட்ட மேலதிக நடவடிக்கை  எடுக்க சபைக்கு கோரிக்கை முன்வைத்தனர்.

தொடர்ந்தும் சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் உள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வழங்கும் போது சபையின் கீழுள்ள  சனசமூக நிலையங்கள் உரிய முறையில் இயங்காத நிலையிலும் புதிதாக உருவாக்கப்படாத நிலையிலும் காணப்படுகின்றமையினால் வேலைகளை செயற்படுத்துவதற்கு அந்தந்த கிராமத்திலுள்ள பொருத்தமான பதிவு செய்யப்பட்ட ஏனைய சமூக மட்ட அமைப்புகளுக்கு வேலைத்திட்டங்களை வழங்குவதற்கு சபை அனுமதி பெற தவிசாளரால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான வை. கோபிகாந்த் தர்க்கரீதியான மற்றும் சட்ட ரீதியிலான பல்வேறு விடயங்களை முன்வைத்து பலத்த ஆட்சேபனைகளை முன்வைத்து கருத்துக்களை முன்வைத்ததுடன் ஏனைய உறுப்பினர்களும் இந்த பிரேரணைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 03 வாக்குகள் பிரேரணைக்கு எதிராகவும், 06 வாக்குகள் பிரேரணைக்கு ஆதரவாகவும் அளிக்கப்பட்டது. இதனூடாக 03 மேலதிக வாக்குகளினால் இப்பிரேரணை வெற்றிபெற்றது. பிரேரணைக்கு எதிராக வை. கோபிகாந்துடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி பெண் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதனைத்தொடர்ந்து இங்கு உரையாற்றிய உறுப்பினர் ஏ. பர்ஹான், காரைதீவு பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்த பல்வேறு கட்டங்களாக கடலரிப்பு அணைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாளிகைக்காடு மையவாடி கடலரிப்பு அணை நிர்மாண பணிக்காக ஒதுக்கப்பட்ட பாறாங்கற்களை இடப்பற்றாக்குறை காரணமாக காரைதீவு பிரதேசத்தில் தேக்கி வைக்கப்பட்டது. பின்னர் அவை அங்கிருந்து அகற்றப்பட்டு வேலைத்திட்டம் சீராக முன்னெடுக்கப்பட்டது. அதனை சிலர் அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் மக்களுக்கு அநீதி நடப்பதாகவும், தமிழ் மக்களின் உடமைகள் காவுகொள்ளப்படுவதாகவும் இனவாத, மதவாத, பிரதேசவாத கருத்துக்களை காரைதீவு தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். இதன் உண்மைத்தன்மையை மக்களுக்கு விளக்கும் பொறுப்பு இந்த உயரிய சபைக்கு இருப்பதாக தெரிவித்தார்.

இந்த அமர்வின் போது தவிசாளரின் கோரிக்கைக்கு அமைய ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கும், முன்னாள் உப தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீரின் கோரிக்கைக்கு அமைய ஈரானின் முன்னாள் உயர் தலைவரான அயதுல்லா அலி கொமெய்னியின் மறைவுக்கும், அவருடன் இணைந்து காலமான அவரது உறவினர்கள், அமெரிக்க- இஸ்ரேலிய தாக்குதலில் காலமான குழந்தைகள், பொதுமக்களுக்கும் மௌன அஞ்சலி (பிரார்த்தனை) செலுத்தப்பட்டது.

மேலும் பல பல்வேறு விடயங்களை ஆராய்ந்த சபை முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.

 


பாறுக் ஷிஹான்


சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு, பிரஜைகள் சாசனம் (Citizen Charter) மற்றும் அரச சேவைகள் தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை இலகுவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொலைக்காட்சி (Television) ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மனித மேம்பாட்டிற்கான பங்கேற்பு வழிகளை ஊக்குவித்தல்   எனும் சிறுமானிய திட்டத்தின் கீழ், சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் கூட்டமைப்பினால் (SCBOC) இந்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று திங்கட்கிழமை (06) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களிடம் குறித்த தொலைக்காட்சி உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலகக் கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமில், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. அகமட் சபீர் மற்றும் சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 
பொதுமக்களுக்கு அரச சேவைகள் தொடர்பான விபரங்களைத் திறம்படவும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் எளிதாகவும் கொண்டு சேர்க்கும் இம்முயற்சிக்கு நிதியுதவி மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் கூட்டமைப்பு, பொதுவான தளத்திற்கான தேடல் (Search for Common Ground) நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) ஆகிய அமைப்புகளுக்கு சம்மாந்துறை பிரதேச செயலகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

