விஜயகலா மகேஷ்வரனின் கருத்து தொடர்பில் விசாரணை; பாராளுமன்றம் ஒத்திவைப்பு




சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். 

தமிழீழ விடுதலை புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய போது விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தினால் பாராளுமன்றில் பெரும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன. 

அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சபாநாயகரிடம் விடுக்கப்பட்டது. 

எவ்வாறாயினும் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளை நடத்திச் செல்வதற்கு தடை ஏற்பட்டதால் பாராளுமன்ற அமர்வை நாளை (04) காலை வரையில் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.