 (  வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுக்களைக் கையாளுதல் குறித்த விசேட செயலமர்வு  நேற்று  சனிக்கிழமை காலை அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​"சமூக நல்லிணக்கத்திற்கான பொறுப்புள்ள டிஜிட்டல் சமூகம் - கட்டம் 2" (Responsible Digital Society for Social Cohesion- Phase 2) எனும் செயற்திட்டத்தின் கீழ் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

​சர்வோதயம் அமைப்பு,  யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. 

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மூத்த மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வின்  ஒருங்கிணைப்புப் பணிகளை நுஜா ஊடக அமைப்பு மேற்கொண்டிருந்தது.

​இச்செயலமர்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளரும், சட்டத்தரணியுமான நஹீஜா முசாபிர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, செயலமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

செயலமர்வின் பிரதான வளவாளராகக் கலந்து கொண்ட ரவீந்திரன் விதுர்சன், நவீன டிஜிட்டல் உலகில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.

அத்தோடு,பல்லின சமூகங்கள் வாழும் அம்பாறை மாவட்டத்தில், இனங்களுக்கு இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் பொறுப்புள்ள செய்தி அறிக்கையிடலை மேற்கொள்வதன் அவசியம் குறித்தும் அவர் மேலும் விளக்கப்படுத்தினார்.

இங்கு. அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளரும், சட்டத்தரணியுமான நஹீஜா முசாபிர் உரையாற்றுகையில்,

தற்கால டிஜிட்டல் யுகத்தில் போலிச் செய்திகளும், வெறுப்புப் பேச்சுகளும் மிக வேகமாகப் பரவி, சமூக ஒற்றுமையைக் குலைக்கும் பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இத்தகைய சூழலில், செய்திகளை வெளியிடும் போது ஊடகவியலாளர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், சமூக நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டும் செயற்பட வேண்டும்.

​வெறுப்புப் பேச்சுக்கு எதிரான கூட்டுச் செயற்பாடு
​சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகளை (Hate speech) இனங்கண்டு, அவற்றை முறியடிப்பதில் ஊடகவியலாளர்களின் பங்கு இன்றியமையாததாகும். 

சமூகத்தில் பதற்ற நிலையைத் தணித்து, அமைதியை நிலைநாட்டக்கூடிய நடுநிலையான ஊடகவியலின் அவசியத்தையும் அவர் தனது உரையில் விவரித்தார்.

 

பாறுக் ஷிஹான்

யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட   குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக  அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி -புத்தங்கல  எல்லைப்பகுதியில் இன்று (1) அதிகாலை  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வேளாண்மை பயிர்ச்செய்கை மேற்கொண்டு மரம் ஒன்றில் பரண் அமைத்து யானை காவலில் ஈடுபட்ட குடும்பஸ்தரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளானார்.

இவ்வாறு காயமடைந்த நிலையில்  மீட்கப்பட்டவர் 42 வயது மதிக்கத்தகக் சுப்ரமணியம் கோவீந்தன் என அடையளாம் காணப்பட்டுள்ளார்.

மேற்படி காயமடைந்த குடும்பஸ்தர் யானை காவலுக்காக சென்ற நிலையில் இவ்வனர்த்தத்திற்கு முகம் கொடுத்தள்ளார் என  நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

 நூருல் ஹுதா உமர்


கொழும்பு ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி, தனது 141 ஆண்டு கால கல்விப் பாரம்பரியத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தயாராகியுள்ளது. அந்த வகையில் கல்லூரியின் புதிய ஒன்பது மாடி கல்வி, விளையாட்டு மற்றும் புதுமை வளாகத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா எதிர்வரும் ஜூன் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

1884ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த முன்னோடி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. 

மாணவர்களை உலகத் தரத்திற்கு ஏற்ப உருவாக்கும் நோக்கில் இந்த ஒன்பது மாடி வளாகத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 102 பர்சஸ் பரப்பளவுடைய காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வளாகத்தில் ஸ்மார்ட் டிஜிட்டல் வகுப்பறைகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்றல் வசதிகள், நவீன விஞ்ஞான ஆய்வு கூடங்கள், டிஜிட்டல் நூலகம், ஆராய்ச்சி மையங்கள், 500 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம், கேட்போர் கூடம் மற்றும் பல்நோக்கு அரங்குகள், உட்புற விளையாட்டு அரங்கு, நீச்சல் தடாகம், புட்சால் மைதானம், கராத்தே, குத்துச்சண்டை, சதுரங்கம் மற்றும் பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான நவீன பயிற்சி வசதிகளும் இதில் இடம்பெறவுள்ளன.

இக்கட்டிடம் சுற்றுச்சூழல் நட்பு அம்சங்களுடன் கூடிய பசுமை வளாகமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி பயன்பாடு, மழைநீர் சேகரிப்பு, கழிவு முகாமைத்துவம், இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டத்தின் அதிகபட்ச பயன்பாடு போன்ற அம்சங்கள் இதில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.

இம்முயற்சிக்கு பிரதான நன்கொடையாளராக மறைந்த எம்.எச். ஒமர் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தார். அவரது ஆதரவுடன், 2017ஆம் ஆண்டு 80 பர்சஸ் நிலப்பரப்பு பாடசாலைக்காக வெற்றிகரமாக கொள்முதல் செய்யப்பட்டமை இன்றைய வளர்ச்சிப் பயணத்தின் முக்கிய அடித்தளமாகக் கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் “LIGHT FOR LIFE” அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட நிகழ்வின் மூலம் புதிய கட்டிடத் திட்டம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதற்கான நிதி திரட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

ஜூன் 28ஆம் திகதி நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். அதேவேளை, இலங்கைக்கான காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி அவர்கள் சிறப்பு அதிதியாக பங்கேற்கவுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், அரச மற்றும் தனியார் துறை உயரதிகாரிகள், நன்கொடையாளர்கள், சமூகப் பிரமுகர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு சிறப்பு அதிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தரம் 6 மற்றும் 7 மாணவர்களுக்கான HPV (Human Papillomavirus) மற்றும் ADT (Adult Diphtheria Tetanus) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதுடன், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். எதிர்கால தலைமுறையினரை தொற்றுநோய்கள் மற்றும் ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் இத்தகைய தடுப்பூசி வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

ADT தடுப்பூசி டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் போன்ற ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் முக்கிய தடுப்பூசியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக காயங்கள் மற்றும் தொற்றுகளால் ஏற்படக்கூடிய டெட்டனஸ் நோயிலிருந்து பாதுகாப்பதோடு, தொண்டை மற்றும் சுவாசப்பாதையை பாதிக்கும் டிப்தீரியா தொற்றையும் தடுக்கும் என மருத்துவ அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை, HPV தடுப்பூசி கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும், HPV வைரஸ் காரணமாக ஏற்படும் சில புற்றுநோய்கள் மற்றும் தொடர்புடைய நோய்களின் அபாயத்தை குறைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இளம் வயதிலேயே தடுப்பூசி வழங்கப்படுவதன் மூலம் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் எனவும் சுகாதாரத் துறையினர் விளக்கமளித்தனர்.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டங்கள் சமூகத்தில் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவதோடு, பொதுச் சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.



நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கிவரும் 29 ஆரோக்கிய வாழ்வு மையங்களின் (Healthy Lifestyle Centers) சேவைகளை மேம்படுத்தி, அவற்றின் தரத்தை உயர்த்தும் நோக்கில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புத்துணர்ச்சி பயிற்சி செயலமர்வு அண்மையில் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.பி. மசூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம். பௌசாத் ஒருங்கிணைத்திருந்தார்.

இச்செயலமர்வில் ஆரோக்கிய வாழ்வு மையங்களில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இதன்போது ஆரோக்கிய வாழ்வு மையங்களின் செயல்திறனை மேலும் உயர்த்துவது, பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பது, சுகாதார சேவைகளின் அணுகலை விரிவுபடுத்துவது மற்றும் பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், தொற்றா நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல் மற்றும் சமூக மட்டத்தில் சுகாதார விழிப்புணர்வை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கிய வாழ்வு மையங்களின் சேவைகளை மக்கள் மத்தியில் மேலும் பயனுள்ளதாக்கும் நோக்கில் இத்தகைய பயிற்சி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


 ( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 28 வது  புதிய தலைவராக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் எந்திரி நடராஜா கதீஷன் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை மாலை பதவிப் பிரமாணம் செய்தார்.


கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் (Lions Club of Kalmunai Town) 2026/2027 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவும்  கல்முனை ஆர்.கே.எம். சந்தியில் அமைந்துள்ள வைட் லோட்டஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் சர்வதேச லயன்ஸ்  மாவட்டம் 306 D10 இன் மாவட்ட ஆளுநர் லயன் ஜி. ஷாஹிர் அஹமட் PMJF/PMAF  பிரதம அதிதியாகவும் பதவியேற்பு அதிகாரியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


நிகழ்வின் போது 2025/2026 ஆண்டுக்கான தலைவராகப் பணியாற்றிய லயன் ஏஎல்எம்
 பாயிஸ் MAF அவர்களிடமிருந்து, 2026/2027 ஆண்டுக்கான தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள லயன் பொறியியலாளர் என். கதீஷன்  பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

“Service Beyond the Limit” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்த விழாவில்,  புதிய தலைவரின் அறிமுகத்தை  கழக நிர்வாகியும், உபதலைவருமான லயன் எந்திரி.எம்.சுதர்சன் நிகழ்த்தினார்.

புதிய செயலாளராக லயன் சட்டத்தரணி அருள்.நிதான்சன்,  பொருளாளராக லயன் ஏ.கிஷோக் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்தனர்.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்           

 அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் மயானத்தின் முன்பாக கண்டக்குழி பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய பொருட்களை சேகரிக்கும் நாடார் நிலையமொன்றில் இன்று (09) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இத்தீப்பரவால் அப்பகுதி கரும்புகை நிரம்பி காட்சியளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று மாநாகர சபையின் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.
இதேநேரம் சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று இராணுவம் மற்றும் பொலிசாரும் சென்றிருந்ததுடன் தீப்பரவலுக்கான காரணத்தை கண்டறியும் விசாரணைகளையும் பொலிசார் முன்னெடுத்திருந்தனர்.
தீப்பரவல் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமை எரிவாயு மொத்த வியாபார நிலையம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


 ( வி.ரி.சகாதேவராஜா)

சிட்னி சிலோன் ஆஸ்திரேலியா லயன்ஸ் கழகத்தினால் கல்முனை  ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில்,  எலும்பியல் அறுவைச் சிகிச்சை தொடர்பான உபகரணங்கள், இலங்கை 306 D10 மாவட்டத்தின் மட்டக்களப்பு நியூ செஞ்சுரி MJF லயன்ஸ் கழகத்தின் ஊடாக அண்மையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம்  மற்றும் என்பு பேரறிவு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ப. கலாவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 அன்பளிப்பு செய்யப்பட்ட உபகரணங்கள், மட்டக்களப்பு நியூ செஞ்சுரி MJF லயன்ஸ் கழகத்தின் சாசனத் தலைவர் லயன் என். புஷ்பஹரன் MJF/MAF மற்றும் கழகத்தின் முன்னாள் தலைவர் லயன் எம். சுதாகரன் MJF/MAF ஆகியோரால் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டன.

இவ்வாறான பெறுமதிமிக்க அன்பளிப்பின் மூலம் வைத்தியசாலையின் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இவ்வன்பளிப்பை வழங்குவதற்கும் அதனை ஒருங்கிணைப்பதற்கும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் வைத்தியசாலையின் சார்பிலும், பணிப்பாளர் அவர்களினாலும் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.


 


காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலில் குறித்த வர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளது.


இந்நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச இளைஞர்களின் ஒத்துழைப்புடன் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 


நூருல் ஹுதா உமர்


கடந்த ரணில் அரசில் நல்ல திட்டங்களை இல்லாதொழிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வஸ்ம திட்டத்தின் மூலம் மக்கள் பல கஷ்டங்களை சந்தித்தார்கள். அதைத்தான் இப்போது இந்த அரசாங்கமும் முன்னெடுக்கிறது. சமுர்த்தி சங்கங்களையும், சமுர்த்தி திட்டங்களையும் இல்லாதொழிக்கும் வேலைத்திட்டங்களை தொடர்ந்தால் சமூர்த்தி பயனாளிகளை ஒன்று திரட்டி நாங்கள் வீதிக்கிறங்கி இந்த அரசுக்கு முடிவு கட்டுவோம் என அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (19) அட்டாளைச்சேனை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்க தேசிய பொது செயலாளர், தேசிய பிரதி தலைவர், தேசிய பொருளாளர் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள்,

கடந்த அரசாங்கங்களில் சமுர்த்தி திட்டங்களை ஒழித்துக்கட்ட அரசாங்கங்கள் முன்வந்தபோது நாங்கள் பயனாளிகளுடன் இணைந்து நாங்களும் வீதிக்கு இறங்கி போராடினோம். தொடர்ந்தும் ஏழை மக்களின் பல மில்லியன் கணக்கான பணத்தையும், உரிமைகளையும் பாதுகாக்க நாங்கள் வீதிக்கு இறங்கி போராட தயாராக இருக்கிறோம். எதிர்காலத்தில் நாட்டிலுள்ள சமுர்த்தி பயனாளிகளை இணைத்து பலமான திட்டமாக சமூர்த்தி திட்டத்தை உருவாக்க தயாராக இருக்கிறோம்

சமுர்த்தி அபிவிருத்தி திட்டம் கடந்த 30 வருடங்களாக ஏழை மக்களின் துயர் துடைப்பதில் முன்னின்றிருக்கிறது. இந்த திட்டம் ஏழைகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை உருவாக்க உண்டாக்கப்பட்ட திட்டமாகும். இப்போது நாட்டை ஆளும் அரசாங்கத்தினர் கூட ஜனாதிபதி தேர்தல் கால தேர்தல் அறிக்கையில் இந்த திட்டத்தை பலப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தனர். இப்போது வாக்குறுதியை மீறி ஏழை மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.

தொழிற்சங்கங்களின் தயவுடன் அதிகாரத்துக்கு வந்த தற்போதைய ஆட்சியாளர்கள் தொழிற்சங்கங்களை முடக்கும் விதமாக செயற்படுகிறார்கள். சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கடந்த வார அறிக்கையின் பிரகாரம் சமூர்த்தி வங்கியை, சமூர்த்தி திணைக்களத்தை மூட அரசாங்கம் திட்டமிடுவதாக நாங்கள் அறிகிறோம். அரசின் இந்த யோசனையை வன்மையாக கண்டிக்கிறோம்.

அமைச்சர்கள் இந்த சமுர்த்தி திட்டத்தை மூட வேண்டும். சமுர்த்தி திணைக்களத்தை மூட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அதற்காகவே புதிதாக பொறுப்பேற்றுள்ள சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வேலை செய்கிறார்கள் இல்லை என்று இப்போது குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளார். ஏழை மக்களின் நலனுக்காக 30 வருடங்களுக்கு மேலாக சிறந்த முறையில் பணியாற்றி 400 பில்லியனுக்கு அதிகமாக சமுர்த்தி வங்கி சங்க இருப்பை நிலை நிறுத்தியுள்ளோம். வீட்டு சீட்டிழுப்பு மூலம் நிறைய பயனாளிகளுக்கு உதவி உள்ளோம். இப்படியான ஒரு திட்டத்தை இழுத்து மூட அரசாங்கம் முயல்கிறது. அதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதியளிக்க ம்,மாட்டோம். மக்களுடன் இணைந்து போராடுவோம் என்றனர்.

 


வி.சுகிர்தகுமார்
        

 அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் முன்பாக அமைந்துள்ள வெள்ளப்பாதுகாப்பு வீதியின் சில பகுதிகள் உடைந்து விழுந்து நீருக்குள் மூழ்கிவரும் நிலையில் அதனை மீள் புனரமைப்பதற்கான முதற்கட்ட பணியினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசனின் ஒத்துழைப்போடு முன்னெடுத்துள்ளார்.
கிராமப்புற சாலை வலையமைப்பில் உள்ள பாதுகாப்பற்ற இடங்களை சரியான முறையில் சீரமைத்தல் எனும் அரசின் வேலைத்திட்டத்திற்கு அமைய இவ்வீதி புனரமைக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் வீதியின் நிலையினை பார்வையிட்டதுடன் புனரமைக்கப்பட வேண்டிய வீதியின் எல்லையினை அளவீடு செய்தனர்.
குறித்த வீதியானது பல வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டபோதும் வீதியின் இரு புறங்களும் முறையாக செப்பனிடப்படாமை மற்றும் கனரக வாகனங்களில் போக்குவரத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக நாளாந்தம் வீதியின் ஓரங்கள் உடைந்து அருகில் உள்ள வாய்க்காலுக்குள் வீழ்ந்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் பலரது கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இருப்பினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக குறித்த வீதியினை புனரமைப்பதற்கான முன்மொழிவினை பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர் 


பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்தில் கடந்த 30.04.2026 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களின் விவகாரம் தொடர்பில் இன்று (05) மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்ட இளைஞர்களின் நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மௌலவி முஹம்மத் மிப்லால், “இவ்வாறான விவகாரங்களை அரச இயந்திரம் கையாளும் முறை குறித்து ஆளுநர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், பொலிஸார் முறையான விதத்தில் செயல்பட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வழக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக எங்களிடம் தெரிவித்துள்ளார்” என்றார்.

மேலும், சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தனது அறிக்கையை ஆளுநர் பார்வையிட்டதையடுத்து, இவ்விவகாரத்தில் அவர் தனிப்பட்ட கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பிரதியமைச்சர் சுனில் வட்டக்கல ஆகியோருடனும் ஆளுநர் கலந்துரையாடியுள்ளதாகவும், சம்பவம் குறித்து தாமும் கவலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டதாக மிப்லால் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், உழ்ஹிய்யா தொடர்பான விடயங்களும், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


நூருல் ஹுதா உமர்


நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக கடும் எதிர்ப்பும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளன. பிரதேச சபை உறுப்பினர்களின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஜனநாயக நடைமுறைகளை மீறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இன்று நாவிதன்வெளியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர், தவிசாளர் தன்னிச்சையான முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாவிதன்வெளி பிரதேச சபையினதும் உறுப்பினர்களினதும் அனுமதியின்றி, சம்மாந்துறை பிரதேச சபை எல்லைகளுக்குள் சேவையாற்ற மின்னிணைப்பு ஊழியர்கள் அனுப்பப்படுவது மிகக் கவலைக்கிடமானதாகும் என குறிப்பிட்டார். இவ்வாறு அனுப்பப்படும் ஊழியர்களுக்கு ஏதேனும் விபத்து அல்லது சேதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்கப் போகின்றனர் என்ற கேள்வியும் எழுப்பினார்.

மேலும், தவிசாளர் சட்டநெறிகளையும் நிர்வாக ஒழுங்குகளையும் மீறி செயல்பட்டு வருவதாகவும், இது பிரதேச சபையின் ஒழுங்குமுறையைக் கேள்விக்குறியாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபையின் 10வது கூட்டத் தொடரில், தவிசாளரின் இச்செயல்பாடுகளை கண்டித்து, ஐக்கிய மக்கள் முன்னணி சார்பிலான சுயாட்சி குழு உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக அவர் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் தமக்கு, தமது பிரதேசத்தில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அதுவே நல்லாட்சிக்கான அடிப்படை என்றும் அவர் வலியுறுத்தினார். இத்துடன், “மக்களின் குரலாக தொடர்ந்தும் ஒலிப்போம்” என உறுதியளித்த அவர், மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் முன்வைத்த அவர் மக்கள் நலனை தவிசாளர் முன்னிறுத்தி செயற்பட முன்வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.